Wednesday, August 14, 2013

உத்தவனின் தூதும், சகோதரர்களின் கலந்துரையாடலும்!

ஒழுங்கு செய்யப்படாத தாடியையும், நீண்ட தலைமயிரையும் தவிர மற்றப்படி பார்க்க மிகச் சுத்தமாகவும், ஒழுங்கான ஆடைகளோடும் எப்போதும் போல் காணப்பட்ட அர்ஜுனன் முகத்தில் விவரிக்க ஒண்ணாததொரு சந்தோஷம்  குமிழியிட்டது.  “ஆஹா, நீ கடவுளின் தூதுவன் உத்தவா!” என்றான் அர்ஜுனன்.  அவன் குரலிலேயே அவன் மனதின் சந்தோஷம் பிரதிபலித்தது. அவன் உள்ளம் உவகையில் துள்ளிக் குதித்ததை அவனால் மறைக்க இயலவில்லை.   “மிகப் பயங்கரமான இந்த உலகின்  இந்தப் பகுதியிலிருந்து விரைவில் நாங்கள் அனைவரும் வெளியேறுவோம் என நம்புகிறேன்.” என்றான் மேலும்.  நம்பிக்கை கண்களிலும் முகத்திலும் பூரணமாகத் தெரிய யுதிஷ்டிரன் பக்கம் திரும்பிப் பார்த்தான்.   யுதிஷ்டிரனோ தன் கண்களில் எந்தவிதமான அறிகுறியையும் காட்டாமல், முகத்திலும் புன்சிரிப்புக் கூட இல்லாமல் எங்கேயோ நினைவுகளில் மூழ்கிப் போய் இருந்தான்.  மற்ற அனைவரும் யுதிஷ்டிரன் வாய் திறந்து பேசக் காத்திருந்தனர்.  அந்த ஐந்து சகோதரர்களும் ஐந்துவிதமான மனோபாவங்களைக் கொண்டிருந்தனர்.  அவரவர் கருத்துக்களிலும் வேறுபாடுகள்.  உணர்வுகளிலும், இயல்பான நடவடிக்கைகளுமே மாறுபட்டுத் தான் இருந்தன.  என்றாலும் அவர்களின் அன்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்தவன் யுதிஷ்டிரனின் ஆலோசனையே அங்கே முடிவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. குடும்பத் தலைவன் அவன் தான் என்பதால் அவன் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தனர்.  அவன் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

சற்று நேரம் யோசனையில் இருந்த யுதிஷ்டிரன் உத்தவன் பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தான்.  அவன் குரல் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது.  “உத்தவா, இந்த நாடு கடத்தலை நாங்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டோம்.  ஏனெனில் இது எங்கள் கடமை.  அதோடு தாத்தா பீஷ்மரும், சித்தப்பா விதுரரும் குரு வம்சத்தினரின் நலனைக் காக்க வேண்டியே எங்களை நாட்டை விட்டுச் செல்லச் சொன்னார்கள்.  அதோடு எங்கள் நலனும், முக்கியமாக எங்கள் உயிர் காக்கப்படவேண்டியதும் அதில் அடங்கி இருந்தது.”  சற்றே நிறுத்தினான் யுதிஷ்டிரன்.  அப்போது அர்ஜுனன் குறுக்கிட்டு, “அண்ணாரே, இது குருவம்சத்தினரின் நன்மைக்கு எனத் தாங்கள் சொல்கிறீர்கள். அது சரியே.  ஆனால் குரு வம்சத்தினர் நாம் இல்லை;  நம் பெரியப்பா திருதராஷ்டிரர் அவர்களின் புத்திரர் நூற்றுவரும் மட்டுமே.  அவர்கள் நன்மைக்காக மட்டுமே  நாம் நாட்டை விட்டுக் கடத்தப்பட்டோம்.” என்றான் கொஞ்சம் கோபமாகவே.  ஆனால் யுதிஷ்டிரனோ அர்ஜுனனின் கோபக் குரலை அலட்சியம் செய்துவிட்டு மேலே பேச ஆரம்பித்தான்.  “நாங்கள் வாரணாவதத்தையும் விட்டு சுரங்கப் பாதையில் தப்பி ஓடி வந்தோம்.  ஏனெனில் எங்கள் சித்தப்பா விதுரருக்கு நாங்கள் அப்படி ஓடிப் போய்த் தப்பிக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள்.  எங்கள் நன்மையை மட்டுமே மனதில் சுமந்து கொண்டிருப்பவர் அவர்.  அவர் சொல்லைத் தட்ட முடியுமா?  மேலும் அவர்கள் நாங்கள் தப்பி ஓடினால் மட்டும் போதாது.  இறந்துவிட்டோம் என உலகத்தவர் நினைக்கவேண்டும் என்றும் விரும்பினார். அது தான் புத்திசாலித் தனம், விவேகம் என்றும் எண்ணினார்.”

மீண்டும் அர்ஜுனன் குறுக்கிட்டான். “ இங்கே நாம் வசிப்பதை விட இறந்தே போயிருக்கலாம்.  அதைவிடவும் இது கொடுமையாக உள்ளது!” அவன் மனதின் கசப்பு முழுவதும் குரலில் வழிந்தோடியது.  “ஆஹா, இந்த மாதிரி நீ சொல்லலாமா அர்ஜுனா?  நான் ஒருவன் இங்கே அரசனாக ஆட்சி செய்து வருகிறேன் என்பதை மறந்தாயா?  என் ஆட்சி இங்கே நடக்கையில் இங்கே இருப்பதை விடச் செத்துத் தொலைந்திருக்கலாம் என நீ சொல்லலாமா?  அதுவும் இன்னமும் உன்னை என் குடிமக்கள் பக்ஷணம் பண்ண வேண்டும் என நினையாது இருக்கையில் இப்படி நீ சொல்லலாமா?” பீமன் குற்றம் சாட்டும் குரலில் அர்ஜுனனிடம் கூறினாலும் அவன் குரலிலும், முகத்திலும் கண்ணியமும், சிரிப்பும் நிறைந்திருந்தது.  ஒரு பெரிய புன்சிரிப்போடேயே இதைக் கூறினான் பீமன்.  இவை எதையுமே கவனிக்காமல் யுதிஷ்டிரன் மேலும் கூறினான்:” கிருஷ்ணனுக்கு நாங்கள் அனைவரும் துவாரகை வந்து இவ்வுலகத்தினர் அனைவருக்கும் நாங்கள் உயிருடன் இருப்பதை அறிவிக்க வேண்டும் என்னும் கருத்து இருந்தால், அவன் அப்படி நினைத்தால் நாங்கள் அப்படியே செய்கிறோம்.”  மெதுவாக யோசனையுடனேயே இதைக் கூறினான் யுதிஷ்டிரன்.  “ஆனால் நாம் முதலில் ஆசாரியர், முனி சிரேஷ்டர், வியாசரிடமும், சித்தப்பா விதுரரிடமும் அநுமதி வாங்கிக் கொள்ள வேண்டும்.”

“நாம் எப்போதுமே ஹஸ்தினாபுரத்துக் காரர்கள் தான் நாம் செய்வதைத் தப்பு என்றோ சரி என்றோ கூற வேண்டும்;  அவர்கள் நமக்கு எப்போதும் வழிகாட்ட வேண்டும் என நினைக்கக் கூடாது!” அர்ஜுனன் பொறுமையிழந்து காணப்பட்டான்.  அவன் தன் தமையன் இந்தச் சூழ்நிலையை எடுத்துக் கொண்ட விதம் குறித்து மன வருத்தம் அடைந்திருப்பது அவன் குரலில் தெரிந்தது.   “இந்த மோசமான வனப்பகுதிகளில் நாம் இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும்?? துரியோதனனுக்கு நாம் உயிருடன் இருப்பது தெரிந்து நாம் இவ்வாறெல்லாம் கஷ்டப்படுவதைக் கண்டு அவன் சந்தோஷம் அடையும் வரையா?”  அதுவரை வாய் மூடிக் கொண்டிருந்த நகுலன் அப்போது வாய் திறந்தான்.

“மூத்தோரே, நான் இந்தக் காட்டில், மிக மோசமான இந்த இடத்தில் முயல்களுக்குப் பயிற்சி கொடுப்பதை விடவும் துவாரகையின் குதிரைகளுக்குப் பயிற்சி கொடுப்பதை மிக விரும்புகிறேன்.  அதுவும் இந்த முயல்களுக்கு நான் பயிற்சி கொடுத்துக் காப்பாற்றினாலும் இந்த பீமனின் ராக்ஷசக் குடிகளின் வயிற்றுக்குள் அவை போய்ச் சேர்ந்துவிடுகின்றன.  என் பயிற்சியும் வீணாகிறது!”  மிகுந்த வெறுப்புடன் கூறினான் நகுலன்.  “ஆஹா, அப்போது நீ ஏன் ஒரு ராக்ஷசிக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது?  நான் அளிக்கவில்லை?  என்னைப் போல் நீயும் ஒரு ராக்ஷசிக்குப் பயிற்சி அளிக்கலாமே? “பீமன் இடையில் புகுந்தான். ஏதோ பெரிய நகைச்சுவையைக் கண்டுவிட்டது போல் அவன் தனக்குத் தானே உள்ளூரச் சிரிக்கிறான் என்பதும் புரிந்தது.  அவனுடைய இந்த விசேஷமான தனிப்பட்டதொரு கருத்தை நகுலனிடம் கூறியதைக் கேட்ட குந்தி அவனைக் கொஞ்சம் கனிவும், பாசமும் கலந்த கோபம் கொண்டு  அதே சமயம் அவன் பேசியதில் தனக்கு உடன்பாடில்லை என்பதையும் பார்வையாலேயே காட்டினாள்.

தான் அணிந்திருந்த மிருகங்களின் தோலால் ஆன உடையைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்த நகுலனுக்கு ஹஸ்தினாபுரத்தில் இருக்கையில் அணிந்து வந்த பட்டுப் பட்டாடைகளின் நினைவு வந்தது.  இப்போது நம் நிலைமை நல்ல உடை உடுக்கும்படி கூட இல்லையே என்பதை நினைத்துப் பார்த்து அவன் மனம் வெதும்பியது.  அந்தக் கோபம் குரலில் தெரியச் சீறினான்:  “அந்த மஹாதேவன், சாக்ஷாத் பசுபதிநாதன், அவன் நேரிலே வந்தால் கூட உன்னுடைய ராக்ஷசிகளுக்குப் பயிற்சி கொடுக்க மாட்டான்! எவராலும் இயலாத ஒன்று!  ஓஹோ, மஹாதேவா, இறைவனுக்கு எல்லாம் இறைவனே! இவர்கள் எப்படிப்பட்ட ராக்ஷசர்கள்! “ கூறிக்கொண்டே விண்ணை நிமிர்ந்து பார்த்து அங்கே இருந்து நேரடியாகக் கடவுளர்கள் எவரேனும் உடனே தோன்றி அவனுக்கு உதவ மாட்டார்களா என்பதைப் போல் பார்த்தான் நகுலன்.  ஒரு நீண்ட பெருமூச்சும் விட்டான்.  தன் பக்கத்து நியாயத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தான் அர்ஜுனன். “ நான் முடிவு செய்துவிட்டேன்.  துவாரகைக்குச் சென்று அங்கே கிருஷ்ணனின் தோழமையிலும், அவன் மேற்பார்வையிலும் கடவுளரும் அஞ்சும் வண்ணம் பயிற்சிகளை மேற்கொள்ளப் போகிறேன்.” சற்றே நிறுத்திய அர்ஜுனன் மேலும் தொடர்ந்து, “ என்னால் முடியவில்லை!  இந்த ராக்ஷசக் குடியிருப்பு எனக்கு அலுத்து விட்டது.  இங்கே இருந்து கொண்டு மூங்கில்களால் ஆன வில்லில், மூங்கிலால் ஆன அம்புகளை விண்ணில் பறக்கும் பக்ஷிகளின் மேல் குறி பார்த்துப் பழகுவதை நினைத்தாலே என் மனம் வருந்துகிறது;  மிகுந்த வேதனையில் ஆழ்கிறேன்.  அதோடு அல்லாமல் நான் அவ்வாறு பயிற்சி செய்வதைப் பார்த்து இந்த ராக்ஷசக் குடிமக்கள் சிரிக்கின்றனர்;  கேலி செய்கின்றனர். என்னால் அவர்கள் பேசுவதைத் திரும்பப் பேச முடியவில்லை என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் மொழியில் கேலி பேசுகின்றனர். என்னை அறிவற்றவன், முழு மூடன் என நினைக்கின்றனர்.” அர்ஜுனன் குரலில் அவன் மனவேதனை தெரிந்தது.

“அதனால் என்னப்பா?  இதைவிட உனக்கு வேறு என்ன வேண்டுமாம்?” பீமன் இடை புகுந்தான்.

“எனக்கு வேண்டியது குறித்து நான் நன்கறிவேன்.  ஒவ்வொரு இரவும் எனக்கு என்னுடைய அருமையான வில்லின் நினைவு வந்து மோதுகிறது. அற்புதமான வில்! வெள்ளியைப் போல் பளபளக்கும் அம்புகள், அவற்றின் கூர்முனைகள், அதோடு கூட என்னுடைய வில்லில் நாண் ஏற்றுகையில் ஏற்படும் அருமையான ஒலி ஒரு இன்னிசையைப் போல் என் காதுகளில் ஒலிக்கும்.  என்னுடைய நாண் ஒரு மந்திர சக்தி வாய்ந்த அற்புதமான நாண். “ தன் ஆயுதங்களைக் குறித்த நினைவுகளில் மூழ்கிய அர்ஜுனன் உள்ளூரக் கொண்ட கோபத்தால் சட்டென மெளனம் ஆனான்.  நிதானமும், விவேகமும் கொண்ட யுதிஷ்டிரன் தன் அமைதியான குரலில் ஆனால் அதே சமயம் தீர்மானமான முடிவுடன் பேசினான்.  “நாம் நம்முடைய இப்போதைய நிலை குறித்துப் புலம்பி நேரத்தை வீணாக்க வேண்டாம்.  நம்முடைய சகிப்புத் தன்மையின் ஆழம் எவ்வளவு தூரம் நிலைக்கும் என்பதற்கான ஒரு பரிக்ஷை இது.  இறைவனுக்கெல்லாம் இறைவன் நம்மைப் பரிக்ஷை கொடுத்துச் சோதிக்கிறான்.  எவ்வளவு பொறுமையை நாம் கடைப்பிடிக்கிறோம் என்பதை அவன் நம்மைச் சோதிப்பதன் மூலம் கவனிக்கிறான்.  இந்தச் சோதனைக்கு நாம் தயாராக வேண்டும். இதை நாம் எதிர்கொள்ள வேண்டும்.  இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.  நாம் கிருஷ்ணனின் அழைப்பை ஏற்று துவாரகைக்குச் செல்ல வேண்டுமா?  அல்லது சித்தப்பா விதுரரின் செய்திக்குக் காத்திருக்க வேண்டுமா என்பதுவே!”

அர்ஜுனனின் கோபம் எல்லை மீறியது.  பொறுமையிழந்த அவன், “சித்தப்பா விதுரர் ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரரின் மனோநிலைக்கு ஏற்பவே நடந்து கொள்வார்.  அவர் அதைத் தான் நம்பி முடிவெடுப்பார்.  நான் சொல்கிறேன், கேளுங்கள் அண்ணாரே,  பெரியப்பா திருதராஷ்டிரரின் மனம் நம் பால் மாறி இருக்கும் என நினைக்கிறீர்களா?  நிச்சயம் மாறாது! அவர் அன்பு மகன் துரியோதனனின் மனம் வருந்தும்படியானதொரு கருத்தையோ, முடிவையோ அவர் எடுக்க மாட்டார். அவரால் முடியாது.  துரியோதனனோ நமக்கு உரியதை நமக்குத் தரச் சம்மதிக்கப் போவதில்லை.  அவன் தரவும் மாட்டான்.  ஆகவே நாம் கிருஷ்ணனின் யோசனையை ஏற்போம்.  துவாரகைக்குச் செல்வோம்;  அல்லது இந்தப் பரந்து விரிந்த உலகின் வேறு எங்காவது ஒரு பகுதிக்குச் செல்வோம்.  அங்கே நம் ஆற்றலால், நம் அனைவரின் ஒற்றுமையால் நமக்காக ஒரு அன்பான உலகைச் சிருஷ்டிப்போம்.  நம்முடைய எதிர்காலத்தை நாமே நல்ல முறையில் செதுக்குவோம். அற்புதமானதொரு உலகைப் படைப்போம்.” யுதிஷ்டிரன் அர்ஜுனனைப் பார்த்த பார்வையில் அவனைக் கண்டிக்கும் தொனி தெரிந்தது.  வாய் திறந்து எதுவும் பேசாமலேயே தன் பார்வையாலேயே அவனைக் கண்டித்தான் யுதிஷ்டிரன்.  அர்ஜுனன் மிகுந்த மனக்கசப்போடு, “யோசியுங்கள் அண்ணாரே, கற்பனை செய்து பாருங்கள்.  இந்த ஆர்ய வர்த்தத்திலேயே சிறந்ததொரு வில் வித்தை வீரன், விண்ணில் பறக்கும் பறவைகளை வீழ்த்திப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.”  சட்டென மாறியதொரு மனோநிலையில் கிட்டத்தட்டக் கெஞ்சலாக அர்ஜுனன் கூறினான்.  “நாம் செல்லலாம் அண்ணாரே, அந்த மஹாதேவன் கருணையாலும், நம் அனைவரின் வீரத்தாலும் நாம் நமக்கென ஒரு அழகான சாம்ராஜ்யத்தையே சிருஷ்டிக்கலாம்.  இங்கிருந்து முதலில் செல்லலாம்.”

“ஆஹா, அர்ஜுனா, நான் ஏற்கெனவே ஒரு சாம்ராஜ்யத்தை உனக்காகவே வென்றிருக்கிறேனே!  இது போதாதா?  இன்னும் ஏன் எதிர்பார்க்கிறாய்?” பீமன் கூறினான்.

“ஆமாம், ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யம் தான்.  அந்த சாம்ராஜ்யத்தில் நீ எப்போதெல்லாம் எங்கேனும் வெளியே செல்கிறாயோ, அப்போதெல்லாம் உன் குடிமக்களால் நாங்கள் சாப்பிடப் படுவோமோ என அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அப்படிப்பட்டதொரு சாம்ராஜ்யம்!” இகழ்ச்சியுடன் கூறினான் அர்ஜுனன்.


8 comments:

ஸ்ரீராம். said...

யுதிஷ்டிரர் சிடுமூஞ்சி டைப்போ?! ஆனாலும் தெளிவாகப் பேசுகிறார். மூத்தவர் அல்லவா!

குடும்பத்துடன் அமர்ந்து விவாதிப்பது இயற்கையாகவும், சுவாரஸ்யமாகவும் அமைந்திருக்கிறது - அவரவர் குணநலன்கள் வெளிப்பாட்டுடன்!




இராஜராஜேஸ்வரி said...


சகோதரர்களின் கலந்துரையாடல் கனக்கவைத்தது ..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

பஞ்ச பாண்டவர்களின் கலந்துரையாடல்களுடன் கதை மேலும் நகர்ந்துள்ளது. சுவாரஸ்யம் தான். தொடரட்டும்.

கதம்ப உணர்வுகள் said...

இத்தனை நாள் உங்க ப்ளாக்ஸ்பாட் வர தெரியாமல் இருந்தேன்.. இராஜராஜேஸ்வரி அவர்களின் உதவியால் இங்கு வரமுடிந்தது கீதா...

இனி பொறுமையாக படிக்கிறேன்பா...

நிறைவான நன்றிகள் இராஜிம்மா...

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், இல்லை சிடுமூஞ்சி எல்லாம் இல்லை. விவேகம் நிறைந்தவர். ஒரு முறைக்கு நாலு முறை சிந்தித்து முடிவு எடுப்பவர். :)))

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, தொடர்ந்து வருவதற்கும் கருத்துக்கும் நன்றி.

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.

sambasivam6geetha said...

மஞ்சு, அட, இந்த வலைப்பக்கத்துக்கு வரத்தான் வழி கேட்டீங்களா? ஹிஹிஹி, நான் எண்ணங்கள் வலைப்பதிவுனு நினைச்சேன். வாங்க, தொடர்ந்து வாங்க. ராஜராஜேஸ்வரிக்கு என் நன்றி.