Monday, September 12, 2011

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!

கண்ணனின் வார்த்தைகள் பீஷ்மகனை வெகு நுட்பமான இடத்தில் அடித்திருக்கிறது என்பதை அவன் வேதனை கலந்த முகபாவம் தெரியப்படுத்தியது. கண்ணன் அதைக்கவனிக்காதவன் போலத் தொடர்ந்தான். “யாதவர்களின் பரம வைரியை உங்கள் நண்பர்களாக்கிக்கொண்டு, விட்டதால் உங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. உக்ரசேன மஹாராஜாவை இந்தச் சுயம்வரத்திற்கு முறைப்படி அழைத்திருந்தால் நடந்திருப்பதே வேறு விதமாக இருக்கும். இந்தப் போலியான சுயம்வரமே நடக்கவிட்டிருக்க மாட்டார். “ “போலி சுயம்வரம்!” எதிரொலித்தான் பீஷ்மகன். எனினும் அவன் குரலில் வலுவிருக்கவில்லை. மிகவும் உடல்நலமில்லாதவன் போல் திடீரெனக் காட்சி அளித்த அவன் அப்படியே தன் கட்டிலில் சாய்ந்து கொண்டான். தன் கண்களை மூடிக்கொண்டு, “வாசுதேவா, வாசுதேவா! உனக்கு எவரோ தவறான செய்தியைக் கொடுத்திருக்கின்றனர்.” என்றான். பரிதாபமும், கருணையும் பொங்க பீஷ்மகனையே பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணன். பீஷ்மகன் மீண்டும் கண்களைத் திறக்கும் வரையிலும் பொறுமையுடன் காத்திருந்தான்.

பீஷ்மகன் கண்களைத் திறந்ததும், “போஜ அரசர்களில் சிறந்தவரே! நான் இங்கே உம்முடைய இந்தச் சுயம்வரத்தில் வலுவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வரவில்லை. நான் ஒரு அரச குடும்பத்தில் மணமகளை அடைய முடியாது என்பதை நன்கறிவேன். ஆம், இருக்கலாம், போஜரே, நான் ராஜ வம்சத்து, க்ஷத்திரிய வம்சத்து ரத்தத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் நான் வளர்ந்ததோ மாட்டிடையர்கள் மத்தியிலே. நான் ஓர் மாட்டிடையனாகவே இன்று வரையிலும் எண்ணப்படுவதும் அறிந்திருக்கிறேன். அவ்வாறே நானும் உணர்கிறேன். இங்கு வந்திருக்கும் மாட்சிமை பொருந்திய மன்னர்களோடு சரிசமமான ஆசனத்தில் அமரும் தகுதி எனக்கு இல்லை என்பதையும் அறிந்துள்ளேன். அதிலும் சுயம்வரத்தில் போட்டியிட்டு மணமகளை வெல்லும் தகுதி படைத்த அரசர்களோடு நான் சமானமாக நினைக்கக் கூட முடியாதவன் என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன்.”

தன் வார்த்தைகளை பீஷ்மகன் மிக உன்னிப்பாகக் கவனிப்பதையும், மனதில் இருத்துவதையும் புரிந்து கொண்டான் கிருஷ்ணன். மேலே கூறினான்:” ஆனால் எனக்கு இங்கே ஓர் கடமை உள்ளது. ஆரியனான நான் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியதொரு தர்மம் அது. போஜ மன்னா! நீர் நடத்தப் போகும் இந்தச் சுயம்வரத்தில் மணமகன் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டான் என்பதை அறிவேன். மணமகளுக்கு அவள் விருப்பம் போல் அவளுக்கேற்ற மணமகனைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கவே இல்லை. சக்கரவர்த்தி ஜராசந்தன் உம் மகளுக்கான மணமகனைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவன் விருப்பத்துக்கு நீர் துணை போகிறீர். இந்த அநியாயமான சுயம்வரத்திற்கு இதற்கு வந்திருக்கும் அரசர்களும் துணை போகின்றார்கள். ஆம், இதற்குச் சம்மதம் கொடுத்த அரசர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சுயம்வரத்தின் மூலம் நீர் அடையப் போகும் லாபம் என்ன?? யாதவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் ஜராசந்தனுக்குத் துணை போவதன் மூலம் மாபெரும் ராணுவத்தை யாதவர்களுக்கு எதிராக உருவாக்க நினைப்பதன் மூலம் உமக்குக் கிடைக்கப் போகும் அரசியல் நன்மை என்ன?? “ உணர்ச்சிகள் ததும்பப் பேசிய கண்ணன் மேலே தொடர்ந்தான்.

“ ஐயா, நீர் ஓர் ஆரியர்! தர்மத்தை அதுவும் ராஜ தர்மத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டியவர். தர்மம் உம்மால் காப்பாற்றப்படவேண்டும். அதை உம்மிடம் யாசித்துப் பெறவே நான் இங்கு வந்துள்ளேன். ஐயா, போஜ மன்னரே! உம் மகள் ருக்மிணி போஜ நாட்டு அரசகுலப் பெண்களில் ஜொலிக்கும் வைரம் போன்றவள். உம்முடைய அரசக் கிரீடத்தின் வைரங்களை விட இவள் நாட்டுக்கே ஒளிதரும் கண்மணி போன்றவள்; அத்தகையதொரு பெண்ணை, உம்முடைய அரசியல் சதுரங்கத்தில் ஓர் பகடைக்காயாகப் பயன்படுத்துவது தகுமா?? அதிலும் யாதவர்களை அழிக்கவெனப் புறப்பட்டிருக்கும் ஜராசந்தனின் தோழமைக்காக உம்முடைய ஒரே குமாரியின் வாழ்க்கையைப் பணயம் வைத்தது சரியா?? உண்மையைச் சொல்லுங்கள் ஐயா. உம் மகளின் வாழ்க்கையை விடுங்கள். நாங்கள் யாதவர்கள் உமக்கு என்ன கெடுதி செய்தோம்?? ஏன் எங்களை உம்முடைய முதல் எதிரியாகக் கருதுகிறீர்கள்? நீர் செய்வதை சரியா??”

“போதும், போதும், வாசுதேவா! உன்னையோ அல்லது மற்ற யாதவர்களையோ, அவ்வளவு ஏன் யாதவக் குலத்தையோ நான் ஒருபோதும் எதிரியாக நினைக்கவில்லை. இது தவறான செய்தி. அதிலும் தாமகோஷன், சேதி நாட்டரசர், உன்னுடைய சொந்த அத்தை புருஷர், உங்களுக்கெதிரானதொரு சதியில் இறங்குவார் என நீ நம்புகிறாயா?? இதில் அரசியல் சதி ஏதும் இல்லை கண்ணா! என்னை நம்பு. இங்கே எந்தச் சதியும் நடைபெறவே இல்லை. இம்மாதிரியான சுயம்வரங்கள் அரச குலத்தில் புதியது அல்லவே. அரசியல் காரணங்களுக்காகவும், அரசியல் ஒற்றுமைகள் நீடிக்கவும் அரசகுமாரிகள் இம்மாதிரியான திருமணங்கள் செய்து கொள்வதும் புதியது அல்லவே!” பீஷ்மகன் என்னதான் கூறினாலும் அவன் குரலில் வலு இல்லை என்பதை அனைவருமே அறிந்தனர். கிருஷ்ணன் புன்னகை புரிந்தான். “போஜ மன்னரே! நீர் மிகவும் கெட்டிக்காரர்; அது மட்டுமல்ல. புத்திசாலியும் கூட. ஒரு தகப்பனாகத் தன் மகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆரியரான நீர் அறியாமல் இருக்க முடியாது. உம்முடைய கடமையை நீர் மறந்திருக்க மாட்டீர். ஒரு சுயம்வரம் என்றால் மணமகள் தனக்கேற்ற மணாளனைத் தானே சொந்தமாகத் தன் சுயநினைவோடும், சுய ஒப்புதலோடும் தேர்ந்தெடுக்க வேண்டும். தகப்பனான அரசர்கள் அரசகுமாரர்களையும், அரசர்களையும் சுயம்வரத்திற்கு அழைப்பதோடும், அவர்களைத் தன் மகளுக்கு அறிமுகம் செய்வதோடும் நின்று கொள்ள வேண்டும். நம் ஆரிய சம்பிரதாயங்களும், இன்றளவும் நடைபெறும் சாத்திர சம்பந்தமான நூல்களும், ரிஷி, முனிவர்கள் கூறி வருவதும் இதுவே. ஒரு பெண்ணை பலவந்தமாக அவளுக்கு இஷ்டமில்லாத ஒருவனுக்கு மணமுடிக்கக் கூடாது என்பது ஆரியர்களான நாம் கட்டாயமாகக் கடைப்பிடித்து வருகிறோம்.”

“தெரியும்!” மெல்லிய குரலில் முணுமுணுத்தான் பீஷ்மகன்.

“கிருஷ்ணன் தன் கைகளைக் குவித்த வண்ணம் பீஷ்மகனை வணங்கினான். “ ஆகையால் நான் இங்கே இப்போது வந்திருப்பது, என் தாத்தாவான உக்ரசேனா மஹாராஜா, என் தந்தையும் ஷூரர்களின் தலைவரும் ஆன வசுதேவர், ஆகியோரின் விருப்பமும் வேண்டுகோளும் மணமகளுக்கு விருப்பமில்லாத இந்தச் சுயம்வரத்தைத் தடுக்க வேண்டும் என்பதே! அவர்களின் விருப்பத்தைத் தெரிவிக்கவேண்டியே நான் இங்கே வந்துள்ளேன்.”

பீஷ்மகனுக்கு என்ன செய்வது எனப் புரியாமல் ஒரு நொடி தவித்தான். பின்னர் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இவ்வளவு ஏற்பாடுகளும், திட்டங்களும் போட்டு விருந்தினர்களும் வந்து சேர்ந்திருக்கும் வேளையில் இந்தச் சுயம்வரத்தைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாத ஒன்று. சுயம்வரத்தைத் தள்ளியும் போடமுடியாது. போஜர்களாகிய எங்கள் குலத்திற்கு இது அவப்பெயரைத் தேடிக்கொடுக்கும்.”

“எனில் அரசே, நீர் இதை யாதவர்களாகிய எங்கள் பொறுப்பில் ஒப்படைக்கச் சம்மதிக்கிறீர்களா? இந்தச் சுயம்வரத்தைத் தடுக்கும் பொறுப்பு எங்களுடையது. அதர்மமான முறையில் நடைபெறப்போகும் சுயம்வரத்தைத் தடுக்கிறோம். நம் பாரம்பரியமான சம்பிரதாயங்களையும் விதிகளையும் பின்பற்றி தர்மத்தை நிலை நாட்டுகிறோம். என்ன சொல்கிறீர்கள்?” கிருஷ்ணன் குரலில் இப்போது எச்சரிக்கை மணி ஒலித்தது. அவன் குரலே பயங்கரமாக ஒலித்தது.

“ஐயகோ! நான் என் செய்வேன்! அது இன்னும் கொடுமையாகிவிடுமே! பயங்கரமானதொரு நாசத்திற்கு வழிகோலுமே! ஒழிந்தோம், நாங்கள் அடியோடு அழிந்தோம்! எல்லாம் வல்ல, சர்வ வல்லமை பொருந்திய மஹாதேவன் தான் எங்களையும், எங்கள் போஜ குலத்தையும் காத்து ரக்ஷிக்கவேண்டும். அனைத்து தெய்வங்களும் எங்களுக்குத் துணையாக வரவேண்டும்.” தீனக்குரலில் கதறிய பீஷ்மகன் மீண்டும் அவன் படுக்கையில் சாய்ந்துவிட்டான். கிருஷ்ணன் ஏதும் பேசாமல் கெளசிகன் அவனுக்கென ஏற்பாடு செய்திருந்த விருந்தினர் மாளிகைக்கு வந்தான். அங்கே காத்திருந்த திரிவக்கரை கிருஷ்ணனைக் கண்டதும் ஓடோடி வந்தாள். கிருஷ்ணன் தனிமையில் வந்ததும், அவனிடம்,” கோவிந்தா! இளவரசி ருக்மிணி உனக்குச் செய்தி அனுப்பி உள்ளாள்.” என்று பரபரப்புடன் கூறினாள். “உன் முகமே சொல்கிறதே, இப்படி ஏதோ ஒன்று உள்ளது என! எங்கே சொல் பார்ப்போம்! “ என்றான் கண்ணன். மீண்டும் கள்ளச் சிரிப்பு விளையாடியது அவன் முகத்தில்.

சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக்கொன்ட திரிவக்கரை," கண்ணா, ருக்மிணியின் செய்தி இதுவே:"கோவிந்தா, நான் உன்னைத் தவிர வேறு எவரையும் மணக்க மாட்டேன். இந்தப் பிறவியில் மட்டுமல்ல; இனி வரும் எல்லாப் பிறவிகளிலும். ஜன்மஜன்மாந்தரங்களுக்கும் உன்னையே தொடர்ந்து வருவேன். நீ எங்கிருந்தாலும் எந்த உருவில் இருந்தாலும் தேடிக்கண்டு கொண்டு உன்னையே மணந்து கொள்வேன். வேறு எவரையும் எவ்வளவு உன்னதப் பதவியில் இருந்தாலும் மணக்கச் சம்மதியேன்."

கண்ணன் வாய்விட்டுச் சிரித்தான். "திரிவக்கரை, ருக்மிணியை முதன்முதல் பார்த்ததில் இருந்து இதற்காகவே நீ பல வேலைகள் செய்து வந்துள்ளாய் அல்லவா? இப்போதும் என் அன்னை, மற்றும் யாதவகுல மகளிர் சார்பாகப் பரிசுகளை நீ எடுத்துக்கொண்டு வந்ததும் இதை எல்லாம் நிறைவேற்ற வேண்டி அல்லவா? நீ மிகவும் கெட்டிக்காரி. உன்னுடைய வேலைகளுக்கு நடுவே அரச மாளிகைகளின் அந்தப்புர ரகசியங்களையும் அறிந்து கொண்டு விடுகிறாய். உன் வயதைப் போலவே இதுவும் அதிகமாகிக்கொண்டு வருகிறது."

திரிவக்கரை, "கண்ணா, நான் உன்னைத் தெய்வமாக நினைப்பதை நீ நன்கறிவாய். உனக்குச் சேவை செய்வதே என் நோக்கம். இந்தச் சேவைகளைக் கேலி செய்யாதே! நான் என்ன செய்தாலும் அதை உனக்காகவே அர்ப்பணித்துவிட்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிறேன். உனக்காகவே நான் வாழ்கிறேன் என்பதை அறிவாயாக!" என்றாள்.

"ம்ம்ம்ம் இருக்கட்டும்; செய்தி அவ்வளவுதானா? இன்னம் இருக்கிறதா??"

"போஜ இளவரசி நீ மட்டும் அவளை மணக்கவில்லை எனில் உயிர்த்தியாகம் செய்யப் போவதாய்ச் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். கண்ணா, அவள் நினைத்ததைச் செய்து முடிப்பாள்."

"திரிவக்கரை, பல அரச குடும்பப் பெண்களும் இப்படிச் சொன்னவர்களே; பின்னர் வேறொருவனை மணந்து பிள்ளை, குட்டிகள் பெற்றுக்கொண்டு அரசியல் சூதுகளில் கலந்து கொண்டு செளக்கியமாகவே இருக்கின்றனர்."

திரிவக்கரையின் முகம் வேதனையைக் காட்டியது.

3 comments:

பித்தனின் வாக்கு said...

intha ann pillaikale ippadiththan ethaiyum easyaka nammba matterkal.

athilum kirishnan rukmanin kathalai santhekam kolvathu.

priya.r said...

இந்த அத்தியாயம் 92ஐ படித்து விட்டேன் கீதாமா
கண்ணனின் தர்ம போதனைகளை தெரிந்து கொள்ள முடிந்தது

priya.r said...

இந்த அத்தியாயம் 92ஐ படித்து விட்டேன் கீதாமா
கண்ணனின் தர்ம போதனைகளை தெரிந்து கொள்ள முடிந்தது