Tuesday, May 19, 2015

பானுமதி விடை பெற்றாள்!

கிருஷ்ணன் பானுமதியின் கைகளைப் பிடித்த வண்ணம் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். பானுமதியும் கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் மினுமினுத்தன. துரியோதனனோ பானுமதியின் இனம் காணமுடியாப் பரவசத்தையும், கிருஷ்ணனுக்கும் அவளுக்கும் இடையில் காணப்பட்ட பாசத்தையும் கண்டு வாயடைத்து உட்கார்ந்திருந்தான். அவனால் எதுவும் பேசமுடியவில்லை. அரை மயக்க நிலையில் இருந்தான். அப்போது மருத்துவர் குறுக்கிட்டு, “மாட்சிமை பொருந்திய வாசுதேவரே, தயவு செய்து அவளைப் பேச அனுமதிக்காதீர்கள். அது அவளுக்கு இன்னமும் சிரமத்தையும் உடல் உபாதையையும் தரும். சக்தி அனைத்தையும் இழந்துவிடுவாள்” என்று வேண்டிக் கொண்டார். கிருஷ்ணன் அவரையே சிறிது  நேரம் பார்த்தான். பின்னர் கடுமையாக அவரைப் பார்த்து, “இப்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களால் எதுவும் செய்ய இயலாது; ஆனால் என்னால் ஓரளவுக்கு உதவ முடியும். அது அவளுக்கு நிம்மதியையும் தரும்.” என்றான்.

இதைக் கெஎட்டதும் மருத்துவரும் துணைக்கு இருந்த மருத்துவப் பெண்மணியும் தங்கள் கைகளைக் கூப்பி வணங்கி விட்டு அங்கிருந்து அகன்றனர். பானுமதி மயக்கத்திற்கும் நினைவுக்கும் மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருந்தாள். அவள் இப்போது மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட கிருஷ்ண வாசுதேவன் அவள் நெற்றியில் தன் கைகளை வைத்துக் கொண்டு அவள் முகத்தையே உற்றுக் கவனித்த வண்ணம் அமர்ந்திருந்தான். அவள் மீண்டும் தன் கண்களைத் திறந்து அவனைப் பார்ப்பாள் என்பதை எதிர்பார்த்தான். அதற்கேற்ப பானுமதியும் தன் கண்களைத் திறந்தாள். கிருஷ்ணனையே பார்த்தவள் தன் ஞாபக சக்தியை மிகச் சிரமப்பட்டு ஒன்று சேர்த்துக் கொண்டாள். மிகவும் பக்தியோடு கிருஷ்ணனையே பார்த்தாள். பின் யாருக்கும் எதுவும் புரியாத மொழியில் பேசுபவள் போலப் பேச ஆரம்பித்தாள். வார்த்தைகள் குளறலாக இருந்தன. சிரமப் பட்டுப் புரிந்து கொள்ள நேரிட்டது. “ஆர்ய புத்திரர், ஆர்ய புத்திரர்……………..மிகவும் நல்லவர்………………. ஆம்,………………………………………… மிக மிக நல்லவர்……………………………….. உன்னதமான உயர்குடிப் பிறப்பைச் சேர்ந்தவர்………………………………………..என் மகன்……………………என் மகன்…………………….சக்கரவர்த்தி பரதன் ஆண்ட…………………………….. இந்தச்  சிங்காதனத்தில்…………………………………..அமர வேண்டும்………………………………….ஆனால்……………………………ஆனால்………………………கிருஷ்ணா, அவனுக்கு…………………………….. என்னைத் தெரியுமா?............................அறிந்து கொள்வானா?.......................புரிந்து கொண்டு………………………என்னை நேசிப்பானா?” மிகவும் வெகுளியாகக் கேட்டாள் பானுமதி.

“அவன் உன்னை மிகவும் நேசிப்பான். நிச்சயமாய் நேசிப்பான். கவலைப்படாதே பானுமதி!” உறுதியான தொனியில் பேசின கிருஷ்ணன் மீண்டும் அவளைப் பார்த்து, “ ஆர்வத்தையும் ஏக்கத்தையும் அதிகரித்துக் கொள்ளாதே பானுமதி! அமைதியாக இரு! உன் கணவன் ஹஸ்தினாபுரத்தின் மன்னன் ஆகி விடுவான். நான் என் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன். நிச்சயம் காப்பாற்றுவேன். என்றான். தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணம் பானுமதி ஏதோ பேசினாள். என்னவென்று தெளிவாக இல்லை. ஆனால், “கோவிந்தா, கோவிந்தா!” என்று சொல்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பின. துரியோதனனுக்கோ தன் கண்களையும், காதுகளையும் நம்ப முடியவில்லை. கிருஷ்ணன், வாசுதேவக் கிருஷ்ணன், தன்னை ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக ஒத்துக் கொள்கிறானா? நிஜமாகவா? இந்த வாக்குறுதியைத் தான் பானுமதி தனக்காகக் கிருஷ்ணனிடமிருந்து வாங்கி இருக்கிறாளா?

ஆனால் இத்தனை நாட்களாகத் தான் அவளை ஒரு மோசமான முட்டாள் பெண் என்றல்லவா நினைத்திருந்தோம்! நம்முடைய கஷ்டமான நேரங்களில் எப்படி உதவுவது என்பதே தெரியவில்லை என்றல்லவா நினைத்திருந்தோம். துரியோதனனுக்கு வாய் விட்டுக் கத்தி அழ வேண்டும் போலிருந்தது. சில விநாடிகள் கழித்து பானுமதி ஏதோ முணுமுணுத்தாள். ஆனால் அது தெளிவாக துரியோதனனுக்குக் கேட்டு விட்டது.”ஆர்ய புத்திரா, ஆர்ய புத்திரா, தாங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று அழைத்த பானுமதி களைப்புத் தாங்காமல் மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டாள். மிகக் கஷ்டப்பட்டுத் தன் கண்களைத் திறந்து துரியோதனனைத் தேடினாள். அவளுக்குப் பார்வை நன்றாகத் தெரிகிறதா என்பதில் கிருஷ்ணனுக்கு சந்தேகம் வந்தது.

துரியோதனன், “தேவி, தேவி, நான் இங்கே இருக்கிறேன்.” என்று பதில் கொடுத்தான். உடனே கிருஷ்ணன் இருக்கும் இடம் நோக்கித் திரும்பிய பானுமதியின் பார்வை எங்கோ இருந்தது. ஆனால் அவள் வாயிலிருந்து கீழ்க்கண்ட சொற்கள் உதிர்ந்தன. “வாசுதேவா, வாசுதேவா, என் கணவனை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். பார்த்துக் கொள்வாய் அல்லவா? நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். மிக மிக அதிகமாக நேசிக்கிறேன்.” என்றாள் பானுமதி. “சகோதரி, கவலைப்படாதே! உன் ஆசையைப் பூர்த்தி செய்வேன்.” என்றான் கண்ணன். அவள் உதடுகளில் புன்னகை பூத்தது. அந்த அழகான புன்னகையை இன்று வரை அவள் முகத்தில் துரியோதனன் கண்டதில்லை. இந்தப் புன்னகையினால் அவள் முகமே திடீரென வசீகரம் பெற்றும் திகழ்ந்தது. இத்தனை அழகா என் பானுமதி என துரியோதனன் வியந்தான். அவன் இதயத்தைப் பிழிந்து எடுப்பது போல் வலி தாங்கவில்லை அவனுக்கு! இவ்வளவு பக்தியுடன் கூடிய ஒரு மனைவி இருந்தும் அவன் அவளை லக்ஷியமே செய்யாமல் இருந்திருக்கிறானே! அவள் இதோ அவனை விட்டுப் பிரியப் போகிறாளே! என்ன துர்ப்பாக்கியம்!

மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்த பானுமதி அந்த அரை மயக்க நிலையிலேயே, “கோவிந்தா! எனக்குச் சத்தியம் செய்து கொடு! என்னை மீண்டும் சந்திப்பேன் எனச் சத்தியம் செய்து கொடு! என் அடுத்த பிறவியிலும் நான் உன்னைத் தேடி வந்து சந்திப்பேன்!” என்றாள். “ஆம், சகோதரி! சத்தியம்!நிச்சயம் நான் உன்னை மறக்க மாட்டேன். உன் அடுத்த பிறவியிலும் உனக்குச் சகோதரனாகவே இருப்பேன். உன்னை வந்து சந்திப்பேன்.” என்றான். பானுமதிக்கு மேல் மூச்சு வாங்கியது. “நான் போக வேண்டிய வேளை வந்து விட்டது. நான் போய் வருகிறேன்.” என்று மெல்ல மெல்லச் சொன்னாள். “நாம் கட்டாயமாய் மீண்டும் சந்திப்போம் பானுமதி. உன்னை நீயே சிரமப்படுத்திக் கொள்ளாதே! அமைதியாக இரு!” என்றான் கிருஷ்ணன். அவன் சொன்னது பானுமதிக்குக் கேட்டதா, அவள் கவனித்தாளா என்பது சந்தேகமாக இருந்தது.

அவள் தன்னிச்சையாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அவள் முகம் அந்த அழகுப் புன்னகையோடேயே காட்சி அளித்தது. அவள் அருகே சென்று அவள் காதுகளில் கிருஷ்ணன், “கவலைப் படாதே! ஏழேழு பிறவிகளிலும் நான் உன்னைச் சந்திப்பேன். உன் சகோதரனாகவே இருப்பேன். ஒவ்வொரு பிறவியிலுக் உனக்கு சகோதரனாகவே இருப்பேன்.”என்றான். அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான். அந்த அறையில் யாரோ கண்ணுக்குத் தெரியாமல் நுழைந்து பானுமதியை அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்னும் அச்சம் துரியோதனன் உள்ளத்தில் தோன்றியது. கண்ணுக்குத் தெரியாத அந்த யாரோ அந்த அறையில் நுழைந்திருப்பதாகவும் உணர்ந்தான். அருகே இருந்த சுவரைப் பிடித்த வண்ணம் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டான். திருமணம் ஆனதிலிருந்து இத்தனை காலமாகத் தன்னால் அவமதிப்பையும், வெறுப்பையும், அலட்சியத்தையுமே வாங்கிக் கொண்டு உயிர் வாழ்ந்திருந்த அந்தப் பெண் இன்று மெல்ல மெல்ல இறந்து கொண்டிருப்பதைக் கண்டபோது அவனுக்குள் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது.

அவள் மீண்டும் தன் கண்களைத் திறந்து, “கோவிந்தா!” என்று சொல்ல முயற்சி செய்தாள். ஆனால் அவளால் இயலவில்லை. கிருஷ்ணன் மீண்டும் அவள் காதுகளில், “நான் என்றென்றும் உன்னோடு இருப்பேன். இது சத்தியம்!” என்றான். அவன் அதைச் சொல்வதைக் கேட்டவண்ணமே பானுமதி தன் கடைசி மூச்சை விட்டாள். ஜாலந்திராவுக்கு என்ன நடந்தது என்று புரியவே அவள் பானுமதியின் உடல் மேல் விழுந்து, “என் அருமைச் சகோதரி, என் பானு, என் அருமை பானு! “ என்ற வண்ணம் புலம்பி அழ ஆரம்பித்தாள். “ஜாலந்திரா, சகோதரி, உன்னை நீயே அமைதிப் படுத்திக் கொள்! தைரியமாக இரு!” என்றான் கிருஷ்ணன். அங்கே துரியோதனன் கூட தன் கரங்களால் முகத்தை மூடிய வண்ணம் ஒரு சிறு பிள்ளையைப் போல் வாய் விட்டுக் கதறிக் கொண்டிருந்தான். கிருஷ்ணன் பானுமதியின் அருகிலிருந்து எழுந்தவன் துரியோதனன் அருகே சென்று அவன் தோள்களைத் தொட்டு ஆறுதல் சொன்னவண்ணம் அவனை அறைக்கு வெளியே அழைத்துச் சென்றான். அடுத்த அறையில் பிறந்த குழந்தையுடன் இருந்த ரேகாவின் அழுகைக்கு அளவில்லாமல் இருந்தது. அவள் தன் கைகளில் இருந்த துணிச்சுருளுக்குள் பொதிக்கப்பட்டிருந்த குழந்தையைக் கண்டு விம்மி விம்மி அழுதாள். அத்தனை அழுகையிலும் கையில் இருந்த துணிச் சுருளைக் கீழே போடாமல் இறுகப் பற்றி இருந்தாள்.

அவளருகே சென்ற கிருஷ்ணன், “ரேகா, அழாதே! அழாதே! உன் எஜமானி, நீ வளர்த்த அந்தச் சின்னஞ்சிறு பெண் இப்போது அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பாள். அவளுடைய கடைசி நிமிஷத்தில் கூடத் தன் கணவனிடம் தனக்கு இருந்த அன்பையும் விசுவாசத்தையும் சற்றும் மறைக்காமல் வெளிப்படுத்தினாள்.  உன்னதமான பெண்மணி! அவள் மனதில் அன்பும், பாசமும் அதை உண்மையாக வெளிப்படுத்திய தன்மையும் மட்டுமே இருந்தது. அற்புதமான பெண். “ என்றான்.

2 comments:

ஸ்ரீராம். said...

பானுமதி மரணம். அப்போது 'எடுக்கவோ? கோக்கவோ' வசனத்தில் கர்ணனுடன் தாயம் ஆடுவது யார்?

sambasivam6geetha said...

ஹாஹாஹா, ஶ்ரீராம், இது என்ன ஜிவாஜி நடிச்ச ஜினிமாவா? :)