Friday, January 10, 2014

அதிர்ஷ்டம் இல்லாக் கண்ணன்!

விசுவாசமும், நம்பிக்கையும் தரும் மனைவி மட்டும் இருந்து விட்டால் ஒரு மனிதனால் எதைத் தான் சாதிக்க முடியாது!  கண்ணனுக்கோ இரு மனைவியரும் அப்படியே கிடைத்து இருந்தனர். கரவீரபுரத்தின் இளவரசியான ஷாய்ப்யா  கண்ணனின் உள் மனதுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணங்களைத் தன் அதீத புத்திசாலித் தனத்தினால் புரிந்து கொண்டாள். எப்போதும் அதிகம் பேசாமல் பார்வை ஒன்றாலேயே கண்காணிக்கும் அவளுக்கு வீர, தீர, பராக்கிரமசாலியான கண்ணனுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு புரிந்து கொள்ள முடிந்தது.   எவராலும் சமாளிக்க முடியாத செயல்களைச் செய்வதினாலேயே கண்ணன் சிறந்தவனாக விளங்குவதையும் அவளால் உணர முடிந்தது.  அவன் கடுமையான போராட்டங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் பல சந்தர்ப்பங்களை அவள் கண்டிருக்கிறாள்.  பேரழிவிலிருந்து விரைவான செயல்பாட்டின் மூலம் வெளிவர அவனுக்கு எவ்வளவு சக்தி தேவைப்பட்டிருக்கிறது என்பதையும் அறிவாள்.  தீங்கு வரக்கூடும் என்பது தெரிந்தே தன் அதிசய சக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவன் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு வந்திருக்கிறான்.  இது நிச்சயம்.  ஆகவே அவள் இப்போதும் அதிகம் பேசவே இல்லை.  ஆனால் கண்ணனின் மனநிலைக்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டதோடு, அவனுடைய  ஒரு பார்வையிலோ, சொல்லிலோ, செய்கையிலோ அவன் மனதைப் புரிந்தவளாக அவனுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் விதமாக நம்பிக்கை ஊட்டி வந்தாள்.

கண்ணனுக்குத் தன் தாயும், இரு மனைவியரும் தன்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும், அன்பும், பரிவும் பாசமும் நன்கு புரிந்தது.  ஆகவே அவன் தன்னிடம் எவ்வித மாற்றமும் இல்லாதவன் போல எப்போதும் போல மாறாப் புன்னகையுடன் இருந்தான்.  ஆனால் அடி மனதில் அவனுக்கு வேதனையும், தொந்திரவும் தொடர்ந்து இருந்து வந்தன.   உண்மையான சூழ்நிலை என்ன என்பதைக் குறித்து அவன் தீர்மானமாக அறிந்திருந்தான்.  யாதவர்கள் காற்றில் ஆடும் கொடியைப்போல ஆட்டம் கண்டுவிட்டனர்.   அவன் இவ்வளவு வருடங்களாகப் போற்றிப் பாதுகாத்து வந்த தர்மத்தின் வழியில் செல்ல வேண்டும் என்ற குறிக்கோள், அதன் மூலம் தர்மத்துக்குக் கிடைக்கவிருந்த வெற்றி அனைத்தும் நெருங்கி வருவதைப் போல் வந்துவிட்டு மறைந்துவிட்டது.  இனி நம்பிக்கைக்கே இடமில்லாமல் போய்விட்டது.  இப்போது அவன் செய்ய வேண்டியது எல்லாம் வாய் பேசாமல் சுயம்வரத்தில் கலந்து கொள்வது ஒன்று மட்டுமே!  ஆனால் இந்த சுயம்வரத்தில்  தர்மத்தின் மாட்சிமை பொருந்திய சக்தி தன்னிடம் உள்ளது என்ற எண்ணத்துடன் அந்த கம்பீரத்துடன் அவனால் கலந்து கொள்ள இயலாது.  யாதவர்கள் எவரும் அவனுக்குப் பின்னால் துணையாக இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டுவிடுவார்கள்.  மற்ற அரசர்களைப் போல அவனும் அவர்களில் ஒருவனாகவே இருக்க வேண்டும்.  அவன் மகிமையோ, அவன் வீரமோ, மாட்சிமையோ தனித்து உணர முடியாது.

உத்தவனை கண்ணன்  பீஷ்மரிடம் தூது அனுப்பி இருக்கிறானே!  அதுவும் தோற்றுவிடுமோ?  அப்படித் தோற்றுவிட்டால்?? பீஷ்மருக்குக் கண்ணன் விடுத்த வேண்டுகோளை  பீஷ்மர் ஏற்றுக்கொள்ளாவிட்டால்??  நியாயம் என்ன என்பதையும், நீதியின் வழி செல்லவேண்டிய அவசியத்தையும் பீஷ்மரும் உணராவிட்டால்??   உத்தவன் தலைமையில் நாகர்கள் புஷ்கரத்தை வலுவில் பிடுங்கி செகிதானாவுக்குக் கொடுக்கும்படி நேர்ந்துவிட்டால்?? இல்லை; இல்லை. அப்படி எல்லாம் நடவாது.  புஷ்கரம் மட்டும் செகிதானாவிற்குத் திரும்பக் கொடுக்கப்படாவிட்டால்!! ஆஹா, கண்ணன் தோற்றே விடுவான்.   தவிர்க்க இயலாமல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் கண்ணனின்  வசீகரம் மெல்ல மெல்ல மறைந்தே போகும்.  கண்ணன் தன் தலையை உலுக்கிக் கொண்டான்.  ஆனால் ஒன்று நிச்சயம், கண்ணன் திட்டப்படி ஐந்து சகோதரர்களும் சுயம்வரத்தில் எப்படியேனும் கலந்து கொண்டே ஆக வேண்டும்.

கண்ணனின் திட்டப்படி, அவர்கள் ஐவரும் அனைவரும் பிரமிக்கும் விதத்தில் இந்த சுயம்வரத்தின் போது வெளிப்பட வேண்டும்.  அப்படி இல்லை எனில் அவர்கள் ஐவருமே குரு வம்சத்தினரின் கெளரவர்கள் நூற்றுவரின் அடிமைகளாக அவர்களைச் சார்ந்தவர்களாகவே என்றென்றும் வாழும்படி ஆகிவிடும்.  குரு வம்சத்தினரின் முன்னர் வேறு உதவிகள் இல்லாதவராய் நிராதரவாய் நிற்கும்படி ஆகிவிடும்.  சகோதரச் சண்டை அதிகம் ஆகும்; அல்லது துரியோதனன் தன் முழு அதிகாரத்தையும் பிரயோகிப்பதால் எதுவுமே செய்ய முடியாமலும் போகலாம்.  அதோடு விட்டதா?  மேலும் இந்த ஜராசந்தன் ஒருவன் இருக்கிறானே!  மகத நாட்டுச் சக்கரவர்த்தி!  ஆரியர்களை அழிப்பதே அவன் குறிக்கோளாக வைத்திருக்கிறான்.  ஆரியர்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அழிப்பதே அவனுக்கு முக்கியம். அதற்காகவே பாஞ்சால இளவரசியைக் கடத்தித் தூக்கிச் செல்லவும் தயங்க மாட்டான்.  ஒன்றையொன்று தொடர்ந்து வரும் சத்யம், யக்ஞம், தபஸ் போன்ற ஆசார, அநுஷ்டானங்கள், ரிஷி, முனிவர்களால் சொல்லப்பட்ட, சொல்லப்படுகின்ற அவர்கள் ஆசிரமங்களில் கற்பிக்கப்படுகின்ற இந்த வாழ்க்கை முறைக்கெல்லாம் அழிவு ஏற்பட்டு விடும்.  அவர்களால் அன்றோ ஆரியர்களின் வாழ்க்கை கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும், ஒரே சீராக நடந்து வருகிறது.  இவை மறைந்து போய்விடுமோ?   இவற்றைக் காக்க எவரும் இல்லாமல், இவற்றை மேம்படுத்த, இவற்றைக் கற்க எவரும் இல்லாமல் ஒரேயடியாக மறைந்து விடுமோ?  என்ன செய்யப் போகிறேன்!

இந்த தர்மசங்கடமானதொரு இக்கட்டானதொரு சூழ்நிலையைக் குறித்து நினைக்க, நினைக்க, கண்ணனுக்குத் தான் ஏதோ, எதையோ விட்டு விட்டது போல், மறந்துவிட்டது போல் இருந்தது.  அனைவரும் அவனைக் கடவுள் எனக் கொண்டாடுகின்றனர்.  ஆனால் அவனோ ஒரு சாமானியனாக, பலஹீனனாகவன்றோ இருந்து வருகிறான்!  ஆஹா, அனைவருமே நான் ஏதோ அதிசயங்களை நிகழ்த்துபவனாக, ஒரு சாகசக்காரனாக நினைக்கையில் நான் இப்படி இருக்கிறேனே!  நான் ஒரு சாமானியன். ஆனால் கெட்டிக்காரன்.  அதிர்ஷ்டம் என்பது என் கதவுகளை எப்போதோ ஒரு முறை தான் தட்டுகிறது.

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விசுவாசமும், நம்பிக்கையும் தரும் மனைவி மட்டும் இருந்து விட்டால் ஒரு மனிதனால் எதைத் தான் சாதிக்க முடியாது! கண்ணனுக்கோ இரு மனைவியரும் அப்படியே கிடைத்து இருந்தனர். //

இதைவிட அதிர்ஷ்டமும் உண்டோ? ;)

நேர் மாறான தலைப்பு:

"அதிர்ஷ்டம் இல்லாக் கண்ணன்!"

திண்டுக்கல் தனபாலன் said...

மாயக் கண்ணனுக்கு இவையெல்லாம் ஒரு விளையாட்டு..!

ஸ்ரீராம். said...

"கண்ணன் மனநிலையே தங்கமே தங்கம்... கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்..." என்று பாடத் தொன்றுகிறது.

வைகோ ஸாரின் கருத்து கவர்கிறது.