Saturday, August 23, 2014

யுதிஷ்டிரன் ஆர்வமும், திரௌபதியின் ஆச்சரியமும்!

மாட்சிமை பொருந்திய ராணிமாதா எங்களுக்குக் கொள்ளுப்பாட்டி முறையினர் ஆவார் திரௌபதி.  நாங்கள் அவர்களை மிகவும் மதிக்கிறோம். அவர்களுக்கும் எங்களிடம் அதீதமான பாசம் உண்டு. உண்மையில் அவர்களை நாங்கள் எங்களைக் காக்க வந்த தேவியாகவே நினைக்கிறோம்.  பூஜித்து வருகிறோம்.  உனக்குத் தெரியுமா?  ஆசாரியர்…..குருதேவர் …..வியாசர் அவர் பெற்ற மகன் என்பது?”


தெரியும் என்பது போல் தலையை அசைத்தாள் திரௌபதி.  “நீ அவர்களைக் குறித்து எவ்விதக் கவலையும் படவேண்டாம் திரௌபதி.  அவர்கள் மிகப் பெருந்தன்மையானவர்கள்.  மிகவும் விவேகம் நிரம்பியவர்கள்.  புத்திசாலி.  எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை உள்ளவர்கள்.  அவர்கள் சம்மதம் இல்லை எனில் சித்தப்பா விதுரர் இங்கே வந்திருக்கவே மாட்டார். அது நிச்சயம்.”


“ம்ம்ம்ம்ம், பிரபுவே, துரியோதனர்? “  இதைக் கேட்கையிலேயே திரௌபதிக்கு சுயம்வரத்தில் போட்டியில் தோற்ற துரியோதனன் அங்கிருந்து செல்கையில் தன்னைப் பார்த்த தீய பார்வை நினைவுக்கு வந்து உடல் நடுங்கியது.  “நடைபெற்ற நிகழ்வுகளைக் கண்டு அவன் தன்னைத் தானே சமரசம் செய்து கொண்டுவிட்டான் என எண்ணுகிறேன். ம்ம்ம்ம் அவன் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த மனிதன் திரௌபதி.  தவறுக்கு மேல் தவறாகச் செய்து கொண்டு வருகிறான்.  அதற்காக வருந்துவதற்காகவே வாழ்கிறான் போலும்!”


“அவர் நிஜமாகவே சமரசம் செய்து கொண்டு விட்டாரா, பிரபுவே?  அது குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா? அவருடைய தீய பார்வை, அந்தப் போட்டியில் தோற்றபின்னர் அவர் என்னைப் பார்த்த அந்தக் கொடிய பார்வை….. இன்னமும் என்னைத் துரத்துகிறது பிரபுவே!  அதை நினைத்தால் இரவுகளில் எனக்குத் தூக்கமே வருவதில்லை!” திரௌபதியின் உடல் நடுங்கியது மீண்டும் .


“திரௌபதி, நீ அவனை அவன் பலஹீனத்திற்காக மன்னிக்கவேண்டும். அவனைச் சிறிதும் பொருட்படுத்தாதே! பாவம் அவன். கெட்ட கிரஹங்களின் ஆதிக்கத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறான்.  நாம் அவனை மன்னித்துப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.”


“அப்புறம் உங்கள் குரு துரோணாசாரியர்?  அவர் என்னை ஏற்றுக் கொள்வாரா?  உங்கள் மனைவியாக அங்கீகரிப்பாரா?  நான் அவருடைய ஜன்ம வைரியின் மகள்.”


யுதிஷ்டிரன் இதைக் கேட்டதும் கலகலவெனச் சிரித்தான். “திரௌபதி. அதில் ஏதும் கஷ்டம் இருக்காது.  உன்னுடைய அருமை அண்ணன் கோவிந்தா ஆசாரியரிடம் உன் சகோதரன் ஷிகண்டினை அனுப்பியபோதே அந்தக் கஷ்டத்தைத் தாண்டி விட்டான்.  உன் சகோதரன் ஒரு பெண்ணாக இருந்து ஆணாக மாறியவன் அன்றோ!  அதோடு உனக்குத் தெரியுமே! கிருஷ்ணன் அஸ்வத்தாமாவையே உன் தந்தையிடம் உறுதிமொழி கொடுக்கச் செய்துவிட்டான் அல்லவா?”


“ஆம், எனக்குத் தெரியும்.” என்ற திரௌபதி கிருஷ்ணனின் சாமர்த்தியத்தயும், அவன் தனக்குச் செய்திருக்கும் உதவிகளையும் மனதில் நினைத்துக் கொண்டு நன்றியுடன் சந்தோஷம் அடைந்தாள்.  “ திரௌபதி! ஆசாரியதேவரை நாம் நிச்சயமாக வென்றாக வேண்டும். ஒரு விஷயத்தில் நாம் இருவரும் ஒத்துப் போகிறோம். கிருஷ்ணன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் வரையில் நமக்கு நம் வாழ்க்கையில் எவ்விதமான கடுமையான முட்களும்  இல்லாமல் மலர்ப்பாதையாக இருக்கும்.”  தன் விரிந்த விசாலமான நயனங்கள் தனிப்பட்டதொரு ஒளியைக்காட்ட திரௌபதி, “ஆம், ஆம், அது எனக்குத் தெரியும். கோவிந்தன் இல்லை எனில் இந்தச் சுயம்வரத்தை என்னால் எதிர்கொண்டிருக்கவே முடியாது.  இதைத் தாங்கக்கூடிய வல்லமையை அவன் தான் எனக்கு அளித்தான்.”


“ஆமாம், அவன் இல்லை எனில் நாங்களும் ராக்ஷசவர்த்தத்தில் ஒன்றுக்கும் பயன்படாமல் அழுகிச் செத்திருப்போம்.  அல்லது ராக்ஷசர்களுக்கு உணவாகி இருப்போம்.” என்றான் யுதிஷ்டிரன்.  உடனே இருவரும் சேர்ந்தே சிரித்தனர்.  “உனக்குப் பகடை ஆடத்தெரியுமா?” திரௌபதியின் எதிரே விரிக்கப்பட்டிருந்த பகடைச் சித்திரத்தையும், அவளருகில் கிடந்த பகடைக்காய்களையும், பாய்ச்சிகளையும் பார்த்தவண்ணம் யுதிஷ்டிரன் அவளிடம் கேட்டான்.  “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.” என்றாள் திரௌபதி.  “நாம் ஓர் ஆட்டம் ஆடுவோமா?” என்றான் யுதிஷ்டிரன்.  சொல்லிய வண்ணம் மான் தோலால் செய்யப்பட்டிருந்த பகடைச் சித்திரத்தை இருவருக்கும் எதிரே விரித்தான்.  பின்னர் அதில் காய்களை வைத்து ஆட்டம் ஆட ஏற்பாடுகள் செய்தான்.  திரௌபதி ஒரு புன்சிரிப்போடு கணவனுக்கு உதவினாள். “எனக்கு இந்த விளையாட்டு மிகப் பிடிக்கும்.  இது க்ஷத்திரியர்களுக்கு அவர்கள் வீரத்துக்கு ஓர் அடையாளம்.  திறமையின் அடையாளம்.” என்றான் யுதிஷ்டிரன்.


“ஆமாம், பார்த்திருக்கிறேன்.  தந்தையும் சகோதரர்களும் விளையாடுவார்கள்.” என்றாள் திரௌபதி.  விளையாட ஆரம்பித்ததுமே யுதிஷ்டிரனிடம் தென்பட்ட மாறுதல்களைக் கண்டு வியந்தாள் திரௌபதி. அவன் முன்னர் இருந்தது போல் பற்றில்லாதவனாக, சாந்தமானவனாக, ஒரு மனச் சிந்தனை உள்ளவனாக  அவனுடைய இயல்பான தன்மையுடன் இப்போது இல்லை.  அவன் கண்கள் ஆர்வத்திலும், ஆசையிலும் பளபளத்தன.  பகடை விளையாட்டில் ஒரே கவனத்துடன் அவன் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன.  பகடையின் பாய்ச்சிகளை அவன் கைகளில் மிகவும் மென்மையாக எடுத்துக் கொண்டு ஒரு ஆர்வத்துடனும் அன்புடனும் அவற்றைப் போட்டான்.   தனக்குரிய காய்களை அதன் இடத்தில் வைக்க எடுக்கையில் பூவை எடுப்பது போன்ற மென்மையுடன் எடுத்து அவற்றை அன்போடு வருடிக் கொடுத்தான்.  அவனுக்குச் சாதகமாகக் காய்கள் விழும்போதெல்லாம் சந்தோஷம் அடைந்தவன், பாதகமாக விழுந்தால் வருத்தம் அடைந்தான்.


அவள் தந்தையோ, சகோதரர்களோ இத்தனை ஈடுபாட்டுடன் பகடை விளையாடி திரௌபதி பார்த்திருக்கவில்லை.  அவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதாரண விளையாட்டு.  அவ்வளவே. ஆனால் அவள் கணவனுக்கோ?  இது ஓர் கட்டுக்கடங்கா உணர்ச்சியாகவும், அல்லது மிகத் திறமையுடன் விளையாடும் ஓர் கௌரவமான விளையாட்டாகவும், அதன் விதிகளைக் குறித்து எவ்விதக் குற்றமும் இல்லாமல் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தைக் காட்டுபவனாகவும் இருந்தான்.  இரண்டு விளையாட்டுகள் விளையாடி முடித்தனர். இரண்டிலும் யுதிஷ்டிரனே வென்றான்.  இப்போது அவன் தன் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டான். அவள் பக்கம் திரும்பி, “திரௌபதி, உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்.  நீ எங்கள் பக்கம் நின்று எங்களை மணந்ததன் மூலம் எங்களை மிகவும் கௌரவித்து விட்டாய்.  நீ இல்லை எனில் நாங்கள் அனைவருமே மிகவும் மோசமான சங்கடங்களில் சிக்கி இருப்போம்.”


“நான் தேர்ந்தெடுக்கவில்லை ஐயா.  இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.” என்று அடக்கத்துடன் சொன்னாள் திரௌபதி.  “திரௌபதி, குருநாதர் உன்னிடம் அர்ஜுனனை மட்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது எங்கள் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.  என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கூறியபோது நீ எங்கள் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாய் என்றே நாங்கள் நம்பினோம்.  முக்கியமாய் நான் அப்படித்தான் நினைத்தேன்.  பின் எங்கள் முழு வாழ்க்கையும், தர்மத்திற்காக நாங்கள் நடத்தும் போராட்டங்களும், தர்மத்தின் மீது நாங்கள் எழுப்பி வந்த வாழ்க்கையும், சிதறிச் சுக்குச் சுக்காக ஆகி இருக்கும்.” என்றான் யுதிஷ்டிரன்.

1 comment:

ஸ்ரீராம். said...

கண்ணன் பெருமை, தர்மரின் சூதாட்ட வெறி!