Sunday, August 29, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

புநர்தத்தனும், உத்தவனும்!

கிணற்றுக்குள் தள்ளப்பட்ட உத்தவன், சற்று நேரத்திலேயே அது கிணறு அல்ல, ஒரு குகை என்றும் பாதாளத்தில் போய்ப் பின்னர் மேலே செல்கிறது என்றும் புரிந்து கொண்டான். ஆனால் அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. தவழ்ந்தே செல்லவேண்டி இருந்தது. இன்னும் சற்று நேரம் தவழ்ந்து சென்ற உத்தவன் சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வெளிச்சம் வருவதைக் கண்டான். அந்த வெளிச்சம் சற்றேக் கீழே இறங்கிச் செல்லும் ஒரு வழியைக் காட்டியதையும் பார்த்து அதன் வழியே சென்றான். அந்தப்பாதையில் இருந்து வெளியே வந்த உத்தவன் ஒரு சமவெளிக்குத் தான் வந்திருப்பதையும், இரு பக்கமும் நீண்ட பெரிய கற் சுவர்களால் அது இரண்டு பக்கமும் மூடப் பட்டிருப்பதையும் கண்டான். திகைப்போடு சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த அவன் சற்று நேரத்தில் ஒரு பள்ளத்தில் காலை வைத்தான். அந்தப் பள்ளம் அவனைக் கொண்டு சென்ற இடத்தைப் பார்த்தால் நரகம் என்பது இதுதானோ என்னும்படிக்குத் தோற்றியது. அங்கே வயது முதிர்ந்த பல ரிஷிகளும், முனிவர்களும் அமர்ந்து கொண்டு தங்கள் நித்தியக் கர்மானுஷ்டான்ங்களைச் செய்வதைப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு ஊற்று ஒன்றில் இருந்து நீர் பொங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகே அமர்ந்த வண்ணம் சூரியனுக்கு அன்று கொடுக்கவேண்டிய அர்க்யத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். உத்தவன் அவர்கள் அருகே சென்று கீழே விழுந்து வணங்கினான். பேசாமல் தங்கள் தலையை மட்டுமே ஆட்டி அவனுக்கு நல்வரவையும், ஆசிகளையும் தெரிவித்த அவர்களின் உடலில் எலும்புக் கூடு மட்டுமே தென்பட்டதையும் கிள்ளி எடுக்க்க் கூட சதை இல்லாமல் இளைத்துப் போயிருப்பதையும் கண்டான். அதே சமயம் அவர்கள் புத்தியிலும், விவேகத்திலும், ஞாநத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதையும், அதன் காரணமாக எவருக்கும் அடிமையாகும் எண்ணமே இல்லாமல் இருப்பதையும் கண்டு உணர்ந்து கொண்டான்.
“உத்தவா!’ பழக்கப்ப்பட்ட குரலோசை கேட்கவே உத்தவன் திரும்பிப் பார்த்தான். அங்கே நின்று கொண்டிருந்தது அவர்கள் குரு சாந்தீபனியின் ஒரே மகன் புநர்தத்தனே ஆகும். தூக்கிவாரிப் போட்டது உத்தவனுக்கு. “புநர்தத்தா, நீ எங்கே இப்படி?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான். ஒரு முதிய ரிஷியைக் காட்டிய புநர்த்த்தன் , “இவர் என்னுடைய தாய்வழிப் பாட்டனார்! “ என்றான். “விஷயத்தைச் சொல் புநர்தத்தா! நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்?” என்று கேட்டான் உத்தவன். அதற்கு புநர்தத்தன், “முதலில் இந்த ஸ்ரீகாலவனின் கதையைக் கேள் உத்தவா!” என்று சொல்லிவிட்டுக் கூற ஆரம்பித்தான்.

“வாசுதேவனைத் தங்கள் குடும்பக் குலதெய்வமாக வழிபட்டு வந்த பல குடும்பங்கள் அந்நாட்களில் உண்டு. எல்லாக் குடும்பங்களுமே மஹாதேவரை வழிபாடு செய்தது இல்லை. சில குடும்பங்களில் வாசுதேவ வழிபாடும் உண்டு. அப்படிப்பட்ட வழிபாட்டு வம்சத்தில் காலவ ரிஷி என்பவர் இருந்தார். அவரைக் குருவாக வரித்துக்கொண்ட சில யாதவத் தலைவர்கள் தங்களுக்கெனத் தனியாக ராஜ்யம் அமைக்கவேண்டிக் கரவீரபுரம் வந்தனர். வரும்போது தங்களுடன் குரு காலவரையும் அழைத்து வந்தனர். காலவரின் போதனையால் அனைவருக்கும் வாசுதேவன் ஒருவனே பரம்பொருள் என்பதாக ஒரு கருத்து அமைந்தது. காலவரிஷியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது. அரசகுடும்பத்தினரோடு நெருங்கிய பழக்கமும் ஏற்பட்டது. அப்போது கரவீரபுரத்தின் மன்னனுக்கு ஒரு பிள்ளை பிறந்திருந்தது. அந்தக் குழந்தைக்கு காலவரிஷியின் பெயரால் ஸ்ரீகாலவலா என்று பெயர் வைக்கப் பட்டது. பையன் வளர்ந்தான். கூடவே வாசுதேவக் குடும்பத்தின் அங்கமாகவும் ஆனான். வயது முதிர்ந்த காலவரிஷியும் இளவரசன் பட்டத்துக்கு வரும் நேரம் மரணம் அடைந்தார்.
இதற்கெனக் காத்திருந்தாற்போல் ஸ்ரீகாலவன் அப்போது தான் அரியணை ஏறியவன் காலவரிஷியின் ஆசிரமத்தை முற்றிலும் அழித்தான். வாசுதேவக் குடும்பத்தின் தலைவன் அவனே என அறிவித்துக்கொண்டான். தன் பெயர் இனி ஸ்ரீகாலவ வாசுதேவன் எனவும், அவனே பரம்பொருள் எனவும், சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவின் சொரூபமே தான் தான் எனவும், தன்னையே அனைவரும் வணங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டான். இந்தப் பூவுலகை ஒரு குடைக்கீழ் ஆள்வதற்கெனவே தான் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்திருப்பதாயும் பிரசாரம் செய்தான். அவனுடைய தண்டனைக்குப் பயந்தும், அவன் கொடுத்த அளவற்ற செல்வத்தின் மீது ஆசை கொண்டும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பக்கம் பேச ஆரம்பித்தனர். அக்கம்பக்கம் உள்ள நாடுகளை எல்லாம் வென்ற அவன் தன்னைத் தானே, மஹாவிஷ்ணுவின் உருவே மனித உருவில் மண்ணுக்கு வந்திருப்பதாய்ச் சொல்லிக் கொண்டான். திரும்பத் திரும்பப்பிரசாரம் செய்து மக்கள் மனதைத் தன் பக்கம் திருப்பினான். அவனைத் தவிர வேறு எவரையும் யாரும் வணங்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தான். பலவிதமான தந்திரங்கள் செய்தும், மக்களை மிரட்டியும் தன் பக்கம் சேர்த்ததால், மக்கள் அவனைக் குள்ளநரி எனவும் அழைத்தனர்.
சாதாரண மக்களைத் தன் பக்கம் அவனால் எளிதாய்த் திருப்ப முடிந்த்து. ஆனால் படித்துக் கற்றறிந்த பெரியோர் பலரும், ஆசாரியர்களும், மற்றக் குருமார்களும் அவனைக் கடவுள் என ஒப்புக் கொள்ள மறுத்தனர். ஒரு அரசனுக்குரிய மரியாதையும், உபசாரங்களையும் தரலாமே தவிர இவன் ஒருவனே கடவுள் என வணங்க மாட்டோம் எனத் திட்டவட்டமாய்த் தெரிவித்தனர். அப்படி மறுத்தவர்களில் ஒருவர் தான் ருத்ராசாரியார் எனப்படும் இந்தக் கிழவர். புநர்த்த்தனின் தாய்வழிப் பாட்டனார். அவரைப் பின் பற்றிப் பல ஆசாரியர்களும் குருமார்களும் ஸ்ரீகாலவனை எதிர்த்தனர். இதைக் கண்ட ஸ்ரீகாலவன் முதலில் ருத்ராசாரியாருக்கு ஆதரவு தெரிவித்தவர்களை அவரிடமிருந்து பிரித்தான். பின்னர் அவரின் சீடர்களைப் பயமுறுத்தி அவரிடமிருந்து வெளியே செல்ல வைத்தான். இதன் பின்னர் அவர் ஆசிரமத்தை அழிப்பது அவனுக்குப் பெரிய காரியமாக இல்லை. மேலும் சக்தி படைத்த விவேகம் உள்ள, அறிவாளியான, வேத பண்டிதர் ஆன ருத்ராசாரியாரை அடக்கி ஒடுக்குவதன் மூலம் மற்ற ஆசாரியர்களும் பாடம் கற்கலாம் என்ற எண்ணமும் ஸ்ரீகாலவனுக்கு இருந்தது. ஆனால் அவன் என்ன செய்தும், ருத்ராசாரியாரை எவ்வகையிலும் தனிமைப் படுத்தியும் அவர் அசைந்தே கொடுக்கவில்லை. அவனுக்கு அடி பணியவே இல்லை. மறுத்துவிட்டார்.
அவரின் மகன்களைத் தன் பக்கம் இணைக்க முயன்றான். ஒரு மகன் நாட்டை விட்டே ஓடிப் போக மற்றொரு மகன் அரை மனதோடு ஸ்ரீகாலவனோடு இணங்கிப்போனான். ருத்ராசாரியாரோ தன் வழிமுறைகளில் இருந்து சற்றும் மாறாமல் தன் தவத்தையும் அன்றாட அனுஷ்டானங்களையும் தொடர்ந்தார். ஸ்ரீகாலவனை மக்கள் வணங்கி வழிபாடு செய்ய வசதியாகத் தினம் இருமுறை மக்கள் முன்னிலையில் தோன்றித் தன்னை வழிபடச் செய்வான் ஸ்ரீகாலவன். அந்த வழிபாட்டில் ருத்ராசாரியாரும் கலந்து கொள்ள அவன் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. தன்னை எதிர்க்கும் அனைத்து ஆசாரியர்களையும், ருத்ராசாரியோடு சேர்த்துச் சிறைக்கு அனுப்புவதே ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தான் ஸ்ரீகாலவன். முதலில் ருத்ராசாரியாரை அனுப்பினான். பின்னர் தொடர்ந்தனர் அனைத்து ஆசாரியர்களும். மொத்தம் பதினேழு பேர் ருத்ராசாரியாரையும் சேர்த்து இருக்கிறார்கள்.” என்றான் புநர்தத்தன்.
தன் தந்தையைக் காணத் தான் தந்தையின் ஆசிரமத்துக்குச் சென்ற போது அங்கே இந்த விஷயத்தைத் தன் தாய் மூலம் கேள்விப் பட்டதையும் உடனே ஸ்ரீகாலவனைப் பார்க்கத் தான் ஓடோடி வந்ததையும் தெரிவித்தான். தன்னையும் ஸ்ரீகாலவன் வணங்கச் சொன்னதையும் தான் மறுக்கவே, தன்னைப் பயமுறுத்திப் பணிய வைக்க முயன்றதையும் அதற்கும் இணங்காத தன்னை இங்கே தள்ளியதையும் கூறினான்.
“ஆனால் உத்தவா, ஒவ்வொரு முறை நான் கஷ்டத்தில் இருக்கும்போதெல்லாம் நம்பிக்கை தரும் ஒளியாக நீ எப்படியோ வந்துவிடுகிறாய்! இம்முறையும் உன்னால் நான் தப்பிப்பதோடு அல்லாமல் அனைத்து ஆசாரியர்களையும் தப்ப வைக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.” என்றான்.
“ம்ம்ம்ம்?? வைவஸ்வதபுரியில் செய்தாற்போல் ஏதேனும் வழி கிட்டுமா எனப் பார்க்கலாம்.” என்றான் உத்தவன்.

2 comments:

Jayashree said...

கண்ணன் இன்று வந்தேவிட்டான்:))
Happy birthday krish:)
தன்முகத்துச் சுட்டி தூங்க தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
நின்முகம் கண்ணுளவாகில் நீயிங்கே நோக்கிப் போ


வண்டமர் பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே

நம்(ப)ஆழ்வாரோட கண்ணன்!

priya.r said...

எழுதுங்க; எழுதுங்க ;கண்ணனின் அற்புதங்களை எழுதி கிட்டே இருங்க !
நாங்களும் படிக்கிறோம்; படிக்கிறோம்; படித்து பயனடைந்து கொண்டே இருக்கிறோம்