Monday, February 3, 2014

பலராமன் சிந்திக்கிறான் - தொடர்ச்சி!

சற்று நேரம் தன் படுக்கையிலேயே அமர்ந்த பலராமன் தன்னிரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டான்.   கைகளால் கண்களையும் மூடினான்.  சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன், திடீரெனத் தன் தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்தான்.  வேட்டைக்குப் புறப்படும் சிங்கம் தன் பிடரியைச் சிலிர்த்துக் கொள்வது போல் இருந்தது.  விருட்டென எழுந்தவன் தன் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு நிமிர்ந்தபோது அவன் கண்கள் பளிச்சிட்டன.  அதில் ஆக்ரோஷம் தெரிந்தது.  தன் மேல் உத்தரீயத்தை எடுத்துக் கொண்டவன், கூடவே தன்னுடைய தனிச் சிறப்பு வாய்ந்த பெரிய சங்கையும் எடுத்துக் கொண்டான்.  உப்பரிகைக்குச் சென்றவன் ஏதோ வெடித்துவிட்டாற்போன்ற சப்தம் வரும்படியாக சங்கில் ஒலி எழுப்பினான். சுற்றுப்புறம் மட்டுமின்றி மொத்த துவாரகையும் அந்தச் சங்கொலியில் அதிர்ந்தது.  அதன் எதிரொலி அடங்கவே நேரம் பிடித்தது.  அவரவர் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த யாதவத் தலைவர்களின் காதுகளில் அந்தச் சங்கொலி கேட்கவும்  தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தனர்.


திடீரென ஏற்பட்ட இந்த அதிர்ச்சியான ஒலிக்கு, அதுவும் பலராமன் சங்கிலிருந்து எழுப்பப்பட்ட ஒலிக்குக் காரணம் புரியாமல் திகைத்தனர்.  பலராமனுடைய சங்கு ஒலிக்கிறது.  அதுவும் மிகக் கடுமையான தொனியில்!   ஏதேனும் பிரளயம் வந்து விட்டதா? பலராமன் தன் சங்கை எடுத்து ஊதுவது கிடையாது;  எப்போவாவது ஊதுவான்.  ஆனால் இப்படி ஆக்ரோஷமாகவும், ஆத்திரமாகவும் ஊதியதே இல்லையே! அவன் ஏதோ கோபத்தில் இருக்கிறானோ!  இது என்ன புதுக் கலக்கம்?  எல்லாரும் எழுந்து கைகளில் கிடைத்த துணியை எடுத்து அணிந்து கொண்டனர்.  அரச மாளிகை முற்றத்துக்கு வந்து கூடினார்கள்.  முக்கியமான நிகழ்ச்சிகளின் போதோ, சம்பவங்கள் நடந்தாலோ அரச மாளிகை முற்றத்தில் வந்து கூடும்படியாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது.  அவர்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் உக்ரசேனன் தன் உடலெல்லாம் நடுங்க, மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தான்.  அவனுடைய மன எழுச்சி அவன் முகத்திலும் நடையிலும் தெரிந்தது.  வசுதேவரும் மனம் கலங்கி இருக்கிறார் என்பது தெரிந்தது.  அக்ரூரரோ சிந்தனையில் நெரித்த புருவத்துடன் காணப்பட்டார்.  அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பலராமன் தன் தலையைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டும், கோபமாகவும், ஆவேசத்துடனும் கைகளால் போர்ச் சைகைகள் காட்டியவண்ணமும் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

பலராமன் கண் முன்னே இளவயதுக் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.  தன்னுடைய அருமைத் தம்பி, கிருஷ்ணன் முதன் முதல் நடக்க ஆரம்பித்துக் கீழே விழுந்தது, தான் அவனைப் பிடித்து நடக்கக் கற்றுக் கொடுத்தது; தன்னுடைய சேட்டைகளின் மூலம் அனைவரையும் கவர்ந்தது; தன்னையும் அந்தச் சேட்டைகளில் இழுத்துவிட்டது;  அவனின் வளர்ச்சி; மெல்ல மெல்ல இளைஞனாக , இளம் சிறுவனாக மாறியவன், கம்சனைக் கொல்வதற்காக அந்த மல்யுத்த மேடையில் வீரத்துடன் நுழைந்தது;  தன் வீரத்தைக் காட்டியது; கோமந்தக மலைப் பிராந்தியத்தில் தன்னைக் கவனித்துக் கொண்டது; எங்கும், எப்போதும், எவர் முன்னும் தன்னை ஒரு மூத்தவனாக மரியாதையுடனே நடத்தி வந்தது; மத்ராவில் இருந்து அனைவரையும் காப்பாற்றி அழைத்து வந்ததோடு அல்லாமல் இங்கே துவாரகை என்னும் சொர்க்கத்தைக் காட்டியது; இப்படிப் பற்பல அதிசயங்களை நடத்தியதோடு அல்லாமல், ஆர்யவர்த்தத்திற்குச் சென்ற சில மாதங்களிலேயே அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது; இப்படி எத்தனை, எத்தனை!  ஆஹா, அந்தக் கிருஷ்ணன் சென்று விட்டான்.  வாசுதேவக் கிருஷ்ணன் சென்றுவிட்டான்.  அவனுடைய இந்த முடிவுக்கு நான் காரணம்.  நான், பலராமன் அவனைக் கைவிட்டுவிட்டேன்.  அவனைத் தோற்கடித்துவிட்டேன்.  எல்லாமே தவறு;  ஆரம்பத்தில் இருந்தே தவறு. என் கிருஷ்ணனுக்கு விசுவாசமுள்ளவனாக அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ளவனாக நடந்து கொள்ள வில்லை நான். குற்ற உணர்ச்சி அவனைக் கொன்று தின்றது.  அவன் தன்னுடைய பெரிய கால்களால் கிருஷ்ணனின் ஆலோசனைகளை மிதித்துத் துவைத்துவிட்டான்.


கோவிந்தனின் கடைசி வாக்குறுதி அவனுக்குள்ளே உணர்த்திய உண்மையையும் அவன் நன்கு புரிந்து கொண்டான். அந்த உண்மையின் உதயம் அவனுள்ளே பெரும் மாறுதலை ஏற்படுத்தியது.  திரெளபதியின் சுயம்வரத்தின் போது ஐந்து சகோதரர்களையும் உயிருடன் கொண்டு வந்து நிறுத்துவதாக மஹாராணி சத்யவதிக்கு கோவிந்தன் உறுதி அளித்துள்ளான்.  இப்படி ஒரு முட்டாள் தனமான வாக்குறுதியை கோவிந்தன் கொடுக்க மாட்டான்.  அவன் நிச்சயம் முட்டாள் அல்ல;  வீணான வாக்குக் கொடுக்கும் மனிதன் அல்ல அவன்.  இதற்காகவும் அவன் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்.  கோவிந்தனால் மட்டும் ஐந்து சகோதரர்களையும் உயிருடன் கொண்டு வர முடிந்தால்!  அதுவும் அவர்களை  யாதவர்கள் ஹஸ்தினாபுரத்தின் உயர்ந்த பதவிகளில் அமர வைக்க முடிந்தால், ஆஹா! இத்தகையதொரு அரிய செயலை மட்டும் அவர்கள் செய்துவிட்டால்! ஆர்யவர்த்தத்திலேயே உயர்ந்தவர்களாக மேலோங்கியவர்களாக இருக்கலாம்.  கோவிந்தன், அனைவராலும் கடவுளாக அறியப்படுபவன், அவனால் மட்டுமே இந்த அதிசயம் நடக்க முடியும். அவர்களின் வாழ்க்கையிலேயே இல்லை; இல்லை; ஆர்ய வர்த்தத்தின் வரலாற்றிலேயே அவர்கள் இடம்பெறுவார்கள்.  சிறப்பான இடம் பெறுவார்கள்.

கோவிந்தன் அற்புதங்கள் செய்கிறான்.  விந்தைகள் நிறைந்தவன்.  மேலும் மேலும் விந்தைகளை நடத்தி வருகிறான்.   பலராமனுக்குள் யோசனை ஓடியது.  ம்ம்ம்ம்?? அரக்கு மாளிகையில் தீப்பற்றித் தீயில் எரிந்த ஐந்து சகோதரர்களையும் எப்படி கோவிந்தன் உயிருடன் கொண்டு வரப் போகிறான்? மேலும் அவர்களை அரச முறைப்படி தகனமும் செய்தாகிவிட்டது.  ம்ஹூம், நினைக்கவே முடியவில்லையே!   ஆனால் கோவிந்தனோ எனில் நடக்க முடியாதவைகளையே நடத்திக் காட்டுகிறான்.  அது தான் அவன்.  அவன் ஏன் வடக்கே செல்ல வேண்டும் எனத் துடித்தான் என்பது இப்போது கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது.  கோவிந்தன் மட்டும் தன்னிடம் முதலிலேயே இதைப் பகிர்ந்திருந்தால்;  ஐந்து சகோதரர்களையும் தான் உயிருடன் கொண்டு வரப் போவதைச் சொல்லி இருந்தால்;  ஆஹா, தான் நிச்சயம் இதிலிருந்து விலகி இருந்திருக்க மாட்டோம்;  அவனுடன் சென்று இந்த விந்தையை அவன் நடத்திக் காட்டத் தேவையான உதவிகளைச் செய்திருக்கலாமே!  பலராமன் மேலும் சிந்தித்தான்.

திடீர், திடீரென மாறும் குணாதிசயங்களைக் கொண்ட அவன் மனம் அப்போதும் மாறுபட்ட நிலையில் சிந்திக்க ஆரம்பித்தது.  பலராமன் ஒரு சமயம் போல் இன்னொரு சமயம் இருக்க மாட்டான்.  இப்போது தம்பியின் பால் மனம் நெகிழ்ந்த நிலையில் அவன் மனம் யாதவர்கள் தங்களை எப்படியான நிலையில், முற்றிலும் பண்பு கெட்ட ஒரு நிலையில் மனம் தளர்ச்சியுறும் வண்ணம் மூழ்கடித்துக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்க நினைக்க அவன் தலையே சுற்றியது.  விர்ரெனச் சுழலும் தலையைத் தன்னிரு கரங்களால் பிடித்த வண்ணம், சூதாட்டம், குடி, ஆடம்பரமான பகட்டான வாழ்க்கை, சாகசமான, பிறருக்குப் பயன்படும் வேலைகளில் இறங்காமல் ஒதுங்கி இருத்தல், வீரத்தைக் காட்டாமல் இருப்பது என நினைக்க நினைக்க அவன் மனமே பதறியது.  ஆஹா! வாழ்நாளையே வீணாக்கிக் கொண்டல்லவோ இருந்திருக்கிறோம்! இத்தகைய வாழ்க்கையால் எவருக்கு என்ன பயன்?




4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே... சிந்தனை வீண் போகக் கூடாது...

ஸ்ரீராம். said...

சிந்திப்பதை நிறுத்தி பலராமனை செயலில் இறங்கச் செய்யுங்கள்! :)))

sambasivam6geetha said...

வாங்க டிடி நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், பலராமன் செயலில் இறங்குகிறன். :)))