Thursday, January 15, 2015

பானுமதியின் மகிழ்வும், துரியோதனன் கசப்பும்!

இப்போதும் அரைக்கண்களை மூடியவண்ணம் தான் கண்ணனைச் சந்திக்கப் போகும் தருணங்களையும், அவனிடமிருந்து தனக்குக் கிடைக்கப் போகும் பரிசுக்காகவும் கனவு கண்டாள்.  தன்னை ஒரு இளைய சகோதரியாகக் கருதும் கண்ணன் நிச்சயமாய் அவளுக்கு ஒரு இனிமையான பரிசைக் கொடுப்பான். கண்ணனைச் சந்தித்து அவனுடன் பேசப் போகும் அந்த நிமிடங்களுக்காகக் காத்திருந்தாள் பானுமதி.   அப்போது சேடிப் பெண் ஓடோடி வநது சொன்ன  செய்தியால் அவளுடைய இனிமையான பகல் கனவு  கலைந்தது.  ஓடி வந்த சேடிப் பெண், “இளவரசி, பிரபு வந்து கொண்டிருக்கிறார்!” என அறிவித்தாள். அங்கிருந்த சேடிப் பெண்கள் அனைவரிடத்தும் ஓர் படபடப்பு ஏற்பட்டது.  அனைவரும் தங்கள் உடைகளைத் திருத்திக் கொண்டு தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையைப் பாதியில் அப்படியே விட்டு விட்டு யுவராஜா துரியோதனன் உள்ளே நுழைந்ததுமே கிளம்ப ஆயத்தமானார்கள்.

துரியோதனன் உள்ளே நுழைந்ததும், தங்கள் முகத்திரையை விட்டுக் கொண்டு முகத்தை  மறைத்த வண்ணம் அனைத்துப் பெண்களும் வாய் பேசாமல் அறையை விட்டு வெளியேறினார்கள்.  பானுமதியின் தாதியான ரேகா மட்டும் அவளுக்காக வெயிலுக்கான மறைப்பைப் பிடித்த வண்ணம் அங்கே இருந்தாள்.  அங்கே அவ்வளவு நேரம் சுதந்திரமாக இருந்த மயில் கூட கிரீச்செனக் கத்திய வண்ணம் உயரே பறந்தது.  கிளியோ தன் சிறகுகளைப் படபடவென அடித்த வண்ணம், “பானுமதி, எழுந்திரு” எனக் கிரீச்சிட்ட குரலில் அலற ஆரம்பித்தது. ஆனால் பானுமதியால் அப்போது எழுந்திருக்க இயலாது.  அவள் கைகளும், கால்களும் மருதாணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது இன்னமும் காயவில்லை. அவள் கொஞ்சம் அசைந்தாலும் அது கலைந்துவிடும்.  ஈரமான அவள் அளகாபாரமோ சட்டென எடுத்துக் கொண்டையோ, பின்னலோ போடும் நிலையில் இல்லை.  இன்னமும் ஈரம் காயாமல் இருந்தது.  இருந்தாலும் தன் தாதியின் உதவியுடன் பானுமதி சற்றே சாய்ந்தாற்போல் அமர்ந்தாள்.  அந்நிலை அவளுக்கு அசௌகரியமாகவே இருந்தது.

ஏற்கெனவே மிகுந்த வெறுப்பில் இருந்தான் துரியோதனன்.  அவன் உள்ளே நுழைந்ததுமே பானுமதியின் மலர்ந்த முகத்தையும், அவள் சந்தோஷமான மனநிலையில் இருப்பதும்   புலப்பட்டது.  அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  தன்னைச் சுற்றிலும் சேடிப் பெண்கள் புடைசூழப் பேசிக் கொண்டிருந்த பானுமதியைப் பார்த்ததுமே அவனுக்கு எரிச்சல் மேலோங்கியது. தன்னுடைய வெறுப்பையும், கோபத்தையும் எவரிடம் காட்டுவது எனத் தவித்துக் கொண்டிருந்தான் துரியோதனன்.  அவன் மனைவி தான் அதைத் தாங்கிக் கொள்ளச் சரியான நபர்.  அவன் என்ன சொன்னாலும் திரும்பப் பேசாமல் மௌனமாய்த் தாங்கிக் கொள்வாள். கோபத்துடன் பானுமதியைப் பார்த்தான்.

“இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் காசி தேசத்து இளவரசியே!  மூவுலகங்களும் என் மேல் இடிந்து விழக் காத்திருப்பதைக் கூட அறியாமல் இங்கே உல்லாசமாக இருக்கிறாயாக்கும்? “எரிச்சலோடு கூவினான் துரியோதனன்.

பானுமதி எதையுமே கண்டுகொள்ளாமல், தன் மருதாணிக் கைகளைத் தூக்கி அவனிடம் காட்டிய வண்ணம், அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். “என்ன ஆயிற்று பிரபுவே?  மூவுலகங்களும் ஏன் உங்கள் மேல் இடிந்து விழக் காத்திருக்கின்றன? என்ன நடந்தது?”

அவள் வெகுளியாகக் கேட்ட இந்தக் கேள்வியால் மேலும் எரிச்சலே அடைந்தான் துரியோதனன்.  “உன்னைப் போன்ற கல்மனசுக்காரியை நான் பார்த்ததே இல்லை.  நான் இங்கே ஒன்றுக்கும் உதவாத நிலையில் மிக இழிவான நிலையில் இருந்து வருகிறேன்.  ஆனால் நீயோ! உன்னை அழகு படுத்திக் கொண்டு, சிங்காரங்கள் செய்து கொண்டு என் ஜன்ம வைரியை வரவேற்கக் காத்திருக்கிறாய்!”

பானுமதியின் முகம் பயத்தால் வெளுத்தது.  கொஞ்சம முயற்சி செய்து புன்னகைத்தாள்.  “பிரபுவே, நான் உங்கள் மனைவி!  உங்கள் மனைவி அழகாக இருக்க வேண்டாமா? ஆகவே நான் அழகாக இருக்க முயற்சி செய்து வருகிறேன்.  உங்களுக்கு குரூரமான மனைவியைப் பிடிக்குமா பிரபுவே?  பிடிக்காதல்லவா?  உங்களுக்காகவன்றோ நான் அலங்கரித்துக் கொள்கிறேன்.  நான் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன்.  ஏனெனில் என் வயிற்றில் வளரும் உங்கள் மகன், உங்களைப் போலவே இருப்பான்.  ஒரு அழகான, கம்பீரமான இளைஞனாக வருவான்!”

“அழகான, கம்பீரமான இளைஞன்? சரிதான்! “ துரியோதனன் குரலில் கசப்பு மிகுந்தது.  “ இந்த அரண்மனையில் நடப்பது என்னவென்று நீ அறிவாயா?  இங்குள்ள ஒவ்வொருவரும் நமக்கு எதிராகச் சதி செய்வதை அறிவாயா?  ஹூம், எனக்கு மகன் பிறந்தால் கூட அவன் இந்த ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தை அடைய முடியாது!  இதோ பார், இளவரசி!  நீ சில சமயம் மிகவும் முட்டாளாக இருக்கிறாய்.  அதனாலேயே உன்னை நான் மிகவும் கோபிக்கும்படி நேரிடுகிறது. நீ உன் வயிற்றில் வளரும் உன் மகனைத் தவிர மற்ற எவரைக் குறித்தும் கவலைப்படுவதும் இல்லை.”

“ஓ,ஓ, என்னிடம் கோபம் கொள்ளாதீர்கள், பிரபுவே!” தாழ்மையாகச் சொன்னாள் பானுமதி.  இதற்கு முன்னால் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்களில் இருந்து துரியோதனன் கோபமாக இருக்கையில் அவனுக்கு அடங்கிப் போவதே உத்தமம் என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறாள் அவள்.

“நான் ஒரு முக்கியமான விஷயத்தை உன்னிடம் சொல்வதற்காக வந்திருக்கிறேன், பானுமதி! நான் இன்று தந்தையைச் சந்திக்கச் சென்றேன். நான் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்வதாக அவர் எனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.  ஆனால் அந்தக் கிழவன், பீஷ்மன் தந்தை சொல்வதைக் கேட்பானா என்பது சந்தேகமே!”

அவன் மனதை ஈர்க்கும் வண்ணம் பேசத் தொடங்கினாள் பானுமதி. “பிரபுவே, அனைவருமே மூத்தவர் யுதிஷ்டிரரைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர்.  மிகவும் நேர்மையானவரும், நீதிமானுமாவாராம்.  ஆகவே அவர் உங்களை ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற்ற மாட்டார்.  இது நிச்சயம்.” என்றாள்.

“ஆம், ஆம், உனக்கு என்னை விட என் எதிரிகளைக் குறித்துத் தான் நன்கு தெரியும்.  இல்லையா! என் சிநேகிதர்களைக் குறித்தும் அறிய மாட்டாய்!” துரியோதனனுக்கு பானுமதியின் அப்பாவித் தனத்தைக் குறித்து எரிச்சல் மேலிட்டது.

“பிரபுவே, திரௌபதியை நீங்கள் வெல்ல முடியவில்லை எனில் அது கெட்ட கிரஹங்களின் சேர்க்கையால் நடந்து விட்டது.  இல்லை எனில் நீங்கள் போட்டியில் வென்றிருப்பீர்கள்.  எனக்குத் தெரியும்!” என்றாள் பானுமதி.

1 comment:

ஸ்ரீராம். said...

பானுவே சர்ச்சைக்குரிய பேச்சை ஆரம்பிக்கிறாளே....