Thursday, September 17, 2015

பாமாவின் கலக்கம்! சுபத்ராவின் சிரிப்பு!

“தந்தையே, அவன் பல அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்துவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.” என்று ஒரு சிறு குழந்தையின் உற்சாகத்தோடு சத்யா கூறினாள். “அவனைக் குறித்தும் அவன் செயல்கள் குறித்தும் நீ என்னிடம் எதுவும் கூறாதே சத்யா! அவன் உண்மையில் எதுவும் செய்வதில்லை. செய்வதைப் போல் நடிக்கிறான். எல்லாம் தெரிந்தவன் போல் நடிக்கிறான். இனிமையாக அனைவரையும் கவரும் வண்ணம் பேசத் தெரிந்து வைத்திருக்கிறான். அவனைக் குறித்து நான் நன்கறிவேன். விஷயம் ஏதும் இல்லா வெற்று ஆள் அவன். பார்த்துக்கொண்டே இரு! விரைவில் நான் அவன் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாவண்ணம் ஒரு பாடம் கற்பிக்கிறேன்.” என்றான் கோபத்துடன்

பாமா எதுவும் பேசாமல் விடை பெறும் பாவனையில் கீழே விழுந்து தந்தையை நமஸ்கரித்தாள். அவள் தலையைத் தடவிக் கொடுத்தான் சத்ராஜித். பின்னர் ஆதுரத்துடன் அவளிடம், “சத்யபாமா, என்னை நம்பு! இன்னும் சில வாரங்கள் பொறுத்திரு. அந்த சாத்யகனை என்னிடம் வந்து கெஞ்ச வைக்கிறேன். “உன் பெண்ணை என் மகன் யுயுதானா சாத்யகிக்குக் கொடு!” என்று அவனே இறைஞ்சும் வண்ணம் அவனை மாற்றுகிறேன். அதுவும் என்னுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டே திருமணம் நடந்தாகவேண்டும் என்னும் உறுதிமொழியையும் கொடுக்க வைக்கிறேன். அதன் பின்னர் சாத்யகி உன் கணவனாகி விடுவான். நீயும் மன ஆறுதல் பெறுவாய்!” என்றான். அவளைப் பார்த்துக் கனிவாகப்புன்னகைத்தவனிடம் சத்யபாமா, “தந்தையே! உங்கள் நிபந்தனைகள் என்னவென நான் அறியலாமா? “ என்ற வண்ணம் தந்தையைப் பேசத் தூண்டும் குரலில்,” அதைத் தெரிந்து கொண்டால் நான் சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்வேன்.” என்றாள்.

“ஹா! அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவன் கிருஷ்ணனைப் பிரிந்து என் பக்கம் வர வேண்டும். அது தான் முக்கியமான நிபந்தனை! அவனை அதைச் செய்ய வைக்கிறேன். என்னை நீ சாதாரணமாக நினைத்துவிடாதே! உன் தந்தையின் அதிகாரம் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை நீ பார்க்கப் போகிறாய்! என்னை விட எவனும் சாதுரியமாகப் பேசி எதையும் வெல்ல முடியாது என்பதையும் தெரிந்து கொள்ளப்போகிறாய்!” என்றான்.

தன் தந்தையிடம் பேசிவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்ற பாமாவின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. அவள் நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் தந்தை அவள் சாத்யகியை நினைத்து நினைத்து உருகுவதாக நம்புகிறார்! பாவம்! அது போகட்டும்! இப்போது அடுத்து அவள் செய்ய வேண்டியது என்ன? அது தான் அவள் கவலையும் கூட! சாத்யகியைக் கலந்து பேசி விட்டுத் தான் முடிவு செய்யும்படி இருக்கும் என அவள் நினைத்தாள். அவனிடம் பேசினால் தான் கிருஷ்ணனை அவள் மணக்க எத்தகைய வேலையை, முன்னேற்பாடுகளை சாத்யகி செய்து வைத்திருக்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியும். அவள் சாப்பாட்டுக் கூடத்துக்குச் சென்று அவள் சிற்றன்னைமாரோடும், மற்றப் பெண்மணிகளோடும் சேர்ந்து மதிய உணவு உட்கொண்டாள். அதன் பின்னர் அவள் ஏற்கெனவே செய்திருந்த ஏற்பாடுகளின்படி அவள் தந்தையால் கட்டப்பட்ட சூரியதேவன் கோயிலுக்குச் சென்றாள். அங்கே அவள் சுபத்ராவைச் சந்திப்பதாக முன்னேற்பாடு செய்திருந்தாள்.

பாமாவுக்கு சுபத்ராவை மிகவும் பிடித்திருந்தது. அவள் நிறமும் கிருஷ்ணனைப் போலவே இருந்தது. மிகவும் உல்லாசமான மனப்போக்குடனும், நகைச்சுவை உணர்வுடனும் அனைவராலும் விரும்பத் தக்கவளாகவும், மிகுந்த மன முதிர்ச்சியுடனும், விளையாட்டாகப் பேசினாலும் விரைவில் தன் மன முதிர்ச்சியை வெளிக்காட்டும் போக்குடனும் இருந்தாள்.  கோவிலுக்குப் போன பாமா சுபத்ராவைப் பார்த்ததும் அவள் கைகளைத் தன் கைகளில் பிடித்துக் கொண்டு அங்கிருந்த பிராகாரத்தில் அவளுடன் கைகோர்த்த வண்ணம் நடக்கத் துவங்கினாள். பின்னர் மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள்.

“சுபத்ரா, எனக்கு உன்னுடைய உதவி வேண்டும்!” என்றாள் பாமா. அதை மிக மெதுவாகக் கிசுகிசுவெனச் சொன்னாள். “நான் சாத்யகியை உடனே சந்திக்க வேண்டும். இன்று மாலையே அவனை உடனே என்னை வந்து சந்திக்கச் சொல்!” என்றாள். “ஓ, இன்றா? அவன் தன் குடும்பத்து மூத்தோர்களையும், மற்ற உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதிலும், பேசுவதிலும் இன்று மும்முரமாக இருக்கிறானே!  ஆனால் நீ ஏன் அவனைச் சந்திக்க வேண்டும்? அதில் ஏன் இத்தனை அவசரம்? கொஞ்சம் பொறுமை காட்டக் கூடாதா? ஒரு நாள் காத்திருக்க முடியாதா உனக்கு?” என்றவள் மிகவும் அன்புடன் பாமாவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு அவளைக் குறும்பாகப் பார்த்துச் சிரித்தாள். அனைவருக்கும் சாத்யகியை பாமாவுக்கு மணமுடிக்கும் எண்ணம் சத்ராஜித்துக்கு இருந்தது என்பது தெரிந்தே இருந்தது.

அவள் மனதைப் புரிந்து கொண்ட பாமா கொஞ்சம் எரிச்சலுடனேயே, “சுபத்ரா, நீ ஒரு முட்டாள். சாத்யகன் என்னை அவர் வீட்டுக்கு மருமகளாக ஆக்கிக் கொள்ள மாட்டார். அவருக்கு அந்த எண்ணமே சிறிதும் இல்லை! உன் எண்ணத்தை மாற்றிக் கொள்!” என்றாள்.

“ஓ!ஓ! எனக்கு அது நன்கு தெரியும் பாமா! சாத்யகனின் எதிர்ப்பையும் மீறி நீ சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய் என்பதையும் அறிவேன்.” என்றாள் சுபத்ரா!  பாமாவின் முகம் மாறியது! “தயவு செய், சுபத்ரா! சாத்யகியை எப்படியும் நான் இன்று மாலை சந்திக்க வேண்டும். சந்தித்தே ஆக வேண்டும். விஷயம் மிகவும் முக்கியமானது! தீவிரமானது. நாளை வரை எல்லாம் என்னால் காத்திருக்க இயலாது!” என்றாள் கெஞ்சலாக. “ஆஹா! காதலனால் கைவிடப்பட்ட பொறுமையில்லாத காதலி, அந்தக் கைவிட்ட காதலனை உடனே சந்திக்க விரும்புகிறாள்.” சுபத்ராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கலகலவெனச் சிரித்தாள். சத்யாவுக்கு இப்போது அழுகையே வந்துவிட்டது. என்ன இவள்! சிறிதும் புரிந்து கொள்ளவே இல்லையே! இவளிடம் சொல்லியே ஆகவேண்டும். “இதோ பார் சுபத்ரா! ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன் கேட்டுக் கொள்! எனக்கு சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையே இல்லை! சிறிதும் இல்லை. நான் ஏற்கெனவே எனக்கு உரிய மணாளனைத் தேர்ந்தெடுத்து விட்டேன். அவனைத் தான் நான் அடைய வேண்டும். அதற்குத் தான் உன் உதவியையும்,சாத்யகியின் உதவியையும் நாடுகிறேன். என் மணாளனை நான் வெற்றியுடன் அடைய உதவி செய்!” என்றாள்.

“ஆஹா! நீ இவ்வளவு பொல்லாத தந்திரக்காரியா?” சுபத்ராவின் கண்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன. பொல்லாத கண்கள்! கிருஷ்ணனின் கண்களைப் போலவே அவை நாட்டியம் ஆடின! “யாரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய்? என்னிடம் சொல்வாய் அல்லவா?”

அவள் கேள்விக்கு சத்யபாமா நேரடியாகப் பதில் சொல்லவில்லை. நழுவினாள். “இதோ பார் சுபத்ரா! சாத்யகி என் கணவன் இல்லை. நான் அவனைத் திருமணம் செய்யப் போவதில்லை. அது நிச்சயம்! ஒருவேளை உனக்கு அவனைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருந்தால், உன் அண்ணன் வாசுதேவனை தூது அனுப்பு! அவன் தந்தையிடம் போய்ச் சொல்லச் சொல்!” என்றாள் உள்ளூர வெறுப்புடன். சுபத்ரா இப்போது வெட்கம் அடைந்தாள். “பாமா, நானும் சாத்யகியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை! எனக்கும் அதில் இஷ்டமில்லை. என் அண்ணன் கோவிந்தன் என்னிடம் ஏற்கெனவே சொல்லி இருக்கிறான்.” கொஞ்சம் தயங்கிய சுபத்ரா, பின்னர் அவளிடம், “ஏற்கெனவே எனக்கான கணவனை என் அண்ணா தேர்ந்தெடுத்து விட்டானாம்! இது ஒரு ரகசியம்! என்னிடம் மட்டும் என் அண்ணா கோவிந்தன் சொல்லி இருக்கிறான். “

“யார் அது?”

“அது ஒரு ரகசியம்! கோவிந்தன் என்னிடமும் சொல்லவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கோவிந்தனால் எனக்காக மணாளனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன் நிச்சயம் ஒரு ராஜகுமாரனாக, வீரனாகத் தான் இருப்பான்.