Tuesday, January 28, 2014

தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்!

“எப்போது நீங்கள் கிளம்பவேண்டும்?”  கிருஷ்ணன் கேட்டான்.
:சூரிய உதயம் ஆகி ஒன்றரை நாழிகையில் கிளம்பவேண்டும்.” என்று பதிலளித்த அஹுகா, “அனைத்து வேத விற்பன்னர்களும், பிராமணர்களும் எங்களை வாழ்த்தி அனுப்ப வந்து விட்டனர்.  எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. “ என்றான்.  திடீரென ஏற்பட்ட ஒரு உந்துதலில் கண்கள் பளிச்சிடக் கண்ணன், “ குறித்த நேரத்தில் கிளம்பத் தயாராகுங்கள்.” என்றான்.


“பிரபுவே, அது எப்படி முடியும்?  தலைவர் இல்லாமல், படைகளை நாங்கள் எவ்விதம் நடத்திச் செல்ல முடியும்?  தலைவர் கிளம்பும் நேரத்துக்கு வந்து எங்களோடு கலந்து கொள்ளவில்லை எனில் மற்ற யாதவத் தலைவர்கள் என்ன நினைப்பார்கள்?”  ஆனால் கண்ணனுக்கோ நம்பிக்கைக் கீற்றுத் தெரிந்தது.  அவன் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் என்னவெனப் புரிந்து விட்டது.  அதுவாகவே அவனைத் தேடியும் வந்துவிட்டது.   மன உறுதியுடனும் நிச்சயத்துடனும் பேசினான் கிருஷ்ணன்.

“அஹுகா, உங்கள் தலைவனின் நற்பெயரைக் குறித்து உன்னை விட எனக்கு அதிக அளவில் கவலையும் அதைக் காக்கவேண்டுமே என்னும் எண்ணமும் உண்டு.  நீங்கள் அனைவரும் உங்கள் தலைவன் உங்களிடம் சொல்லி இருந்தபடி, அவன் விரும்பிய வண்ணம் குறித்த நேரத்தில் கிளம்பிவிடுங்கள்.  தாமதிக்க வேண்டாம்.”

“ஆனால் எங்களை வழிநடத்திச் செல்லும் தலைவன் யாரோ?” அஹூகா கேட்டான்.

“நான் இருக்கிறேன்.” அமைதியாகச் சொன்ன கண்ணன் திரும்பினான். அங்கே கடன் நின்று கொண்டிருந்தான். கண்ணனின் ரதப்படையை நடத்திச் செல்லும் முக்கியத் தலைவன் கடன்.  அவனிடம், கண்ணன், “கடா, நான் இப்போது மாளிகைக்குச் சென்று என்னுடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திரும்பி வருவேன்.  சூரிய உதயம் ஆவதற்குள்ளாகத் திரும்புவேன்.  நம் வீரர்களைத் தயார் செய்து தக்க ஆயுதங்களோடு என்னைப் பின் தொடரச் செய்ய உனக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?  எவ்வளவு விரைவில் உன்னால் அவர்களைத் தயார் செய்ய முடியும்?” என்று கேட்டான்.  “குறைந்த பக்ஷமாக இரண்டு நாட்கள் தேவைப்படும், பிரபுவே!” என்றான் கடன்.

“இல்லை, இல்லை, “கண்ணன் தீர்மானமாகச் சொன்னான்.  “நம் படை வீரர்களை விரைவில் திரட்டு.  நாளை இரவுக்குள்ளாக என்னைப் பின் தொடரச் செய்! “

“பிரபுவின் கட்டளைப்படியே!”தலை வணங்கினான் கடன்.  கண்ணன் அவன் ரத ஓட்டியான பஹுகாவை நகரச் சொல்லிவிட்டுப் பொறுமையில்லாமல் தானே அவனை நகர்த்திவிட்டுக் குதிரைகளைப்  பிணைத்திருந்த கயிறுகளைத் தான் வாங்கிக் கொண்டான்.   சாட்டையைச் சொடுக்கும் சப்தம் மட்டுமே கேட்டது.  அடுத்த கணம் குதிரைகள் காற்றாய்ப் பறந்தன.  விரைவில் கிருஷ்ணனின் மாளிகையை அடைந்தன.  கிட்டத்தட்டப்பறந்தன குதிரைகள். வாயில்காப்போன் இவ்வளவு விரைவில் கிருஷ்ணன் திரும்பியதையும் எதிர்பார்க்கவில்லை.  அவன் அவசரமும், விரைவும் புரியவும் இல்லை.   ஆச்சரியத்தோடு திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.   கிருஷ்ணன் நேரே ருக்மிணியிடம் சென்று அவளை எழுப்பினான்.

“என் சார்ங்கத்தை எடுத்துக் கொடு வைதர்பி.  அப்படியே சக்கரத்தைக் கட்டிக் கொள்ளவும் உதவி செய்.  பஹூகா, நீ சென்று என் கதையான கெளமோதகியை எடுத்துக் கொண்டு ரதத்துக்கு விரைந்து செல்!” மளமளவென ஆணைகளைப் பிறப்பித்தான் கிருஷ்ணன்.  “என்ன ஆயிற்று?” ருக்மிணிக்கு ஆச்சரியம் மட்டுமின்றி இப்படி அவசரம், அவசரமாகக் கிளம்பும்படியான சூழ்நிலை என்னவென்றும் புரியவில்லை.  “என்ன நடந்தது?” என்று மீண்டும் கேட்டாள்.

“சாத்யகி மறைந்துவிட்டான்.  ம்ம்ம்ம்,, அவனை யாரோ கடத்திச் சென்றிருக்கிறார்கள்.  இல்லை எனில் அவன் வீரர்களை விட்டுப் பிரிந்திருக்க மாட்டான்.  அதுதான் எனக்குப் புரியவில்லை.  வீரர்களோடு இருக்க வேண்டியவன் எங்கே சென்றிருக்க முடியும்?   ஆனால் இப்போது அதை எல்லாம் யோசிக்கவோ, அவனைத் தேடவோ நேரமில்லை.  அவனுடைய வீரர்கள் குறித்த நேரத்தில் கிளம்பியாக வேண்டும்;  அதற்குத் தான் நான் தலைமை தாங்கிச் செல்லப் போகிறேன்.”

“ஆனால் பிரபுவே?  அதற்கு ஏன் இவ்வளவு அவசரம்? படபடப்பு?”

“தலைவன் இல்லாமையால் சாத்யகியின் வீரர்களால் குறித்துச் சொல்லப்பட்ட நல்ல நேரத்தில் கிளம்ப முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்ல முடியாது.  அப்படிச் சொல்வது சரியும் இல்லை;   எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்துக் கடைசியில் கிளம்பும் நேரத்தில் அவன் படை வீரர்கள் கிளம்ப முடியாமல் மீண்டும் வீட்டிற்குத் திரும்பி விட்டார்களானால்! ஆஹா, நாம் தோற்றவர்கள் ஆகிவிடுவோமே!”

பஹூகா உதவி செய்யக் கிருஷ்ணன் தன் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டான்.  ருக்மிணியிடம் திரும்பி, “வைதர்பி, தர்மம் என்றால் என்னவென்று ஒரு நாள் உனக்குச் சொல்கிறேன் என்று கூறி இருந்தேன் அல்லவா?”

“ஆம் பிரபுவே!”

“இப்போது நான் சொல்கிறேன்.  தர்மம் என்றால் என்னவென்று.  கேள் வைதர்பி.  போய்ப் பெரிய அண்ணன் பலராமனிடம் சொல்வாய்:”சாத்யகி மறைந்துவிட்டான்.  நான் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதை உணர்கிறேன்; சந்தேகிக்கிறேன்.  நான் செகிதனாவுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன்.  புஷ்கரத்தை அவனுக்கு மீட்டுக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்துள்ளேன்.  யாதவர்கள் அனைவரும் நாகர்களின் பிரதேசத்திலிருந்து நீங்கி வெளியேறுவார்கள் என நாகர்களின் அரசன் கார்க்கோடகனுக்கும் வாக்குக் கொடுத்துள்ளேன்.  பாஞ்சால மன்னன் துருபதனுக்கு அவன் மகள் திரெளபதியின் சுயம்வரம் வெற்றியுடன் நடைபெறவும் வாக்குக் கொடுத்துள்ளேன்.  அதை வெற்றி பெறச் செய்வதாகவும் உறுதி கூறியுள்ளேன். மேலும் திரெளபதிக்கு, இந்த பாரத வர்ஷத்திலேயே சிறந்ததொரு வில் வித்தை வீரனுடன் திருமணம் நடைபெற, அத்தகையதொரு வீரனை அவள் தேர்ந்தெடுக்க உதவுவதாக  வாக்குக் கொடுத்துள்ளேன். “ உத்வேகத்துடன் பேசி வந்தான் கிருஷ்ணன்.  பின்னர் பெருமிதம் குறையாத கம்பீரமான குரலில் ஆனால் அதே சமயம் கிட்டத்தட்டக் கிசுகிசுப்பாக மேலே கூறினான் : “ பலராமனிடம் சொல் ருக்மிணி,  ஆனால் இதைக் கவனம் வைத்துக் கொள்.  இந்த விஷயம் அவன் காதுகளுக்கு மட்டுமே போக வேண்டும்.”

“மஹாராணி சத்யவதியிடம் திரெளபதியின் சுயம்வரத்தின் போது பாண்டவர்கள் வெளிப்பட்டு தங்களை உலகுக்குக் காட்டுவார்கள் என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன்.  ம்ஹூம், யாதவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்;  அவர்கள் என்னை ஏமாற்றலாம்.  ஆனால் என்னை நம்பியவர்களை, நான் யாருக்கெல்லாம் வாக்குக் கொடுத்துள்ளேனோ அவர்களை என்னால் ஏமாற்ற இயலாது.  என் வாக்குறுதிகள் முற்றிலும் உண்மையானது என நிரூபிப்பேன்."  அவன் கண்கள் நம்பிக்கையுடன் ஒளி வீசிப் பிரகாசித்தன.  “ருக்மிணி, நீண்ட நாட்களாக நான் தர்மத்தை எவ்வகையிலேனும் எனக்கு உட்படுத்திக் கைப்பற்ற நினைத்திருந்தேன். ஆனால் இன்றோ என்னை தர்மம் தானாகவே வந்து பற்றிக் கொண்டு விட்டது.  ம்ம்ம்ம், இந்த யாதவர்கள், தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் ஏமாற்ற நினைத்தார்களானால்,  நான் யார் தர்மத்தின் பால் நிற்கின்றனரோ அவர்களை நாடிச் செல்கிறேன்.”

கண்ணனின் இந்த ஆவேசப் பேச்சைக் கேட்ட ருக்மிணி பேச்சிழந்து அவன் கால்களில் அப்படியே விழுந்து வணங்கினாள்.  அவளைத் தூக்கி நிறுத்தி அணைத்த கண்ணன் அவள் தலையை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்துவிட்டு அவள் இரு கன்னங்களையும் தன் கைகளால் அணைத்த வண்ணம் அவளை உற்று நோக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.



4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தர்மத்தின் விளக்கம் அருமை... தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

சாத்யகி கடத்தப்பட்டது சத்ராஜித்தாலா?

sambasivam6geetha said...

வாங்க டிடி, நன்றி.

ஆம், ஶ்ரீராம்.

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!