Saturday, January 18, 2014

மனிதருக்கு மனிதர் மாறுபடும் தர்மம்!

 மேலே சென்ற கண்ணன் காதுகளில் தன்னுள்ளே திருப்தி அடைந்த ஒரு மனிதனின் குரல் கேட்டது.  அது கூறியது: “தர்மம் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும்.  முக்கியமாக என் தர்மம் என்னவென்பதை நான் அறிவேன். நான் கடவுளருக்கே கடன் கொடுக்கும் அளவுக்குப் பெரியவன். ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் பிச்சையிடுவதன் மூலம் கடவுளருக்குக் கடன் கொடுக்கிறேன்.  நான் கொடுப்பதை எல்லாம் சரியாகக் கணக்கில் வைத்துள்ளேன்.   என் வாழ்க்கையின் முடிவில் மரணம் என்னை வந்தடைந்ததும் தர்மத்தின் காவலனின் எதிரே நான் நிற்கையில் அவன் கணக்குப்பிள்ளையான சித்திரகுப்தன் வெகு எளிதாக என் கணக்கைப்பார்த்து மதிப்பிடலாம்.  என்னுடைய கணக்குகளைப் பார்த்துவிட்டு அதற்கேற்ற வட்டி விகிதங்கள் கிடைத்து நான் மேல் உலகில் சுகமானதொரு வாழ்க்கையை வாழலாம்.  அதற்கேற்றாற்போல் இப்போது வாழ்ந்து வருகிறேன்.”

“சேச்சே, நீயா தர்மவான்?  உன் தர்மமும் ஒரு தர்மமா?  வெறும் வியாபாரம். கடவுளரிடம் பேரம் பேசுகிறாய்!  ஒன்றைக் கொடுத்துப் புண்ணியங்களை வாங்குவதா தர்மம்?” அங்கிருந்தும் நடந்த கண்ணன் காதுகளில் வேறொரு குரல் இப்போது.  அந்தக் குரலில் கொஞ்சம் கரகரப்பும், பிசுபிசுப்பும் இருந்ததாய்த் தோன்றியது கண்ணனுக்கு.  அந்தக் குரல் கூறியது! “ நான் என் தர்மம் என்னவென்று அறிவேன்.  நான் என்ன செய்கிறேன் என்பது குறித்து எனக்குக் கவலையில்லை!  கொலையும் செய்வேன், திருடுவேன், பழி வாங்குவேன்.  எல்லாப் பாவங்களையும் செய்வேன்.  ஆனால் இறைவனின் மேல் உள்ள தோத்திரங்களை மனம் உருகிப் பாடுவேன். கேட்பவர் மனம் மட்டுமின்றி அந்த இறைவனின் மனமும் உருகும்.  என் பாவங்களை மறந்து மன்னிப்பார்.  நான் எவ்வளவு பொல்லாதவனாக இருந்தாலும் இறை நம்பிக்கை என்னிடம் இருப்பதால் கடவுள் என்னை மன்னிப்பார்..  என் கடவுள் கருணை மிக்கவர். இரக்கம் உள்ளவர்!”

“அட ஏமாற்றுக்காரா!  நீயா தர்மவான்? அனைத்துப்பாவங்களையும் செய்துவிட்டு இறைவனைத் தோத்திரம் செய்தால் உன்னை மன்னிப்பாரா? “ கண்ணன் மேலே செல்கையில் விவேகமும், ஞானமும் நிறைந்ததொரு குரல் கேட்டது.  அது கூறிய வார்த்தைகள் ஒரு துறவியினுடையதைப் போல் இருந்தன.  அது கூறியதாவது! “ “தீமைகளை எதிர்த்துப் போராடுவது என் வேலை அல்ல.  என் தர்மமும் அல்ல.  மெளனமாக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு விண்ணுலகின் மேம்பட்ட அரசனாக ஆகிவிடுவேன். என் பொறுமை அனைத்தையும் வென்று கொடுக்கும்.  தீயவர்கள் அவர்களின் முடிவை அவர்களே காண்பார்கள்.  அவர்களைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.  கொண்ட கொள்கைக்காக நான் செய்யும் இந்தத் தியாகத்தின் மூலம் பெரும் பதவியையும், புகழையும் அடைவேன்.”

“உன் தர்மம் குழந்தைகள் எப்படி எந்த வேலையும் செய்யாமல் நிஷ்கவலையாக இருக்கின்றனவோ அதை ஒத்துள்ளது.  குழந்தைகளுக்கு அது சரியானது! ம்ஹூம், வெட்டியாய் இருப்பதும் ஒரு தர்மமா?”  நீண்ட பெருமூச்சுடன் கிருஷ்ணன் மேலே நடந்தான்.  எலுமிச்சை வாசம் அடிக்கும் உடலுடன் எண்ணெய்ப் பசை கொண்ட தலைமயிரோடு, இளித்துக் கொண்டு ஒரு உருவம் வந்தது.  “இப்போது நீ பார்த்த, கேட்ட அனைத்து தர்மங்களும் பொய்யானவை.  மாயையானவை.  நான் என் இஷ்டப்படி சாப்பிடுவேன், குடிப்பேன், சந்தோஷம் அனுபவிப்பேன்.   என் உடலே எனக்குக் கோயில்.  என் உடலுக்கு நான் அளிக்கும் இன்பமே என் வழிபாடுகள், முக்கியச் சடங்குகள். அதற்கப்பால் ஒன்றுமே இல்லை;  எனக்குப் பின்னரும் ஒன்றுமே இல்லை!”

“நீ சாத்தானின் குழந்தை!  உன்னை என்னால் மன்னிக்கவே முடியாது.” கிருஷ்ணன் வெறுப்பிலும், அருவருப்பிலும் முகத்தைச் சுளித்த வண்ணம் திரும்பிக் கொண்டான்.  திடீரென இத்தனை நேரமாக அவன் கண்ட இந்த மாபெரும் ஊர்வலம் முடிந்து மறைந்து போனது.  தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தான் கிருஷ்ணன்.  அவன் மார்பு படபடவென அடித்துக் கொண்டது.  தனக்குத் தானே மெல்லச் சிரித்துக் கொண்டான் கிருஷ்ணன்.  அவன் கனவுகளின் மூலம் அவன் அறிந்தது, மனிதர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கோணத்தில் தர்மத்தைப் பார்க்கிறார்கள் என்பதே!  ஆனால் அவனுக்கும் தர்மம் என்றால் என்னவென்று தெரியும். துருபதனையும், பீஷ்மரையும்  போன்ற ஆட்சியாளர்களின் தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவன் அறிவான்.  தங்கள் மக்களைக் காத்துக்கொள்ள வேண்டி அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் முக்கியமானவை.  அவை அவர்களின் தர்மம்.  தங்கள்குடிமக்கள் பசியில்லாமல் இருக்கவும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும், கல்லாதவர்கள் கற்க உதவுவதும், பாரம்பரியமான வழிமுறைகளைக் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும், அதன் மூலம் ஒரு உயர்ந்த அற வாழ்க்கையை வாழ்வதும் அவர்கள் தர்மம்.

ஒரு குடும்பத்தின் தர்மம் இதிலிருந்து மாறுபட்டது.  துருபதனின் குடும்பத்தைப் பார்த்தால்; ஆஹா, துருபதன் அவனுக்கும், அவன் குழந்தைகளுக்கும் இடையில் எப்படிப்பட்டதொரு அன்பால் ஆன வலையைப் பின்னி இருக்கிறான்.   அதை எவராலும் அறுக்க இயலாது.  மேலும் சொல்லப் போனால் குருவம்சத்தில்  இந்தக் குடும்ப தர்மம் எப்படி எனில், அது பாண்டவர்கள் ஐவரையும் ஒன்றாகப் பின்னிப் பிணைத்திருக்கிறதே.  அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்க்காகவும் அவர்கள் தாய்க்காகவும் அன்றோ வாழ்ந்து வருகின்றனர்.  யோசித்த வண்ணம் தன்னருகே பார்த்த கண்ணன் அந்த தர்மம் ருக்மிணியையும் ஷாய்ப்யாவையும் அன்றோ அன்பால் பின்னிப் பிணைத்துள்ளது.  அது தேவகி அம்மாவையும் அல்லவோ எட்டியுள்ளது! அவள் தன் குழந்தையான என்னிடம் அனைத்தையும் பார்க்கிறாள்; அனைத்திலும் என்னைப் பார்க்கிறாள்.   அதே போல் குரு மஹராஜ், ஆசாரிய தேவர் வியாசரின் தர்மமும் ஒரு வகைப்பட்டது.  தன்னிடம் நாடி வரும் அனைவரையும் அவர் அநுதாபத்துடன், கருணையுடன் அணுகுகிறார். அவர்களும் அவர் அன்பால் பிணைப்புண்டு, அதனால் ஈர்க்கப்பட்டு முன்னர் இருந்ததை விடத் தங்கள் நிலைமை சீராகி விட்டதை உணர்ந்து கொள்கின்றனர்.  இவை அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் என்று ஏற்பட்ட தர்மம் தான்;  இல்லை எனச் சொல்ல முடியாது.  என்னால் மறுக்கப்பட்டவர்களுக்கும் அவரவர்க்கென ஒரு தர்மம் இருக்கத் தான் செய்யும்.


அந்த தர்மம் அவர்களை ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையின் உயர்வைக் காட்டத்தான் செய்கிறது.  ஏதோ ஒரு உயர்ந்த தர்மம் அவர்களைப் பொறுத்த வரையில். அது உண்மையன்றோ!  மனதின் பலஹீனங்களையும் தாண்டிக் கொண்டு வாழ்க்கைப்படியில் அவரவர் தர்மத்தைக் கைக்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் ஓர் உயர்ந்த நிலைக்கு அவர்களைக் கொண்டு செல்லும் என எண்ணுகின்றனர். இந்த ஏணிப்படியில் ஒவ்வொரு படியில் ஏறுகையிலும் அவர்கள் தாங்கள் முன்னை விட இப்போது முன்னேறிவிட்டதாகவும் எண்ணுகின்றனர்.  அதிலும் ஆண்கள் தனித் தன்மை வாய்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.  ஆகவே ஒவ்வொருவரும் அவரவர்க்கென தனி ஏணிப்படிகளை விரும்புகின்றனர்.  அதற்காக அவர்கள் எத்தகைய நிலைக்கும் செல்கின்றனர். எல்லாவற்றுக்கும் இளித்துக் கொண்டும், தன்னிறைவு பெற்றவர்கள் போல் நடித்துக் கொண்டும், பிசாசுகளைப் போலவும், சாத்தான்களைப்போலவும்!  ஆஹா, எங்கே கண்டேன்?  ஆம் கனவில் வந்த ஊர்வலத்தில் இத்தகைய முகங்கள் தோன்றின.  அவரவர் உடலே கோயில் என நினைத்த வண்ணம், அப்படி நினைத்தாலும் இந்த உடலுக்கான போஷாக்குகளையும், இன்பங்களையும் பெற்றுத் தருவதே சிறந்த வழிபாடு என்னும் எண்ணத்துடனும்!

பெரிய இடி ஒன்று இடித்ததோடு அல்லாமல் கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒன்று விண்ணின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குத் தாவியது. கண்ணன் மின்னலின் ஒளியில் தன்னையறியாமல் கண்களை மூடினான்.



6 comments:

ஸ்ரீராம். said...

கொஞ்சம் கஷ்டப்பட்டு கடக்கவேண்டிய பகுதி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொருத்தரின் தர்மத்தின் விளக்கம்...! அடேங்கப்பா...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான விஷயங்கள் கண்ணன் கண்ட கனவாக மிகவும் எளிமையாக சொல்லப்பட்டுள்ளன.

தொடரட்டும்.

sambasivam6geetha said...

ஆம், அனைவர் வாழ்விலும் இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்படும். :)))

sambasivam6geetha said...

வைகோ சார், எளிமை என்று சொன்னதற்கு நன்றி.

sambasivam6geetha said...

நன்றி டிடி.