Sunday, September 20, 2015

தோழியர் இருவர்!

“ஓஹோ! சரி, சரி, நீ உன் அண்ணன் தேர்வு செய்திருப்பவரையே திருமணம் செய்து கொண்டு நல்ல பெண்ணாக நடந்து கொள்! ஆனால் இப்போது எனக்கு சாத்யகியை உடனே பார்க்க வேண்டும்! இது வாழ்வா, சாவா என்னும் பிரச்னை!” என்று சொன்ன பாமா சுபத்ராவின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அதற்குள்ளாக அவள் கண்களில் நீர் கட்டிக் கொண்டு விட்டது. அதை சுபத்ராவும் கவனித்தாள். அவள் ஆதரவாக பாமாவை அணைத்துக் கொண்டாள். “இவ்வளவு துக்ககரமானவளாகவும், பரிதாபமான நிலைமையிலும், நான் உன்னை இதுவரை பார்த்தது இல்லை! சாத்யகியை நீ சந்திக்க வேண்டியது அவ்வளவு முக்கியமான ஒன்றென்றால் நான் நிச்சயம் அவனை அழைத்து வருகிறேன். ஆனால் நீ அவனை எங்கே சந்திக்க இருக்கிறாய்?”

ஒரு கணம் யோசித்த பாமா பின்னர் அவளிடம், “மாலை விளக்குகள் ஏற்றும் நேரம் அவனை கிருதவர்மாவின் வீட்டுக்கு வரச் சொல்!” என்றாள். “ஓ, அது கஷ்டம், பாமா! என் தாய் என்னைச் சந்தியாகாலத்தில் வெளியே அனுப்பவே மாட்டாள்.” என்றாள் சுபத்ரா. “ஓ, நீயும் உடன் வரவேண்டியதெல்லாம் இல்லை. நான் பின்னர் உனக்கு விளக்கமாக அனைத்தையும் தெரிவிக்கிறேன்.” என்றாள் பாமா. சுபத்ராவுக்கு ஆவல் அதிகரித்தது. “அது சரி, பாமா! நீ என்ன விஷயமாக சாத்யகியை உடனே பார்க்க விரும்புகிறாய்? அவனிடம் நீ கலந்து ஆலோசிக்க வேண்டிய முக்கியமான செய்தி தான் என்ன? நான் என்ன உனக்காகத் தூது போகும் சேடிப் பெண்ணா? ம்ஹூம், உன் ரகசியத்தை நீ என்னிடம் பகிர்ந்து கொண்டால் தான் ஆயிற்று!” என்றாள் சுபத்ரா.

“இது மிக முக்கியம் என்பதால் தான் நான் உன்னைத் தொந்திரவு செய்து இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னேன். இல்லை எனில் உன்னைத் தொந்திரவு செய்திருப்பேனா? அதோடு இதன் மூலம் உன் சகோதரனும் பாதிக்கப்படுவான்.” என்றாள் பாமா. இதை மிக மெதுவாகக் கூறினாள். சுபத்ராவை வழிக்குக் கொண்டு வர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. கிருஷ்ணனுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சொன்னால் தான் அவள் கொஞ்சமானும் அசைந்து கொடுப்பாள். அவள் நினைத்தாற்போலவே சுபத்ராவின் முகம் பீதியில் வெளுத்தது. “இது உன் தந்தை சம்பந்தப்பட்ட ஏதேனும் சதியா? கிருஷ்ணன் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறானா?”

“நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை.” என்றாள் பாமா.

சுபத்ராவுக்கு ஏதோ புதியதொரு எண்ணம் உதயமாயிற்று. அவள் கிட்டத்தட்ட பாமாவின் மனதைப் படித்துவிட்டாளோ என்னும்படி அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். அவள் கண்களும் முகமும் குறும்பிலும், பரிகாசத்திலும் கூத்தாடியது. அவள் பாமாவைப் பார்த்துக் குறும்பு மாறாமலேயே, “நீயும் ஒருவேளை கோவிந்தனைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாயோ?” என்று கேட்டுவிட்டாள்.  பாமாவின் முகம் சிவந்தது. “ஏன் அப்படி நினைக்கிறாய்?” என்று சுபத்ராவைத் திரும்பக் கேட்டாள்.
 “ம்ம்ம்ம், இன்று காலை தான் பார்த்தேனே! கோவிந்தனிடம் உன்னை அறிமுகம் செய்து வைக்கும்போது சிறிதும் வெட்கமில்லாமல் அவனையே நீ பார்த்துக் கொண்டு இருந்தாயே! உண்மையைச் சொல்லிவிடு பாமா! நீ கோவிந்தனைத் தானே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாய்?” என்று விடாமல் சுபத்ரா கேட்டாள்.

பாமா தலையைக் குனிந்து கொண்டு யோசித்தாள். வேறு வழி இல்லை. இவளிடம் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியது தான் என நினைத்தவள் போல் தலை நிமிர்ந்தாள். சுபத்ராவிடம், “நேரடியாகக் கேட்கிறேன், சுபத்ரா! வைதர்பி, அதுதான் விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மிணி, அவளும், உன் அண்ணனின் இன்னொரு மனைவியான ஷாயிப்யாவும் நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்வார்களா? இருவரும் சம்மதிப்பார்களா? நீ என் சிநேகிதி! என் அருமைச் சிநேகிதி! இதுவரை எனக்குக் கிடைத்த சிநேகிதிகளில் எல்லாம் நீ தான் என் நெருங்கிய சிநேகிதி! நீ இப்போது இதற்கு பதில் சொல்! நான் தேர்ந்தெடுத்திருக்கும் மணாளனை நான் மணந்து கொள்ள நீ எனக்கு உதவி செய்வாயா?”

“ம்ம்ம்??? ஆனால் பாமா, சாத்யகியை விட நல்ல கணவன் உனக்குக் கிடைக்க மாட்டான். அவன் தந்தை ஒத்துக் கொண்டாரெனில் அவனே உனக்கு ஏற்ற கணவன். ஆனால் நீ வேறு எவரையோ தேர்ந்தெடுத்திருக்கிறாய் போலும்! யார் அவர்?”

“என்னை வற்புறுத்தாதே சுபத்ரா! இன்னும் சில நாட்களில் நானே உன்னிடம் அவரைப் பற்றி எல்லாம் கூறுகிறேன். ஆனால் நான் திரும்பவும் உன்னிடம் உறுதியாகச் சொல்கிறேன். நான் மணந்தால் அவரைத் தான் மணப்பேன்; வேறு எவரையும் அல்ல. என் தந்தை பார்க்கும் எந்த மணாளனையும் மணக்கச் சம்மதியேன்!”

சுபத்ரா குறுகுறுவென்று பாமாவையே பார்த்தாள். அவள் மனதையே படித்துவிட்டவள் போலப் புரிந்து கொண்டவள் போலக் காணப்பட்டாள். பின்னர் கலகலவெனச் சிரித்தாள். “எனக்குப் புரிந்து விட்டது. நீ என் சகோதரன் கோவிந்தனைத் தான் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாய்! அவனுக்காக நீ ஏங்குகிறாய். அதை உன் கண்களில் நான் காண முடிகிறது. தன்னுடைய காதலனுக்காகத் தவிக்கும் ஒரு பெண்ணின் உள்ளத்தை அவள் உடல்மொழியே காட்டிக் கொடுத்துவிடும். அப்படி நீயும் காட்டிக் கொடுத்துவிட்டாய்! உன் உடலும், உள்ளமும் அவனுக்காகத் தவிக்கிறது! ஆஹா! விரைவில் நீயும் அவன் அந்தப்புரப் பெண்களில் ஒருத்தியாக அவனுடைய ஒரு சிரிப்புக்காகத் தவம் கிடக்கும் எத்தனையோ இளம்பெண்களில் ஒருத்தியாக மாறப் போகிறாய்! எத்தனை பெண்கள் அவனை நினைந்து தங்கள் மனதை வருத்திக் கொள்கின்றனர்! நீயும் அவர்களில் ஒருத்தியா? இத்தனைக்கும் அவனால் திரும்பக் கொடுக்க முடிந்தது எல்லாம் ஒரு புன்சிரிப்புத் தான்!” என்றாள் சுபத்ரா.

“அப்படி ஏன் நினைக்கிறாய் சுபத்ரா?”

2 comments:

ஸ்ரீராம். said...

ஆனால் சுபத்ரா பின்னாட்களில் கண்ணனுடன் போரில் எல்லாம் கூடச் சென்று உதவி புரிந்திருக்கிறாள், இல்லையா?

ஸ்ரீராம். said...

ஆனால் சுபத்ரா பின்னாட்களில் கண்ணனுடன் போரில் எல்லாம் கூடச் சென்று உதவி புரிந்திருக்கிறாள், இல்லையா?