Thursday, September 11, 2014

அர்ஜுனனின் பலமும், பலவீனமும்!

“ஆனால் இது தான் உண்மையான நிலை அர்ஜுனா!  புரிந்து கொள்.  உன் சகோதரர்கள் உன்னையும் நீ அவர்களையும் மிகவும் நேசித்து வருகிறீர்கள். இல்லையா?  நீ என்னுடன் இப்போது துவாரகைக்குக் கிளம்பி வந்தாயானால் அவர்கள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.”


அர்ஜுனன் ஆமெனத் தலையை மட்டும் அசைத்தான். “அர்ஜுனா, இவர்களை எல்லாம் விட்டுத் தனியாக நீ மட்டும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமெனில் அதற்கான விலையை நீ கொடுத்துத் தான் தீர வேண்டும்.”


“விலை? என்ன விலை?” அர்ஜுனன் வியப்பாய்க் கேட்டான்.


“திரௌபதியை நீ கைவிடலாமா அர்ஜுனா! எந்தப் பெண்ணும், குறிப்பாக ஆரிய இனத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணாலும் செய்ய இயலாத ஒரு காரியத்தை அவள் செய்திருக்கிறாள்.  எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஒரு கணவனோடு வாழவே விரும்புவாள்.  என்றென்றும் அவன் அன்புக்கு மட்டுமே பாத்திரமானவளாக இருக்க வேண்டும் என நினைப்பாள்.  ஆனால் திரௌபதி, இங்கே தன் ஆசைகளை எல்லாம் துறந்துவிட்டு, தனக்குச் சாதகமான முடிவை எடுக்காமல், உங்கள் ஐவரையும் மணந்துள்ளாள்.  இதெல்லாம் எதற்காகவென நினைக்கிறாய்? தன்னை வாழ்நாள் முழுவதற்குமாக ஒரு தர்மசங்கடமான நிலையில் திரௌபதி தன்னை முன்னிறுத்துவது எதற்காக? நீங்கள் அனைவரும் உங்கள் லக்ஷியத்தில் ஜெயித்து நீங்கள் விரும்பிய வண்ணம் தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டித் தான்.  உங்கள் ஐவரையும் எவராலும்தவிர்க்க இயலாத பலமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்குத் தான். “


“நீ மட்டும் அவளை அழைத்துக் கொண்டு தனியாகச் சென்றாயானால் அவள் ஒரு போதும் உன்னை மன்னிக்கவே மாட்டாள்.  என்றென்றும் மன்னிக்க மாட்டாள்.  அவ்வளவு ஏன்,தன்னையும் மன்னித்துக் கொள்ள மாட்டாள்.  உன் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளக் கல்யாணத்தை ஒரு வாயிலாக நீ பயன்படுத்துவது தெரிய வந்தால் அவள் நிச்சயம் உன்னை மன்னிக்க மாட்டாள்.  நம் புராதன ரிஷிகளைப் போல அவள் இதை ஒரு சடங்காக, உன் குலத்து  முன்னோர்களுடன், இனி வரவிருக்கும் வாரிசுகளை இணைக்கும் ஒரு வலுவான பந்தமாக தர்மத்தை விருத்தி அடையச் செய்யும் ஒரு தூண்டுகோலாக அவள் இதைப் பார்த்திருக்கலாம்.”


“ஓ, அவள் ஒரு வீரப் பெண்மணி! போற்றத்தகுந்த வீரம் அவளுடையது.”


“நீ போட்டியில் வென்றபோது அவள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.  இதற்கு முன்னர் அவள் இவ்வளவு சந்தோஷமாக இல்லை. உன்னை மட்டும் தனியாக மணந்திருக்கவே அவள் விரும்பி இருப்பாள்.  ஆனால் அவள் உன்னையும், அவளையும் மட்டும் நினைக்காமல் உங்கள் அனைவரையும் குறித்து யோசித்து இந்த முடிவெடுத்தாள்.  உங்கள் அனைவரின் நன்மைக்காகவே இந்த முடிவை அவள் எடுத்திருக்கிறாள்.”


“ஓ, ஓ, ஓ, எனக்குத் தெரியும், கிருஷ்ணா! நான் நன்கறிவேன்.  எங்கள் அனைவரின் நன்மைக்காகவும் என்னால் எந்தத் தேர்வையும்  செய்திருக்க முடியாது.  இப்போது என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை.”


“ஆ, நீ என்ன செய்யவேண்டும் என்பதை நீ நன்கறிந்திருக்கிறாய் அர்ஜுனா! ஒன்றுமில்லை, உன் மனதில் சிறு ஏமாற்றம் இருக்கிறது.” சொன்னவண்ணம் அர்ஜுனனைத் தட்டிக் கொடுத்து சாந்தப்படுத்தினான் கிருஷ்ணன்.  “ஏமாற்றமா? இல்லை, கிருஷ்ணா!  நான் மனம் உடைந்து போயிருக்கிறேன்.”  இதைக் கேட்ட கிருஷ்ணன் பேச்சை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தான்.  அவன் கண்களுக்கு நேரே எதிர்காலத்தைக் காண்பவன் போல் காட்சி அளித்தான். “எங்கெங்கு பார்த்தாலும் ஆபத்துத் தான் சூழ்ந்திருக்கிறது அர்ஜுனா!  உன்னை மட்டுமல்ல, ஹஸ்தினாபுரத்தை மட்டுமல்ல.  தர்ம சாம்ராஜ்யம் அமைக்கவும் ஆபத்து சூழ்ந்திருக்கும் நிலை தான் தெரிகிறது.  தர்மமே ஆபத்தில் இருக்கிறது.”  கிருஷ்ணனின் இந்த மனச் சங்கிலி அறுந்து போகாவண்ணம், அர்ஜுனன் அவன் எண்ணங்கள் பேச்சாக வெளிவருவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.


“சுயம்வரத்தில் நீ வென்றதும் என்ன நடந்தது?  அங்குள்ள அனைத்து அரசர்கள், ம்ம்ம்ம்ம்ம்?? பெரும்பாலானவர்கள், மற்றும் ரிஷிகள், இளவரசர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் நீ யார் எனத் தெரிந்ததும், உன் வெற்றியில் அவர்கள் தர்மமே வெற்றி பெற்றதாக எண்ணி மகிழ்ந்தனர்.”


“உண்மையாகவா கிருஷ்ணா?  என் வெற்றியை தர்மத்தோடு சேர்த்துப்  பிணைத்துப் பார்த்தார்கள் என்கிறாயா?”


“அர்ஜுனா,நான் எங்கும் அதர்மத்தையே பரவலாகக் காண்கிறேன். “ அர்ஜுனனுக்கு இதைச் சொல்வது போல் இருந்தாலும் கிருஷ்ணன் குரல் தனக்குத் தானே பேசிக் கொள்கிறாப் போல் இருந்தது.  “ கிழக்கே ஜராசந்தனும், மத்திய பாகத்தில் துரியோதனனும், வடக்கே ஷகுனியின் தந்தை சுபலாவும், தெற்கே சிசுபாலனும் ஆள்கின்றனர்.  இவர்களில் எவருமே ஆரியராக இருந்தும் ஆரிய வம்சத்தின் பாரம்பரியத்தைக் குலதர்மத்தைக் காப்பதில் எண்ணம் கொள்ளவில்லை. அதைக் குறித்தும் அவர்களுக்குக் கவலை இல்லை.  அவர்களால் தர்மம் நசுக்கி மிதிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் இருக்கிறது.  அதற்குரிய மதிப்பு அதற்குக் கிடைக்கவில்லை. ஹஸ்தினாபுரத்தில் பிதாமகர் பீஷ்மர் கைகளில் இன்னமும் அதிகாரம் இருப்பதால் தர்மம் இருப்பது போல் ஒரு தோற்றம் அங்கே காணப்படுகிறது.  அவரும், ராணிமாதா சத்யவதியும் உயிருடன் இருக்கும்வரை தர்மம் அங்கே தோற்றத்திலாவது காணப்படும். அதன் பின்னர்? அதனால் தான் உங்கள் ஐவரையும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.  தர்மத்தின் கைகளை நீங்கள் ஐவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் வலுப்படுத்த முடியும்.”


“ஓ, அப்படி எல்லாம் எதுவும் இல்லை கிருஷ்ணா!  நீ முற்றிலும் தவறாகச் சொல்கிறாய்.  நீ அன்றோ தர்மத்தைக்காக்கவென்று, அதற்காகவென்று வந்திருக்கும் தர்ம தூதுவன்?  உன்னால் அன்றோ தர்மம் நிலைநாட்டப்படப் போகிறது? இவ்வளவு பெரிய பொறுப்பு உன்னிடம் அன்றோ உள்ளது?  இதன் வெற்றிக்கு நான் என்ன அவ்வளவு முக்கியமானவனா?”


“அர்ஜுனா, நீங்கள் ஐவரும் ஒன்றாகக் கூடி ஒற்றுமையாக இருந்தீர்களெனில் எவ்வளவு வலுப் பெற்றவர்களாக இருப்பீர்கள் என்பதை இன்னமும் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!”


அர்ஜுனன் சற்று நேரம் ஆழமாகச் சிந்தித்தான்.  “இப்போது ஒரு மோசமான சூழ்நிலையில் இருப்பது புரிகிறது.  இது கஷ்டமானதும் கூட.  ஆனால் நாங்கள் ஐவரும் ஒன்றாக இருந்தாக வேண்டியது முக்கியம் என நான் சிறிதும் நினைக்கவில்லை. இது அவசியம் என்றும் நினைக்கவில்லை.”


“இப்படி ஒரு சூழ்நிலையில் உன் பெரிய அண்ணா என்ன முடிவெடுக்கிறாரோ அதுவே சிறந்தது அர்ஜுனா!  உன்னுடைய நம்பிக்கையில் ஆட்டம் காணும்போதெல்லாம் நீ துவாரகைக்கு வந்து எத்தனை நாட்களோ, மாதங்களோ வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்.  ஆனால் பிறரிடம் கொண்ட அன்புக்கும், நேசத்துக்கும் உன்னை ஒப்புக் கொடுப்பதன் மூலம் நீ எதையும் இழக்கப் போவதில்லை.”


அர்ஜுனன் தலை தானாகக் குனிந்தது.  “நான் மிகவும் சுயநலம் பிடித்தவன் கிருஷ்ணா!  என்னைப் பற்றி மட்டும் நினைத்துவிட்டேன்.  எனக்குப் பல கனவுகள் உண்டு.  ஆசைகள் உண்டு. லக்ஷியங்கள் உண்டு.  சந்தோஷமாக இருக்கவேண்டும் என்னும் நினைப்பும் உண்டு.  எனக்கென ஒரு தனி ராஜ்யம், அதில் எனக்கு மட்டுமே,  எனக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒரு மனைவி, என்ற கனவுகள் எனக்குள்ளும் உண்டு.  அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாவிட்டால், நான் ஒரு பைத்தியமாகவே அலைந்து கொண்டிருப்பேனோ என நினைக்கிறேன். அப்படியே உணர்கிறேன்.”


“உனக்கு நீயே நீதி சொல்லாதே அர்ஜுனா!  உன்னை நீயே தாழ்த்திப் பேசிக் கொள்ளாதே! அந்தக் கனவுகள் தான் உன் வாழ்க்கையின் வலுவான மூலங்களாக இருந்து உன்னை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லப் போகிறது. பெரிய விஷயங்களைக் குறித்துக் கனவு காணாமல் எவரும் வாழ்ந்ததில்லை.  அப்படிக் கனவு காண்பவர்களே பெரிய வெற்றிகளையும் அடைவார்கள்.”


“நான் மிகப் பலவீனமான மனிதன் கிருஷ்ணா!”


“இல்லை, அப்படி இல்லை, நீ வலுவானவன்.  பலசாலி.  உன் பலவீனத்தோடு போரிட்டு வென்று தான் உன் சக்தியை, வலுவை நீ அடைவாய். அப்போது தான் உன்னிடம் பலம் வந்து சேரும்.  போரிடு.  உன் பலவீனத்தோடு போரிட்டு வெல்வாய்!’


அர்ஜுனன் நீண்டதொரு பெருமூச்சு விட்டான்.

2 comments:

ஸ்ரீராம். said...

கண்ணன் சொல்லும் திரௌபதியின் தியாகம் உண்மையானது. அர்ஜுனனின் மனதில் தெளிவை உண்டாக்கும் கண்ணன் முயற்சி அபாரம்.

Anonymous said...

Aunty, I am interested in knowing Alli Arjun Story. Can you please share it? if it is already shred by you, please let me know the link. Thanks.