Wednesday, May 13, 2015

பானுமதியின் நிலைமை ---தொடர்ச்சி!

துரியோதனன் அந்தப்புரத்திலிருந்து வெளியே வந்த ஜாலந்திராவைப் பார்த்து, “ஜாலந்திரா! உள்ளே என்ன நடக்கிறது? பானுமதி எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான்.

“எனக்குத் தெரியவில்லை என்னை உள்ளே அனுமதிக்கவில்லை! ஒரு புதிய பெண்மணி வந்து என்னை வெளியேறும்படி கட்டளை இட்டாள்.”

“அவள் இறந்துவிடுவாளா? செத்துக் கொண்டிருக்கிறாளா?”

தன்னுடைய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்திருந்த ஜாலந்திரா சற்றுத் தயங்கினாள். மிகவும் சிரமப்பட்டு தன் துக்கத்தை அடக்கிக் கொண்டாள். அதற்கு அவள் மிகவும் போராட வேண்டி இருந்தது. பின்னர் துரியோதனனைப் பார்த்து, “எனக்குத் தெரியாது! ஆனால் நான் இதை மட்டும் நன்கறிவேன். அப்படி ஒருவேளை அவள் இறந்து போனால் அதற்குக் காரணம் நீர் தான். மேலும் அதன் பின்னர் இத்தனை அழகான, அன்பான மனைவியை உங்களால் பெறவும் முடியாது. அது மட்டும் நிச்சயம்..” சொல்லிய வண்ணம் தன் தலையை ஒரு ஆட்டு ஆட்டி துரியோதனனுக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவித்த ஜாலந்திரா அங்கிருந்து வேகமாக வெளியேறினாள். அந்த மாளிகையின் முற்றத்தை அவள் தாண்டும்போது எதிரே ராணி காந்தாரி இரு சேடிப் பெண்கள் உதவி செய்ய அங்கே வந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.

தன் கணவன் திருதராஷ்டிரன் மேல் உள்ள அன்பைக் காட்டும் விதமாக அவனுடன் தன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதுமே நன்றாக இருந்த தன் இரு கண்களையும் ஒரு துணியால் இறுக்கிக் கட்டிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள் காந்தாரி. தன் கணவனுக்குக் கிடைக்காத ஒன்று தனக்கும் தேவை இல்லை என்பது அவள் எண்ணம். இப்போதும் அப்படியே கண்களைக் கட்டிய வண்ணம் சேடிகள் துணை செய்ய உடல் நலமில்லாமல் போராடிக் கொண்டிருக்கும் தன் மரும்கள் பானுமதியைப் பார்க்க வந்து  கொண்டிருந்தாள் காந்தாரி. அதைப் பார்த்த ஜாலந்திரா அங்கிருந்து வெகு வேகமாகச் சென்று கிருஷ்ணன் தங்கி இருந்த மாளிகையை அடைந்தாள். ஆனால் அவள் ஏமா’ற்றம் அடையும் விதமாகக் கிருஷ்ணன் அங்கே இல்லை. அவன் விராட அரசனைப் பார்க்கப் போயிருப்பதாகச் சொன்னார்கள்.

தன் விசாரத்திலும், பதட்டத்திலும் என்ன செய்வது எனப் புரியாமல் தவித்த ஜாலந்திரா நேரே பாண்டவர்கள் தங்கி இருந்த மாளிகையை நோக்கிப் போனாள். அங்கு குந்தியிடமும், திரௌபதியிடமும் பானுமதியின் நிலைமை பற்றிச் சொன்னாள். மேலும் திரௌபதியிடம் கிருஷ்ணனை உடனே அழைத்துவர எவரையாவது அனுப்பவும் வேண்டினாள். குந்தியும் திரௌபதியும் ஜாலந்திராவின் செய்தியைக் கேட்டதும் அவர்களும் பானுமதியைச் சென்று பார்க்கக் கிளம்பினார்கள். நேரம் சென்று கொண்டிருந்தது. பானுமதியின் கதறல்கள் குறைந்து வந்தன. ஆனால் அவளுக்குக் கடுமையான ஜ்வரம் ஏற்பட்டது. தாங்கமுடியாத காய்ச்சலினால் தவித்தாள். அவள் மனம் அங்கும் இங்குமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஜன்னி கண்ட நிலைமையை அடைந்தாள் பானுமதி. இந்தச் செய்தியை அறிந்ததும் உடனே அங்கு தலைமை மருத்துவர் அழைக்கப்பட்டார்.