Friday, May 29, 2015

வியாசர் வந்தார்!

மறுநாள் காலை விடிந்தது. பானுமதியின் மரணத்திற்குப் பின்னர் ஹஸ்தினாபுரம் அன்று தான் இயல்பான நிலைமைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தது. அன்றைய காலைப் பொழுது ஆரம்பித்த சில மணிகளில் பறை அறிவிப்பவன் பறையைக் கொட்டிக் கொண்டு ஏதோ அறிவிப்புச் செய்வது பொதுமக்கள் அனைவரின் காதுகளிலும் விழுந்தது. பலரும் அவரவர் வேலைகளை விட்டு விட்டு என்ன அறிவிப்பு என்பதைக் கவனித்தார்கள். வீட்டுக்குள் வேலை செய்து கொண்டிருந்த பெண்டிரும் இதில் விதி விலக்கில்லை. அவர்களும் வந்த என்ன விஷயம் என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். பறை அறிவிப்பவன் சொன்னதாவது: இதனால் அறிவிப்பது யாதெனில், ஹஸ்தினாபுரத்தின் முடி சூடாச் சக்கரவர்த்தியும், குரு வம்சத்தினரின் பிதாமகரும் ஆன பீஷ்மரின் வேண்டுகோளுக்கு இணங்க, அனைவராலும் “குருதேவர்” என்றும், “மஹாஸ்வாமி” என்றும் போற்றி வணங்கப்படும், க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாச ரிஷி ஹஸ்தினாபுரத்துக்கு விஜயம் செய்கிறார்.  பாண்டவர்களில் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனுக்கு நடைபெறப்போகும் பட்டாபிஷேஹ வைபவத்தில் கலந்து கொள்ளவும், அதை ஏற்பாடுகள் செய்து நடத்திக் கொடுக்க இருக்கும் அந்தணர்களுக்கு வழிகாட்டவும் வியாசர் வருகை தருகிறார். பீஷ்மரின் அழைப்பின் பேரில் வியாசர் வருகை புரிகிறார்.” என்பதே ஆகும்.

பட்டாபிஷேஹத்துக்கு முதல்நாள் ஹஸ்தினாபுரத்திலிருந்து ஒரு யோசனை தூரத்தில் வியாசர் வந்து கொண்டிருந்தார். அவருடன் எப்போதும் உடன் வரும் சீடர்களும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வரவேற்க பீஷ்மர் விதுரரை ஏற்பாடு செய்திருந்தார். கூடவே உதவிக்காகவும், மற்ற சம்பிரதாயமான வரவேற்புகளைக் கவனிக்கவும், சோமதத்தன், தௌம்யர் ஆகிய இருவரும் விதுரருடன் செல்லவும் ஏற்பாடு செய்திருந்தார். மறுநாள் காலை வியாசர் ஹஸ்தினாபுரத்தின் உள்ளே வருகை தரும் நேரம். பீஷ்ம பிதாமகரும், குரு வம்சத்து இளவல்கள் அனைவரும், அரசன் திருதராஷ்டிரனோடு நகரை விட்டு வெளியே புறநகருக்குச் சென்று வியாசரை வரவேற்றனர். பொதுமக்களும் பெரிய அளவில் கூடி இருந்தனர்.

புலித்தோலை அணிந்த வண்ணம் வியாசர் வந்தார். பாரதம் முழுவதும், குறிப்பாக ஆர்யவர்த்தத்தின் ரிஷிகள் அனைவருமே வியாசரைத் தங்கள் தலைவராக எண்ணி வணங்கி வந்தனர். கரு நிறத்தவரான வியாசர் அகன்ற தோள்களுடன், நல்ல தேகபலத்தோடு பார்ப்பதற்கே தனித்தன்மை வாய்ந்தவராக கம்பீரத்தோடு காணப்பட்டார். மேலே தூக்கிக் கட்டப்பட்டிருந்த அவரின் நரைத்த தலை மயிரைப் பார்த்தால் இமயமலையின் மேல் காணப்படும் பனிச்சிகரங்களைப் போல் காணப்பட்டது. அவருடைய பெரிய தலை, அகன்ற அவிசாலமான நெற்றி, அதில் காணப்பட்ட விபூதியினால் வரையப்பட்ட மூன்று நீண்ட கோடுகள், அகன்ற விசாலமான கண்கள், அதில் பொங்கி வழிந்த கருணை வெள்ளம் எல்லாம் சேர்ந்து அவர் ரிஷிகளுக்குள்ளே தனித்தன்மை வாய்ந்தவர் என்பதை மேலும் மேலும் உறுதிப் படுத்திக் கொண்டிருந்தது. அவர் முகமோ கருணை, பாசம், அன்பு, மகிழ்ச்சி என அனைத்தையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தது.

வியாசர் தன்னுடைய ஆசிரமம் இருக்கும் குருக்ஷேத்திரத்திலிருந்து ஹஸ்தினாபுரம் வந்திருந்தார். குருக்ஷேத்திரத்தில் தான் சரஸ்வதி நதி இமயத்திலிருந்து ஓடி வருகிறது. முன்னும் , பின்னுமாகச் சற்று ஓடியதும் சரஸ்வதி நதி பூமியில் மறைந்து விடுகிறது. ஆனால் செல்லும் முன்னர் அங்கிருக்கும் ஐந்து ஏரிகளை நிரப்பிவிட்டுச் செல்கிறது. சமந்த பஞ்சகம் என்னும் அந்த ஐந்து ஏரிகளும் நீரால் நிரம்பித் தளும்பிக் கொண்டிருக்கும். அவருடைய குருகுலத்தில் நூற்றுக்கணக்கான சீடர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள்.  அங்கே படித்து முடித்தவர்களோ பாரத நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று ஆங்காங்கே ஆசிரமங்களை நிர்மாணித்துத் தாங்கள் கற்றதை அங்குள்ள மக்களுக்கும் சொல்லிக் கொடுப்பதன் மூலம் ஆர்யவர்த்தத்தின்  பழக்க, வழக்கங்களை மட்டுமின்றி அதன் எல்லைகளையும் விஸ்தரித்தனர்.

வியாசரே ஆசிரமத்தில் சில மாதங்களைக் கழித்தாலும் தானும் நதிகள் மூலமும், தரை வழியாகவும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆர்யவர்த்தம் முழுவதையும் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்கள், விதிமுறைகள் எனப் பின்பற்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வந்தார். சமூக சிந்தனைகள், நீதி மார்க்கங்கள் மட்டுமின்றி ஆன்மிக போதனைகளிலும் அனைவரும் ஒரே மாதிரியாக அறிவைப் பெறும் வண்ணம் போதித்து வந்தார். அவர் பார்க்கும் எந்த ஒரு மனிதரையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் வண்ணம் வியாசருடைய போதனைகள் அமைந்தன. வியாசருடன் கூட அவர் மகன் சுக மஹரிஷியும் வருவார். தலையை மழுங்க மொட்டை அடித்த வண்ணம் உயரமாக, ஒல்லியாக, ஜொலிக்கும் கண்களுடன், தீர்க்கமான நாசியுடனும், ஞானம் அடைந்ததைச் சொல்லும் வண்ணமாக அமைதி நிறைந்த முகத்துடனும் காட்சி அளிப்பார் சுக மஹரிஷி. அவர் கைகளில் நீர் நிறைந்த இரு சுரைக்குடுக்கைகள் ஒரு நீண்ட தண்டத்தில் கட்டப்பட்டுக் காட்சி அளிக்கும். ஒரு குடுக்கையின் நீர் சுகமஹரிஷிக்கும், இன்னொன்று அவர் தந்தை வியாசருக்கும் ஆகும்.

வியாசரின் சீடர்கள் தவிர சுகரின் சீடர்களும் அவருடன் வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் வைஷம்பாயனரும், பைலரும் ஆவார்கள். இவர்களைத் தவிரவும், ஐம்பது சீடர்கள் உடன் வந்தனர். பீஷ்மர், திருதராஷ்டிரன், குரு வம்சத்து இளவல்கள், சஞ்சயன், பலராமன், கிருஷ்ணன் ஆகியோரும் விராட அரசனும் நாக அரசன் மணிமானும் வியாசரின் கால்களில் விழுந்து ஆசிகளைப் பெற்றனர். அங்குள்ள மக்கள் அனைவரும் மிகவும் மதிப்புடனும், மரியாதையுடனும் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வியாசர் ஏழை, எளிய மக்களுக்காகவே வாழ்ந்து வந்தார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர். அதோடு இல்லாமல் அவர் கொடுக்கும் இலவச சிகிச்சையில் குணமடைந்தவர் பலர் இருந்தனர். கஷ்டப்படுபவர்கள் அவர் ஆசியைப் பெற்றதும் தங்கள் கஷ்டங்கள் தீர்ந்து சுகப்பட்டனர் என்பதையும் அறிந்திருந்தனர்.

கையில் ஒரு நீண்ட கழியைப் பிடித்த வண்ணம் வியாசர் மெதுவாக நடந்தார். அவரை வணங்கும் அனைவருக்கும் தன் வலக்கையை உயர்த்தி ஆசிகளைத் தெரிவித்தார். ஒவ்வொருவரையும் பார்த்துத் தனித்தனியாகச் சிரித்து ஒவ்வொரு வார்த்தை அன்பாகவும் பேசினார். அரண்மனைகளில் தங்கும் வழக்கம் இல்லாத வியாசர் தன் வழக்கப்படி ஹஸ்தினாபுரத்தில் கோயில் கொண்டிருந்த பிரதிபேஷ்வர் கோயிலின் முன்றிலில் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் தங்கக் கூடாரங்கள் கட்டி இடம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார். பிரதிபேஷ்வர் கோயில் பீஷ்மரின் தாத்தா பிரதீபச் சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது என்பதால் கோயிலும் அவர் பெயரிலேயே வழங்கப்பட்டது

1 comment:

ஸ்ரீராம். said...

படிச்சாச்!