Thursday, March 30, 2017

பிரத்யும்னனின் பூர்வ கதை!

வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க! ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வம்சம் ஆகியவற்றைப் படித்து மேலே தொகுத்து அளிக்கலாம் என எண்ணுகிறேன். இத்தனை வருடங்களாக இருந்த ருசிகரமான சம்பவங்களோ, நிகழ்வுகளோ, கற்பனைகளோ இருக்காது. ஏனெனில் அவை எல்லாம் திரு முன்ஷியின் கற்பனை வளத்தில் வந்தவை!  ஆகவே இனிமேல் எழுதப் போவதில் சாரம் இல்லை எனில் அது என் குற்றமே! மன்னிக்கவும்.


இது வரை படித்ததில் பிரத்யும்னனுக்கும் மாயாவதிக்கும் உள்ள தொடர்பை நினைத்து எல்லோருக்கும் ஆச்சரியம், அருவருப்பு, திகைப்பு என்று வரலாம். ஆனால் உண்மையில் மாயாவதி என்னும் பாத்திரம் பாரதம், ஹரிவம்சம் ஆகியவற்றில் வருகிறது. அவற்றின் படி கிருஷ்ணருக்கும் ருக்மிணீக்கும் பிறந்து ஐந்து அல்லது ஆறு நாட்களே ஆன குழந்தையாக இருக்கையிலேயே பிரத்யும்னன் சம்பாரா என்னும் பிசாசுகளின் அதிபதியால் கடத்தப்படுகிறான். சம்பாரா அவனைக் கடலுக்குள் வீசி விடுகிறான். பிரத்யும்னனை ஒரு மீன் விழுங்கி விடுகிறது. ஆனாலும் மீன் வயிற்றுக்குள் குழந்தை உயிருடன் இருக்கிறது. இந்தக் குழந்தையால் தான் தனக்கு மரணம் என்பதை சம்பாரா தெரிந்து கொண்டு குழந்தை இருந்தால் தானே மரணம், அதைக் கடத்திக் கொன்றுவிடுவோம் என்றே கடலில் வீசி எறிந்தான். ஆனால் பிரத்யும்னன் காமதேவன் என அழைக்கப்படும் மன்மதனின் அம்சம் என்று சொல்கின்றனர்.

காமனைப் பரமசிவன் எரித்ததும் அவன் மஹாவிஷ்ணுவுடன் ஐக்கியம் ஆகி விடுவதாக ஐதீகம். பின்னர் கிருஷ்ணாவதாரத்தின் போது காமன் ருக்மிணியின் கர்ப்பத்தில் ஆண் குழந்தையாகத் தோன்றிப் பிறக்கிறான். பார்க்கக் கிருஷ்ணனைப் போலவே இருப்பதால் இவனுக்கும் கிருஷ்ணனைப் போன்ற சக்திகள் கை கூடலாம் என்று எல்லோரும் அஞ்சியதைப் போல் சம்பாராவும் அஞ்சி இருக்கலாம். நினைத்த உருவம் எடுக்கக் கூடிய சம்பாரா குழந்தையைக் கடத்திக் கடலில் வீசியதும் அதை மீன் விழுங்கியதும் மேலே குறிப்பிட்ட மாதிரி நடந்தது.  அந்த மீனை ஒரு மீனவன் பிடித்து சம்பாராவின் சமையலறைக்கே வந்து சேர்கிறது.  மாயாவதி என்னும் சம்பாராவின் மனைவி அந்த மீனை சமையலுக்காக நறுக்குகையில் உள்ளே ஓர் அழகான குழந்தை இருப்பது தெரிய வருகிறது. சில புராணங்களின்படி மாயாவதி சம்பாராவின் தாசி என்றும் சமையலறைப் பொறுப்பில் இருந்தாள் என்றும் தெரியவருகிறது.

சம்பாராவுக்குத் தெரியாமல் அந்தக் குழந்தையை வளர்த்து வருகிறாள். அவளையே தன் தாய் என்று நீனைக்கிறது அந்தக் குழந்தை! ஆனால் மாயாவதி தான் ரதி தேவி என்றும் எரிந்த தன் கணவனை மீண்டும் உயிர்ப்பதாகச் சொன்னதால் கணவன் மீண்டு வரக் காத்திருந்தாள் என்றும் மாயாதேவியிடம் நாரத முனிவர் தோன்றிச் சொல்லுகிறார். மாயாவதிக்குத் தான் யார் என்பதும், குழந்தை தான் தன் கணவன் காமதேவன் என்பதும் தெரிந்ததும் குழந்தையை மிகவும் அன்புடன் வளர்த்து வருகிறாள். நாட்கள் செல்லச் செல்லக் குழந்தையின் அழகு  அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. உண்மையில் இவன் மன்மதனே என்று சொல்லும்படி அழகாகவும் இளமையாகவும் இருந்த பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொள்ள அனைவரும் துடித்தனர்.  மாயாவதிக்கும் இப்போது பிரத்யும்னனிடம் உண்மையைச் சொல்லும் தருணம் வந்து விட்டது என்பது புரிந்தது.

9 comments:

ஸ்ரீராம். said...

முன்ஷி ஏன் அரைகுறையாக நிறுத்தி விட்டார்?

தொடர்கிறேன்.

மோகன்ஜி said...

எப்போது கேட்டாலும் புதிய கதைகளாய்த தோன்றும் இவை. அழகாக சொல்கிறீர்கள். கொஞ்சம் அரியர்ஸ் இருக்கிறது வாசிப்பில் எனக்கு.

sambasivam6geetha said...

இதை எழுதும்போதே திடீரென முன்ஷிஜி இறந்து விட்டார் ஶ்ரீராம்! :(

Thenammai Lakshmanan said...

சுவாரசியமா சொல்றீங்க . தொடருங்கள் கீத்ஸ் மேம்

பித்தனின் வாக்கு said...

அருமை, நான் இப்ப ஒரு வட இந்திய எழுத்தாளர் எழுதிய ரைடர் ஆப் கருடா என்னும் நாவலைப் படிக்கின்றேன். அதில் இப்பத்தான் மாயாவதி பிரத்யும்ணனனை ருக்மணியிடம் அழைத்து வந்துள்ளாள். தொடருங்கள்.

பித்தனின் வாக்கு said...

என்ன ஆச்சுங்க, அடுத்த பாகம் எழுதவில்லையா?

sambasivam6geetha said...

பிரத்யும்னன் குறித்த தகவல்கள் சேகரித்தவரைக்கும் அதிகம் ருசிகரமாகக் கிடைக்கவில்லை. மேலே தொடர யோசனை! முயற்சி செய்து வருகிறேன். குருக்ஷேத்திரத்தில் கண்ணனின் பங்கை முன்ஷிஜி எப்படிக் கொண்டு போக நினைத்திருந்தார் என்பதற்கான குறிப்புகளும் இல்லை. மஹாபாரதத்தைத் திரும்பத் திரும்பப் படித்து வருகிறேன். மனதில் ஏதேனும் தோன்றினால் தொடர்வேன். மன்னிக்கவும். :( ரைடர் ஆஃப் கருடா யார் எழுதியது? அதையும் படித்துப் பார்க்க வேண்டும்.

பித்தனின் வாக்கு said...

ரைடர் ஆப் கருடா போல 8 புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் மூன்றுதான் நான் படித்தேன். எழுதியவர் பெயரை மறந்துவிட்டேன், பார்த்து சொல்கின்றேன்.

பித்தனின் வாக்கு said...

Rider of Garuda PDF by Ashok K Banker