Friday, January 24, 2014

ராஜ சபையின் முடிவும், கிருஷ்ணனின் ஒப்புதலும்!

மழை முற்றிலும் நின்றுவிட்டது.  காற்றும் ஓய்ந்துவிட்டது. கடல் அதீத அமைதி காத்தது.  கப்பல்கள் கடலில் மிதக்கத் தொடங்கிவிட்டன. காலைக்காற்று வெகு சுகமாய் அற்புதமானதொரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்படியாக மெல்ல வீசிற்று.  பக்ஷிகள் இன்பகானம் இசைத்தன. மலர்கள் மலர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. காம்பில்யத்திலிருந்து ஒரு தூதுக்குழு துவாரகை வந்து சேர்ந்தது.  துருபதன் தன் மகளின் சுயம்வரத்திற்கான அழைப்பை அனுப்பி இருந்தான்.  யாதவத் தலைவன் உக்ரசேனன் உள்ளிட்ட அனைத்து அதிரதிகளும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது.  புஷ்ய மாதத்தின் பெளர்ணமி வருவதற்கு முந்தைய  சுக்ல பக்ஷத்தின் பதினோராம் நாளில் சுயம்வரம் நடக்கப் போவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.  முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சம்பிரதாயப்படி தலைவர் ஆன உக்ரசேனரால் அறிவிக்கப்பட்டனர்.


கிருஷ்ண வாசுதேவன், சாத்யகி, கிருதவர்மாவுடன் பொறுக்கி எடுக்கப்பட்ட யாதவ அதிரதர்கள் காம்பில்யம் நோக்கிப் பயணப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.  சுயம்வரத்தில் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கலாமே தவிர அங்கே நடைபெற விருக்கும் எந்தவிதப் போட்டிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.  சபையின் இந்த முடிவைக் கேட்ட கண்ணன் தனக்குள் எவரும் எளிதில் புரிந்து கொள்ள இயலாத விசித்திரமானதொரு சிரிப்பைத் தன் இதழ்களில் தவழவிட்டான். சத்ராஜித்தும், அவன் நண்பர்களான கிருஷ்ணனின் மற்ற எதிரிகளுக்கும் இதைக் கேட்டதும் உள்ளுக்குள் ஏற்பட்ட அல்ப சந்தோஷம் அவர்கள் முகங்களிலும் கண்களிலும் பளிச்சிட்டது.  இதைக் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வியாக நினைத்தனர் அவர்கள்.

சாத்யகியும், கிருதவர்மாவும் அவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே.  ஆனாலும் வெளிப்பார்வைக்கு தலைவன் கட்டளைக்குக் கண்ணன் கீழ்ப்படிந்து நடந்து கொள்வதைப் போன்றதொரு தோற்றம் ஏற்பட்டது கண்ணனுக்கு மகிழ்ச்சியே!  ஆனால் சாத்யகியால் தன் ஏமாற்றத்தை மறைக்க இயலவில்லை.  போட்டியில் முன்னுக்கு வர வேண்டி வேகமாய் ஓடிக் கொண்டிருந்த குதிரையைப் பாதியில் தடுத்து நிறுத்தினால் அந்தக் குதிரைக்கு ஏற்படும் தடுமாற்றங்களை அவனும் அனுபவித்தான். கோழைத்தனமான முடிவு என்று கூறினான்.  எவ்விதமான கஷ்டங்களும் இல்லாமல் அவன் தனியாகவே அவன் சொந்த வீரர்கள் துணையோடு புஷ்கரத்தைக் கைப்பற்றி இருக்க முடியும் என்றான்.  அதேபோல் அவன் வில்வித்தைத் திறமையால் போட்டியிலும் வென்று திரெளபதியின் கரமும் பிடித்திருப்பான்.  இப்படி ஒரு சந்தர்ப்பம் அவன் வாழ்க்கையில் மீண்டும் அமையுமா?  ஆகவே சாத்யகிக்கு மிகவும் ஏமாற்றம் ஏற்பட்டது.  இதை எப்படிக் கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டான்?  அதுதான் சாத்யகிக்குப் புரியவே இல்லை.  ம்ம்ம்ம்ம்?? ஆனால் சாத்யகி கிருஷ்ணனை நன்கு அறிவான்.  அவன் மனதின் ஆழத்தை எவராலும் அறிய இயலாது.  அதில் ஓடும் எண்ணங்களையும் எவராலும் புரிந்து கொள்ள இயலாது என்பதை சாத்யகி அறிவான்.

இப்போது ஏற்பட்ட இந்தப் பரபரப்பான சூழ்நிலை ஏற்படுத்திய ஆர்வத்தில் அவன் தன்னுடைய திறமைகளை மேலும் பரிக்ஷை பார்த்து மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான்.  ஆயுதங்களில் தன் பயிற்சியை மேன் மேலும் விருத்தி செய்து கொண்டதோடு அல்லாமல் தங்களுடன் வரப் போகும் யாதவ வீரர்களுக்கும் பயிற்சியை அளித்தான்.  தன் சொந்த வீரர்களுக்கு மட்டுமில்லாமல் கண்ணனின் படை வீரர்கள், கிருத வர்மாவின் வீரர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளித்து வந்தான்.  மல் யுத்தம், கதையின் மூலம் யுத்தம் செய்யும் முறை, வில் வித்தை, குதிரைகள் பூட்டிய ரதத்தை செலுத்திய வண்ணமே வில்லினாலும் வாளினாலும் போர் செய்யும் முறை என அனைத்தையும் கற்பித்தான்.  யாராவது அவனுடைய எதிர்பார்ப்புக்கேற்பத் திறமையற்றவர்களாக இருந்தார்களானால் அவர்களிடம் கோபம் கொண்டு சப்தம் போட்டு அவர்கள் திறமையை மேலும் மேம்படுத்தினான்.  யாதவத் தலைவர்களுக்கோ சாத்யகியின் இம்முயற்சிகளைப் பார்த்துச் சிரிப்புத் தான் வந்தது.

ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு எள்ளி நகையாடினார்கள்.  சாத்யகி தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தியதோடு இல்லாமல் மற்றவர்களின் நேரத்தையும் வீணடிப்பதாகச் சொல்லிச் சிரித்தனர்.  இதற்காக அவனுக்கு எவ்வித வெகுமதிகளும் கிடைக்கப்  போவது இல்லை.  அவனைக் கண்டாலே கோபத்துடன் சீறினார்கள்.  “நீ என்ன செய்தாலும், உனக்கு திரெளபதி கிடைக்க மாட்டாள்!” என்று கேலி செய்தனர்.  அப்படிப்பட்ட வார்த்தைகள் சாத்யகியின் மனதைப் புண்ணாக்கியதோடு அவனைக் கோபத்துடன் திரும்பப் பேசவும் வைத்தது.  சில சமயங்களில் அது அடிதடியிலும் முடிந்தது.


கார்த்திகை மாதம் வந்தது.  கிருதவர்மா தன் சொந்த வீரர்களோடு துவாரகையை விட்டுத் தக்க ஏற்பாடுகளோடு கிளம்பிச் சென்றான். அக்ரவனத்தின் அரசன் சாருதேஷ்னாவுக்குக் கிருஷ்ணனிடம் இருந்து ஒரு செய்தியையும் அவன் எடுத்துச் சென்றான்.  சுற்று வட்டாரங்களை ஆட்சி புரிந்து வந்த யாதவ இளம் அரசர்கள், இளவரசர்கள் அனைவரும் அவனுடைய தலை நகரத்தில் கூடுமாறு அழைப்பு விடுக்கச் சொன்னான்.     மார்கசீர்ஷ மாதம் சுக்லபக்ஷப் பதினோராம் நாளன்று நடைபெறப் போகும் விழாவில் கிருஷ்ணனோடு அவர்களையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளச் சொன்னான்.  உத்தவனுக்கும் ஒரு தனிப்பட்ட சிறப்புச் செய்தி காத்திருந்தது.

யாதவத் தலைவர்கள் கிருஷ்ணனின் நண்பர்களின் இந்த அசாதாரண நடவடிக்கைகளை அவ்வளவாகக் கவனிக்கவில்லை.  ராஜ சபையின் ஒப்புதலோடு ஏற்படுத்தப்பட்ட அறிவிப்பிற்குக் கிருஷ்ணன் சம்மதம் கொடுத்திருக்கிறான்.  ஆகவே அவன் அதை ஏற்று நடப்பான்.  இதுவே அவர்கள் எதிர்பார்த்தது.  அவனுக்கு அதில் இஷ்டம் இல்லை எனில் மீண்டும் ராஜசபையைக் கூட்டித் தன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.  அது தான் முறையானது.  பொறுமையில்லாத சாத்யகியோ கத்தினான்; கூச்சலிட்டான்;  சண்டை போட்டான்.  இத்தனைக்கும் நடுவில் தன் வீரர்களையும், மற்ற வீரர்களையும் எவ்விதத் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்கும்படியாக வலுவானவர்களாகப் பயிற்சியும் அளித்து வந்தான். சாத்யகி கிருஷ்ணன் செல்வதற்குப் பதினைந்து நாட்கள் முன்னால் துவாரகையிலிருந்து கிளம்பிச் செல்லவேண்டும் என்றும் உத்தரவானது.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தனிப்பட்ட சிறப்புச் செய்தியை காணும் ஆவலுடன்...

ஸ்ரீராம். said...

பொறுமை இல்லாத சாத்யகி!

sambasivam6geetha said...

வாங்க டிடி, சிறப்புச் செய்தி குறித்து இப்போ வராதே! :)))

sambasivam6geetha said...

ஆமாம், சாத்யகிக்குப் பொறுமை இல்லை தான். :)