Tuesday, April 14, 2015

பற்றியது நெருப்பு!

“உலகத்து நாயகியே, அம்மா! முக்காலமும் உணர்ந்தவளே!
பூவுலகில் உயிர்கள் வாழ்வது உன் கருணையினாலன்றோ!
நீயே அனைவரின் உயிரின் சூத்திரதாரியாவாய்!
பூரண சந்திரனைப் போன்ற சிவந்த அழகான முகமுடையவளே!
உன் கருணைக்கண்களால் நல்லோரைக்காக்கும் நீ அதே கண்களால் ரௌத்திரத்தைக் காட்டி தீயோரை வதைக்கிறாய்!
தாயே, நீயும் மகிழ்ந்திடுவாய்! மகிழ்ந்திடுவாய்!

தாயே, மூவுலகையும் படைத்தவளே! நீயன்றோ பூத, பிசாசுகளைக் கட்டி ஆள்கிறாய்! அவற்றை உன் வலிமையால் அடக்குகின்றாய்!
தாயே! உன் தரிச்னம் கிடைக்க நாங்கள் என்ன தவம் செய்தோம்!
எங்களை ஆசீர்வதிப்பாய்!
உன்னைக்காண வேண்டி தவம் இருக்கும் ரிஷி, முனிவர்களை விட
உன் கருணை மழை எங்கள் மேல் பொழிந்தது!
உன் தரிசனம் எவருக்கும் கிடைகாத ஒன்று எங்களுக்குக் கிடைத்தது!
தாயே, எங்கள் துதியால் நீயும் மகிழ்ந்திடுவாய்! மகிழ்ந்திடுவாய்!

(பாடலை அப்படியே மொழிபெயர்க்காமல் எனக்குத் தெரிந்த அளவில் கொடுத்திருக்கிறேன்.)
துஷ்சாசனனும், ஷகுனியும் அதை அப்படியே எதிரொலித்தனர். பின்னர்  அகோரி அவர்களைப் பார்த்து, “தேவி மாதாவிடம் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டுப் பெறுங்கள்!” என்று ஆணையிட்டான். உடனே மிகவும் பக்தியில் ஆழ்ந்து போன பாவனையுடன் துஷ்சாசனன் தன் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம், கீழ்க்கண்டவாறு கூறினான்:
“தாயே, எங்களுக்கு இந்த வரத்தை கொடுத்து விடு அம்மா!  மூன்று பேரின் மரணத்தை நாங்கள் வேண்டுகிறோம்.  அதுவும் அடுத்த பௌர்ணமிக்குள்ளாக நடக்க வேண்டும்.” என்றான்.

“யார் அவர்கள்?” எனக் குரல் கேட்டது.

இங்கே ஒளிந்திருந்த பீமனுக்கு ஆச்சரியத்துக்கும் மேல் ஆச்சரியம் தன் கண்களை நன்கு துடைத்துக் கொண்டான். பின்னர் மீண்டும் பார்த்தான். அவனுக்குத் தான் தூக்கத்தில் துர் சொப்பனம் ஏதும் காணவில்லை என்பது நன்கு புரிந்தது. “யார் அவர்கள்?” என்று கேட்ட குரல் அந்தக் காடு முழுவதும் பரந்து எதிரொலித்தது கேட்கவே மிகப் பயங்கரமாக இருந்தது.  அகோரியோ தன் சூலத்தை மீண்டும் அவ்விருவர் முன்னும் ஆட்டினான். அவர்கள் இருவரின் கண்கள் மிகவும் விரிந்து திறந்து ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தன.  அதைப் பார்த்தால் அங்கே தேவி மாதா நின்று கொண்டிருக்கிறாள் என்றும் இருவரும் அவளையே பார்த்தபடி இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளும் மாதிரியில் இருந்தது.

“நாங்கள் ஷாந்தனுவின் மகனான காங்கேயனின் மரணத்தை விரும்புகிறோம். அவனை பீஷ்மன் என்றும் அழைக்கின்றனர். “ என்றான் துஷ்சாசனன். அப்போது சிரிப்பொலி கேட்டது.  மயிர்க்கூச்செறியும் சிரிப்பொலி! அதைக் கேட்கும்போதே அனைவரின் முதுகுத் தண்டும் சில்லிட்டது. பின்னர் மீண்டும் அதே குரல்! “பீஷ்மனா? அவன் சுத்தமான ஒழுங்கான வாழ்க்கையன்றோ வாழ்ந்து வருகிறான்.  எப்போதும் எந்த நேரமும் தர்மத்தைத் தான் கடைப்பிடிக்கிறான்.  அதைத் தவிர வேறு சிந்தனை இல்லை அவனுக்கு. காட்டில் தவம் செய்யும் ரிஷி, முனிவர்களைக் காட்டிலும் இவனுடைய தவ ஒழுக்கம் மிகவும் மேன்மையானது; அவர்களை விடக் கடுமையான தன்னொழுக்கத்தையும் கடைப்பிடிக்கிறான். காம, க்ரோதங்களை அடக்குவதில் வல்லவன்.  அவனுக்கு எங்கள் வரம் உண்டு.  அவனுக்கு எப்போது விருப்பமோ அப்போது தான் அவன் தன் முன்னோர்களைச் சென்றடைவான்.”

“அப்படி எனில், மாதாவே, கிருஷ்ண வாசுதேவன்? அவன் உயிரை அடுத்த பௌர்ணமிக்குள் எடுத்துவிட இயலுமா? அவன் செத்தே ஆக வேண்டும்!”

“ஆஹா! அவன் தெய்விகமான ஒரு வேலையைச் செய்து முடிக்கவென்றே பிறந்தவன். தேவ தூதன் அவன்! அவனுடைய வேலை முடியாமல் அவனாக நினைத்தாலும் உயிரை விட முடியாது. அப்படி இருக்கையில் அவன் உயிரை எங்கனம் வாங்குவது? முடியாது! முடியவே முடியாது!”

சற்று நேரம் அமைதி! அகோரி எரிகின்ற நெருப்பில் மேலும் கட்டைகளைப் போட்டு நெய் வார்த்தான். குண்டத்தில் தீ பெரியதாக எரிந்தது. என்ன செய்வதெனத் திகைத்த துஷ்சாசனன் கடைசியில் மனதை திடப்படுத்திக் கொண்டு, “தேவி மாதா! குறைந்த பட்சமாக அந்த மூன்றாவது ஆளின் உயிரையாவது உன்னால் எடுக்க முடியுமா? அதற்கு உதவ இயலுமா? எங்களிடம் கருணை காட்டு! இவன் உயிரையாவது முடித்து விடு!” என்று மிகப் பணிவாக இறைஞ்சினான். அவன் மனதில் பொங்கிய வெறுப்பை அவன் குரலால் மறைக்க இயலவில்லை. துஷ்சாசனனின் இந்த வேண்டுகோள் பீமன் காதில் பட்டதுமே நம் மரணம் வெகு தூரத்தில் இல்லை; எனப் புரிந்து கொண்டான். ஏனெனில் அவன் தாத்தா பீஷ்மர் மாதிரி நினைத்த போது சாகலாம் என்னும் வரமோ அல்லது வாசுதேவக் கிருஷ்ணனைப் போல் தெய்விக தேவ தூதனாகவோ வந்து பிறக்கவில்லை.

பீமன் மனதில் பயம் தலை தூக்கியது. தனியாக இங்கே வந்து மாட்டிக் கொண்டோமே என நினைத்தான். எப்படியாவது தன் பெயரை துஷ்சாசனன் சொல்லித் தனக்கான மரணத்தை அவன் வேண்டுவதை நிறுத்தியே ஆக வேண்டும். என்ன செய்யலாம். சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்கே அந்தக் குடிலைத் தாங்கிக் கொண்டு காணப்பட்ட மூங்கில் கொத்தை அப்படியே தன் இருகரங்களால் வேரோடு பிடுங்கி அந்த மூவரும் அமர்ந்திருந்த பக்கமாய்த் தள்ளினான்.  அது பெரும் சப்தத்தோடு அகோரி, ஷகுனி, துஷ்சாசனன் மூவர் மேலும் விழுந்தது. மூங்கில் கொத்தைப் பிடுங்கிய வேகத்தில் அது தாங்கிக் கொண்டிருந்த அந்தக் குடிலும் விழ ஆரம்பித்தது. குடில் நேரே அகோரியின் தலை மீது போய் விழுந்தது. அதன் இரு பக்கச் சுவர்களும் கூடவே பெயர்ந்து ஷகுனியின் மேலும், துஷ்சாசனன் மேலும் விழுந்தது. காய்ந்த புற்களால் வேயப்பட்ட அந்தக் குடிசையின் கூரையும், சுவரும் விழுந்ததும் உடனே அவற்றில் நெருப்புப் பிடித்துக் கொண்டு அகோரியின் தாடியும், அவன் உடலிலும் தீப்பற்றிக் கொண்டது. அதுவரை மயக்கத்தில் இருந்த ஷகுனியும், துஷ்சாசனனும் நெருப்பின் வெம்மை பட்டு விழித்துக் கொண்டனர்.  என்றாலும் இருவருக்கும் எதுவும் புரியவில்லை.

அவர்கள் முன்னே பெரு நெருப்புக்கொழுந்து விட்டு எரிவதையும், அதில் அந்த அகோரியும் எரிந்து கொண்டிருப்பதையும் கண்டார்கள்; திகைத்தார்கள். தாங்களும் நெருப்பில் மூழ்கிவிடுவோம் எனத் தாமதமாகப் புரிந்து கொண்டாலும் புரிந்த உடனே அவர்கள் தங்கள் மேல் காணப்பட்ட புற்களை வேகமாக அகற்றிவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்தனர். அப்போது எவரோ பயங்கரமாகச் சிரிக்கும் சப்தம் கேட்டது.  அந்தக் குரல்! இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த தேவி மாதாவின் குரல் இல்லை; நிச்சயமாய் அது இல்லை! ஆனால் எவரோ சிரிக்கின்றனர்! யாராக இருக்கும்? இருவருக்கும் கிலி பற்றிக் கொள்ள அந்த இடத்தை விட்டு வேகமாய் நகர்ந்தனர்.  நகர்ந்தவர்கள் சற்றுத் தூரம் போனதும் உடனே ஓட்டம் பிடித்தனர்.  நதிக்கரையை நோக்கி ஓடினார்கள்.

அவர்கள் வந்த படகு தண்ணீரில் மிதக்கும்வரை அவர்களுக்குப் பொறுமை இல்லை;  இருவர் நெஞ்சிலும் அச்சம் மிகுந்திருந்தது.  கடவுளர் அவர்கள் மேல் கோபமாக இருக்கின்றனர்.  அதன் விளைவு தான் இந்தத் தீப்பிடித்தல். இருவரும் படகுக்குக் கூடக் காத்திருக்காமல் தங்களை எவரோ துரத்துவது போல் ஓடும் நீரில் குதித்து அக்கரைக்கு நீந்தினார்கள்.  இங்கே அகோரியின் குடிசை வாயிலில் பீமன் பார்த்துக் கொண்டே இருந்தான். அகோரி எதற்கும் கலங்கவில்லை. நெருப்பை அணைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. தன்னையும் காத்துக்கொள்ளவில்லை. எந்தவிதமான பயத்துடன் கூடிய அலறலோ புலம்பலோ அவன் வாயிலிருந்து வரவில்லை.  மாறாக,”தெய்வீக அன்னையே! என்னை எடுத்துக் கொள்! உன்னிடம் சேர்த்துக் கொள்! நான் உன் குழந்தை, என்னை எடுத்துக் கொள்!” என்றே பிரார்த்தித்த வண்ணம் இருந்தான்.

பீமன் தன்னுடன் வந்த ஒற்றனைத் திரும்பிப் பார்த்தான். அவன் தோள்களில் நட்பாகக் கைபோட்டு அணைத்துக் கொண்டான்.” நண்பா, என்னுடைய கேள்விக்கு நீ பதிலே சொல்லவில்லை. நான் உன்னிடம் கேட்டது என்னவெனில் ரேகாவுடன் வந்த அந்த இளம்பெண் யார் என்று தான்! அதற்கு பதில் சொல்!” என்றான்.

“என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை! பிரபுவே! ஆனால் அவள் சேடிப்பெண் இல்லை என நிச்சயமாய்த் தெரியும்; அவள் அந்த மல்லர் குடியைச் சேர்ந்தவளும் இல்லை; அவள் நடை, உடை, பாவனைகளிலிருந்து யாரோ இளவரசியைப் போல் காணப்பட்டாள்.”

“அவள் யாராக இருக்கும் என நீ நினைக்கிறாய்? உண்மையைச் சொல்!”

“ஐயா, அவள் காசிதேசத்து இளவரசியாக இருக்கலாம்; எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. துரியோதனன் மனைவி பானுமதியின் தங்கை வந்திருப்பதாகச் சொல்கின்றனர். அவளாக இருக்கலாம்.”

“ஆஹா, உனக்கு இவ்வளவெல்லாம் தெரிந்திருக்கிறதே!” என்றான் பீமன்.

பீமன் சொல்வதை முழுதும் புரிந்து கொள்வதற்குள்ளாக அந்த ஒற்றனின் முகத்தில் பீமனின் முஷ்டி பாய்ந்து விட்டது. அவன் வாயில் பற்கள் உடைபடும் சப்தம் கேட்டது. அவன் முகத்திலிருந்து ரத்தம் ஒழுக ஆரம்பிக்க அவன் கட்டையைப் போல் கீழே விழுந்தான்

2 comments:

ஸ்ரீராம். said...

அவனை ஏன் பீமன் அடித்தான்?

sambasivam6geetha said...

அந்த ஒற்றன் துரியோதனன் ஆள். ஷகுனியின் சேவகன். அவனுக்கு பானுமதியின் தங்கை பீமனைத் தனியாக வந்து சந்தித்து விட்டுச் சென்றது தெரிந்து விட்டது எனில் ஆபத்து நேரிடும் அல்லவா? அதனால் தான் பீமன் அவனை அடித்தான். :)