Monday, January 6, 2014

கண்ணனை நம்புபவர்கள் எவருமே இல்லையா?

பெரியோர்களின் இந்தக் கருத்தைக் கண்டு ஏமாற்றம் அடைந்த கிருஷ்ணன் தன் சகோதரன் பலராமன் பக்கம் திரும்பினான்.  கிருஷ்ணனை ஒரு போதும், ஒரு நொடியும் பலராமன் விட்டுக் கொடுத்ததே இல்லை.  இது வரை வாழ்ந்திருந்த வாழ்க்கையில் எல்லாம் கிருஷ்ணனின் பக்கமே நின்று அவனுக்குப் பேருதவிகள் செய்திருக்கிறான்.  ஆனால் இப்போது??? பலராமனுக்குத் தன் வாழ்க்கையில் பெரும் திருப்தி ஏற்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான்.  கஷ்டங்களோடு வாழ்ந்து வந்த வாழ்க்கையின் மேல் அவனுக்கு அவனையும் அறியாமல் ஒரு வெறுப்பு வளர்ந்திருந்தது.  தன் அருமை நண்பர்களோடு நேரத்தைச் செலவிடுவதிலும், அவர்களோடு மதுபானம் அருந்திய வண்ணம் சூதாட்டங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிப்பதிலும், அனைவரையும் அதிகாரம் செய்த வண்ணம் நடந்து கொள்வதிலும், சிறு வயது சாகசங்களை நினைத்து நினைத்து மகிழ்ந்து வாழ்வதிலும் அவன் பொழுது கழிந்து கொண்டிருந்தது.  தன்னுடைய இள வயது சாகசங்களை நினைத்து நினைத்துப் பெருமை கொண்டிருந்த அவனுக்கு யாதவர்களோடு இனி யாரும் போர் புரிய மாட்டார்கள்; யாதவர்கள் வலிமை பெற்றுவிட்டனர் என்பதில் ஐயமே இல்லை.

பலராமன் வெளிப்படையாக இருந்தான்.  ஆனால் கோவிந்தனோ!  அவன் சற்றும் மாறவில்லை.  இளவயதில் இருந்த அதே கோவிந்தனாகவே இப்போதும் சாகசங்களை நிகழ்த்த ஆசைப்படுபவனாக, அதிசயங்கள் நிகழ்த்துவதில் பிரியமுள்ளவனாகவே இருந்து வருகிறான்.  எப்போது பார்த்தாலும் அதிசயங்களை நிகழ்த்த முடியுமா?  போதும்; போதும். பலராமனுக்கு இதுவரை நடைபெற்றவையே போதும் எனத் தோன்றியது. கண்ணனுக்கு திரெளபதியின் சுயம்வரத்துக்குச் செல்ல வேண்டும் என ஆசை இருந்தால் தடுப்பவர்கள் யார்?  தாராளமாய்ப் போகட்டுமே!   கோவிந்தன் விரும்பினால் பலராமன் அவனுடன் துணைக்கு மட்டுமே செல்வான்.  அந்தப் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டான்.  ஆஹா, இன்னொரு மனைவியைக் கொண்டு வருவதன் மூலம் குரு வம்சத்தினரின் பகைமை அல்லவோ வரதக்ஷணையாக வந்து சேரும்!   அதோடு அவர்களோடு யுத்தம் செய்யும்படியும் நேரிடலாம்.  வேண்டாம் வேண்டாம்.  இது என்ன புதுத் தொல்லை.  அவள் கழுத்தில் கட்டிய கல்லாக அன்றோ இருந்து வருவாள்!  நமக்கு வேண்டாம்.

அது மட்டுமா?  துரியோதனன் என் அன்பான மாணவன் ஆயிற்றே!   தன் பிரியத்துக்கு உகந்த அந்த மாணவனை பலராமன் மிகவும் நேசித்தான்.  ஹூம்! பாவம் துரியோதனன்!  அவன் விதி தான் எப்படி அவனை மோசம் செய்திருக்கிறது!  அரச குலத்தில் பிறந்தவன் ஒரு குருட்டுத் தந்தைக்கா பிறக்க வேண்டும்!  துரதிர்ஷ்டம் பிடித்தவன்!  அதனால் அவன் தன் வாரிசு உரிமையையே இழக்க நேரிட்டு விட்டதே!  என்ன துரதிர்ஷ்டம்!   செகிதனா இருந்தாலும் சரி இல்லை எனினும் சரி,   யாராக இருந்தால் எனக்கு என்ன?  துரியோதனன் போரிட்டு ஜெயித்ததைப் பிடுங்கி அவனிடம் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் பலராமனுக்கு இல்லை.   புஷ்கரத்தை துரியோதனனிடமிருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது.  செகிதனா தோற்றவன் தோற்றவனே!   அவன் துவாரகைக்குத் திரும்பட்டுமே!  இங்கிருக்கும் எண்ணற்ற யாதவத் தலைவர்களுள் அவனும் ஒருவனாக இருக்கட்டுமே! என்ன குறைந்துவிடப் போகிறது?  அங்கே காட்டில் ஆட்சி செய்வதை விடவும் இது நல்லதே!   அவனுக்கு ஒன்றும் தாழ்வு ஏற்படப் போவதில்லை.  ஒரு போர் என்று ஏற்பட்டால் யாரேனும் ஒருவர் தான் ஜெயிக்கலாம்.  இரு தரப்பும் எப்படி ஜெயிக்க முடியும்.  ஒருவர் தோற்றே ஆகவேண்டும்.  இதற்காக யாதவர்கள் இந்த உலகெங்கும் சுற்றிக் கொண்டு எல்லா மனிதர்களின் தவறுகளையும் சரி செய்து கொண்டிருக்க முடியுமா என்ன?  தன் மனதில் உள்ளவற்றைக் கிருஷ்ணனிடம் தெரிவித்த பலராமன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.  சூழ்நிலையைப் புரிந்து கொண்டு முடிவு எடுக்கும்படிக் கிருஷ்ணனிடம் கூறிவிட்டே சென்றான்.

அடுத்து யாதவத் தலைவர்களைச் சந்தித்த கிருஷ்ணன் அவர்களின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி இருந்தது.  மொத்த சூழ்நிலையையும் தெளிவாக விளக்கினான் கிருஷ்ணன்.   புஷ்கரத்தை துரியோதனனிடமிருந்து மீட்டு அதை ஆண்டு வந்த செகிதனாவிடம் ஒப்படைக்க வேண்டியதன் கட்டாயச் சூழ்நிலையைத் தெளிவாகக் கூறினான்.  இதன் மூலம் யாதவர்களின் கெளரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினான்.  இந்தக் கடமையிலிருந்து அவர்கள் தவறக் கூடாது.  அப்படித் தவறினால் பாரதத்தின் வட பாகத்தை ஆண்டு வந்த யாதவ இளவரசர்களின் மேல் அவர்களின் கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் செலுத்தி வரும் அதிகாரங்களை இழக்க நேரிடும்.  அவர்களின் ஒத்திசைவு கிடைக்காமல் போய்விடும்.  அவர்களின் சொந்த பூமியான மத்ராவையும் அவர்கள் புனர் நிர்மாணம் செய்ய நேரம் வராமலும் போய்விடலாம்.  இப்போது நாம் செய்யப் போகும் இந்தச் செயலின் மூலம் அதற்கு ஒரு வழி பிறக்கலாம்.  மத்ரா மட்டும் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுவிட்டால் வட பாரதத்தில் யாதவர்களின் சக்தியை ஒருவராலும் அழிக்க முடியாது.

அது மட்டுமா?  மகதநாட்டுச் சக்கரவர்த்தி ஜராசந்தன் இந்தச் சுயம்வரத்தில் தன் பேரனுக்கு திரெளபதியை நிச்சயம் செய்துவிட்டான் எனில்?? அதை நினைத்தே பார்க்க முடியவில்லை!  ஜராசந்தன் துருபதனோடு திருமண ஒப்பந்தம் போட்டுக்கொள்வதை எப்படியேனும் தடுக்க வேண்டும்.  இது மட்டும் நிகழ்ந்தால்!! துருபதனுக்கும் பேரழிவு காத்திருக்கிறது.  இன்றைக்குச் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் ஆர்யவர்த்தத்தின் சக்கரவர்த்திகளும், அரசர்களும், மன்னர்களும், இளவரசர்களும் ஜராசந்தனின் பணியாளர்களாக மாறிவிடுவார்கள்.  ரிஷிகளாலும், முனிவர்களாலும் நடைபெற்று வரும் குருகுலங்கள் மூடப்பட்டுவிடும்;  அல்லது அவற்றை ஆதரிக்கும் மன்னர்கள் இல்லாமல் அவை தவிக்க நேரலாம்.  ஜராசந்தன்  யாதவ குலத்துக்கே ஒரு முக்கியமான மன்னிக்க முடியாத, எளிதில் விலக்க முடியாத ஒரு எதிரி ஆவான்.  இந்த சுயம்வரத்தில் மட்டும் யாதவர்களின் நண்பர்களான ஒரு வீரன், அதிரதர்களான  யாதவர்களின் உதவியோடு அவன் திரெளபதியை வென்று விட்டான் எனில் ஜராசந்தனை முழுமையாகச் செயலிழக்கச் செய்து விட முடியும்.  என்ன ஆனாலும் சரி, கிருஷ்ணன் போட்டியில் கலந்து கொள்ளப்போவதில்லை.  ஆனால் யாதவர்களிலேயே சிறந்த வில் வித்தை வீரர்களான கிருதவர்மன், சாத்யகி, மற்றும் அவன் சிற்றன்னை குமாரன் ஆன கடன் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.  அவர்களில் எவரேனும் திரெளபதியை வெல்லலாம்.


6 comments:

ஸ்ரீராம். said...

பலராமனுக்கும் கன்னனுக்குமே கருத்து வேறுபாடு!

திண்டுக்கல் தனபாலன் said...

துரியோதனன் விதி அப்படி...!

தொடர்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

;) பகிர்வுக்கு நன்றிகள். தொடர் மேலும் தொடரட்டும்.

sambasivam6geetha said...

ஶ்ரீராம், அண்ணன் என்னடா, தம்பி என்னடா? ஹிஹிஹி!

sambasivam6geetha said...

துரியோதனன் விதி அப்படி என்றாலும் பலரும் ஏற்பதில்லை. :))))

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், நன்றி.