Wednesday, September 28, 2011

பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்!

“ இனி நமக்கு இருப்பது ஒரே ஒரு வழிதான். உறுதியாகப் போரை எதிர்கொண்டு வீரமரணம் அடைவதே சரியான வழி!” வசுதேவர் குரலிலும், உறுதி; கண்களிலும் அது தெரிந்தது. சத்ராஜித் இதைக் கேட்டதும் கோபவெறியுடன், “ நாம் வீரமரணம் அடைவோம்; சரிதான். ஆனால் நம் பெண்டு, பிள்ளைகள்?? அவர்கள் கதி என்ன?? அந்தக் கொடுங்கோலர்கள் கைகளில் மாட்டிக்கொண்டு அவமானப்பட்டு, மானம் இழந்து சித்திரவதைப் பட விட்டுவிட்டு நாம் வீரமரணம் அடைவோமா?? “ யாதவர்களின் ஒரு குழுவுக்குத் தலைவன் ஆன சத்ராஜித் கம்சனின் மரணத்திற்குப் பின்னர் மதுரா திரும்பிய முக்கியத் தலைவர்களுள் ஒருவன். அவன் பேச்சைப் புறக்கணிக்க முடியாது. மேலும் தொடர்ந்து சத்ராஜித், “ இந்த ஒன்றுமில்லா உதவாக்கரை இளைஞர்களை நம்பி அவர்களின் கைகளில் நம் நகரத்தையும், எதிர்காலத்தையும் ஒப்படைத்தபோதே இதை நான் எதிர்பார்த்தேன்.” என்றும் கூறினான்.

“கோழை! கோழை! வீரமில்லாதவன், தைரியமில்லாதவன்!” பலராமனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. சத்ராஜித் மேல் பாய்ந்தான். அதைக் கண்ட சிலர் பலராமனைத் தடுக்க, சத்ராஜித் மேலும் இரைய சிறிது நேரம் அங்கே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. யார் என்ன பேசுகிறார்கள், யார் யாரை அடக்குகிறார்கள் என்பதே புரியாமல் தவித்த உக்ரசேனர் மிகுந்த பிரயத்தனத்துடன் ஒருவாறு அந்தக் கூச்சலை அடக்கி அமைதியை நிலைநாட்டினார். “தப்பிக்க என்ன வழி கிருஷ்ணா?” என்று கிருஷ்ணனைப் பார்த்து உக்ரசேனர் கேட்க, “நம்பிக்கை ஒன்றே நமக்கு நல்வழிகாட்ட முடியும், அரசே, என்னால் அது இயலாது.” என்றான் கிருஷ்ணன். உள்ளூர அனைவருக்குமே கிருஷ்ணன் ஏதேனும் வழி கண்டு பிடித்து இந்த இக்கட்டில் இருந்து நம்மை எல்லாம் காப்பாற்றுவான் எனத் தோன்றினாலும், கிருஷ்ணனின் இந்தப் பேச்சு அனைவரையும் யோசிக்க வைத்தது, மேலும் கண்ணன் கூறினான்:” நம் நம்பிக்கை தான் அடியோடு ஆட்டம் கண்டு விட்டதே!” என்றும் வருத்தத்தோடு கூறினான்.

“நம்பிக்கை! எங்கே இருந்து வரும்! அதுதான் அடியோடு நிர்மூலமாக்கப் போகிறானே ஜராசந்தன்!” கத்ருவின் குரல் சொல்லும்போதே நடுங்கியது. சத்ராஜித் இதுதான் சமயம் என மீண்டும் எழுந்து கொண்டு, “இந்த இடையன் கிருஷ்ணனே இந்த சர்வநாசத்துக்குக் காரணம்; அவ்வளவு ஏன்! நம் அனைத்துத் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் இவனே காரணம்!” என்று ஆவேசத்தோடு கூற, அக்ரூரர் அவனைச் சமாதானம் செய்தார். “அப்படி எல்லாம் சொல்லாதே சத்ராஜித். சில மாதங்கள் முன்னரே கண்ணனை நாம் அனைவரும் மிகவும் போற்றி அவனில்லை எனில் யாதவ குலமே இல்லைஎனச் சொன்னோம்.” என்றார். “ஹா, நீங்கள் அனைவரும் அவனைப் போற்றினீர்கள்; அவன் காலடியில் விழுந்தீர்கள்! ஆனால் நான்! நான் அந்த பஜனையில் சேரவில்லை.” சத்ராஜித் கர்வத்தோடு கூறினான். பின்னர் தன்னுடைய நெருக்கமான தோழர்கள் புடை சூழ அங்கிருந்து எவரிடமும் கூறாமல் வெளிநடப்புச் செய்தான். இதற்குள் அங்கே எவரோ, ப்ருஹத்பாலன் ஜராசந்தனை நேரில் பார்த்துக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால் நம்மை எல்லாம் காக்க முடியும்; இதற்கு முன்னரும் அவன் அவ்வாறு நம்மைக் காத்திருக்கிறான் என்று சொல்ல அங்கே மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. பல பெரியவர்களுக்கும் ப்ருஹத்பாலனிடம் நம்பிக்கை இல்லை; என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதி காத்தனர்.

வேறு வழியில்லாமல் வசுதேவரின் ஆலோசனையின் பேரில் அந்தக் கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்திப்போட்டார் உக்ரசேனர். அன்றிரவு மதுராவின் ஒவ்வொரு வீட்டிலும் கலவரமான மனநிலையில் மக்கள். அனைவரும் ஜராசந்தனையும் அவன் கொடூரத்தையும் நினைத்து அஞ்சினார்கள். ஆட்டு மந்தைக் கூட்டம் தண்ணீர் குடித்துக்கொண்டு சாவகாசமாக இருக்கையில் தூரத்திலிருந்து கேட்கும் சிங்கத்தின் கர்ஜனைக்குரலைக் கேட்டு எங்கே எப்படி ஓடுவது! எப்படித் தப்பிப்பது எனப் புரியாமல் திகைப்பது போல மதுராவின் அனைத்து யாதவர்களும் தவித்துக்கொண்டிருந்தனர். கண்ணன் தனக்குக் கிடைத்த தனிமையில் அமைதி காணவில்லை. அவன் மனம் துயரத்தில் ஆழ்ந்திருந்தாலும் யாதவர்களை நினைத்து நினைத்து பரிதாபம் அடைந்தான். அவர்களின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமானது. ஜராசந்தனின் கொடுமையை நினைத்து பயப்படும் அவர்களுக்கு இப்போது தர்மம் என்றால் என்ன என்பது குறித்த எந்தக் கவலையும் இல்லை. பயத்தால் நடுங்கிக் கொண்டிருக்கும் அவர்களில் சிலர் எப்பாடுபட்டேனும் தங்கள் உயிரை எந்த விலை கொடுத்தாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களும் ஆவார்கள். இவர்களிடம் போய் தர்மத்தைக் குறித்துப்பேசுவது சரியாக இராது. தர்மம் தலைகாக்கும் என்பதை இப்போது அவர்கள் நம்பப் போவதில்லை. தர்மத்தின் மேலுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். “யதோ தர்ம: ததோ ஜெய” என்ற சத்திய வாக்கை மறந்துவிட்டார்கள். அதன் பொருள் இப்போது இவர்களுக்கு அர்த்தமற்ற ஒன்றாகிவிட்டது.

ஒவ்வொருவர் கண்களிலும் மரணபயத்தைக் கண்டான் கிருஷ்ணன். அவன் சொந்தக் குடும்பத்தினரும் அவ்வாறே பயத்தோடு இருந்தனர். அவர்களை அறியாமல் அனைவரும் கிருஷ்ணனுக்குத் தங்கள் பாதுகாப்புத் தேவை என்பதை உணர்ந்தவர்கள் போல் நடந்து கொண்டனர். அவன் தந்தையும் அப்படி உறுதி அளிக்கும் எண்ணத்தைத் தம் பார்வையால் வெளிப்படுத்த, தேவகி அம்மாவோ தன் கவலையின் மூலம் அதைத் தெரிவித்தாள். பலராமனோ தான் மூத்தவன் என்ற எண்ணம் தோன்றும்படி நடந்து கொண்டான். அக்ரூரரும் தன் பற்றறுத்த நிலையைத் துறந்து நடந்து கொள்ள உத்தவன் கண்ணன் எங்கே சென்றாலும் வாய் திறவாமல் நிழல் போல் தொடர்ந்து கண்ணன் என்ன செய்தாலும் தான் எப்போதும் கண்ணன் பக்கமே என்பதைச் சொல்லாமல் சொன்னான். அனைவருமே கிருஷ்ணனுக்காகத் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாய்க் கூறாமல் கூறினர். கண்ணனுக்கு இதை எல்லாம் பார்த்து மேலும் துக்கம் பொங்கியது. தான் பயப்படுவதாக அன்றோ அனைவரும் நினைத்திருக்கின்றனர். அவர்கள் அல்லவோ பயப்படுகின்றனர். தைரியத்தை எனக்கு ஊட்டுவதாக நினைக்கின்றனரே! அவர்களுக்கு அன்றோ தேவை! எல்லாவற்றிற்கும் மேல் தர்மத்தின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையே. ம்ம்ம்ம்ம் அவர்கள் தான் என்ன செய்ய இயலும்! அவர்கள் கண்களில் நான் ஒரு குழந்தைப் பிள்ளைதான்; நாலாபக்கமும் ஆபத்துச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறுவன். என் மேல் இவர்கள் வைத்திருக்கும் அன்பை விட தர்மத்தை இவர்கள் நம்பினால்! நான் உள்ளூர வலுவுடனும், நம்பிக்கையுடனும் தைரியமாகவே இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டார்களானால், ஆஹா, நான் வேண்டுவதெல்லாம் இவர்கள் என் மேல் மட்டுமல்ல; எப்போதுமே தர்மத்தின் பாதைதான் வெற்றிக்கான வழி என்பதில் இவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும் என்பதே.

தர்மம் ஒன்றே ஜெயிக்கும். ஆனால் என்னுடைய நெருங்கிய உறவினர்களாய் இருந்தாலும் இவர்களுக்கு நான் எப்படிப் புரியவைப்பேன்! எவ்வாறு இந்த நம்பிக்கையை ஊட்டுவேன்! பிருந்தாவனத்தில் இருந்த போதே என்னுள் ஊறிய இந்த நம்பிக்கை ஊற்றை எந்நாளும் வற்றாத ஊற்றை எவ்வாறு காட்டுவேன்! இந்த நம்பிக்கை என்னும் நீரைப்பருகினாலே அவர்களின் பயம் என்னும் தாகவிடாய் தீரும் என எவ்வாறு சொல்லப் போகிறேன். இந்த தேவகி அம்மா யமுனையில் குளிக்கக் கூடப் போகாதே எனத் தடுக்கிறார் என்னை. அங்கே வரும் மற்ற யாதவர்களால் எனக்கு ஏதேனும் தொல்லை நேரப் போகிறதே எனப்பயப்படுகிறார். இந்த யாதவர்களுக்கு இருக்கும் ஆத்திரத்திலும், கோபத்திலும் என்னை ஏதேனும் சொல்லிவிடுவார்களோ, அல்லது ஏதேனும் செய்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார். ஆனால் நான் போவேன்; பீமன் இன்று ஹஸ்தினாபுரம் திரும்புகிறான். யமுனையில் அவனோடு நீச்சல் அடிக்க வேண்டும்; நீச்சலில் என்னோடு போட்டியிடப் போவதாய்ச் சொல்லி இருக்கிறான் பீமன். அதை இழக்க முடியுமா? பலராமன், உத்தவன், பீமன் பின் தொடரக் கிருஷ்ணன் யமுனைக்கரையை அடைந்தான்.

கோபத்திலும், ஆத்திரத்திலும், பீதியிலும் குழுக்களாய்ச் சேர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்த யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணனைக் கண்டதும் பேச்சை நிறுத்தினார்கள். கொல்லும் அமைதியில் அவர்கள் பார்வையில் தெரிந்த வெறுப்பும், கோபமும் கிருஷ்ணனைக் கொன்றது.

4 comments:

priya.r said...

இந்த அத்தியாயம் 100 ஐ படித்து விட்டேன் கீதாமா

கண்ணனின் மன ஓட்டங்களையும் அவன் தர்மத்தின் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும்
தர்மத்தை எல்லோரும் நம்ப வேண்டும் ; எவ்வளோ கஷ்டம் வந்தாலும் கடை பிடிக்க வேண்டும் என்பதையும்
இந்த பதிவின் வாயிலாக காண முடிந்தது.,

priya.r said...

பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்!
இடையன், வீரமிலாதவன், என்றவர் ஏச்சிற்கு நாணிலான்!
கண்ணனைக் காப்பாற்றுங்கள்!
கண்ணனைத் தொடரும் ஆபத்து!
கண்ணன் என் நண்பன்! கண்ணன் என் தோழன்!
கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்!
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!
எங்கிருந்தோ வந்தான்! இடைச்சாதி நான் என்றான்!
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!
கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்

இது போன்று ,பதிவுக்கு ஏற்ற ,பொருத்தமான தலைப்புகளாக ஒவ்வொரு பதிவுக்கும் வைத்து இருப்பதை இங்கே
குறிப்பிட்டு பராடுகளை தெரிவித்து கொள்கிறேன் கீதாமா

priya.r said...

மனம் ஒன்றி படிக்க வைத்ததற்கும் ,இந்த கதையின் போக்கில் ஒரு பயணம் போல உணர்வு கொடுத்தமைக்கும்

எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் கீதா மா !

நூறாவது பதிவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் !!

priya.r said...

சரியாக பதிவாகாமல் விடுபட்ட பதிவையும் சேர்த்தால்

இந்த பதிவு 101 வது பதிவு என்று இப்போது தான் தெரிந்தது கீதா மா :)