Friday, July 19, 2013

விருகோதரன் வந்து விட்டான்!

உத்தவன் மறைந்திருந்த மரத்தினடியில் இருந்த ராக்ஷசர்கள் அனைவருக்கும் அந்த சப்தத்தின் பொருள் புரிந்திருந்தது.  ஆகவே உடனடியாக ஓட்டமாக ஓடி சப்தம் வந்த திக்கை நோக்கிச் சென்றார்கள்.  எத்தனை வேகமாகச் செல்லமுடியுமோ அத்தனை வேகமாகச் சென்றனர்.  அந்தத் திறந்த வெளியின் ஒரு பக்கத்திலிருந்து ஒரு பலம் பொருந்திய ராக்ஷசன் முன்னே வந்தான்.  அவன் அங்கே இருந்த அனைத்து ராக்ஷசர்களையும் விட உயரமாய், திடகாத்திரமாய் அதே சமயம் பருமனாகவும், வலிமைபொருந்தியவனாகவும் காணப்பட்டான்.  இப்படி ஒரு மனிதனை இன்று வரை உத்தவன் கண்டதில்லை.  ஒரு நீண்ட கன்னங்கரிய தாடி அவன் மார்பில் தவழ்ந்தது.  முற்றிலும் இறகுகளால் ஆனதொரு ஆடை அவன் உடலில் காணப்பட்டது.  ஏதோ மரத்தின் வேரின் அடிப்பாகம் போன்றதொரு ஆயுதம் நுனியில் உருண்டையாக கதை போன்ற தோற்றத்துடன் அவன் கையில் காணப்பட்டது.  தன் தோள்களில் அதைச் சார்த்தி இருந்தான்.

உத்தவன் கண்கள் இமைக்க மறந்தன.  அவன் இதயம் துடிக்க மறந்தது.  மிகப் பெரியதொரு பேராபத்திலிருந்து தப்பியதாக நினைத்த அவன் இப்போது அதைவிடப் பெரியதொரு ஆபத்தில் மாட்டிக் கொண்டானோ!  ம்ம்ம்ம் இவனைப்  பார்த்தால் சாதாரண மனிதனாகத் தோன்றவில்லை.  இந்தக் கொடூரமான ராக்ஷசர்களின் தலைவனாக, இல்லை, இல்லை அரசனாக இருக்க வேண்டும்.  அவர்களை விடக் கொடூரமாக இருப்பான் போலிருக்கிறது.  இவர்களை எல்லாம் ஒன்றுமில்லை எனச் சொல்லலாம் போல.  ஆனால், ஆனால் ஒரு வித்தியாசமும் இருக்கிறதே. இவனும் மற்ற ராக்ஷசர்களைப் போல சிவப்பும், வெள்ளையுமாக உடலெங்கும் வண்ணம் அடித்துக் கொண்டிருக்கிறான்.  அவர்களை விடவும் இன்னமும் ஆடம்பரமாகவும் இருக்கிறான்.  ஆனால் இவன் மூக்கில் இறகுகள் காணப்படவில்லை என்பதோடு மரச்சில்லுகளைத் தன் துருத்திய பற்களை விட நீளமாக உதடுகளில் பொருத்திக் கொள்ளவில்லை.  அதோடு இவர்களைப்போல மிருகம் போல் கைகளாலும், கால்களாலும் தவழ்ந்து வரவில்லை.  நம்மைப் போலவே நடக்கிறான்.

அந்த வெட்டவெளியில் நட்டநடுவில் வந்து நின்று கொண்ட அந்த ராக்ஷச அரசன் மீண்டும் ஓர் முறை சிங்கம் போல் கர்ஜித்தான்.  அதைக் கேட்டதுமே ஆங்காங்கே  காட்டின் புதர்களில் மறைந்து இருந்த அனைத்து ராக்ஷசர்களும் ஓடோடி வந்தனர்.  இது அவர்களுக்கு அழைப்புப் போலும்.  அந்த ராக்ஷச அரசன் தன் மூக்கைச் சுருக்கி எதையோ மோப்பம் பிடித்தான்.  ஏதோ வாசனையைக் கண்டு பிடித்துள்ளான். அப்போது அவன் அருகிலிருந்த ஒரு புதரிலிருந்து ஒரு ராக்ஷசச் சிறுவன் அவனை நோக்கி ஓடினான்.  தன் கைகளாலும், கால்களாலும் மிருகத்தைப்போல் தவழ்ந்து சென்ற அவனை உத்தவன் யாரென அறிந்து கொண்டான்.  நிகும்பன் தான் அவன்.  தன் அரசன் அருகே சென்ற நிகும்பன் எழுந்து நின்றுகொண்டு அந்த ராக்ஷச அரசன் கையைப் பிடித்து இழுத்த வண்ணம் உத்தவன் மறைந்திருக்கும் மரத்தைச் சுட்டிக் காட்டினான்.  "நன்றி கெட்ட ராக்ஷசன், பொல்லாதவனாக இருக்கிறானே!" உத்தவன் தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான்.

அந்த ராக்ஷசன் நிமிர்ந்து கூர்ந்து பார்த்தான்.  அந்த மாபெரும் உருவம், அதன் வலிமை மிக்க தோள்கள், ஒரு தூணைப் போன்ற வலிமையான கழுத்து, அந்த சாயல் எல்லாம் எங்கோ பார்த்த மாதிரி அறிந்த மாதிரி தோன்றியது உத்தவனுக்கு.  ஆனால் இவனை நாம் இதற்கு முன்னர் பார்த்தது கூட இல்லையே! ஆனால் அறிந்ததொரு மனிதனைப் போல் அல்லவோ காண்கிறான்!  உத்தவனைப் பார்த்ததுமே யாரெனப் புரிந்து கொண்ட அந்த ராக்ஷச அரசனின் முகமோ பெரியதொரு புன்னகையில் மலர்ந்து விகசித்தது.  இந்தச் சிரிப்பு..... இப்படி யாரோ சிரிப்பார்களே, எவராக இருக்கும்?? உத்தவன் யோசிக்கையிலேயே, தாங்க முடியாச் சிரிப்போடு, "அடே உத்தவா, கீழே இறங்குடா! அங்கே என்ன செய்கிறாய்? ஏ, குரங்கே!  குரங்கைப் போலவே மேலே உட்கார்ந்திருக்கிறாயா?"என்றது.  உத்தவனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை.  இது என்ன மொழி!  ஆஹா, நம் தாய்மொழியன்றோ!  நாம் பேசும் மொழியல்லவோ இது.  ஆரியர்களின் மொழியன்றோ!  நம் பிரியத்துக்கு உரிய, வணக்கத்துக்கு உரிய மொழியன்றோ இது!  உத்தவனின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.  அவன் இதயம் அதீத மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல் படபடவென அடித்துக் கொண்டது.

"அடே, கீழே இறங்குடா.  வா, வா, அங்கேயே குரங்கைப்போல் எத்தனை நேரம் அமர்ந்திருப்பாய்?" மீண்டும் அந்தக் குரல் சொல்லியது.  "ஓஹோ, உன்னால் இறங்க முடியாதோ!  மிக உயரத்தில் இருக்கிறாய் அல்லவா?  அப்போ ஒரு வேலை செய்.  நீ கீழே குதித்துவிடு.  பயப்படாதே. நீ கீழே குதிக்கையிலேயே நான் உன்னைப் பிடித்துவிடுவேன்.  உனக்கு அடிபடாமல் மெதுவாகப்பிடித்துக் கீழே இறக்குவேன்.  பயந்து கோழையைப்போல் அங்கே அமர்ந்திருக்காதே.  இறங்குடா கீழே.  நான் உன்னைச் சாப்பிட்டுவிட மாட்டேன்."  உத்தவன் தன்னை மரத்துடன் பிணைத்துக் கொண்டிருந்த உத்தரீயத்தைக் கிழித்துத் தன்னை விடுவித்துக் கொண்டு மரத்திலிருந்து கீழே இறங்கலானான்.  இறங்குகையிலேயே அவன், "ஹே கிருஷ்ணா, நீ எனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டாய்.  என்னையும் காப்பாற்றி விட்டாய்.  ஹே கிருஷ்ணா, முகுந்தா, முராரே!' என முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.

கீழே பீமன் அவனை இறங்கும்போதே பாதியில் தானே இறக்கிவிட்டுப் பின்னர் பலத்த சிரிப்போடு அவனை அப்படியே மேலே தூக்கி ஒரு சுழற்றுச் சுழற்றிக் கீழே இறக்கிக் கொண்டே, " அரசன் விருகோதரன் வந்து உன்னைக் காத்து இருக்கையில், நீ கிருஷ்ணனுக்கா நன்றி சொல்கிறாய்!  அடேய் நன்றிகெட்டவனே! இதுதானா எனக்கு விதித்தது! " என்று  சொல்லிவிட்டு மீண்டும் உத்தவனைத் தூக்கினான்.  உத்தவன் உணர்வுகளின் அழுத்தமும், தான் காப்பாற்றப்பட்டதைக் குறித்த திகைப்பும் இன்னமும் மறையாமல் மன அழுத்தம், பசி, சோர்வு  தாங்க முடியாமல் போனவனாக பீமனின் தோள்களிலேயே மயங்கிச் சரிந்தான்.  உத்தவன் மயக்கத்திலிருந்து எழுந்ததும், மீண்டும் பசியாலும், தாகத்தாலும், மயங்கிவிடுவான் போல் தோன்றியது.  அவனால் திடமாக நிற்கக் கூட முடியவில்லை.  கால்கள் அப்படி நடுங்கிக் கொண்டிருந்தன.  பீமன் அவனை அருகில் இருந்த ஒரு ஊற்றுக்கு அழைத்துச் சென்று நீர் அருந்த வைத்தான். அதற்குள்ளாக நிகும்பன் எங்கிருந்தோ சில பழங்களைப் பறித்து வந்தான்.  அதை உத்தவனைச் சாப்பிட வைத்து, "இப்போது நீ நிம்மதியாய்த் தூங்கு.  இவர்களோடு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது.  நான் இவர்களைக் கவனித்துக் கொள்கிறேன்." என்று ஆறுதல் சொன்னான்.

உத்தவன் நிம்மதியாகத் தூங்கினான்.  விழித்து எழுந்த உத்தவனுக்கு, அங்கே கண்ட காட்சி திகைப்பை அளித்தது.  ஆம், பீமன் அந்த ராக்ஷசர்களின் எவர் அந்த இரு சிறைக்கைதிகளை நெருப்பிலிட்டுத் தின்றார்களோ அவர்களை எல்லாம் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தான்.  அதைத் தடுக்காமல் அக்கம்பக்கம் புதர்களில் ஒளிந்து மறைந்திருந்தவர்களுக்கும் தண்டனை கிடைத்தது.  உத்தவன் பீமன் அருகில் சென்றபோது அவன், "இந்த ராக்ஷசர்களுக்கு நர மாமிசம் சாப்பிடாதீர்கள் என்றால் புரியவில்லை. அவர்கள் சாப்பிட்டதை வாந்தி எடுக்க வைத்தால் ஒரு வேளை இனி சாப்பிடமாட்டார்களோ என்னவோ!" என்று கூறிவிட்டுச் சிரித்தான்.  உத்தவன் உடல் மீண்டும், அந்தப் பழைய நிகழ்ச்சிகளின் காட்சிகள் கண் முன்னே தெரிந்ததால் நடுங்கியது.   பிடிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை கொடுத்து முடிந்ததும், அந்த தண்டனையை அவர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்பதைப் பார்க்கக் காவல் போடப்பட்டது. பின்னர் பீமன் உத்தவனை அழைத்துக் கொண்டு காட்டின் உள்பகுதிக்குச் சென்றான். உத்தவன் கைகளோடு தன் கைகளையும் கோர்த்துக் கொண்டு நிகும்பனும் அவர்களோடு சென்றான். ஓரளவுக்கு உடலில் பலம் வந்த உத்தவன் தன் அத்தை மகனிடம் ஏற்பட்டிருக்கும் விசித்திரமான மாறுதல்களை உற்றுக் கவனித்தான். 

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அப்பாடா, ஒருவழியாக உத்தவன் பீமனால் காப்பாற்றப்பட்டு விட்டான்.

படிக்கவே நிம்மதியாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

தொடரட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா...! உத்தவனுக்கு நிம்மதி கிடைத்தது...

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா...! உத்தவனுக்கு நிம்மதி கிடைத்தது...

ஸ்ரீராம். said...

ஒரு ஹீரோவின் என்ட்ரி போல பீமன் வருகை.