Thursday, August 26, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்ரீகாலவன் போட்ட உத்தரவு!

ஸ்ரீகாலவன் போட்ட சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த உத்தவன், தனக்குக் கரவீரபுரத்தின் விதிமுறைகள் தெரியாதென்று கூறினான். உடனேயே ஸ்ரீகாலவன்,”எனில் ஏன் இங்கே வந்தாய்? என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய்?” என்று மீண்டும் கோபத்தைக் காட்டினான்.

“கிருஷ்ண வாசுதேவன் அனுப்பியதாலேயே வந்தேன். அவன் தான் என்னை அனுப்பித் தங்களிடம் தன் வணக்கங்களைச் சமர்ப்பிக்கும்படி கூறினான்.” என்று சொன்னான் உத்தவன்.

“இவ்வளவு நேரம் கிருஷ்ண வாசுதேவன் மண்ணோடு மண்ணாகி இருப்பான். அவன் இருக்கிமிடமே தெரியாமல் போய்விட்டது.” என்று சிரித்தான் ஸ்ரீகாலவன்.

“அரசர்க்கரசே! கிருஷ்ணனாலும், அவன் அண்ணன் பலராமனாலும் ஜராசந்தன் தோற்கடிக்கப் பட்டு விரட்டி அடிக்கப் பட்டான். ருக்மிக்கு மரணகாயம் ஏற்பட்டுவிட்டது. அரசன் தாரதன் கொல்லப்பட்டான்.”

“பொய்களை அடுக்காதே!” சீறினான் ஸ்ரீகாலவன். “மகதச் சக்கரவர்த்தி எங்கள் விருந்தினனாக இங்கே வரப் போகிறான்.” ஸ்ரீகாலவன் உத்தவனுக்கு ஏதோ மனக்கோளாறோ என்றே நினைத்துக் கொண்டான்.

“மாட்சிமை பொருந்திய மன்னரே! ஜராசந்தன் தன் நாட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் ரதத்தின் குதிரைகளுக்கு இருக்கும் வேகமே போதவில்லையோ என்று எண்ணும்படியாக வேகமாய்ச் செல்ல நினைக்கிறான்.”

“சரி, உன் பெயர் என்ன சொன்னாய்?? உத்தவனா? உத்தவா, போய் உன் அந்தக் கிருஷ்ணனிடம் சொல். அவன் ஒரு முறை இங்கே வந்து என்னை வணங்கிவிட்டுச் செல்லலாம் என. மூவுலகுக்கும் ஒரே அதிபதியான ஸ்ரீகாலவ வாசுதேவனை வணங்கிச் செல்வதே அவன் பெருமை என்றும் எடுத்துச் சொல்லி அழைத்துவா! நான் மூவுலகுக்கும் அதிபதி என்பதை அவனை ஒரு போதும் மறக்கச் சொல்லாதே!” என்றான் ஸ்ரீகாலவன்.

“கிருஷ்ண வாசு……”

“நிறுத்து! நான் ஒருவனே இங்கு வாசுதேவன், பர வாசுதேவன், மஹாவிஷ்ணு, எல்லாமும். நான் தான் அனைத்தையும் அறிந்த, கடந்த ஒரே பரம்பொருள். எனக்கு நிகராக இன்னும் எவரும் தோன்றவும் இல்லை; தோன்றவும் முடியாது. ஆதியும் நானே, அந்தமும் நானே! இந்த மூவுலகிலேயே வாசுதேவன் என அழைக்கப் படுவது எப்போது என் ஒருவனையே!” சொல்லிவிட்டுப் பெருமையோடு தன்னைச் சுற்றி இருந்த மக்களை ஒரு கம்பீரப் பார்வை பார்த்தான் ஸ்ரீகாலவன். சுற்றி இருந்த மக்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், “வாசுதேவனுக்கு மங்களம்!” என்று சொல்லிக் கொண்டே இரு கைகளையும் உயரத் தூக்கி அவனை வணங்கினார்கள். இந்த அசட்டுத் தனத்தைப் பார்த்து உத்தவனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் சகோதரனும், நண்பனும் ஆன கிருஷ்ணனோ அநாயாசமாகப் பல சாகசங்களைச் செய்து வருகிறான். எனினும் தன்னை ஒருபோதும் அவன் கடவுள் என அழைத்துக் கொண்டதே இல்லை. இந்தப் பணக்கார முட்டாள் அரசன் ஒரு மனிதனாகக் கூட நடந்துக்கத் தெரியவில்லை. அவன் தன்னைக் கடவுள், பரம்பொருள் என்கிறானே?

மனதுக்குள் இப்படி நினைத்துக்கொண்டே,” அரசே, அது எப்படி முடியும்? அவன் வசுதேவனின் குமாரன். வசுதேவன் ஷூரர்களின் தலைவன். வசுதேவனின் குமாரன் வாசுதேவன் தானே? அதை எப்படி இல்லை எனச் சொல்ல முடியும்?? மேலும் தாங்களும் ஒரு யாதவ வழித் தோன்றலே என்பதையும் கிருஷ்ண வாசுதேவன் ஒரு வகையில் உங்கள் உறவினன் என்பதையும் மறக்கவேண்டாம்.”

“ம்ம்ம்ம்ம்ம், ஆனால் இவ்வுலகில், இவ்வுலகில் என்ன?? மூவுலகிலும் கூட ஒரே ஒரு வாசுதேவன் தான் இருக்க முடியும். இரண்டு வாசுதேவர்கள் இருக்க முடியாது. “ உன்னுடைய கிருஷ்ணன் என்னை வாசுதேவன் என ஒத்துக்கொள்ளவில்லை எனில், நாம் அவனைப் பார்க்க முடியாது. “ திட்டவட்டமாய்ச் சொன்னான் ஸ்ரீகாலவன்.

“ஓ, அரசே, இரண்டு வாசுதேவர்கள் இருக்கின்றார்கள் என்றே சொல்லவேண்டும்! ஒரு வேளை நீங்கள் மஹாவாசுதேவன் என்று சொன்னாலும் கிருஷ்ணனும் வாசுதேவன் தான்!” உத்தவன் குரலிலும் அதே உறுதியும், நிச்சயத் தன்மையும் தொனித்தது.

“ஓஓஓ, யாதவனே! என்னுடைய புனிதத் தன்மையை நீ அவமதிக்கிறாய்! இதனால் நீ நரகத்துக்குத் தான் செல்வாய்! நானே உன்னை அனுப்புகிறேன். என்னை பரவாசுதேவன், மஹாவிஷ்ணு என நீ ஒப்புக்கொள்ளும்வரையிலும் நீ நரகத்தில் தான் இருக்கப்போகிறாய்!”

“பேரரசே! நான் உங்களிடமிருந்து விடைபெறும் தருணம் வந்துவிட்டது. ஆனால் செல்லும் முன் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கிருஷ்ண வாசுதேவன் ஒரு போதும் தன்னைக் கடவுள் என அழைத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் என் கண்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் அவன் கடவுளாகவே தென்படுகிறான். “ என்றான்.

“என்ன தைரியம் உனக்கு?? என் எதிரே இப்படி இன்னொருவனைக் கடவுள் என்பாயா?? யாரங்கே? இவனை நரகத்துக்கு அனுப்புங்கள்!” என்று கோபத்தால் உடல் துடிக்கக் கத்தினான் ஸ்ரீகாலவன். நீண்ட ஈட்டிகளோடு இருபது, முப்பதுபேர் உத்தவனைச் சூழ்ந்து கொண்டு, கயிற்றால் அவனைப் பிணைத்து அங்கே இருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றார்கள்.

உத்தவனுக்குத் தன் நிலைமையை விடக் கண்ணனுக்கு இந்த ஸ்ரீகாலவன் பற்றிய விஷயங்களையும், அவனின் கொடுங்கோல் தன்மையையும் எப்படித் தெரிவிப்பது என்பதே அதிகம் துன்பத்தைக் கொடுத்தது. என்னதான் பரசுராமர் கண்ணனை எச்சரித்திருந்தாலும் இந்த ஸ்ரீகாலவனின் கொடுங்கோன்மை இவ்வளவு மோசம் எனக் கண்ணன் புரிந்து கொள்ளவேண்டுமே என்று கவலைப் பட்டான். அதற்குள் வீரர்களால் வலுக்கட்டாயமாக அவன் அந்தக் கோட்டையின் இன்னொரு பக்கம் அழைத்துச் செல்லப் பட்டான். அங்கே ஒரு சிறிய குன்று போல் இருந்ததன் மேலே ஏற்றினார்கள். கயிற்றை அவிழ்க்காமலேயே மேலே ஏறிய உத்தவனை அங்கே இருந்து கீழே தள்ளினார்கள். ஒரு திறந்த கிணறு போன்ற தோற்றமளித்த பள்ளத்தில் உத்தவன் விழுந்தான்.

2 comments:

பித்தனின் வாக்கு said...

very interesting. thanks to continiue

priya.r said...

நல்ல பகிர்வு
கண்ணன் கதை படிக்க படிக்க மகிழ்ச்சி தான்
கண்ணனை பற்றி அவதுறாக பேசும் ஸ்ரீ காலவன் நிலை என்னவாக
போகிறது?
படிக்கும் ஆவல் கூடி கொண்டே போகிறது !