Tuesday, March 22, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

ப்ருஹத்பாலன் தப்பிக்கிறான்.


ஜராசந்தன் குறித்தும் அவன் பலம் குறித்தும் இங்கு எவருக்கும் தெரியவில்லை, புரியவில்லை. முட்டாள்தனமான வீர, தீரப்பராக்கிரமங்களைச் செய்து அவனை ஏமாற்றலாம் என நினைக்கும் வளர்ந்த குழந்தைகள். முறையான போர்ப் பயிற்சி எவருக்கும் இல்லை. அதிலும் இந்த பத்ரகன் கொழுகொழுவென இருக்கிறான். என்ன பயிற்சி எடுத்துக்கொண்டான்?? எப்போதும் குடிப்பதும், உண்பதும், சதுரங்கம் ஆடுவதும் தானே வேலை! ம்ம்ம்ம் இந்தக் காரணத்தினால்தானே இந்த ரதப் போட்டியில் கலந்து கொள்வதெனில் யோசனையாய் உள்ளது. அதற்கென முறையான பயிற்சியோடு கூட ஒழுங்கும், கட்டுப்பாடும் தேவையே. அது கொஞ்சம் கூட எவருக்கும் இல்லையே! சும்மா வாய்ப் பேச்சுப் பேசாமல் இவர்கள் இருக்கவேண்டும். உண்மையான யுத்தம் என வந்துவிட்டால் ஈக்களைக் கொல்வதைப்போல் இவர்களைக் கொன்றுவிடுவார்கள். அதை அறியாத முட்டாள்கள்.

ஆனால்……..ஆனால்…….. என்ன இருந்தாலும் இந்தக் கிருஷ்ணன் இதிலே கெட்டிக்காரனாய்த் தான் நடந்து கொண்டிருக்கிறான். இதை எல்லாம் அவனும் யோசித்து விட்டே அனைவருக்கும் கட்டாயப் பயிற்சி கொடுக்கவேண்டும் என வற்புறுத்தி வருகிறான். மதுராவையும், அதன் மக்களையும் எந்தச் சூழ்நிலைக்கும் தயார் செய்கிறானோ? ம்ம்ம்ம்ம்????இதைக் குறித்து யோசிக்கவே இல்லையே.. ஆனால் உத்தவனோ எல்லாவற்றுக்கும் தயாராய் இருக்கிறான்.

ஆனாலும்…….. ஆனாலும்……. இத்தனை செய்தாலும் இந்தக் கண்ணனுக்கு தந்திரமான புத்தியே இருக்கிறது. எனக்காக ஒரு வலையை அன்றோ விரித்திருக்கிறான். இத்தனைக்கும் நான் அவனுடைய தந்தை வழியிலும் சரி, தாய் வழியிலும் சரி மூத்த சகோதரன். நானும் ஒரு வ்ருஷ்ணி தானே. என் தகப்பன் அவன் தகப்பனின் தம்பிதானே. என் தாய் அவன் தாயின் சகோதரி தானே. ஒரு வ்ருஷ்ணி இன்னொரு வ்ருஷ்ணியை எப்படித் தந்திரத்தால் வெல்ல முடியும்! இதற்கு ஒரு வழி கண்டு பிடிக்கிறேன். தந்திரத்தைத் தந்திரத்தாலேயே வெல்லவேண்டும். ப்ருஹத்பாலனின் யோசனைகள் ஓடிக்கொண்டே இருந்தன. எவ்வாறேனும் கிருஷ்ணன் எனக்கு விரித்த வலையிலே அவனையே மாட்டிக்கொள்ள வைக்கவேண்டும். நிச்சயமாய் கிருஷ்ணன் உயிரோடு இருக்க மாட்டான். அவன் இறந்தே போவான். என்னையா மாட்டிவிட்டு மரணத்தைச் சந்திக்க வைக்கிறாய்??

அடே, கிருஷ்ணா, இடையா,. நான் சாவதென்றால் என் மரணம் எப்படி, எங்கே, எவ்வாறு வரவேண்டும் என்பதை நானல்லவோ தீர்மானிக்கவேண்டும்! நீ யாரடா என் மரணத்தைத் தீர்மானிக்க! அவனை விடக்கெட்டிக்காரத்தனமாய் எனக்கும் யோசிக்கத் தெரியும். அதை அவனிடம் மட்டுமல்லாமல் என் முட்டாள் நண்பர்களுக்கும் காட்டியாகவேண்டும். இந்த சாத்யகி ஒரு கதாநாயகனாக ஆகவேண்டும் என நினைக்கிறான் அல்லவா? அவன் புரிந்து கொள்வான், என்னைப் பற்றி. ஆஹா, நாம் முட்டாளாய் இருந்துவிட்டோம்,ப்ருஹத்பாலன் எவ்வளவு தந்திரமாய்க் காரியத்தை முடித்துவிட்டான் என எண்ணிக்கொள்வான். ப்ருஹத்பாலனுக்குக்கொஞ்சம் கொஞ்சமாய் தைரியம் வந்தது. அன்று இரவு அவன் தன் பாட்டன் உக்ரசேனன்இருக்குமிடம் சென்று அவரைப் பணிவுடன் வணங்கினான்.

“ப்ரபுவே, என்னை மன்னியும். இந்த நேரத்தில் உங்களைத் தொந்திரவு செய்யும்படி ஆயிற்று. ஆனால் இது மிகவும் முக்கியமான விஷயம், என் அரசே. ஆகவே நான் இப்போது வந்திருக்கிறேன்.” என்றான்.

“என்ன குழந்தாய்? என்ன சொல்!” உக்ரசேனர் கேட்டார்.

“ப்ரபுவே, கிருஷ்ணனுக்கு ரொம்பவே பெருந்தன்மையான மனம். அதனால் என்னை யுவராஜாவாக ஆக்கவேண்டும் என்று கூறுகிறான். ஆனால் நான் நன்கு யோசித்தேன் ப்ரபுவே. இந்த கிருஷ்ணன் இருக்கிறானே, சிறு வயதில் இருந்தே அதிசயமான வீரதீர சாகசங்களைச் செய்து வருகிறான். ; நாம் நன்கறிவோம்’ அதோடு அவனே நம் குலத்தின் ரக்ஷகன். தீனபந்து. அவன் கடவுள் என்கின்றனர் அனைவரும். ஆனாலும் அவன் கடவுளாக இல்லாவிட்டாலும் தான் என்ன? என் அருமைப் பாட்டனாரே! அவனுடைய ஒவ்வொரு அசைவுகளும் இறைத் தன்மையை நிரூபிக்கிறது.”

"எவ்வித உதவியும் இல்லாமல் அவனும் பலராமனும் ஜராசந்தனை ஓட ஓட விரட்டி அடித்ததாய்க் கேள்விப் பட்டோம். நம் எல்லாரையும் விட அவனே மிகவும் பலசாலியும், வலிமை வாய்ந்தவனும், உயர்ந்தவனும் ஆவான். அதோடு அவன் தர்மத்திற்கும் கட்டுப்பட்டு தர்மத்தின் பாதையிலேயே எப்போதும் செல்கிறான். அவனை விட்டு விட்டு, என்னை யுவராஜா ஆக்குவதெனில்!! பாட்டனாரே! அவனுக்கு உள்ள உரிமைகளை நான் பறித்துக்கொண்டு விட்டேனோ என எண்ணுகிறேன். இவ்வளவு நல்லவன் ஆன கிருஷ்ணனின் பரோபகாரமான மனதைத் தவறாய்ப் பயன்படுத்திக்கொண்டு அவன் உதவியையும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு விடுவேனோ என அஞ்சுகிறேன். “ என்று மிகப் பணிவோடு கூறினான்.

“ஓஓஓஓஓஓ” உக்ரசேனருக்கு வியப்பு! அதே சமயம் பேரப்பிள்ளை சுய நினைவோடு தான் பேசுகிறானா என்ற சந்தேகமும் ஏற்பட்டது! “குழந்தாய்! உண்மையாகவா சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“பாட்டனாரே, உண்மைதான். கிருஷ்ணன் ஒருவனாலேயே நம்முடைய புராதனமான இழந்த கெளரவத்தை மீட்க முடியும். நானும் அவனுக்கு உண்மையாகவே நடந்து கொள்வேன். விசுவாசமாக இருப்பேன். அவனுக்கு துரோகம் நினைக்கமாட்டேன்.” என்றான்.

“நீ யுவராஜா ஆகவே நினைக்கவில்லையா? நீ விரும்பவில்லையா?” உக்ரசேனர் மீண்டும் மீண்டும் கேட்டார். அவரின் மனதுக்குள்ளே கொஞ்சம் இஷ்டமில்லாமலேயே கண்ணன் சொன்னான் என்பதற்காக ஒப்புக்கொண்டிருந்தார். இப்போது அவருக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

மேலும் ப்ருஹத்பாலன் சொன்னான்:” கிருஷ்ணன் குண்டினாபுரம் போய் நம் இழந்த கெளரவத்தை மீட்டெடுக்கவேண்டும் பாட்டனாரே! நான் அதைத் தான் விரும்புகிறேன். அவனால் தான் அது இயலும்.” என்றான்.

“ஆஹா, மகிழ்ச்சி, குழந்தாய், மகிழ்ச்சி! இப்போதாவது நீ உன்னுடைய தகுதியைப் புரிந்துகொண்டு எது சரியானது என்று எண்ண ஆரம்பித்தாயே, அது வரைக்கும் எனக்கு மகிழ்ச்சியே. நான் என்னுடைய முடிவை மாற்றிக்கொண்டதாய் அனைவருக்கும் அறிவிக்கிறேன்.” என்றார் உக்ரசேனர் மனம் நிறைய மகிழ்ச்சி என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.

“கண்ணன் குண்டினாபுரம் போய் வெற்றி மாலை சூடி வருவான். இது நிச்சயம்!” என்று உள்ளார்ந்த பொறாமையுடன் கூறினான் ப்ருஹத்பாலன்.

ஓ, எனக்குத் தெரியும், கிருஷ்ணனுக்கே ஜெயம்!” என்றார் உக்ரசேனர்.

1 comment:

priya.r said...

54 வது அத்தியாயத்தையும் படித்து முடித்து விட்டேன்

ப்ருஹத்பாலன் கோழையாக இருந்தாலும் தன்னை அறியாமல் நல்லதே செய்கிறான் எனலாம்

வ்ருஷ்ணி என்றால் பொருள் என்ன ?

பதிவுக்கு நன்றி கீதாம்மா