Wednesday, October 7, 2015

துவாரகையில் மந்திராலோசனை!

மத்ராவிலிருந்து துவாரகை வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டிருந்த யாதவர்கள் எத்தகைய கடினமான சூழ்நிலையையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்திருந்தார்கள். போர்க்களம் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத சமயங்களில் அவர்கள் தங்கள் நேரத்தை வீணாகச் செலவழிக்காமல் விவசாயத்திலும், கால்நடைகளைப் பெருக்கி வளர்ப்பதிலும் செலுத்தினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். குதிரைகளைப் பழக்குவதில் வல்லவர்களாக இருந்தனர். குதிரைகள் அவர்கள் வாழ்க்கையின் உச்சநிலைக்கு ஓர் அடையாளமாக மட்டும் இல்லாமல் போர்க்காலங்களிலும், போக்குவரத்திலும் மிகவும் பயன்பட்டன.ஆகவே அவ்வப்போது ரதங்களில் குதிரைகளைப் பூட்டி போட்டிகள் நடத்தி அதிலும் மிகவும் வல்லுநர்களாக இருந்தனர். யாதவத் தலைவர்களின் தலைமைப் பதவியும் அவரவருக்கான தகுதியும் குலத்தின் தலைவர்கள் மற்றும் ரதம் ஓட்டுவதில் அதிரதிகள், மஹாரதிகள் என்று வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.  இந்த அதிரதிகளும், மஹாரதிகளும் அவ்வப்போது அவர்கள் நிகழ்த்திக்காட்டிய போர் சாகசங்கள் மூலமும், ரதப் போட்டிகள் மூலமும் மாறி மாறி வந்தன. அதிரதிகள் ஒரு சின்ன ரத சாரதிகள் நிறைந்த குழுவுக்குத் தலைவராகச் செயல்பட்டார்கள். அவர்களில் மஹாரதிகள், ரதிகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் யாதவக் குடும்பங்களின் இளைஞர்களாக இருந்து வந்தனர். பொறுக்கி எடுக்கப்பட்ட இளைஞர்களால் இந்தப் படை பலமும், சக்தியும் வாய்ந்ததாக இருந்து வந்தது.  இந்த யாதவர்களின் இப்போதைய தலைவன் ஆன உக்ரசேன மஹாராஜா யாதவத் தலைவர்களின் மிகப் பெரிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ராஜசபையில் அனைத்து யாதவர்களும் கூடும்படி உத்தரவிட்டிருந்தார்.

பலராமனும், கிருஷ்ணனும் கூட அதிரதியாக அறியப்பட்டிருந்தனர். மிகச் சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற அவர்கள் அந்தப் பகுதி முழுதும் அறியப்பட்டிருந்தனர். மத்ராவில் இருந்தபோது அவர்களின் பிரதம எதிரியாக இருந்து வந்த மகத நாட்டு மஹாராஜாவான ஜராசந்தனை விரட்டி அடித்தனர். மத்ராவைச் சூழ்ந்து கொண்டு அவன் முற்றுகை இட்டு அதைத் தீயிட்டுக் கொளுத்த இருந்தபோது அந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்து கொண்ட இவர்கள் இருவரும் அனைத்து யாதவர்களையும் பத்திரமாகவும், அவரவர் சொத்துக்களோடும் சௌராஷ்டிராவை நோக்கிப் பயணம் செய்ய வைத்துக் காப்பாற்றிக் கொடுத்தனர். அங்கே துவாரகை நகரை நிர்மாணித்து யாதவர்களின் நகரமாக மாற்றினார்கள். யாதவர்களின் சாம்ராஜ்யமாக சௌராஷ்டிரப் பகுதி மாறியது. இரு வருடங்கள் முன்னர் கிருஷ்ணனும், பலராமனும் தேர்ந்தெடுத்த சில அதிரதிகளுடன் ஆர்யவர்த்தம் நோக்கிச் சென்றனர். அவர்களின் நண்பர்களில் சிலரும் அவர்களுடன் பயணப்பட்டனர். ஆனால் அதிரதிகளில் ஒருவனான சத்ராஜித்தின் மகன் பங்ககராவும் அவனுடைய நெருங்கிய நண்பனும் ஆன ஷததன்வாவும் உடன் செல்லவில்லை.

சத்ராஜித், தன்னுடைய சிறு வயதிலேயே மஹாரதியாக ஆகிவிட்டான். ஆனால் அவனால் ஒரு அதிரதியாக ஆகமுடியவில்லை. அந்தகர்களின் வம்சத்து அரசனான உக்ரசேன மஹாராஜா கிருஷ்ணனையும், பலராமனையும் அவர்கள் இருவருடன் சேர்ந்து ஆர்யவர்த்தம் சென்று வெற்றிக்கொடி நாட்டி வந்த இளைஞர்களையும் வரவேற்க மட்டுமே இந்த ராஜ்ய சபையைக் கூட்டவில்லை; அவர்கள் ஆர்யவர்த்தத்தில் செய்த சாகசங்களின் உண்மையான நம்பக்கூடிய தகவல்களையும் பரிமாற்றம் செய்து கொள்ளவே கூட்டி இருக்கிறார். இப்போது துவாரகையில் ஓர் ரதப்போட்டியும் நடைபெற வேண்டும். அதிரதிகள் நாடு திரும்பி விட்டதால் அதற்கான தேதியையும் குறிப்பிடலாம். எவ்வளவு விரைவில் ரதப்போட்டி நடைபெறுமோ அவ்வளவு விரைவில் நடத்தியாக வேண்டும். உக்ரசேன மஹாராஜாவின் மாளிகையிலேயே சபாமண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. குருவம்சத்து அரசமாளிகையில் ஹஸ்தினாபுரத்தில் நடைபெற்ற மந்திராலோசனைக் கூட்டத்தின் அளவுக்கு இதில் பகட்டோ, ஆடம்பரமோ, ஒரு திருவிழா போலவோ காணப்படவில்லை. அவ்வளவு ஏன்? பாஞ்சால நாட்டுக் காம்பில்யத்தில் கூட இன்னமும் பகட்டாக, ஆடம்பரமாகவே ராஜசபைக் கூட்டம் நடந்தேறியது. ஆனால் இங்கே எளிமையாகவே இருந்தது.

தரை எங்கும் கரடித்தோலாலும், முதலைத் தோலாலும் ஆன விரிப்புகள் போடப்பட்டிருந்தன.  நுழைவாயிலுக்கு எதிரே ஒரு சிங்காதனம் போடப்பட்டிருந்தது. அதில் சிங்கத்தோலால் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. அதில் தான் மஹாராஹா உக்ரசேனர் அமருவார் என்பதும் தெரிய வந்தது. அந்த சிங்காதனத்துக்கு இரு புறமும் வலப்பக்கம் இரண்டும், இடப்பக்கம் இரண்டுமாக நான்கு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. வலப்பக்கம் கிருஷ்ணனின் தந்தையும், ஷூரர்களின் தலைவனும் ஆன வசுதேவருக்கு என ஓர் ஆசனமும், அவருக்கு அடுத்தபடியாக குலகுரு கர்காசாரியாருக்கு ஓர் ஆசனமும் போடப்பட்டிருந்தது.  இடப்பக்கம் போடப் பட்டிருந்த ஆசனங்களில் ஒன்று ரிஷிகளைப் போல் புனித வாழ்க்கை வாழ்ந்து வந்த யாதவத் தலைவர் ஆன அக்ரூரருக்கும், அடுத்தது விருஷ்ணிகளின் தலைவனும், யுயுதானா சாத்யகியும் தந்தையுமான சாத்யகனுக்கு ஓர் ஆசனமும் போட்டிருந்தது. இந்த நான்கு யாதவத் தலைவர்களும் அவர்களின் இள வயதில் அதிரதர்களாக இருந்தவர்கள். குலகுருவான கர்காசாரியாருக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை உண்டு.

அங்கு வந்து அந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி படைத்த பிராமணர்களில் சிலர் கர்காசாரியாருக்கு அடுத்தபடியாக இருந்த இடங்களில் அமர வைக்கப்பட்டனர். அரச சிங்காதனத்திலிருந்து சற்றுத் தள்ளி மற்றத் தலைவர்களின் ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியிலும் முதல் வரிசையின் ஆசனங்கள் அனைத்தும் அதிரதர்களுக்காக எனப் போடப்பட்டிருந்தன.  அவர்களுக்குப் பின்னால் உள்ள வரிசையில் மஹாரதிகள் அமர்ந்தார்கள். இடப்பக்கம் உள்ள ஆசனங்கள் மஹாரதிகளில் மூத்தவர்களுக்கும், சிறந்தவர்களுக்கும் எந்த அதிரதிக்கும் கீழே வராத மஹாரதர்களுக்கும், மற்ற முக்கியமான யாதவத் தலைவர்களுக்கும் என அமைக்கப்பட்டிருந்தது.

உக்ரசேன மஹாராஜா வருவதற்குச் சற்று முன்னர் சபாமண்டபத்தின் நடுவில் போடப்பட்டிருந்த ஆசனங்களின் ஒன்றில் தன் மூத்த மகனான பங்ககராவும், அவன் நண்பர்கள் ஆன ஷததன்வாவும், ஜயசேனனும் உதவி செய்ய சத்ராஜித் சபாமண்டபத்தினுள் வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். தன்னுடைய பிரியமான ச்யமந்தக மணி மாலையை அணிந்து வந்திருந்தான் சத்ராஜித். அதைத்தவிரவும் அவன் வீட்டுப் பொக்கிஷத்தில் இருந்த தங்கமெல்லாம் அவன் உடலில் அமர்ந்து கொண்டதோ என்னும் வண்ணம் தங்க ஆபரணங்களால் ஜொலித்தான். ச்யமந்தக மணியை மூன்று தங்கச் சங்கிலிகள் ஒன்று சேர்ந்து தாங்கி நின்றன. அது ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு நிறம் காட்டி அனைவரையும் மயக்கியது. கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் மிகப்பெரிய வைரமான அது அனைவரின் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது. குவிந்த கோபுர அமைப்பிலுள்ள கிரீடங்கள் அதிரதிகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அவரவர் விருப்பம் போல் அணியலாம். ஆனால் மஹாரதிகளுக்குக் கோபுர அமைப்பில்லாமல்  சாதாரணக் கிரீடங்களுக்கே அனுமதி! சத்ராஜித் அதிரதி இல்லை. மஹாரதி தான். அவன் கிரீடத்தில் கோபுர அமைப்பு இல்லை. ஆனால் அனைவரின் கருத்தையும், கண்களையும் கவரும் வண்ணம் ரத்தினங்களாலும், வைர, வைடூரியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தகதகவெனப் பிரகாசித்தது.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.