Thursday, November 10, 2011

பகைமை முற்றி முதிர்ந்திடுமட்டிலும் பார்த்திருப்பான்!

மிக்க கவனத்தோடு மலைகளின் பாறைகளோ, மரங்களின் முட்களோ குத்திவிடாமல் சென்றான் கண்ணன். சற்றுத் தூரம் போனதும் தன்னைத் தொடர்ந்து வந்தவனின் குதிரை தன் குதிரை படுத்துக்கிடக்கும் இடத்தினருகே நிற்கிறது என அப்போது எழுந்த சப்தங்களை வைத்து ஊகித்துக்கொண்டான். குதிரையின் சப்தம் மட்டுமா?? ஒரு பயங்கரமான குரல் ஆங்காரத்தோடு சாபம் ஒன்றை இடுவதும் காதில் விழுந்தது. ஆஹா! இது வேறு எவரும் இல்லை! காலயவனன் தான்! அவனா நம்மைப் பின் தொடர்ந்திருக்கிறான். இதோ, இது என்ன? இந்தப்பாதையில் யாரோ நடந்து வரும் சப்தம்! அவன் தான் நம்மைத் தொடர்கிறான். அங்கிருந்து வேறேதும் பாதை செல்லவில்லை அல்லவா? கிருஷ்ணன் வேகமாக ஓடினான். தன் உயிரைக்கைகளில் பிடித்துக்கொண்டு ஓடினான் என்று சொல்லலாம்.

மெல்ல மெல்ல சூரியோதயம் ஆகிக் கொண்டிருந்தது. பொன்னிறக் கதிர்கள் காட்டுக்குள்ளே ஊடுருவின. ஆங்காங்கே தங்கக் காசுகளை வாரி இறைத்தாற்போல் வெளிச்சத் துகள்கள். கண்ணன் ஓடுவதை நிறுத்திக்கொண்டு பெருமூச்சுவிட்ட வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னால் வருபவரை இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறது. அது காலயவனனே தான்! கண்ணனை அவனும் பார்த்துவிட்டான். கண்ணன் இருக்குமிடம் நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறான். தன்னுடைய உடலின் பாரம் போதாதெனத் தான் சுமந்து கொண்டிருந்த ஆயுதங்கலும் பாரமாக இருந்திருக்கவேண்டும். ஆகையால் பெரும்பாலான ஆயுதங்களைக் களைந்திருந்தான். உடல் கவசம், தலைக்கவசம், நீண்ட கத்தி போன்றவற்றைக் காணவில்ல்லை. இப்போது அவனுடன் போடும் சண்டை அதிகாரத்திற்காகவும், உடல் பலத்தை மட்டும் காட்டியும் தான். மற்றபடி ஆயுதச் சண்டை இல்லை. இந்தச் சண்டையில் காலயவனனை வெல்லவேண்டும்.

கிருஷ்ணன் தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா எனச் சுற்றும் முற்றும் ஆராய்ந்தான். சற்றுத் தொலைவில் ஒரு சிறிய குன்று இருப்பதையும், அதன் உச்சியில் குகைகள் போல் தெரிந்த இடத்திலிருந்து புகை வருவதையும் கண்ட கிருஷ்ணன் அங்கே யாரோ வசிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். தப்பிக்க வேண்டுமானால் இது ஒன்றே வழி. வேறு வழியில்லை என்பதையும் கண்டான். அந்தக்குன்றை நோக்கி வேகமாய் ஓடினான். குன்றின் அடிவாரத்தை அடைந்ததும் திரும்பிப் பார்த்தான். காலயவனன் களைத்துப் போயிருப்பதையும் இப்போது அவன் வேகம் குறைந்திருப்பதையும் கண்டு கொண்டான். குன்றின் மேல் ஏறத் தொடங்கிய கண்ணன் கிட்டத்தட்ட பாதிவழி ஓடினான் என்றே சொல்லலாம். ஒரு வளைவான பாதையும் காணப்பட்டது. அந்தப் பாதையில் சென்றவன் குன்றின் அடிவாரத்தை நோக்கியபோது காலயவனன் மேலே ஏற முயற்சித்ததையும், அப்போது தடையாக இருந்த கடைசி ஆயுதமான கத்தி ஒன்றையும் விட்டெறிந்ததைக் கண்டான். கிருஷ்ணன் சிரித்துக்கொண்டான். இப்போது இருவரும் சம பலமுள்ளவர்களாகி விட்டோம்.

ஆஹா, இப்போது யுத்தம் செய்வதெனில் மல்யுத்தம் ஒன்றுதான். ஆனால் இந்தப்பிசாசு மனிதனை நம்ப முடியாது. அவன் இடுப்பில் ஒரு சின்னக் கத்தி வைத்திருப்பானே! ஆகவே கவனமாகவே இருக்க வேண்டும். கண்ணனின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. காதுகளில் ஓவென்ற இரைச்சல் சப்தம்! இப்போது காலயவனன் கண்களில் பட்டால் அவனோடு மல்லுக்கட்ட கண்ணன் உடலில் தெம்பு இல்லை. சற்றாவது ஓய்வெடுக்க வேண்டும். மெல்லமெல்ல மேலே ஏறினான். குன்றின் மேலே உச்சிக்குச் சென்ற கண்ணன் அங்கே ஆறு குகைகள் இருப்பதைக்கண்டான். சிலவற்றின் எதிரே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. கண்ணன் ஓட்டத்தை நிறுத்தி மெல்ல நடக்க ஆரம்பித்தான். திரும்பிப் பார்க்க காலயவனன் குன்றின் மேல் பாதி தூரமே வந்திருப்பதைக் கண்டான். அடிமேல் அடியெடுத்து வைத்து நடுவில் இருந்த குகையை நோக்கிச் சென்றான் கண்ணன். எல்லாவற்றையும் விட அந்தக் குகை பெரிதாக இருந்தது. அதனுள்ளே உற்று நோக்கினான். உள்ளே ஒரு வயதான மனிதன் கிட்டத்தட்ட நிர்வாணமாகக் காட்சி அளித்தான். அவன் தலைமயிர் நீளமாக மஞ்சள் நிறத்தோடு காணப்பட்டது. அதே நிறத்தில் நீண்ட தாடியும் இடுப்பு வரை வந்திருந்தது. அந்த மனிதன் தூங்கிக் கொண்டிருந்தான். குகையின் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் இட்டிருந்த கட்டைகள் கரியாகி விட்டன.. தன் உடலைப் போர்த்திக்கொண்டிருந்த மஞ்சள் நிறச் சால்வையால் அந்த மனிதனுக்குக் கனிவோடு போர்த்திவிட்ட கண்ணன், சப்தமே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்து குகையின் ஓரத்திலிருந்த ஒரு தனியான இடத்திற்குச் சென்று இருளில் மறைந்து கொண்டான்.

தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு குகையின் வாசலில் காலயவனன் வரும் சப்தம் கேட்கிறதா எனக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான். நேரம் சென்றது. கண்ணனுக்கு இப்போது மூச்சு ஒழுங்காக வந்தது. இனிமேல் காலயவனன் வந்தால் ஒரு கை பார்த்துவிடலாம். கண்ணன் தயாரானான். அதற்குள்ளாக குகையின் வாசலில் யாரோ ஓட்டமாய் ஓடிவரும் சப்தம் கேட்டது. கண்ணன் குகையின் வாசலை உற்று நோக்கினான். வாசலில் தெரிந்த வெளிச்சம் ஒரு கணம் மறைந்து மறுகணம் வெளிப்பட்டது. யாரோ குகைக்குள்ளாக நுழைந்திருக்கின்றார்கள். அது காலயவனனாய்த் தான் இருக்கும் எனப் புரிந்து கொண்ட கண்ணன் அவனோடு நேருக்கு நேர் மல்யுத்தம் செய்யத் தயாரானான். ஆனால் காலயவனனோ படுத்து தூங்கிக் கொண்டிருந்த மனிதனை நோக்கிக் கூச்சலிட்டுக்கொண்டு ஓடினான்.

1 comment:

priya.r said...

கதை வேகமாக செண்டு கொண்டுஇருக்கிறது இப்போது அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற பதைபதைப்பு

படிக்கும் நம்மையும் தொட்றி கொள்கிறதே !!