Monday, November 23, 2015

கிருஷ்ணன் செய்த பேரம்!

சத்ராஜித்தால் கண்ணன் தாக்கப்பட்டதை அறிந்த பலராமன் கோபத்தின் உச்சியில் இருந்தான். அவனால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. பலராமன் இயல்பாக மிகப் பெருந்தன்மை படைத்தவன். அவனிடம் பொறாமை என்பதே சிறிதும் இல்லை. ஆகவே தன் இளையோன் இந்தச் சிறிய வயதில் சாதித்த அற்புதங்கள், அதிசயங்களால் அவன் கண்ணனிடம் மிகவும் பிரியமும், பெருமையும் கொண்டிருந்தான். கண்ணனைப் பொதுமக்கள் ஒரு கடவுளாக வணங்குவதை நினைத்தும் அவன் பெருமை கொண்டிருந்தான். அதில் அவனுக்கு உள்ளார்ந்த கர்வமும் உண்டு. ஆகவே பெரியவனான தான் கண்ணனை ஒரு தந்தையின் இடத்தில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் அவனைப் பாதுகாத்து வந்தான். இப்போது இதை அவனால் தாங்க முடியவில்லை. யோசித்த பலராமன் தன் தந்தையிடம் சென்றான்.

சத்ராஜித்தின் இந்த முறையற்ற செயலுக்கு அவனைத் தண்டித்துத் திருத்த வேண்டும் என்னும் எண்ணத்துடன் வசுதேவரிடம் தான் சத்ராஜித்தைப் பார்க்கப் போவதாகத் தெரிவித்தான். வசுதேவரோ நிதானம் உள்ளவர். அவசரப் படமாட்டார். ஆகவே பலராமனிடம் கண்ணனின் நேரிடையான வாக்குமூலம் வரும்வரை அவசரப் பட வேண்டாம், பொறுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதற்குள்ளாக அவர் யாதவகுலத்து மற்றப் பெரியோர்களை அங்கே வரவழைக்கச் சொல்லிச் செய்திகளை அனுப்பினார். அக்ரூரர், சாத்யகன், யாதவர்களின் குலகுருவான கர்காசாரியார் அனைவரையும் உக்ரசேனரின் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பினார். அதே போல் கிருஷ்ணனுக்கும் உடனே அவரை வந்து சந்திக்கும்படிச் செய்தியை அனுப்பினார். ஏற்கெனவே துவாரகை முழுவதும் கிருஷ்ணனை சத்ராஜித் தாக்கிய செய்தி பரவி இருந்ததால் யாதவ குலத்தலைவர்கள் மட்டுமின்றி அனைத்து யாதவர்களும் சொல்ல முடியா வருத்தத்தில் ஆழ்ந்து போயிருந்தனர்.

கிருஷ்ணன் மேல் ஒருவன் கை வைத்தான் என்பதையே தாங்க முடியாமல் இருக்கையில் அவனைக் கொல்லப் பார்த்தான் என்பது அவர்களால் சற்றும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருந்தது. ஆகவே அனைவரும் கூட்டம் கூட்டமாக உக்ரசேனரின் மாளிகை வாயிலில் குவிந்து கொன்டிருந்தனர். உண்மை என்ன என்பதை அறிய விரும்பினார்கள். அவர்கள் உக்ரசேனரின் மாளிகை நிலாமுற்றத்தில் கூடி இருக்கையில் கிருஷ்ணனே அங்கே வந்தான். அவனைப் பார்த்தால் சற்றும் சங்கடத்தில் ஆழ்ந்தவன் போல் தெரியவே இல்லை. எந்தவிதத் தடுமாற்றங்களும், சங்கடங்களும் இல்லாமல் வெகு இயல்பாக நன்றாக அலங்கரித்துக் கொண்டு வழக்கமான புன்னகை ததும்பும் முகத்தோடு மக்களைப் பார்த்துத் தன் கைகளை ஆட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்த வண்ணம் வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த மக்கள் தங்களையும் அறியாமல், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்!” என்று கோஷித்ததோடு இல்லாமல் முன்னணியில் இருந்த சிலர் அவனை நெருங்கி அவன் பாதங்களிலும் பணிந்தனர்.

அனைவரையும் நட்பாகப் பார்த்துச் சிரித்துத் தலையை அசைத்து அந்த வரவேற்பை ஏற்றுக் கொண்டான் கிருஷ்ணன். ஒரு யாதவன் மிக தைரியமாக, “பிரபுவே, என்ன நடந்தது?” என்று கேட்டும் விட்டான். அதற்குக் கிருஷ்ணன் சிரித்தவாறே, “கவலைப்படும்படி எதுவும் இல்லை. நீங்கள் அனைவரும் உங்கள் வீடுகலுக்குச் செல்லுங்கள்!” என்றான். அதற்குள்ளாக இன்னொருவன், “சத்ராஜித் உங்களைத் தாக்கினான் என்கிறார்களே? அது உண்மையா? கொல்லப் பார்த்தானாமே?” என்றும் கேட்டான். “என்னைப் பார்த்தால் யாரேனும் தாக்கி இருப்பார்கள் என்றா நினைக்கத் தோன்றுகிறது?” என்று கேட்ட கிருஷ்ணன் மீண்டும் சிரித்தான். அதைப் பார்த்த மக்களும் சிரிக்க, இதுதான் சமயம் எனக் கிருஷ்ணன் மாளிகை உள்ளே சென்று விட்டான். உள்ளே உக்ரசேன மகாராஜாவுடன், வசுதேவர், அக்ரூரர், சாத்யகன், கர்காசாரியார். பலராமன் ஆகியோர் கிருஷ்ணனின் வரவுக்குக் காத்திருந்தனர். அனைத்துப் பெரியோருக்கும் தன் நமஸ்காரங்களைத் தெரிவித்த கண்ணன் அவனுக்காகப் போட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

“கிருஷ்ணா! என்ன நடந்தது என்பதை விளக்கமாகச் சொல்!” என்று வசுதேவர் ஆணையிட்டார். கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, “அது மிகவும் ருசிகரமான விஷயம்! சுவாரசியமாக இருக்கும்.” என்ற வண்ணம் தொடர்ந்தான் கிருஷ்ணன். “ சத்ராஜித் முதலில் தன் சொத்துக்களை என்னிடம் காட்டினார். அவருடைய பண்ணை, அவருடைய கால்நடைச் செல்வங்கள், குதிரைகள், இந்தக் குதிரைகளை அவர் அஸ்வமேத யாகத்துக்காகப் பயிற்சிகள் கொடுத்து வருகிறாராம். விரிவில் யாகத்தை நடத்தப்போகிறாராம்.” என்று நிறுத்தினான். “என்ன! அஸ்வமேத யாகமா?” என்று வியந்த சாத்யகன் ஏளனம் பொங்க, “அவன் என்ன மகாசக்ரவர்த்தியாக முயல்கிறானா?” என்றும் கேட்டான். கிருஷ்ணன் அதற்கு ஏதும் பதில் அளிக்காமல் தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“பின்னர் அவர் நான் அவரைச் சந்திக்க வந்திருக்கும் காரணத்தைக் கேட்டார். நான் யாதவத் தலைவர்கள் அனைவரும் சத்ராஜித்துடன் நட்பாக இருக்கவே விரும்புவதைத் தெரிவித்தேன். அமைதியான முறையில் உறவு தொடர விரும்புவதையும் தெரிவித்தேன். அதோடு இல்லாமல் அவர் பங்குக்குக் கொடுக்க வேண்டியவற்றை இப்போதாவது கொடுத்து யாதவர்களின் பற்றாக்குறை நிலைமையை நீக்கும்படியும் கேட்டுக் கொண்டேன்.”

“அதற்கு அவன் என்ன சொன்னான்?”

“அவர் பேரம் பேசும் மனோநிலையில் இருந்தார். அவர் கூறினார்:சாத்யகர் அவர்கள் தன் மகனுக்கு சத்ராஜித்தின் மகள் சத்யபாமாவை மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்படி நடந்தால் வரதக்ஷணையாகத் தன்பங்குச் சொத்தைத் தருவதாய்க் கூறினார். சாத்யக மாமா அவர்களே! மேலும் சத்ராஜித் சொன்னது என்னவென்று தெரியுமா? நீங்கள் அவரை அவமானப்படுத்தி விட்டீர்களாம்! அவர் மகளை மறுத்ததன் மூலம் அவருக்கு அவமானம் நேரிட்டு விட்டதாம். அப்போது அவருக்கு நான் நன்றாக விளக்கிக் கூறினேன். சத்யபாமாவின் பணத்தைப் பார்த்துப் பொறாமையிலோ அல்லது உங்கள் செல்வத்தின் மேல் கொண்ட வெறுப்பினாலோ சாத்யகர் உங்கள் மகளை மருமகளாக ஏற்க மறுக்கவில்லை. சாத்யகரின் குடும்பம் வீரதீர சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்ட குடும்பம். அனைவரும் மாபெரும் வீரர்கள். க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாதவர்கள். அப்படிப்பட்டதொரு குடும்பத்திற்குச் செல்வத்திலும், சுகபோகங்களிலும் திளைந்த உங்கள் பெண் சிறிதும் பொருந்த மாட்டாள். அதனாலேயே அவளைத் தன் மகனுக்கு மனைவியாக ஏற்க மறுத்துவிட்டார் என்பதை எடுத்துச் சொன்னேன். அப்படி வற்புறுத்தித் திருமணம் செய்திருந்தால் சத்யபாமாவும் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டாள். சாத்யகிக்கும் மன நிறைவு கிட்டி இருக்காது!” என்று கூறினேன்.

“நன்றாகச் சொன்னாய், குழந்தாய்! உண்மையும் அதுதானே! சாத்யகனைப் போன்றதொரு வீரன், மாபெரும் வீரன் இந்த ஆர்யவர்த்தம் முழுதும் தேடினால் கூடக் கிடைக்க மாட்டான். க்ஷத்திரிய தர்மத்தை விடாது கடைப்பிடித்து வருகிறான்.” என்று தன் முழுமனதோடு பாராட்டினார் உக்ரசேன ராஜா! சாத்யகர் அடக்கத்துடன் தலை குனிந்து கொண்டு மௌனத்தைக் கடைப்பிடித்தார். கிருஷ்ணன் மீண்டும் பேச ஆரம்பித்தான். “அப்போது நான் திரும்ப ஒரு மாற்று பேரத்தைக் கொண்டு வந்தேன். சத்ராஜித் அக்ரூரரின் பொறுப்பில் இருக்கும் உக்ரசேன ராஜாவின் கஜானாவிற்கு ச்யமந்தக மணியைக் கொடுத்தாக வேண்டும். அப்படி அவர் கொடுத்துவிட்டால் அது தான் அனைத்து யாதவர்களுக்கும் நன்மை பயக்கும். ஆகவே அப்படி நடந்தால், நான் சத்யபாமாவை சாத்யகி மணப்பதற்கு உதவுகிறேன்.” என்று சொல்லிவிட்டேன். “ என்று முடித்தான் கிருஷ்ணன்.