Wednesday, May 6, 2015

பானுமதியின் கொதிப்பு!

அளப்பரிய சந்தோஷத்தில் ஆழ்ந்து போயிருந்தாள் பானுமதி. இவ்வுலகமே அவள் கண்களில் அழகாகவும் புதுமையாகவும் தோற்றியது. பார்க்குமிடமெல்லாம் சந்தோஷம் நிரம்பி வழிவதாகத் தெரிந்தது அவளுக்கு! தன்னை விட அதிர்ஷ்டசாலியும் உண்டா என நினைத்ததோடு அல்லாமல் உயிர் வாழ்வதில் புது ருசியும் உண்டாகி இருந்தது அவளுக்கு. வாசுதேவக் கிருஷ்ணன், அவள் சகோதரன் அவளுக்கு வாக்குக் கொடுத்து இருக்கிறான். அவள் பாதுகாவலன், அவள் கடவுள், அவள் நண்பன் எல்லாவற்றுக்கும் மேல்! அவன் அவளுக்கு வாக்குக் கொடுத்துவிட்டான்! அவள் கணவன், அவள் தலைவன் துரியோதனன் ஹஸ்தினாபுரத்தை ஆளுவான்! எத்தகைய வாக்குறுதி! ஆஹா! இனி அவள் கணவனின் எதிர்காலத்தில் எவ்வித பயங்கரங்களும், ஆபத்துக்களும் இராது! அவன் தான் ஹஸ்தினாபுரத்தின் அரசனாகப் போகிறானே! அப்புறம் என்ன?

இது எப்படி நடக்க முடியும்? எவ்வாறு நடைபெறும் என்றெல்லாம் அவள் சிறிதும் யோசித்துப் பார்க்கவே இல்லை. கிருஷ்ணன் சொல்லிவிட்டான்! அவ்வளவே! பானுமதிக்கு அவன் மேல் அளவு கடந்த நம்பிக்கை இருந்தது.அவனால் இதைச் செய்ய முடியும்! அதோடு பல அதிசயங்களையும் நிகழ்த்தியவனுக்கு இந்தச் சின்ன விஷயத்தை நிறைவேற்ற முடியாதா? அதோடு வாக்குக் கொடுத்த கிருஷ்ணனுக்கு அதை எவ்வகையிலேனும் நிறைவேற்றித் தர வேண்டும் என்னும் எண்ணம் இருக்காதா என்ன?  யோசனையில் இருந்தவளுக்குச் சட்டெனத் தன் வயிற்றில் குழந்தை புரள்வது அவளுக்குத் தெரிந்தது. வேகமாகப் புரண்டது குழந்தை! பானுமதியின் மனம் நெகிழ்ந்தது. குழந்தை பிறக்கும் முன்னரே அதன் மீது அளவில்லா அன்பு கொண்டிருந்த அவள் இப்போது பெரு மகிழ்ச்சி அடைந்து அதோடு பேசவும் ஆரம்பித்தாள்.

“எப்படி இருக்கிறாய்? என் அருமை மகனே! எதற்கும் கவலைப்படாதே! வேளை வரும்போது நீ தான் இந்தக் குருவம்சத்து அரியணையில் அமரப் போகிறாய்!” என்றவண்ணம் சிரித்தாள். அவள் கண்ணெதிரே தானும் ஹஸ்தினாபுரத்துப் பட்டமஹிஷியாக அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி தோன்றியது. அவள் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் மிதந்தாள். தன் ஆனந்தத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அவள் சகோதரி ஜாலந்திராவுடன் பேசலாமெனில் இரவு முழுவதும் வெளியில் கழித்திருந்தாள் அவள். ஆகையால் இப்போது நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.  ஜாலந்திரா குளிப்பதற்கான ஏற்பாடுகளை ரேகா கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் ஏற்கெனவே பானுமதியோடு எல்லா விபரங்களையும் பேசியாகி விட்டது. ரேகா முன்னிலையில் தானே பானுமதி ஜாலந்திராவிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டாள். அவர்களுக்குள் ஒளிவு, மறைவு ஏதும் இல்லை. மேலும் கிருஷ்ணனை ஜாலந்திரா சந்திக்கப் போகையில் கூடச் சென்றதும் ரேகாதான். அங்கே கிருஷ்ணன் ஜாலந்திராவுக்கு வாக்குறுதி கொடுக்கையில் அருகில் இருந்த ஒரே சாட்சியும் ரேகாதான்.

ஆகவே இப்போது நம் சந்தோஷத்தை யாரிடம் பகிர்ந்து கொள்வது? யோசித்தாள் பானுமதி! அவள் கணவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அவன் மிகவும் ஏமாற்றத்துடன் வெறுப்புடன் பரிதாபமான நிலையில் காணப்படுகிறான். அவனைத் தவிர வேறு யாரிடம் சொல்லலாம்? அவள் கணவன் அன்பு செலுத்தத் தகுதி வாய்ந்தவனே! அவளிடமும் அன்பு உண்டு அவனுக்கு! ஆனால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் தட்டிப்பறிக்கப்படவே அவன் மனதில் வெறுப்பும், குரோதமும் புகுந்து விட்டது. நடக்கவே முடியாத சம்பவங்கள் நடந்து அவனுக்குக் கிடைக்கவேண்டிய அரசுரிமையைப் பறித்து விட்டது. ஐந்து சகோதரர்களும் மறைந்து வாழ்ந்த இடத்திலிருந்து வெளிவரக் காரணமாக இருந்தவன் கிருஷ்ண வாசுதேவன் என்றே அனைவரும் சொல்கின்றனர். திரௌபதியின் சுயம்வரத்தில் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி அடையக் காரணம் ஆனவனும் கிருஷ்ண வாசுதேவன் தான் என்றே அனைவரும் சொல்கின்றனர். ஆகவே கிருஷ்ணவாசுதேவனையும் அவன் சொல்லும் வாக்குறுதியையும் துரியோதனன் நம்பவும் மாட்டான். அதை ஏற்கவும் மாட்டான்.

அவளும் அவளால் இயன்றவரையிலும் அவள் கணவனுக்கு எதிராக இருக்கும் விஷயங்களைச் சேகரித்துக் கொண்டு தான் இருந்தாள். அவளிடம் அவள் கணவன் தனிமையில் வந்து கடுமையான வார்த்தைகளாலும், நடத்தையாலும் அவளைத் துன்புறுத்திச் சென்றதிலிருந்து அவள் இதே வேலையாக இருந்தாள்.  அவனுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சிங்காதனம் கிடைக்காததால் தானே அவன் இத்தனை கடுமையாக நடந்தான்? அவை எல்லாம் மன்னிக்கப்படக் கூடியதே! பானுமதி மிகவும் ஆவலாக இருந்தாள். அவனுக்கு இழைக்க இருந்த துரோகத்திலிருந்து அவனை விடுவித்தது குறித்து அவளுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. அவனையும் இந்தக் கஷ்டத்திலிருந்து விடுவிக்க நினைத்தாள்  ஆம், இதைத் தன் கணவனுடன் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். கொஞ்ச நேரம் வரைக்கும் பானுமதி அப்படித் தான் நினைத்தாள். ஆனால்????? அவள் மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தாள்! இது சரியா? அவள் கணவனுடன் இதைப் பகிரலாமா?

இதில் நன்மை ஏற்படுமா? துரியோதனனுடன் பகிர்ந்து கொள்வது புத்திசாலித்தனமாக இருக்குமா? கோவிந்தன் தனக்கு வாக்குக் கொடுத்திருப்பதை துரியோதனன் அறிய நேர்ந்தால் சந்தோஷம் அடைவானா? அவளை….பானுமதியை மன்னித்துவிடுவானா? பானுமதி அவனை மதிக்கவில்லை என்பதை மறந்துவிடுவானா? இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்த பானுமதிக்குத் திடீர் எனத் தன் நினைப்புகள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றவே வாய் விட்டுச் சிரித்தாள்.  ஏனெனில் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்! அவள் கணவன் அவளை நினைத்துப் பெருமைப்படுவான். கிருஷ்ண வாசுதேவனிடம் வாக்குறுதி வாங்கியதில் சந்தோஷமே அடைவான்! உண்மையில் அவன் உயிரை அன்றோ அவள் காப்பாற்றி விட்டாள்! துரியோதனன் பெருமிதமே அடைவான்!

அவள் தன் அந்தப்புரத்திலிருந்து வெளியே வந்து தாழ்வாரத்தில் நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் கணவனுடன் யாரோ மிகவும் அந்தரங்கமாகப்பேசும் குரல் கேட்டது. யாரென்று உற்றுக் கவனித்தாள். அவள் சகோதரன் சுஷர்மா தான் துரியோதனனுடன் மிகவும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான். அவள் அங்கேயே நின்றாள். ஆங்காங்கே ஓரிரு பேச்சுக்கள் மட்டும் காதில் விழுந்தன என்றாலும் அவள் அதைக் கேட்டதுமே அங்கேயே நிலைகுத்தி நின்றுவிட்டாள்.  “பிரபுவே, உங்களுக்கு விருப்பமிருந்தால், நீங்கள் விரும்பினால் ஜாலந்திராவின் சுயம்வரம் அடுத்த வருஷத்துக்குள்ளேயே நடந்துவிடும். நடத்துவோம்!” என்றான் சுஷர்மா!

“சுஷர்மா! உன் தந்தை அப்படி நினைத்தால் எனக்கு ஒன்றும் ஆக்ஷேபணை இல்லை!” மெலிதாகச் சிரித்தபடி சொன்னான் துரியோதனன். பானுமதி தன் நெஞ்சைக் கைகளால் அமுக்கிக் கொண்டு தள்ளாடினாள். அவள் முகம் வெளுத்தது. பக்கத்திலிருந்த கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு நிற்க முயன்றாள்.  துரியோதனனுக்கு சுஷர்மா பதில் சொன்னதையும் கேட்டாள்:” என் இரு சகோதரிகளும் ஒன்றாக சந்தோஷமாக இருக்கலாம். அவர்களுக்குள் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை; அதோடு உங்களுக்கும் ஜாலந்திராவை மிகவும் பிடித்திருக்கிறது!” என்றான். இதைக் கேட்டதுமே எங்கிருந்தோ ஒரு குளிர் பானுமதிக்குள் புகுந்து அவளை அங்கேயே உறைய வைத்தது. அதற்கு துரியோதனன், “ஆம், ஆம், பிரம்மதேவன் ஜாலந்திராவை சூரிய சந்திரரின் கிரணங்களாலேயே செய்திருப்பான் போல ஒளிர்கிறாள். ஆனால் அவளுடைய மனோபாவம் தான் மிகவும் மோசமாக இருக்கிறது! சில சமயங்களில் நிதானம் தவறி நடக்கிறாள். சிறு பெண் தானே! போகப்போகச் சரியாகிவிடுவாள்!” என்றான்.

அதற்கு சுஷர்மா துரியோதனனை அவள் மணந்து கொண்ட பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்றான். மேலும் இப்படிப் பட்ட பெண்கள் துரியோதனனைப் போன்ற அழகான வடிவுடைய  அதே சமயம் அன்பான கணவன் கிடைத்தான் எனில் காலப் போக்கில் மாறிவிடுவார்கள் என்றும் சொன்னான். பானுமதி ஆணி அடித்தது போல் அங்கேயே நின்றிருந்தாள்

1 comment:

ஸ்ரீராம். said...

பாவம் பானு!