Tuesday, December 10, 2013

அன்பினால் பிணைந்த பாட்டனும், பேரனும்!

காலையில் கண்விழித்து எழுந்த ஹிடும்பிக்குத் தன்னருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்த பீமனைக் கண்டதும் மகிழ்ச்சி பொங்கியது.  அவள் உடல் எல்லாம் சிலிர்த்தது.  அவள் எதிர்பாரா வண்ணம் அவன் அவளிடம் இரவே திரும்பிவிட்டான்.  அவளில்லாமல் அவனால் இயங்க முடியவில்லை.  ஆஹா! எத்தனை அற்புதமான கணவன்!  அன்பான கணவனும் கூட!  அதோடு மட்டுமா? அவன் மட்டும் அங்கேயே உறங்கி இருந்தால்?? நினைக்கவே ஹிடும்பி நடுங்கினாள்.  அவனுடைய மனிதர்களை ராக்ஷசர்கள் தாக்குகையில் இவன் அவர்களைக் காக்க வேண்டிப் போராடி இருந்திருப்பான்; அதன் மூலம் எங்காவது ஆழமான காயம் பட்டுக் கொண்டு வந்திருப்பான். அதற்கு முன்னாலேயே அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டான் போலும்! அப்பாடா!  நிம்மதியாக இருக்கிறதே! குழந்தை கடோத்கஜன்!  சட்டென நினைவுக்கு வந்தவளாய்த் தன்னருகே இருந்த தொட்டிலைப் பார்த்தாள் ஹிடும்பி.  குழந்தை எங்கே!  தன்னை அறியாமல் “வீல்” என்று கத்தியவள், தன் தலையில் மாட்டி இருந்த நாரினால் ஆன பொய்முடியை அகற்றிவிட்டுத் தன் தலையை விரித்துப் போட்டவண்ணம், வ்ருகோதரனை எழுப்பினாள். எழுப்பிய வண்ணம் தன்னிரு கரங்களாலும் மார்பில் அடித்துக் கொண்டாள். அவள் குழந்தை, அவள் கண்மணி, அவள் முன்னோரின் மறு பிறவி! விரோசனனின் மறு அவதாரம்,  அந்தக் குழந்தையைக் காணவில்லை.  ஒரு பொக்கிஷத்தையே அவள் தொலைத்து விட்டாள்.

பீமன் எழுந்தான்.  குழந்தையைக் காணோம் என்று தெரிந்ததில் அதிர்ச்சி அடைந்தவன் போல் நடித்தான்.  எனினும் அதைப் பூரணமாகவே செய்தான். கோபத்தோடு எழுந்து,குழந்தையைக் கடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொன்று விடுவதாக சபதமும் செய்தான்.  குடிசை முழுதும் தேடிவிட்டுப்பின்னர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கீழே இறங்கினார்கள் இருவரும்.  ஹிடும்பியின் மனநிலையே முற்றிலும் பாதித்துப் புலம்பிக் கொண்டும், அழுது கொண்டும் உடன் வர, இருவரும் குழந்தையைக்குறித்து விசாரித்த வண்ணம் சென்றனர்.  பீமனும் தன் பங்குக்குக் கோபத்தைக் காட்டிய வண்ணம் உறுமிக் கொண்டும் சீறிக்கொண்டும் சென்றான்.  சட்டென நின்றான் பீமன்.  தன் நெற்றியை ஆள்காட்டி விரலால் தட்டிக் கொண்டான்.  ஏதோ நினைவில் வந்தவன் போல, “இதோ பார் ஹிடும்பி, என் பாட்டனாரைக் கேட்போம், குழந்தை எங்கே உள்ளான் என்பதை!  அவருக்கு இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் தெரியும்.  அனைத்தும் அறிந்தவர். அவருக்கு கடோத்கஜன் இருக்குமிடம் கட்டாயம் தெரிந்திருக்கும்.” என்றான்.

“என்ன, உங்கள் பாட்டனா?  ஆஹா, அவர் அங்கே எங்கே இருக்கப் போகிறார்!”என்ற ஹிடும்பி தான் தன்னை மீறி உளறிவிட்டதை உடனே உணர்ந்தும் விட்டாள்.  வியாசருக்கும், மற்றவர்களுக்கும்  என்ன நடந்திருக்க வேண்டுமோ அது நடந்திருக்கும்.  ஆனால் அது தான் அறியாமல் நடந்ததாக அன்றோ அவள் காட்டிக் கொள்ள வேண்டும்!  அவளுக்குத் தான் எதுவுமே தெரியாதே. தன்னை சுதாரித்துக் கொண்டுவிட்டாள் ஹிடும்பி.  பீமன் ஒன்றுமே அறியாதவன் போலவே அவளைப் பார்த்து, “என்ன, என் பாட்டனுக்கு என்ன ஆகி இருக்கும்? “ இதைக் கேட்ட அவன் குரலில் கொஞ்சம் கோபத்தையும் காட்டினான்.மேலும் தொடர்ந்து,”அப்படி அவர் இல்லை எனில், கடோத்கஜனும் அவருடன் தான் போயிருப்பான்.”  என்றான்.

ஹிடும்பி முனகினாள். “ஓ,ஓஓ, என் அருமைக் குழந்தை! விரோசனனின் மறுபிறவி அவன்.  இப்போ எங்கே இருக்கிறான்? என்ன செய்கிறான்?” புலம்பினாள் ஹிடும்பி.  “கவலைப்படாதே, ஹிடும்பி, வா, பாட்டனார் இருக்குமிடம் செல்வோம். அங்கே அவரிடம் விசாரிப்போம்.” என்று கூறிய பீமன் அவளை அழைத்துச் சென்றான்.  வியாசரின் குடிசையை நோக்கிச் செல்கையில் அவர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் விசாரித்துக் கொண்டு சென்றனர்.  அங்கே குடிசைகளில் இருந்து சில ராக்ஷசர்கள் அப்போது தான் கீழே இறங்கினார்கள்.  சிலர் கீழே இறங்கி அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர்.  அனைவரும் ஹிடும்பியையும், பீமனையும் பார்த்துவிட்டு ஆச்சரியம் மீதூற என்ன செய்தி என்று கேட்டுவிட்டு கடோத்கஜனைக் காணோம் என்றதில் இன்னும் அதிக வியப்பு அடைந்தனர். அவர்கள் யாருமே கடோத்கஜனைப் பார்க்கவே இல்லை என்று கூறினார்கள்.  அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்களும் கடோத்கஜனைத் தேடிக் கொண்டு சென்றனர்.  வெகு விரைவில் ஒரு பெரிய கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  கத்திக் கொண்டும், விசாரித்துக் கொண்டும், அலறிக் கொண்டும் எல்லாத் திசைகளிலும் குழந்தையைத் தேடிச் சென்றது கூட்டம்.

வியாசரின் இருப்பிடத்தை நெருங்கினார்கள் பீமனும், ஹிடும்பியும்.  ஹிடும்பி அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள். முகத்தில் குழப்பமும், அதிர்ச்சியும் தெள்ளத் தெளிவாய்த் தெரிய, கண்கள் பிதுங்கி விடும்படி பார்த்துக் கொண்டே நின்றுவிட்டாள்.  வாயைத் திறந்து ஏதோ சொல்ல நினைத்தாள் போலும். தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்ட பாவனையில் தன் கைகளால் தொண்டையை அழுத்திக் கொண்டாள்.  அதோ, பீமனின் பாட்டனார். உயிருடன்.  எப்போதும் போல் தான் இருக்கிறார்.  எதுவும் நடந்ததாகவே தெரியவில்லையே! அதுவும் அருகிலுள்ள நீர்க்கரையில் காலைக் குளியலை முடித்துவிட்டுத் திரும்புகிறார்.  அவர் கைகளில் கடோத்கஜன்.  அவனும் குளித்திருக்கிறான் போல் இருக்கிறதே.  என்ன கடோத்கஜனா?  வியாசர் கரங்களிலா?  தன் கண்களைத் துடைத்த வண்ணம் மீண்டும் பார்த்தாள் ஹிடும்பி.  ஆம் கடோத்கஜனே தான்.  குளித்ததில் அதுவும் அவ்வளவு விடியற்காலக்க் குளியலில் சந்தோஷக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான் அவன். ஒரு கை தன்னிச்சையாக வியாசரின் தாடியைப் பற்றிக் கொண்டிருந்தது.  குளித்துவிட்டு வந்த வியாசர் யாக குண்டத்தின் எதிரே அமர்ந்து அன்றைய அநுஷ்டானத்தை வேத மந்திர ஒலியுடன் ஆரம்பித்தார். அவர் கரங்களில் உவகையுடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான் கடோத்கஜன்.

ஹிடும்பி ஆனந்தக் கூச்சலிட்டாள். “அதோ கடோத்கஜன்.  என் குழந்தை! அவன் எப்படி இங்கே வந்திருப்பான்? என்னருகே அல்லவோ தூங்கிக் கொண்டிருந்தான்? “ என்று வியப்புடன் கேட்டாள்.  பீமன் அதற்கு, “பாட்டனாரால் எதையும் நடத்திக் காட்ட முடியும் ஹிடும்பி.  அவரைக் குறித்து நீ எதுவும் அறிய மாட்டாய்.  ஒரு குழந்தையை அவரால் நடக்க மட்டுமா, ஓடவே வைக்க முடியும்.  கடோத்கஜன் தானாகவே இங்கே வந்திருக்க வேண்டும்.” என ஏதுமே அறியாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு அப்பாவியாய்க் கூறினான் பீமன். சற்று நேரத்தில் மந்திரகோஷம் முடிந்தது. மக்கள் அனைவருமே யாககுண்டத்தின் அக்னிக்கு தானியங்கள், கொட்டைகள், பழங்கள் ஆகியவற்றை ஆஹுதி அளித்தனர். அனைவரையும் வியாசர் ஆசீர்வதித்தார்.  அவர் கொடுத்த பாலினால் உடல் நலம் பெற்றவர்கள் அனைவரும் அவரைப் பார்த்து ஆனந்தக் கூச்சலிட்டனர்.  அந்தக் கூட்டத்தின் நடுவே ஹிடும்பியும், பீமனும் வழியை உண்டாக்கிக் கொண்டு வியாசரிடம் சென்றனர்.  அவர்களைப் பார்த்த வியாசர் புன்னகையுடன் தன் கரங்களில் இருந்த கடோத்கஜனைப் பார்த்து, “இதோ பார், என் கண்மணி, உன் அம்மா வந்திருக்கிறாள்.” என்றார். குழந்தையை வாங்கிக் கொள்ள ஹிடும்பியும் தன் கரங்களை ஆவலுடன் நீட்டினாள்.  ஆனால் கடோத்கஜனோ அவளைப் பார்த்துக் கோபமாக உறுமிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.  வியாசர் எங்கே அவளிடம் தன்னைக் கொடுத்துவிடுவாரோ என்று பயப்படுபவன் போல அவரை இறுக்கிக் கட்டிக் கொண்டு தோள்களில் முகத்தையும் புதைத்துக் கொண்டான்.  வியாசர் மீண்டும் சிரித்துவிட்டுக் குழந்தையைத் தாயிடம் கொடுக்க முயல, அவன் திரும்பி வியாசரிடமே வர, சுற்றி நின்ற கூட்டமும் இதைப் பார்த்துவிட்டுச் சிரிக்க ஆரம்பித்தது.

ஒரு வழியாகத் தன் பிள்ளையை வாங்கிக் கொண்ட ஹிடும்பி வியாசரைப் பார்த்து, “இரவில் நட்ட நடு நிசியில் இவன் எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தான்?” என்று வியப்புடன் கேட்டாள்.  “நீ அவனையே கேட்பது தானே! “ என்ற வியாசர் சிரித்த வண்ணம் தன் கரங்களை நீட்ட ஆவலுடன் பாய்ந்து வந்தான் கடோத்கஜன்.  வியாசரின் மடியில் ஏறி அவர் தாடியைப் பிடித்த வண்ணம் அவர் தொடைகளில் நின்று கொண்டு ஒரு கையால் கழுத்தையும் கட்டிக் கொண்டான்.   குழந்தையை அன்புடன் அணைத்த வண்ணம் வியாசர் அவனிடம்,”என் கண்ணே, நீ இங்கே எப்படி வந்தாய்?” என்று கேட்டார். கடோத்கஜன் மீண்டும் உறுமினான்.  “அவன் என்னிடம் சொல்ல மாட்டானாம், எப்படி வந்தோம் என, “ என்ற வியாசர், குழந்தையிடம் மீண்டும், “அது சரி என் கண்மணி, இந்தக் கொள்ளுப்பாட்டனை உனக்குப் பிடிக்குமா?” என்று கேட்டார். கடோத்கஜன் என்ன புரிந்து கொண்டானோ, சிரித்துக் கொண்டும் வியாசரின் தாடியை உலுக்கிக் கொண்டும் அவர் தொடைகளில் நின்ற வண்ணம் குதித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கடோத்கஜன் என்ன புரிந்து கொண்டானோ, சிரித்துக் கொண்டும் வியாசரின் தாடியை உலுக்கிக் கொண்டும் அவர் தொடைகளில் நின்ற வண்ணம் குதித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.//

அழகான காட்சி. கதை ஆமை அல்லது நத்தை வேகத்தில் நகர்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சி... தொடர்கிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

அன்பினால் பிணைந்த பாட்டனும், பேரனும்!ரசிக்கவைத்தார்கள்

sambasivam6geetha said...

வைகோ சார்,

டிடி,

ராஜராஜேஸ்வரி,

நன்றி.