Saturday, February 18, 2012

எண்ணம், விசாரம், எதுவும் அவன் பொறுப்பு!

“ஆசாரியரே! தங்களால் அளிக்கப்படும் வேலைகளைச் செய்ய நான் எப்போதும் ஆவலுடன் காத்திருப்பேன்; அவை ருசிகரமானவை; மனதை மயக்கும் வல்லமை கொண்டவை. இப்போது நீங்கள் அளிக்கும் செய்தியில் இருந்து மிகவும் விரும்பக்கூடிய ஒன்றாகவும், நான் ஒரு நல்ல மருமகனாக இருப்பேன் என்பதையும் சொல்கிறது. ஆனால் ஒரு மாபெரும் அரசனுக்கு, சக்கரவர்த்தியின் மருமகனாக ஆக ஏற்றத் தகுதி வாய்ந்தவனா நான் என்பது கேள்விக்குரியது.”

“ஆசாரியரே, அனைவருமே பழைய விஷயங்களை மறந்துவிட்டனர் போலும். ஆனாலும் நான் மறக்கவில்லை ஆசாரியரே. இதே அரசர்கள் என்னுடன் சரிசமமாக அமரக் கூட மறுத்திருக்கின்றனர். என்னை பீஷ்மகனின் மகளின் சுயம்வரத்திற்கு அழைக்கக் கூடாது என்று ஒற்றுமையாகக் கூறியதோடு நானாகச் சென்றபோதும் எனக்குச் சரியான மரியாதை கொடுக்காததோடு , “கோபாலன்” “இடைச் சிறுவன்” என்றே அழைத்திருக்கின்றனர். இன்று இப்படித் திடீரென எப்படி ஆசாரியரே!”

கண்ணன் குரலில் வருத்தமே இல்லை, கேலியாகவே பேசினான். சாந்தீபனியும் அந்தக் கேலியில் கலந்து கொண்டார். சிரித்த வண்ணம், “துருபதன் உனக்கு உதவி செய்வதாக மட்டும் சொல்லவில்லை. அவனும் உன்னிடம் உதவி ஒன்றை நாடியே உன்னை மருமகனாக ஏற்கக் கோருகிறான்.”

“ஆஹா, எந்த விதத்தில் பாஞ்சாலச் சக்கரவரத்தி துருபதனுக்கு நான் உதவி செய்ய முடியும்?”

“கிருஷ்ணா! ஆம், ஒரு வழி இருக்கிறது என்பது துருபதன் கருத்து.” சற்றே நிறுத்திய சாந்தீபனி மேலும் கூறினார்:” துருபதனும், துரோணரும் குருகுலத்து சகோதரர்கள் என்பதும், துரோணரால் துருபதன் அவமானப்படுத்தப்பட்ட கதையையும் நீ நன்கறிந்திருப்பாய். துரோணர் குருவம்சத்தினரின் ராணுவத்தை ஆட்டி வைக்கும் வல்லமை கொண்ட மாபெரும் தளபதியாக இருக்கிறார். யுத்தகளத்தில் அவரின் வலிமையும், புத்திகூர்மையும் அளவிடமுடியாத ஒன்று என்பதையும் அறிவாய். அப்படிப்பட்ட துரோணரால் பாஞ்சால தேசத்தின் ஒரு பகுதியை துருபதன் இழக்க நேரிட்டிருக்கிறது. பாஞ்சாலத்தின் முக்கியப் பகுதியான கங்கையின் வடபாகத்தை துரோணரிடம் இழந்ததில் இருந்து துருபதன் வாழ்வதே துரோணரைப் பழிவாங்குவதற்காகத்தான். தன்னை இழிவு செய்த துரோணரை எப்படியேனும் பழிவாங்க வேண்டும் என்பதே அவன் வாழ்க்கையில் லக்ஷியமாய்க் கொண்டிருக்கிறான். அதற்கு அவன் உன் உதவியை எதிர்பார்க்கிறான்.”

கிருஷ்ணனுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. “இதற்கு எனக்கு திரெளபதியைச் சம்பளமாகத் தருகின்றார்களா? அல்லது செய்யப் போகும் வேலைக்கு முன்பணமா?”

சாந்தீபனி சிரித்துக்கொண்டே ஆட்காட்டி விரலை நீட்டிக் கண்ணனை எச்சரிக்கும் பாவனையில் பார்த்துச் சிரித்தார். “கண்ணா, இது ஒரு முட்டாள் தனமான யோசனை என்றோ வேடிக்கைப் பேச்சு என்றோ எண்ணாதே. திரெளபதியை நான் நன்கறிவேன். அவளை நன்கறியாமல் அவளைக்குறித்துப் பேசுவது நியாயம் இல்லை. உயர்ந்த குடியில் பிறந்த உயர்ந்த மனம் கொண்ட பெண் அவள். அவள் தந்தையிடம் தீவிரமான பக்தியைச் செலுத்துகிறாள். தன் வாழ்க்கையையே அவருக்காகச் சமர்ப்பணம் செய்கிறாள். இந்த ஆரியவர்த்தத்திலேயே சிறந்ததொரு போர் வீரனை, வில்லாளியை மணக்க விரும்புகிறாள். அவனை மணப்பதன் மூலம் தன் தகப்பனின் சபதத்தை நிறைவேற்ற விரும்புகிறாள். கண்ணா, எல்லாப் பெண்களும் தகப்பனிடம் அன்பு செலுத்துவார்கள்; ஆனால் யாருமே திரெளபதியைப் போல் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்ய மாட்டார்கள். இங்கே திரெளபதி அப்படித் தான் செய்கிறாள்.”

“ஆசாரியரே, ஆனால் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தனர்? இந்த ஆரியவர்த்தத்தில் என்னை விட்டால் வேறொரு வீரனே கிடைக்கவில்லையா? அவர்களில் எவனையாவது தேர்ந்தெடுக்கட்டும்; அவள் தகப்பனின் எண்ணம்/சபதம் நிறைவேறும்.” கண்ணன் மீண்டும் சிரித்தான்.

“அவள் நீ தான் மிகச் சிறந்தவன் என நினைக்கிறாள்; அல்லது அவளால் உன்னைத் தான் தேர்ந்தெடுக்க முடிந்ததோ என்னவொ!” சாந்தீபனி மேலும் தொடர்ந்தார். “இப்போது இருக்கும் அரசகுமாரிகளிடையே திரெளபதியைப் போல் சிறந்தவர்கள் எவரும் இருக்க முடியாது.”

கண்ணன் முகத்தில் தீவிர பாவம் தெரிந்தது. “ம்ம்ம்ம்ம், ஆசாரியரே, துருபதனின் கோரிக்கை பின்னர் இதைத் தான் தெரிவிக்கிறது. ம்ம்ம்ம்ம்?? ஒரு உறுதி படைத்த பெண்ணை நான் மணக்கவேண்டும். அதன் பின்னர் துரோணரோடு போர் புரியவேண்டும். இந்தப்போரில் துரோணரோடு மட்டுமே நான் போர் செய்யும்படியாக இராது; அவருடைய சீடர்களோடு போர் புரிய வேண்டும். அவர்களில் குரு வம்சத்து இளவரசர்களும் இருப்பார்கள். திரெளபதியின் தந்தையின் வெற்றியை இவ்வகையில் நான் உறுதி செய்ய வேண்டும். ஐயா, இங்கே ஒரு தன்மானம் நிறைந்த யாதவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இந்நிலையில் இருந்து கீழிறங்கிப் பாஞ்சால மன்னனுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசன் நிலைக்கு இறங்க வேண்டும். அதோடு இந்த அழகிய பிரபாஸ க்ஷேத்திரத்தை விட்டுவிட்டு ஜராசந்தனின் கொடூரத்தினால் பாழ்பட்டுக் கொடிய வனாந்தரமாக மாறி இருக்கும் ஒரு பிரதேசத்தைச் செப்பனிட்டு வாழ ஆரம்பிக்கவேண்டும். ஆஹா, என்ன ஒரு மனம் கவரும் வண்ணம் வேண்டுகோள் விடுத்திருக்கிறான் பாஞ்சால மன்னன்!

கண்ணன் மிகத் தெளிவாகவே பேசினான். எந்தவிதமான மாறுபட்ட மறைபொருளையும் காணமுடியவில்லை. உள்ளது உள்ளபடிக்கு அப்போதைய சூழ்நிலையை அலசினான்.

1 comment:

priya.r said...

கண்ணன் ஒரு விசயத்தை எப்படி அலசி ஆராய்ந்து தெரிவாக பேசுகிறான் என்பது தெரிகிறது !