Friday, May 8, 2015

பானுமதியின் நிலைமை!

அளவில்லா பயத்திலும், அருவருப்பிலும் திகைத்துத் திணறினாள் பானுமதி. அவளால் மேற்கொண்டு எதையும் நினைக்கவே முடியாமல் திகைத்துப் போயிருந்தாள். மெல்ல மெல்லத் தன் அந்தப்புரத்துக்குத் திரும்பினாள். தள்ளாடியவண்ணம் வந்தவளுக்குக் கண்ணெதிரே ஒரே இருட்டாகக் காட்சி தந்தது. எங்கும் இருட்டு அப்பிக் கிடந்தது. தன் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தவளுக்குத் தான் தன் படுக்கை அறையில் இருப்பது தெரிய வந்தது. இவ்வளவு தூரம் சமாளித்துக் கொண்டு அங்கே எப்படி வந்தாள் என்பதே அவளுக்குப் புரியவில்லை. மெல்லப் படுக்கையில் அமர்ந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, பெரிதாக சத்தம் போட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். அவளுக்கு ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது. அவளுக்கோ அவள் மகனுக்கோ எதிர்காலம் என்று எதுவும் கிடையாது.

இத்தனை நாட்களாக துரியோதனன் செய்த கொடுமைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவள் பொறுமையுடன் காத்திருந்ததே கடைசியில் எப்படியேனும் ஒரு நாள் அவள் கணவன் அவள் அன்பைப்புரிந்து கொள்வான்; தானும் அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பிப்பான் என்னும் நம்பிக்கை ஒன்றினால் தான் அவள் அனைத்தையும் சகித்துக் கொண்டிருந்தாள். அதிலும் இப்போது அவள் கணவனுக்கு ஹஸ்தினாபுரத்து அரியணை உரிமையைத் தான் வாங்கிக் கொடுத்ததில் அவன் மிகவும் மகிழ்ந்து தன்னைக் கொண்டாடுவான் என்றே எதிர்பார்த்தாள் இதன் மூலம் அவன் அவள் மேல் அன்பு செலுத்த ஆரம்பிப்பான் என்றும் எண்ணினாள். ஆனால்?? ஆனால்?? உண்மை கசந்தது அவளுக்கு! தான் தோற்றுவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டாலும் அவளுக்கு அதன் நிச்சயம் கசந்தது. இனி இழக்க ஒன்றுமே இல்லை. அனைத்திலும் தோற்றுவிட்டாள். இனி நம்பிக்கை என்பதற்கு இடமே இல்லை. அவள் கணவனின் அன்பு அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை. அவள் தோற்று விட்டாள். மிக மோசமாகத் தோற்றிருக்கிறாள்.

கோவிந்தா தன் வாக்குறுதியை நிறைவேற்றினான் என்றாலும் கூட அவள் மகனுக்கு ஹஸ்தினாபுரத்தின் அரியணை உரிமை கிடைக்குமா என்பது சந்தேகமே! அதை நினைக்க நினைக்க அவள் மனமே வெடித்து விடும் போல் இருந்தது. தலையணைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு நெஞ்சே வெடித்து வெளியே வந்துவிடும் போல் குமுறினாள். திடீரென அவளுக்கு யாரோ அவளைப் பார்ப்பது போல் தோன்றியது. அந்த அறையின் மூலையில் யாரோ நிற்கின்றனர். முதுகுத் தண்டில் சில்லிட்டது பானுமதிக்கு. நிமிர்ந்து யார் அது எனப் பார்க்கவேண்டும் என்று ஆவல் தான். ஆனால் பயமாகவும் இருந்தது அவளுக்கு. ஆனால் அவளால் ஆவலை அடக்க முடியவில்லை. மெல்ல தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. யார் இவன்? ஒரே ஒருமுறை சிறு வயதில் உயிருக்குப் போராடும் நோயினால் தவித்தபோது பார்த்திருக்கிறாள். இந்த நீண்ட முகம்! கொடூரமான முகபாவம்! அவள் கிட்டத்தட்ட செத்துவிடுவாளோ என்று இருந்த அந்த மிகச் சிறு வயதில் பார்த்திருக்கிறாள் இந்த ஆளை!

சுருக்குப் போட்ட கயிற்றைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு மிகவும் கறுப்பான எருமை மாட்டின் மேலே அமர்ந்த வண்ணம் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த உருவம்! ஆம், ஆம் அவனே தான்! அவனே தான்! கடவுளே! இவன் வந்துவிட்டானே! இப்போது அவளைக் காப்பாற்றும் ஒரே சக்தி, கோவிந்தா தான்! ஆம், கோவிந்தா ஒருவனால் தான் அவளைக் காக்க முடியும்! இந்தத் தூக்குக்கயிறில் மாட்டிக் கொள்ளும் விதியிலிருந்து அவளைக் காக்கக் கூடியவன் கோவிந்தா மட்டுமே! அவனிடம் சென்று விட்டாளானால் அவளுக்கு எதுவும் நேராது! கோவிந்தா! கோவிந்தா!  என்னைக் காப்பாற்று! என்னைக் காப்பாற்று கோவிந்தா!அவள் உரக்க அழ நினைத்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. ஆகவே கோவிந்தா, கோவிந்தா என முனக ஆரம்பித்தாள். படுக்கையிலிருந்து எழுந்து மெல்ல மெல்ல கோவிந்தாவிடம் மட்டும் போக முடியுமானால்! ஆம், அப்படித் தான் செய்ய வேண்டும்! படுக்கையிலிருந்து எழுந்தாள் பானுமதி. அந்த அறையிலிருந்து ஓட்டமாக ஓட நினைத்தாள். ஆனால் எழுந்தவளுக்குக் கால்கள் பூமியில் பதியாமல் தள்ளாடின. அவளால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மெல்ல முயற்சி செய்தவள் அந்த முயற்சியில் தோற்றுப்போய் அப்படியே கீழே விழுந்தாள்.

“கோவிந்தா! கோவிந்தா! என்னைக் காப்பாற்று! இங்கே யமதர்மராஜா வந்துவிட்டான்! ஆம்! மரணத்தின் தலைவன் என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறான். நான் போக மாட்டேன்! கோவிந்தா! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும். உதவி செய்! எனக்கு உதவி செய்! கோவிந்தா! என் அருமை சகோதரா! எனக்கு உதவி செய்!” புலம்பினாள் பானுமதி. அப்போது அந்த மரண தேவன் அவள் பக்கம் வருவதற்காக ஓரடி முன்னால் எடுத்து வைத்தாற்போல் தோன்றியது அவளுக்கு. அவளுக்குத் தன் உடலில் உணர்ச்சியே இல்லாமல் மரத்துப் போய்விட்டாற்போல் இருந்தது. அவள் நாடி,நரம்புகளெல்லாம் மரத்துப் போயின. பயத்தில் அவள் க்ரீச்சிட்டு அலறினாள். அப்படியே மயக்கத்தில் ஆழ்ந்து போனாள்

அடுத்த அறையில் இருந்த ரேகாவுக்கு பானுமதியின் அலறல் குரல் காதில் விழ அவள் ஓட்டமாக ஓடோடி வந்தாள். அவளுக்கு பானுமதி கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடப்பதும், அவள் நினைவின்றி இருப்பதும், அந்த நிலையிலும் முனகிக் கொண்டு இருந்ததையும், அவள் வலியால் துடிப்பதையும் கண்டாள். உடனே ஓடோடி மருத்தவச்சியையும், உதவிக்கு ஆட்களையும் அழைக்க வேண்டிச் சென்றாள்.  சற்று நேரத்தில் தன் குளியலை முடித்துக் கொண்ட ஜாலந்திராவுக்கும் பானுமதியின் பயம் கலந்த அலறல் காதில் விழுந்தது. அவள் தன் அறையில் தான் இருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டாள். தன் அருமைச் சகோதரியிடம் தீவிரமான அன்பு பூண்டிருந்த ஜாலந்திரா தன் சகோதரிக்கு ஏதோ ஆபத்து எனப் புரிந்து கொண்டு உடனே அவள் அறைக்கு விரைந்தாள். இத்தனைக்கும் அவள் முழுமையாக் ஆடை அணியக் கூட இல்லை. என்றாலும் தமக்கைக்கு ஆபத்து என்ற ஒரே விஷயமே அவள் மனதில் இருந்தது.

ஜாலந்திரா சென்ற போது அவள் சகோதரியின் அந்தப்புர அறை மூடி இருந்தது.  சேடிப் பெண்கள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். சிலர் மருந்துகளையும், சிலர் பெரிய பெரிய பாத்திரங்களில் வெந்நீரையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.  என்ன நடக்கிறது இங்கே? ஜாலந்திராவுக்கு எதுவும் புரியவில்லை. அந்த அறைக்கதவைத் தட்டினாள். ஆஜானுபாகுவான ஒரு வயதான மூதாட்டி அந்த அறைக்கதவைத் திறந்தாள். இவளை இதற்கு முன்னர் ஜாலந்திரா இங்கே பார்த்ததே இல்லை. அவள் கதவைத் திறந்தவுடன் கிடைத்த இடைவெளியில் ஜாலந்திரா உள்ளே பார்த்தாள். அவள் தமக்கையின் ஆடைகள் விலக்கப்பட்டுக் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள். மூச்சு விடவும் கஷ்டப்பட்டுத் திணறிக் கொண்டிருந்த பானுமதி விடாமல் வேதனையில் அலறிக்கொண்டும் இருந்தாள். அவள் முகமெல்லாம் வியர்த்துப் போய்த் தலைமயிர்கள் எல்லாம் பரந்து முகத்தில் சில கற்றைகள் ஒட்டிக் கிடந்தன.

அவ்வளவு வேதனைக்கும், கத்தலுக்கும் இடையில் அவள் சகோதரி, “கோவிந்தா! என்னைச் சாக அனுமதிக்காதே! என் மகனையும் காப்பாற்றிவிடு!” என்று அலறினாள். ஜாலந்திராவுக்கு நிலைமை புரிந்தது.  பயத்தில் அவள் முகம் வெளுத்தது. தன் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டாள். அவள் சகோதரி படும் வேதனையைத் தாங்க அவளால் முடியவில்லை. அப்போது அந்த ஆஜானுபாகுவான வயதான மூதாட்டி ஜாலந்திராவைப் பார்த்து மெல்லிய குரலில், “உன் போன்ற திருமணமாகாத இளம்பெண்கள் பார்க்கக் கூடிய காட்சி அல்ல இது; நீ இப்போது இங்கே இருக்கக் கூடாது. கிளம்பு உன் அறைக்கு!” என்று சொல்லியவண்ணம் அந்த அறைக்கதவைச் சார்த்தினாள்.  ஜாலந்திராவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. துக்கம் பொங்கியது. ஆனால் அவளுடைய வருத்தத்தையோ, துக்கத்தையோ காட்டிக் கொண்டிருக்க இது சமயம் அல்ல.

பானுமதி உண்மையிலேயே இப்போது வாழ்வா, சாவா என்னும் நிலையில் இருக்கிறாள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எவராலும் கணிக்க இயலாது. ஆனால் அவள் மிகவும் நேசிக்கும் அவள் சகோதரன் கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க விரும்புகிறாள்.  அதற்கு ஆவன் செய்ய வேண்டும். குளித்துவிட்டு அறையின் தனிமையில் அணியும் ஆடையை மாற்றவோ, ஈரம் சொட்டிய தன் தலையைத் துடைத்துக் கட்டிக் கொள்ளவோ முயலாமல் ஜாலந்திரா அந்தப்புரத்தை விட்டு வெளியேறினாள். தாழ்வாரத்தில் அவள் சகோதரி கணவன் துரியோதனனையும், தன் சகோதரன் சுஷர்மாவையும் அவள் கண்டாள்.  அதற்குள்ளாக துரியோதனனுக்குச் செய்தி போயிருக்க வேண்டும் போல! மேலும் பானுமதியின் அலறல்களும் அங்கே வரை கேட்டுக் கொண்டிருந்தன. ஆகவே அவன் பொறுமையின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

ம்....ஹூம்! பாவம் பானு.