Friday, September 23, 2011

கண்ணனைத் தொடரும் ஆபத்து!

அந்நாட்களில் பலராமன் கதாயுதத்தை வைத்து யுத்தம் செய்வதில் வல்லவனாக இருந்தான். ஆகவே பீமன் தன்னுடைய திறமையை இன்னும் மேம்படுத்திக்கொள்ள பலராமனிடம் பயிற்சி எடுக்க வந்திருந்தான். ஒரு புயலைப் போல் நுழைந்த பீமன் உண்மையில் இமயத்தை விடவும் உயர்ந்த உள்ளத்தை உடையவன். சந்திக்கும் அனைவரையும் தனக்கு நண்பர்களாக்கிக்கொண்டான் அவன். அவனுடைய பேச்சுக்களும், நடவடிக்கைகளும் ஒரு நியமத்துக்குக் கட்டுப்பட்டிருந்த வசுதேவரின் அரண்மனை ஒழுங்கை நிறையவே மாற்றியது. தன்னைக் குறித்தும் தன் நான்கு சகோதரர்கள் குறித்தும் அடிக்கடி பேசினான். தங்கள் எதிர்காலம் குறித்துப் பேசினான். குரு துரோணாசாரியாரிடம் அவர்கள் ஐவரும் குருகுலப்பயிற்சியை முடித்து விட்டதைக் குறித்துக் கூறினான். தானும், அர்ஜுனனும் தேர்ந்தெடுத்த ஒரு சபையின் முன்னர் தங்கள் திறமையையும் வலிமையையும் நிரூபித்துக் காட்டியதைக் கூறி ஆனந்தப் பட்டான். அதன் பின்னர் குரு துரோணாசாரியாரின் வேண்டுகோளின்படி பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை வென்று அவனைக் கட்டி இழுத்து வந்த சாகசச் செயலைக் கூறினான்.

ஹஸ்தினாபுரத்தின் மக்கள் அவர்கள் ஐவரையும் எவ்வாறு நேசிக்கிறார்கள் என்றும், பிதாமகர் பீஷ்மர் அவர்கள் ஐவரிடமும் காட்டும் அளப்பரிய அன்பையும் கூறினான். தாங்கள் ஐவரும் ஹஸ்தினாபுரத்தின் தெருக்களில் சென்றால் மக்கள் கூட்டம் கூடுவதையும் அன்பால் தங்களைத் திணற அடிப்பதையும் கூறினான். இவ்வளவு இருந்தும்….. ஆனால்,,,,,,, பீமன் குரலில் வருத்தம். அவர்கள் சொந்தப்பெரியப்பாவின் மகன்கள் எவருக்கும் அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை என்றான். பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் திருதராஷ்டிரனின் புத்திரர்கள் நூற்றுவரும் அடியோடு வெறுக்கின்றனர் என்றான். இவ்வளவுக்கும் இடையில் தங்கள் மூத்த சகோதரன் ஆன யுதிஷ்டிரன், அனைவருக்கும் மூத்தவன் என்பதாலும் அனைத்து வித்தைகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்ததாலும், பட்டத்துக்கு உரியவன் என்பதாலும் யுவராஜாவாக பட்டாபிஷேஹம் செய்யப்பட்டான் என்றும் ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளித்தனர் என்றும் கூறினான். ஆனாலும் தொடர்ந்து நடக்கும் விஷயங்கள் எதுவும் மனம் மகிழ்ச்சி அடையும் வண்ணம் இல்லை. எதிர்பார்த்த வண்ணம் அடுத்த அரசனாக யுவராஜா யுதிஷ்டிரன் முடிசூட்டிக்கொள்ளப் பல இடைஞ்சல்கள் ஏற்படும்போல் தெரிகிறது. அந்த இடைஞ்சல்களை ஏற்படுத்துவது தங்கள் பெரியப்பாவின் மகன்களில் மூத்தவனான துரியோதனனின் மேற்பார்வையில் அவன் விருப்பத்தின் பேரில் அவர்களின் தாய் மாமன் ஆன காந்தார நாட்டு இளவரசன் சகுனி என்பான் ஏற்படுத்தி வருகிறான் என்றான்.

வெளியே தெரியாமல் ஒரு மெளன யுத்தம் ஹஸ்தினாபுரத்து இளவரசர்களிடையே நடக்கிறது எனவும், அது இப்போது உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டது என்றும் கூறினான். பிதாமகர் பீஷ்மராலேயோ, அல்லது நீதிமானும், நேர்மையாளனுமான சித்தப்பா விதுரராலேயோ இதற்கு எதிராக எதுவும் செய்ய இயலவில்லை என்றும் கூறி வருந்தினான். இவ்வளவும் கேட்டுவிட்டு வசுதேவர் மனம் வருந்தினார். அதன் பின்னர் பீமன் கண்ணனைத் தனியாகச் சந்திக்கச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டான். இருவரும் தனிமையில் சந்தித்ததும் பீமன் கண்ணனைப்பார்த்து, “கோவிந்தா, சித்தப்பா விதுரர் உன் காதுகளுக்கு மட்டும் எட்டவேண்டும் என ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். நான் இங்கே வந்ததன் முக்கிய காரணமே அந்தச் செய்தி தான். இதை வேறு யாரோடும் பகிர்ந்து கொள்ளாதே. உனக்கு மட்டும் வைத்துக்கொள்.” என்றான்.

வேத வியாசர், ரிஷிகளுக்குள் சிறந்தவர், தன் தாயின் மற்றோர் கணவன் மூலம் பிறந்த தன் சகோதரன் வாரிசுகளின்றி இறந்து போகவே அக்கால வழக்கப்படி தன் விந்துகளைத் தானமாய்க் கொடுத்து அவன் விதவை மனைவிகளைக் குழந்தைகள் பெறச் செய்தார். அப்போது அந்த அரசனின் நெருங்கிய தாசியாக இருந்த ஒரு பெண்ணிற்கும் அவளின் வேண்டுகோளின்படி அவர் விந்து தானம் செய்ய நேர்ந்தது. மற்ற இரு மனைவியரில் ஒருத்தி வியாசரைக் கண்டு கண்களை மூடிக்கொள்ள அவளுக்குப் பிறவிக்குருடான கண்கள் இல்லாமல் பிறக்க, மற்றொருத்திக்கோ பயத்தில் உடல் வெளுக்க, அவளுக்குப் பாண்டு ரோகத்துடன் பாண்டு பிறந்தான். ஆனால் இந்தச் சேடியோ சற்றும் பயமோ அருவருப்போ இல்லாமல் வியாசரை வரவேற்க, அவளுக்குத் தர்ம தேவதையே குழந்தையாகப் பிறந்தது. அந்தக் குழந்தைதான் விதுரர். நேரடியாக இல்லாவிட்டாலும் தாசியான சேடியும் திருதராஷ்டிரன், பாண்டு இருவரின் தகப்பனுக்கு மனைவி என்பதால் விதுரரும் அவர்களுக்கு ஒரு வகையில் சகோதரர் ஆனார். இவரின் நீதி, நேர்மை, ஞானம் ஆகியவற்றைக் குறித்து வியந்த பீஷ்மர் இவரை அரசவையில் முக்கிய மந்திரியாக்கினார். தன் தாயின் பெயரைக் காக்கவும், தான் பிறந்த குலத்தைக் காக்கவும் வேண்டி விதுரர் ஹஸ்தினாபுரத்தின் மேன்மையே தனக்கு முக்கிய லக்ஷியமாக வாழ்ந்து ஹஸ்தினாபுரத்திற்கு மேலும் மேலும் பெருமைகள் சேர்க்கப் பாடுபட்டார். இப்போது இவரைக்குறித்தே பீமன் கூறக் கண்ணனும் செய்தியைக் கேட்க ஆவலானான்.

“கோவிந்தா, சித்தப்பா விதுரர் திரும்பத் திரும்ப இந்த ரகசியத்தை உன்னிடம் மட்டுமே கூறச் சொல்லி இருக்கிறார். ஏனெனில் என்னால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாதாம். ஹாஹாஹா, ஆனால் இந்த ஒரு ரகசியத்தை மட்டும் எப்படியோ காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன்.”

“ஆஹா, நீயே முனைந்து காப்பாற்றியதெனில் அது நிச்சயம் ரகசியம் தான். சொல், கேட்போம்.”

தன் குரலை மிகவும் தாழ்த்திக்கொண்டு அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே பீமன், “கோவிந்தா, செளப நாட்டரசன் சால்வன், கால யவனனைக் கண்டானாம். அவன் யாரென அறிவாய் அல்லவா? சிந்துவுக்கு அப்பால் உள்ள நிலப்பகுதியை ஆண்டு வருகிறான் அல்லவா?? அவன் தான். மக்களை ஒரு பேயைப் போல் துன்புறுத்தி வருகிறான், அதையும் அறிவாய் அல்லவா? அந்தப் பிசாசு இப்போது ஒரு மாபெரும் படையைச் சேகரித்துக்கொண்டிருக்கிறதாம். ஆர்ய வர்த்தத்தில் எங்கேயோ படையெடுப்புச் செய்யப் போகிறானாம் அவன். சித்தப்பாவுக்கு அவன் மதுராவைத் தாக்கவே இவ்வளவு பெரிய படையைச் சேகரிக்கிறான் என்று தோன்றுகிறதாம். அதனால் தான் உன்னிடம் இதைக் கூறி எச்சரிக்கச் சொன்னார்.”

கண்ணன் மெளனமாகவே கேட்டுக்கொண்டான். பின்னர் பீமனைப் பார்த்து, “சகோதரா, இப்படி ஒரு செய்தியை உன் மூலம் சித்தப்பா விதுரர் எனக்கு அனுப்பி இருப்பதை அடியோடு மறந்துவிடு. இனி இது குறித்து எவரிடமும் பேசாதே. கனவில் கூட இதைக் குறித்து சிந்திக்காதே!” கண்ணன் பீமனை வலியுறுத்திக் கூறினான்.

பீமன் தன் வழக்கமான இயல்புக்குத் திரும்பி விட்டான் போலும். “கோவிந்தா! கோவிந்தா! என்னோட பிரச்னையே நான் தூக்கத்தில் கனவு கண்டு உளறுவது தான். என்னால் அதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் இந்தச் செய்தியை ரகசியம் ரகசியம் என உருப்போட்டுக்கொண்டே இருப்பதால் ஒருவேளை என்னை அது தடுக்கலாம்.”

“சரி, தூங்கிக்கனவும் கண்டுகொள்! ஆனால் இதைக் குறித்து உனக்கே நீ ஏதேனும் சொல்லிக்கொண்டாயானால்! “ கண்ணன் ஆள்காட்டிவிரலைக் காட்டி பயமுறுத்தினான். “அப்பாடா! இதைச் சொன்னதும் தான் என் மனப்பாரமே குறைந்தாற்போல் உள்ளது. நான் வந்த வேலை முடிந்தது. கிருஷ்ணா, உன்னைக் குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் பெருமைப் படுகிறோம். எவ்வளவு அற்புதங்களை நிகழ்த்தி வருகிறாய்! உன்னுடன் கூடவே இருந்து உன் எதிரிகளின் மண்டைகளை உடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” இதைச் சொல்லிக்கொண்டே போன பீமன் திடீரென என்ன நினைத்தானோ கண்ணன் முதுகில் ஓங்கி அறைந்து, “கவலைப்படாதே! ரகசியம் காக்கப்படும்!” என உத்திரவாதம் அளித்தான்.

சிலநாட்களில் சேதி நாட்டரசியும், கண்ணனின் இன்னொரு அத்தையும் வசுதேவரின் சகோதரியுமான ஷ்ருதஷ்ரவா தன் பிறந்த வீட்டிற்கு வந்தாள். அவளுக்குக் கண்ணன் செய்த சாகசக் கதைகள் எட்டியிருந்தன. அளப்பரிய பெருமையிலும், சந்தோஷத்திலும் கண்ணனைப் பார்த்து மகிழ்ந்து அவள் கணவன் தாமகோஷன் எவ்வாறு கண்ணன் பெருமையை அவன் வீரத்தை சாகசத்தைத் தனக்குக் கூறினான் என்பதை எடுத்துச் சொன்னாள். மேலும் தாமகோஷன் ஜராசந்தன் கண்ணனைக் கண்டு ஓடியதைக் குறித்துக் கூறியதையும் சொன்னாள். அவள் சொந்த மகன் சிசுபாலன் ருக்மிணியைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் சுயம்வரம் தடைப்பட்டு ஏமாற்றத்தில் மூழ்கி இருப்பதையும் கூறினாள். ஜராசந்தன் கண்ணனாலேயே சுயம்வரத்தைத் தள்ளிப்போட இசைந்ததையும் கூறினாள். இவை அனைத்தும் கண்ணனின் பெருமையை மேலும் மேலும் அதிகமாக்கி உள்ளது என்றும் கூறினாள். மேலும் அவள் கூறியதாவது:

“கிருஷ்ண வாசுதேவா, எது எப்படியானாலும் முக்கியமான ஒரு நிகழ்வு நடந்தே விட்டது; அதுதான் என் கணவரான சேதி நாட்டரசருக்கும், விதர்ப்ப நாட்டரசர் பீஷ்மகருக்கும் ஜராசந்தனிடம் நம்பிக்கை போனது. நாங்கள் அனைவருமே இப்போது ஒருவருக்கொருவர் அரசியல் எதிரிகளைப் போல் உள்ளோம். என் குமாரன் ஆன சிசுபாலனோ தன் சொந்தத் தகப்பனிடம் கூடப் பேசுவதில்லை. ஜராசந்தன் எவ்வளவு சாமர்த்தியசாலி என்பதை நீ நன்கறிவாய். அவன் இப்போது செளப நாட்டரசன் சால்வனிடம் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளான். விதர்ப்பாவில் இருந்து கிளம்புகையில் என் மகனை அழைத்து ஜராசந்தன் கூறினான்: “இளவரசே, கவலைப்படாதே. அடுத்த வருஷம் மாக மாதம் முடிவதற்குள்ளாக உன் திருமணம் ருக்மிணியோடு நடந்தே தீரும். அந்தக் கிருஷ்ணன் உயிரோடு இருந்தாலும் சரி; இல்லை எனினும் சரி உனக்கும் ருக்மிணிக்கும் திருமணம் உறுதி!” என்று கூறி இருக்கிறான்.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 97 ஐ படித்து விட்டேன் கீதாமா
//“கோவிந்தா, செளப நாட்டரசன் சால்வன், கால யவனனைக் கண்டானாம். அவன் யாரென அறிவாய் அல்லவா? //
ஓஹோ ! சதி செயல் இந்த தடவை இங்கே இருந்து தொடங்க படுகிறதா ;கண்ணன் கவலை பட்டார் போலவே ஆகிற்றே