Monday, January 20, 2014

கண்ணன் தன்னைத் தானே கண்டு கொண்டான்!

கடல் அலைகள் பேரோசையுடனும், கோபத்துடனும் கரையில் வந்து முட்டி மோதிவிட்டுத் திரும்பும் சப்தம் கேட்டது.  மீண்டும் ஒரு மின்னல்.  அந்த மின்னலின் பேரொளி கிருஷ்ணனின் படுக்கை அறைக்குள்ளும் நுழைந்தது. இடி இடிக்கையில் அதிர்ந்து கொண்டிருந்த மாளிகைச் சுவர்கள் எல்லாம் மின்னலின் பேரொளியில் பற்பல உருத்தெரியாத நிழல்களைக் காட்டின. உள்ளே நுழைந்த மின்னலில் தன் படுக்கை அறையைப் பார்த்த கிருஷ்ணனுக்குத் தன்னுள்ளேயும் உள்ளே, உள்ளத்தின் உள்ளே ஒரு பேரொளி தெரிந்தது.  அதைக் கிருஷ்ணன் பரிபூரணமாக உணர்ந்தான். தன்னுள்ளே ஏதோ தெய்வாம்சம் பெற்ற பேரொளி நுழைந்திருப்பதாக உணர்ந்தான்.


இத்தனை நாட்களாக அவன் தேடிக் கொண்டிருந்து, தடுமாறிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்துவிட்டது என்பதைத் தெளிவாக, எளிதில் புரியும்படியா உணர்ந்தான் கண்ணன்.ஆஹா! வாழ்க்கை:  அது பாவங்கள் நிறைந்தும், இழிவானதாகவும் இருக்கலாம். அல்லது மிக உயர்வாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கலாம்.  ஆனால் அது இவ்வாறு எனப் பகுத்து அறிய முடியாதது.  வாழ்க்கையில் உயர்ந்ததொரு நிலைக்கு வருவதற்காக அவன் போராடியே ஆகவேண்டும்.  அந்தப் போராட்டத்தை அவன் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  அவன் சார்ந்திருப்பது இதற்காகவே, இது அவன் வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல; இவன் வாழ்க்கையே இது தான். இம்மாதிரியான ஓர் உயர்வு நிலையைக் கொண்டு வருவது தான்;  அதற்காகப் போராடுவதே அவன் வாழ்க்கை.


அறிந்தோ அறியாமலோ அவன் ஒரு மகனாக, கணவனாக, நண்பனாக, சகோதரனாக அனைவர் வாழ்க்கையிலும் அவரவருக்கென உள்ள எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வதற்கு மிகக் கஷ்டப்பட்டு வருகிறான். பூர்த்தி செய்தும் வருகிறான். அதே சமயம்  ஒரு வீரனாகவும், ஒரு தலைவனாகவும்,   ஒரு ரக்ஷகனாகவும் அவன் சரியான பாதையில் சென்று வெற்றியடையப் போராடி வருகிறான்.  ஒவ்வொரு முறையும் அவன் விரும்பும் யாருக்கோ அது எவ்வகையிலோ திருப்தியைத் தருகிறது. அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அவர்களைக் கவர்கிறான். மற்றவர்களின் சிறப்புக்களோடு  அவனை ஒப்பிட்டுப் பார்த்து வித்தியாசங்களைக் காண்பதில் அவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.  அவனிடம் கவர்ந்து இழுக்கப்படுகின்றனர். இதுவே பலரையும்  அவன் கவர்ந்து இழுத்ததன் ரகசியம் ஆகும்.  ஆனால் அவனுக்கோ?  இங்கேயே ஒரு தேக்கம் ஏற்பட்டு விட்டது.  அது எதனால்??  அவனிடம் உள்ள இந்தச் சிறப்புக்களைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த மக்கள் அவனை அந்த சந்தோஷத்திலேயே கொண்டாடுகின்றனர்.  அவர்கள் இத்தனை நாட்கள் யாருக்காகக் காத்திருந்தார்களோ அந்தக் கடவுள், ரக்ஷகன் வந்துவிட்டான் என நம்புகின்றனர்.  தங்களை மீட்க வந்த காப்போனாக நினைக்கின்றனர். அவர்களின் கோவிந்தனாகக் கருதுகின்றனர்.  சாக்ஷாத் அந்தப்  பரம்பொருள் ஆன மஹாதேவன், பர வாசுதேவன் அனைத்துமே அவன் என நம்புகின்றனர்.

கடவுளை நம்பும் அனைவருக்கும் அந்தப் பர வாசுதேவனே கடவுள் என்பதை அனைவரும் அறிவார்கள்.  அவன் தாயான தேவகியும், அக்ரூரரும் அவனையும் அந்தப் பர வாசுதேவன் என்றே நம்புகின்றனர்.  வசுதேவனின் பிள்ளையான வாசுதேவனாக அவனை அவர்கள் நினைக்கவில்லை;  அப்படிப் பார்க்கவும் இல்லை.  முழுக்க முழுக்க அவர்கள் பார்வை பக்திபூர்வமாகவே அந்தப் பரவாசுதேவனாகவே அவனைப் பார்த்து வருகின்றனர்.  அவன் அந்தப் பரவாசுதேவனாகவே இருந்தாக வேண்டும்; அவ்வளவு தான்; அந்தப் பரம்பொருளாக அவனால் இயன்ற அளவுக்கு இருக்க வேண்டும்.  சிந்தித்த கண்ணன் இந்த முடிவுக்கு வந்தான்.  அப்போது தான் அவன் அனைவர் மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியும்.  அப்போது தான் அவன் தர்மத்தின் பக்கம் நிற்க முடியும்.  அனைத்து மனிதர்களையும் அவர்கள் எந்த வயதில் இருந்தாலும் தன் பக்கம் இழுக்க முடியும்.   எல்லா நேரமும்! ஆனால் அவனுடைய தர்மம் தான் என்னவாக இருக்க முடியும்?

தனக்குள்ளே வாய்விட்டுச் சிரித்துக் கொண்டான் கிருஷ்ணன்.  இந்தச் சோதனையான கால கட்டத்திலும் கூடக் கண்ணனுக்கு வாழ்க்கை அவனைச் சுற்றி நெய்திருக்கும் வலைப்பின்னல் அவனைச் சுற்றி நெருக்குவதை அறியவில்லையோ? தன் கண்களைத் திறந்தான் கண்ணன்.  ருக்மிணி ஆவலுடனும், கவலையுடனும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  “ப்ரபோ, தங்கள் தூக்கம் கலைந்து விட்டதா?  தாங்கள் சரியாகத் தூங்கவில்லை போல் தெரிகிறதே?” என்றும் கேட்டாள்.  “இல்லை ருக்மிணி, நான் தூங்கவே இல்லை;  சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான் கண்ணன்.


 “அது என்ன ப்ரபு?” என்றாள் ருக்மிணி.  “வைதர்பி, (விதர்ப நாட்டு இளவரசி என்பதால் வைதர்பி), உன் தர்மம் என்னவென்று நீ எண்ணுகிறாய்?” என்று அவளிடமே கேட்டான் கண்ணன்.  பூரணமாய்த் தன் கணவனிடம் திருப்தி கொண்ட மனைவியான ருக்மிணி மிகவும் சந்தோஷமான ஒரு புன்னகையைச் செய்தாள்.  அதில் அவள் கண்ணனிடம் கொண்டிருக்கும் பக்தியும் தென்பட்டது.  “என்னுடைய தர்மமா? அதில் என்ன இருக்கிறது ப்ரபோ?  வெகு எளிது.  உங்களுடன் வாழ்ந்து உங்கள் மனதில் நான் இடம் பெறவேண்டும்.  நீங்கள் என் மனதில் இடம் பெற வேண்டும். என்றென்றும், நிரந்தரமாக.”

கிருஷ்ணன் தன் கரங்களால் அவளைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பின் தன் கண்களை மூடினான்.  மெல்லத் தூங்க ஆரம்பித்தான் கண்ணன்.  அதிகாலை நேரம் அரைத் தூக்கத்தில் தான் கண்ட கனவுகள் மீண்டும் தொடர்ந்து ஒரு சங்கிலி போல் வரக் கண்டான்.  தர்மம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல; அதே சமயம் வியாபாரமும் இல்லை;  பேரம் பேசக் கூடியது அல்ல; சடங்குகள் மட்டும் நிறைந்தது அல்ல; கோபத்தின் மூலமாகவோ, பேராசையின் காரணமாகவோ, பயத்தினாலோ ஏற்படுவது எல்லாம் தர்மமே அல்ல;   அது ஒருவனை முழு மனிதனாக்குகிறது என்பது என்னமோ உண்மை. மனோதிடம் கொண்டவனாக ஆக்குகிறது.  பலஹீனங்களுக்கு இடையே ஒரு மனிதனை சூழ்நிலைகளைப் பொறுத்து மேம்பட்டவனாக ஆக்குகிறது.  

ம்ஹ்ஹும், இல்லை; இல்லை;  இது போதுமானது அல்ல.  ஒவ்வொருவரின் தர்மமும் ஒவ்வொரு வகையானது.  அது எதிர்காலம் குறித்த பார்வையை மட்டும் இணைக்கவில்லை; மன உறுதியையும் செயல்களையும் சேர்த்தே இணைக்கிறது.  அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக மூன்று அல்ல; அனைத்தும் இணைந்த ஒன்றே!  அப்போது தான் ஒருவன் தர்மத்துக்காகப் போராட முடியும். அவரவர் வழியில், அவரவருக்காக மட்டுமில்லாமல் அனைவருக்காகவும் வாழ வேண்டும்.  அதுவும் எப்படி!  வாசுதேவனாக! அந்தப் பரம்பொருளாக.  அவன் அனைவருக்காகவும் வாழ்ந்தால் அனைவரிடத்திலும் அவனும் வாழ்வான்.   அவனில் அனைவரும், அனைவரிடமும் அவன்!

மறுநாள் காலையில் சாத்யகியும் கிருதவர்மாவும் கண்ணனைப் பார்க்க வந்தனர்.  இருவரும் மனம் உடைந்து போயிருப்பது தெரிந்தது.  அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.  மெதுவாகக் கிசுகிசுவென்ற குரலில் சாத்யகி கேட்டான்:”பிரபுவே, நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?  யாதவர்கள் எவருக்கும் நாம் செய்யப் போவதில் நம்பிக்கை இல்லையே?” என்றான்.  கண்ணன் கண்கள் பளிச்சிட்டன.  அதில் ஏதோ புதியதொரு ஒளி வந்தது போல் இருந்தது சாத்யகிக்கு.  அவன் சிரித்த சிரிப்பிலும் ஏதோ தெளிவு, அவனுள்ளேயும் அவனைச் சுற்றிலும்  ஏதோ சுயம்பிரகாசம் ஏற்பட்டது போல் புன்னகையும் பிரகாசித்தது.  “அவர்களைக் குற்றம் சொல்லாதே சாத்யகி! அவர்கள் நம்மை ஏமாற்றவில்லை;  தோல்வியும் அடையவில்லை.  நாம் தான் அவர்களை ஏமாற்றிவிட்டோம் ; தோல்வி அடைந்துவிட்டோம் எனலாம்.”

“ஆனால் இப்போது நாம் என்ன செய்வது கிருஷ்ணா? நாம் மூவரும் இப்போது ஒரு முட்டாள்த்தனமான தூது செல்லப் போகிறோம் என நம்புகிறேன்.  “

“சாத்யகி, அவர்கள் வருவார்கள்.  முதலில் நாம் நம்மை நம்பவேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.

“எப்படி நம்பச் செய்வது?”

மீண்டும் தன் வசீகரச் சிரிப்பைச் சிரித்தான் கிருஷ்ண வாசுதேவன்.  “ நாம் அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்போம் சாத்யகி, புஷ்கரத்தை முதலில் மீட்போம்; திரெளபதிக்காக ஒரு மணமகனைத் தேடுவோம்;  துரோணருக்கும், துருபதனுக்கும் இடையில் உள்ள வெறுப்பை நீக்குவோம்.  இப்போது உடனேயே என்ன நடக்கும் என்று கவலைப் படாமல் இருப்போம்.  எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் தானாகவே நடக்கும்.  பொறுத்திருந்து பார்!” என்றான் கண்ணன்.



5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உங்களுடன் வாழ்ந்து உங்கள் மனதில் நான் இடம் பெறவேண்டும். நீங்கள் என் மனதில் இடம் பெற வேண்டும். என்றென்றும், நிரந்தரமாக.”//

ருக்குவின் இந்த பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

அந்தப் பரம்பொருளாக. அவன் அனைவருக்காகவும் வாழ்ந்தால் அனைவரிடத்திலும் அவனும் வாழ்வான். அவனில் அனைவரும், அனைவரிடமும் அவன்!//


"கண்ணன் தன்னைத் தானே கண்டு கொண்டான்!"..........!

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் தானாகவே நடந்தே தீரும்... தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

தன்னம்பிக்கை திரும்பக் கிடைக்கப் பெற்ற கண்ணன்!

sambasivam6geetha said...

வைகோ சார்,
ராஜராஜேஸ்வரி,
டிடி,
ஶ்ரீராம்,

அனைவருக்கும் நன்றி.