Wednesday, February 15, 2012

மன்னர் குலத்திடைப் பிறந்தவளை இவன் மருவ நிகழுமோ?

குருதேவரே, உங்கள் மேலான ஆசிகளாலேயே அனைத்துக் கடவுளரும் என் பக்கம் இருந்து எனக்கு உதவி செய்தனர். என்னிடம் அதீதக் கருணையும், அன்பும் காட்டி வருகின்றனர். உங்கள் ஆசிகள் இல்லையேல் என்னால் யாதவர்களை இவ்வளவு செளகரியமாகவும், வசதியாகவும் குடியமர்த்தி இருக்க இயலாது; அவர்களால் இவ்வளவு பணம்படைத்தவர்களாகவும் ஆகியிருக்க முடியாது.”

“கண்ணா, யாதவர்களைப் பணக்காரர்களாகவும், செல்வந்தர்களாகவும், அரசர்களாகவும் ஆக்குவதற்கென நீ பிறக்கவில்லை. எங்கு அதிக அளவில் பணம் இருக்குமோ அங்கு தர்மம் சரியாகச் செயல்பட இயலாது. தர்மமும், செல்வமும் ஒன்றாக இருக்க முடியாது.”

“குருதேவரே, அனைவரும் சொல்கின்றனர். நான் ஏதோ அதிமுக்கியதொரு காரியத்தை நிறைவேற்றப் பிறந்துள்ளேன் என்கின்றனர். நான் ஏன், எதற்காகப் பிறந்தேன் என எனக்குத் தெரியாது. தங்கள் கருணையாலும், தவ வலிமையாலும் அதை அறிந்து சொன்னீர்கள் எனில் நன்றி உடையேனாக இருப்பேன். நான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் தாங்களே தெரியப்படுத்துங்கள்.”

“கிருஷ்ணா, நான் மட்டும் அத்தனை தகுதி வாய்ந்தவனாக இருந்தால்!” பெருமூச்சு விட்டார் சாந்தீபனி. “ஆனால், வாசுதேவ கிருஷ்ணா! ஒரு விஷயம் நிச்சயமாய்ச் சொல்வேன். யாதவர்களின் நலனைக் கவனிக்க மட்டுமே நீ பிறக்கவில்லை; இந்தப் பரந்த உலகின் அனைத்து மக்களுக்காகவும், அவர்களை அதர்மத்தில் இருந்து நல்வழிப்படுத்தித் தருமத்தின் பால் அவர்களைச் செலுத்தவும் மட்டுமே நீ பிறந்திருக்கிறாய். தர்மத்தின் வழி தான் உன் வழி. இந்த அசாதாரணமான செயலை உன்னால் மட்டுமே நிறைவேற்ற முடியும். தர்மத்தை நிலைநாட்ட நீ ஒருவனே தகுதி வாய்ந்தவன்.”

“எனக்கு இடப்பட்ட, என்னால் இயன்ற அளவுக்கு வேலைகளை நான் கூடியவரையில் தர்மத்தின்பாற்பட்டே செய்து வருகிறேன் ஆசாரியரே! புதியதாக இன்றுவரை எதுவும் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வரவில்லை.”

“நல்லது மகனே. இதோ ஒரு வேலை. முக்கியமான ஒன்று. உன்னுடைய குருவான என் மூலம் வந்துள்ளது.” சாந்தீபனி தொடர்ந்தார். “ மகனே, உன்னுடைய குருவாகிய நான், பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் செய்தியைத் தாங்கி ஒரு தூதுவனாக வந்துள்ளேன். அவன் சார்பில் அவன் செய்தியை உன்னிடம் தெரிவிக்கிறேன். பாஞ்சால மன்னன் உன்னிடம் ஒரு மாபெரும் உதவியை எதிர்பார்க்கிறான். உன்னால் தான் அது இயலும் எனக் கருதுகிறான். அதைக் குறித்து உன்னிடம் நான் விவரமாகச் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னபிறகு, உனக்கு அதில் விருப்பமிருந்தால்………..” தயங்கினார் சாந்தீபனி. பின் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அப்பனே, உக்ரசேன ராஜாவிடமும், உன் தகப்பன் வசுதேவனிடமும் பேசி நான் சம்மதம் வாங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல்………..”

கண்ணன் இடைமறித்தான்.” ஆசாரியரே, குறுக்கிடுவதற்கு மன்னிக்கவேண்டும். பாஞ்சால மன்னனா செய்தியை அனுப்பியுள்ளான்?” கண்ணன் முகத்தில் உண்மையான திகைப்பும், ஆச்சரியமும். என்னவாக இருக்கும்?

கண்ணனை வெகுநேரம் காத்திருக்க விடாமல், சாந்தீபனி விஷயத்துக்கு நேரடியாக வந்தார். “கண்ணா, துருபதனின் ஒரே மகள் திரெளபதியை உனக்கு மணமுடிக்க துருபதன் விரும்புகிறான். “ கண்ணனின் முகத்தில் ஏதேனும் மாற்றங்கள் தென்படுகின்றனவா எனக் கூர்ந்து கவனித்த வண்ணம் தொடர்ந்தார் சாந்தீபனி. “துருபதன் மகள் கருநிறத்து அழகி கிருஷ்ணா, உண்மையிலேயே பேரழகு வாய்ந்தவள் மட்டுமல்லாமல், புத்திசாலியும், திறமைசாலியும் கூட. அவளுக்கு இவை எல்லாம் இயற்கையாக அமைந்த பரிசுகள் எனலாம். கண்ணா, நீ மட்டும் அவளை மணந்து கொண்டாயானால், ஶ்ரீதனமாக உனக்குப் பாஞ்சால நாட்டின் ஒரு பகுதி மட்டுமல்லாமல், ஜராசந்தனால் அழிக்கப்பட்டு நாசமாகிக் கிடக்கும் மதுராவையும் சீரமைத்து யாதவர்களுக்கு மறுவாழ்வும் கொடுக்கலாம். அதற்கு துருபதன் தேவையான உதவிகளைச் செய்வான்.”

1 comment:

priya.r said...

எவ்வளவு சம்பவங்கள்..

அவ்வளவும் நினைவு வைத்து கொள்வது ,பின்னர் எழுதுவது

மிக பெரிய செயல் தான் கீதாமா!