Tuesday, January 7, 2014

சத்ராஜித்தின் வாதமும், கண்ணனின் நிராதரவான நிலையும்!

கிருஷ்ணன் எவ்வளவு சொல்லியும், எத்தனை விளக்கியும் அவன் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றதாகத் தெரியவில்லை.  யாதவத் தலைவர்கள் எவருக்கும் அவன் சொன்னதின் மேல் எந்தவிதமான அபிப்பிராயமும் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.  அவர்களில் தலைமை வகித்தவன் சத்ராஜித் என்னும் வலிமை வாய்ந்த, மிகப் பெரிய பணக்காரன் ஆன யாதவத் தலைவன் ஆவான்.  இங்குள்ள மற்ற யாதவர்களிடையே மட்டுமின்றி ஆர்யவர்த்தம்,  மற்றும் அதைத் தாண்டி வாழ்ந்து வந்த அனைத்து யாதவர்களிடையேயும் சத்ராஜித்தின் அதிகாரம் சென்று கொண்டிருந்தது.  அனைவரும் அவனை முக்கியமான தலைவர்களில் ஒருவனாக மதித்து அவன் சொல்வதைக் கேட்பார்கள்;  கேட்டும் வந்தார்கள்.  சியமந்தக மணி என்னும் விலை மதிக்க முடியாத ஒப்பற்ற அதிசய சக்தி வாய்ந்த மணியை அவன் எவ்விதமோ பெற்றிருந்தான். (இது குறித்து விரிவான தகவல்கள் பின்னர் வரும்.)  அந்த மணியின் சக்தியும், ஒளியும் எங்கெங்கும் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒன்று.  அந்த மணியின் ஸ்பரிசம் எதன் மேல் பட்டாலும் அது பத்தரைமாற்றுத் தங்கமாக மாற்றிக் கொண்டிருந்ததாகவும் சொல்லி வந்தனர். அதோடு இல்லாமல் சத்ராஜித்திடம் பல பெரிய வணிகக் கப்பல்கள், போர்க்கப்பல்களும் இருந்தன.  எண்ண முடியாத அளவுக்கு மிகப் பெரிய சொத்திற்கும் அதிபதியாக இருந்தான்.  ஆடம்பரமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்ததோடு அல்லாமல், துவாரகையின் பணக்கார யாதவர்களைக் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலமும், மற்றும் பலவிதங்களிலும் மகிழ்விப்பதிலும், அவர்களோடு நெருங்கிப் பழகுவதிலும் முன்னணியில் இருந்து வந்தான்.

ஆனால் என்ன காரணத்தினாலோ சத்ராஜித்திற்குக் கிருஷ்ணன் மேல் சிறிதும் நம்பிக்கை என்பதே இல்லை.  இப்போதோ கேட்கவே வேண்டாம். கிருஷ்ணனின் யோசனைகளுக்கும், அவன் எடுத்த முடிவுகளுக்கும் பலத்த ஆக்ஷேபங்களைத் தன் முழு மனதோடு தெரிவித்தான்.  கிருஷ்ணனின் மேல் தனக்குள்ள அவநம்பிக்கையையும் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டான்.   கொஞ்சமும் நிம்மதி இல்லாமல் மத்ராவுக்கு வெளியே வாழ்ந்து வந்த அவன் கம்சனின் மறைவுக்குப் பின்னரே மத்ரா திரும்பினான்.  ஒரு அகதியைப் போல மத்ரா திரும்பினவனுக்கு யாதவக் குடிகள் அனைவரும், இடையனாகவும், மாடு மேய்ப்பவனாகவும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் திரிந்து வந்தவனும் ஆன ஒரு சின்னஞ்சிறு இளைஞனை நம்பி இருப்பது ஆச்சரியத்தை மட்டுமின்றி, இது பேராபத்துக்கு வழி வகுக்கும் என்றும் தோன்றியது. இவனை நம்புவதில் உள்ள ஆபத்தை யாதவர்கள் உணரவே இல்லையே?  எப்படிக் காட்டுத்தனமாய் வளர்க்கப்பட்டானோ அவ்விதமே எல்லையில்லாத கனவுகள் கண்டு இவ்வுலகத்து மக்கள் அனைவரையும் தர்மத்தின் பாதையில் திருப்பப் போவதாய்ச் சொல்லிக்கொண்டு திரியும் இவனா யாதவர்களின் தலைவன்?   இவனா அனைவரையும் வழி நடத்துகிறான்?  இது சரியாக வருமா?  சத்ராஜித்துக்குக் கோபம் மட்டுமில்லாமல் கண்ணன் மேல் தனக்கிருந்த அவநம்பிக்கையையும் வெளிப்படையாகவே காட்டி வந்தான்.

சத்ராஜித் எப்போதோ உணர்ந்துவிட்டான்.  யாதவர்கள் கிருஷ்ணனால் வழி நடத்தப்பட்டு, பல தலைமுறைகளுக்கும் இப்படியான இடர் விளைவிக்கும் வாழ்க்கையை ஒரு சாகசம் என நினைத்து வாழ்ந்து வந்தார்களானால்??? மொத்த ஆர்யவர்த்தமும் யாதவர்களுக்கு உட்பட்டு ஆளப்பட வேண்டும் என்ற கனவு கண்டார்களானால்??  ம்ஹூம், இதெல்லாம் நடக்கக் கூடியதே அல்ல! வெறும் கனவு!  வெறும் வாய்ப்பந்தல் போடுகிறான் அந்தக் கிருஷ்ணன். இல்லை, இல்லை, எனக்கு ஆர்யவர்த்தத்தை ஆளவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை.  சத்ராஜித் கிருஷ்ணனின் யோசனைகளைத் திட்டவட்டமாக மறுத்தான்.  எல்லாம் சொல்லி முடித்தாயிற்று!  இனி என்ன? யாதவர்கள் ஒரு போதும் மற்றவர்களின் சொந்த விஷயங்களிலோ அவர்கள் உள்நாட்டு விவகாரங்களிலோ தலையிடமாட்டார்கள். அதோடு இல்லாமல் சத்ராஜித்துக்கே இவை எதுவும் பிடிக்காது.  அவனுக்கு வாழ்க்கையை எல்லா விதங்களிலும் அனுபவித்து வாழ்வதும், யாதவர்களிடையே தன்னுடைய கெளரவம் காப்பாற்றப்படுவதுமே முக்கியமான ஒன்று.  மற்றவை பற்றி அவனுக்குக் கவலையில்லை.    அவனை வளமாகவும், செழிப்பாகவும் மாற்றாத எதுவும் தர்மத்தோடு சேர்ந்தது இல்லை.

கிருஷ்ணனின் யோசனைகளைக் கேட்ட சத்ராஜித் வாய் விட்டுச் சிரித்தான். ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் எப்படிப் போனால் யாதவர்களுக்கு என்ன வந்தது?  அவர்களுக்கு இதன் மூலம் என்ன லாபம் அல்லது நஷ்டம்?  ஜராசந்தன் அவர்களை நிர்மூலமாக்க முயன்று கொண்டிருந்த போது எந்த அரசன் அவர்களின் உதவிக்கு வந்தான்??  அவர்களின் அதிகாரங்களை அவர்களுக்குள்ளாகப் போர் செய்து முடிவு செய்துகொள்வதே சிறந்தது.   இதில் எல்லாம் தலையிடாமல் ஒதுங்கி இருப்பதிலேயே யாதவர்களுக்கு கெளரவம்.  அதுவே அவர்களுக்குச் சிறப்பையும் உயர்வையும் கொடுக்கும்.   துருபதன் ஜராசந்தனின் பேரனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பினால்,  அது நிச்சயமாகப் பாஞ்சாலத்தின் அழிவுக்கும், துருபதனின் அதிகாரத்துக்கும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.  அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.  ஆனால் அது நமக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.  ஹஸ்தினாபுரத்துக்காரர்களுக்கு, குரு வம்சத்தினருக்கே இதன் மூலம் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும்.  ஆகவே பீஷ்மர் தான் இது குறித்தும், மகத நாட்டு அதிகாரத்தை ஒழிப்பது குறித்தும் கவலைப்பட வேண்டுமே தவிர, யாதவர்கள் அல்ல.  அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளட்டும்.  அப்படித் தான் நடக்கப் போகிறது.   இது தான்  அவர்களுக்கு விதித்த விதி.  இதில் யாதவர்களுக்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லை.  அவர்களை இதில் நுழைப்பதில் எவ்விதமான புத்திசாலித்தனமும் தென்படவும் இல்லை. சத்ராஜித் மேலும் நிதானமாக விவரிக்க ஆரம்பித்தான்.   அமைதியான இந்த நாட்களின் இனிமையைக் குறித்தும், அதன் மூலம் தங்களுக்குக் கிடைத்துள்ள அருளாசிகள் குறித்தும் எண்ணிப்பார்க்கச் சொன்னான்.

யாதவ குலமே இப்போது தான் செழுமையையும், வளத்தையும், சுகத்தையும் கண்டு வருகிறது.  அவர்களின் அக்கறை யாதவ குல முன்னேற்றத்தில் தான் இருக்கவேண்டுமே அன்றி, எதிரிகளின் அதிகாரங்களைப் பறித்து வெல்வதிலும், அவற்றில் ஈடுபடுவதிலும் இல்லை.  கடவுள் யாதவர்களுக்கு வாழ்க்கையை இப்படியான வெட்டி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு வீணாக்கவா கொடுத்திருக்கிறார்??  ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடவே யாதவர்கள் பிறந்திருக்கின்றனர்.   மற்றவர்களின் சண்டையில் தலையிடுவதற்காகவா யாதவர்களுக்கு ஆண்டவன் உயிர் கொடுத்து வாழ வைத்திருக்கிறான்?   கிருஷ்ணனின் அடுத்தடுத்த சமாதானப் பேச்சுக்களும், யாதவர்கள் தர்மத்தின் நெறியில் வாழ்ந்து  தர்மத்தைக் கடைப்பிடித்து அதை செளராஷ்டிராவில் மட்டுமின்றி ஆர்யவர்த்தம் முழுமைக்கும் கடைப்பிடிக்கவேண்டும் எனக் கிருஷ்ணன் கூறியதும் எவருக்கும் காதுகளில் ஏறவில்லை.  அதற்கு எவரும் ஆதரவும் தெரிவிக்கவில்லை.  எவரோ எங்கேயோ போட்டுக்கொள்ளும் யுத்தத்துக்காக, நம் யாதவ இளைஞர்கள் அங்கே போய் அவர்களுக்காகப் போரில் ஈடுபட்டுத் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமா என்பதே பெரும்பாலான முதிய யாதவத் தலைவர்களின் கருத்தாக இருந்தது.


6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

;) நன்றி. தொடரட்டும்.

காரிய ஸித்திக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் ஆதரவும் அருளும் [நமக்கு] எப்போதும் வேண்டும்.

ஸ்ரீராம். said...

கண்ணனுக்குத்தான் எவ்வளவு எதிர்ப்பு?! முதல்தடவைப் படிக்கும்போது சத்ராஜித் என்பது சத்யராஜ் என்று மனதில் பதிந்தது! :))

திண்டுக்கல் தனபாலன் said...

சரி..

தொடர வாழ்த்துக்கள்...

sambasivam6geetha said...

வைகோ சார், கண்ணனுக்கு என்ன! ஜமாய்ச்சுடுவான். :)

sambasivam6geetha said...

ஶ்ரீராம், ஹிஹிஹி, சத்ராஜித் யாருனு கேட்பீங்கனு எதிர்பார்த்தேன். :)))))

sambasivam6geetha said...

நன்றி டிடி.