Monday, December 23, 2013

கண்ணனின் தர்மசங்கடம்!

கண்ணன் இப்போது ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறான்.  துவாரகைக்குத் திரும்பி இருந்த கண்ணன் யாதவர்களின் நிலையைக் கண்டு அமைதியை இழந்தான்.  அவன் இல்லாத இந்த நாட்களில் அவர்கள் சோம்பலை வளர்த்துக் கொண்டதோடு ஆட்டம், பாட்டம் உல்லாசங்களிலேயே ஈடுபட்டு நாட்களைக் கழித்திருக்கின்றனர்.  ஏனெனில் அக்கம்பக்கத்து அரசர்கள் அனைவருமே நட்புப் பாராட்டி வந்தனர்.   வலிமையுள்ள அரசர்கள் எவரும் இப்போது இல்லை.  போர், யுத்தம் என்ற பேச்சுக்கே இடமும் இல்லை.  ஆகவே கஷ்டமும், சங்கடங்களும், வேலைகளும் நிறைந்த சிரமமான கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு இப்போது அவசியம் இல்லை.  அவரவர் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர்.  இதற்குத் தான் வடநாடு சென்றதே முக்கியக் காரணம் எனக் கண்ணன் நினைத்தான்.   தன் மேல் தவறு இருப்பதாகவும் நினைத்தான். வடக்குப் பக்கம் யாத்திரை செல்கையில் குறிப்பிட்ட யாதவர்களின் வீரத்தையும், வலுவையும் வெளிப்படையாய்க் காட்டா வண்ணம் போட்டிருந்த இரும்புத்திரையைக்  கழற்றிவிட்டே சென்றான்.  அவனுடன் நெருங்கிப் பழகியதில் யாதவர்கள் தங்களுக்கு என ஒரு அடையாளத்தைப் பெற்றிருக்கின்றனர்.  இவ்வளவு நாட்கள் அவன் உழைப்புக்கும், அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இது ஒன்றே மிச்சம்.  இவர்களில் முக்கியமானவனாக உத்தவன் இருந்து வருகிறான்.  விசுவாசம் காட்டுவதிலோ, வீரத்திலோ, எந்த வேலைக்கும் முன் வந்து செய்வதிலோ அவனுக்கு ஈடு இணை இல்லை.   நம்பிக்கைக்கு உரியவனும் கூட;  அதோடு தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்வதிலும் ஈடுபாடு கொண்டவன்.  அடுத்து சாத்யகி.

சாத்யகிக்கும் விசுவாசத்துக்குப் பஞ்சமில்லை.  வீரம் மிகுந்தவனே.  தைரியமானவனும் கூட.  ஆர்வமும், ஆவலும் நிரம்பப் பெற்றவன்.  ஆனால் பொறுமை என்பது கிடையாது.  எல்லாவற்றுக்கும் அவசரப் படுகிறான்.  கிருதவர்மனோ திடமானவன்.  உடல்வலுவில் மட்டுமில்லாமல் மனத்தளவிலும் திடம் உள்ளவன்.  வீரர்களைச் செலுத்துவதில் அவனுக்குத் தனிப்பட்டதொரு  அரிய சக்தி இருக்கிறது என்னமோ உண்மை தான். சாருதேஷ்னா என்பவனோ, கெட்டிக்காரன், அதி விரைவில் எல்லாவற்றையும் புரிந்து கொள்வான்.  சமயோசிதமாய்ச் சிந்திக்கும் அறிவு உள்ளவன்.  அவனைத் தான் இப்போது எல்லை நாடுகளின் ஒன்றான அக்ரவனத்திற்கு அரசனாக நியமித்திருக்கிறது.  ஷால்வனையும், செகிதனாவையும் அவன் மேற்பார்வை பார்த்துக் கொள்வான்.  செகிதனாவுக்கு மீண்டும் புஷ்கரத்தை வாங்கிக் கொடுத்தாக வேண்டும்.   செளராஷ்டிரத்திலேயே விட்டுச் சென்ற மற்ற யாதவ அதிரதர்கள் அனைவருமே யுத்தம் செய்வதிலும், ரதத்தில் இருந்து போர் புரிவதிலும் நிகரற்றவர்கள்.  அதில் எந்த சந்தேகமும் இல்லை.  அவர்களுக்குக் கண்ணனிடம் ஈடுபாடு உண்டு தான்.  அவன் தலைமையையும் ஏற்கின்றார்கள் தான்.  ஆனால் அவர்களுக்குள்ளேயே வலு இல்லாமல் இருக்கின்றனர்.   தங்கள் ஆற்றலைப் பரிமளிக்கச் செய்யும் கலை அவர்களுக்குக் கைவரவில்லை.  அதிலும் கண்ணன் இப்போது போட்டிருக்கும் திட்டம் குறித்து அவர்கள் எதுவும் அறியமாட்டார்கள்.  இவர்கள் அனைவருமே கண்ணன் இல்லாத இந்த நாட்களில் பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்திப் பழகிவிட்டனர்.

அதோடு யாதவர்களுக்கு இன்னும் மேலும் மேலும் செல்வம் குவிந்தது. அவர்கள் வாழ்க்கைமுறையை எளிதாக்கி விட்டது.  அவர்களின் கால்நடைச் செல்வங்கள் பெருகிவிட்டன.  பூமித்தாயோ அவர்கள் சொன்னபடி, சொன்னதுக்கு மேலே அள்ளிக் கொடுத்தாள்.  முக்கியமான மூன்று துறைமுகங்கள் ஆன துவாரகை, பிரபாச க்ஷேத்திரம், சபர் கச் ஆகியவற்றில் வெளிநாட்டுப் பண்டங்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.  தங்கமும், வைரமும், முத்துக்களும், விலைமதிக்க முடியா ரத்தினங்களும், சந்தனக் கட்டைகளும் குவிகின்றன.   இத்தனை செழுமையும் சேர்ந்து ஆடம்பர வாழ்வைக் காட்டிவிட்டது.  பகட்டும் போலி ஆடம்பரமும் அதிகம் ஆகிவிட்டது.  ஏற்கெனவே யாதவர்களுக்குக் குடியும், சூதாட்டமும் வாழ்க்கையின் முக்கியமான ஒரு நிகழ்வாக இருந்தது.  இப்போதோ, இத்தனை பெரும்பணமும், பகட்டான வாழ்க்கையும் சேர்ந்து அவர்களில் இளைஞர்கள் கூட இந்தப் பகட்டுக்கு முழு அடிமையாகி இருந்தனர்..

இது ஒரு முக்கியமான அதே சமயம் கவலைப்படக் கூடிய சூழ்நிலை எனக் கண்ணன் நினைத்தான்.  இந்த யாதவர்களை மனதில் வைத்தே அவன் வடக்கே சென்றபோது எல்லாத் திட்டங்களையும் போட்டிருந்தான்.   போரோ, அமைதியோ யாதவர்கள் அதில் உறுதியாக நிற்பார்கள்; தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.  தர்மம் நிலைநாட்டப்படும்.  என்றெல்லாம் நம்பினான்.  ஆனால் செல்வமும், அதனால் விளைந்த இந்த சுகமும் ஒரு பெரிய புயல் போல் யாதவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டதே!  கொடிய தொற்று நோய் பரவுவது போல இந்த சுக வாழ்க்கை அவர்களிடையே பரவி உள்ளதே!   அவர்களை செளராஷ்டிரத்துக்கு அழைத்து வந்தபோது அவர்களிடம் இருந்த ஆர்வமும், உழைப்பும், வீரமும், உறுதியும் இந்த சுக வாழ்க்கைக்கு முன்னர் அடிபட்டுப்போய்விட்டது.  மீண்டும் இவர்களை  வலுவானவர்களாக மாற்றியாக வேண்டும்.  சாத்யகியும், கிருதவர்மனும் கிருஷ்ணனோடு ஒத்துழைக்கத் தயாராக இருந்தனர்.   வடக்கே செல்வதற்கு முன்னர் கடற்கரைக்கு தினம் சென்று உடற்பயிற்சியும், ஆயுதப் பயிற்சியும் எடுத்து வந்ததைப் போல இப்போதும் அவர்கள் இருவரும் தினம் கடற்கரை சென்று ஆயுதப் பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்தனர்.   ஆனால் இதைப் பார்த்துக் கூட இளைஞர்களான யாதவர்கள் கூட பயிற்சியில் பங்கேற்க வரவில்லை.  தனித்தே இருந்தனர்.

அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை இந்த நிகழ்வுகள் கெடுக்கின்றன என்பதைப் போல் அவர்கள் கோபத்துடன் பார்த்தனர்.  சாத்யகியும், கிருதவர்மனும் அவர்களைப் பார்த்துச் சீறிக் கோபம் கொண்டதைக் கூட லக்ஷியம் செய்யவில்லை.  செடிகளுக்குப் பிடிக்கும் கொடிய நோயைப் போல அவர்களின் வீரத்துக்கும், உழைப்புக்கும் இப்போதும் சோம்பல் என்னும் கொடிய நோய் பீடித்திருந்தது.  இந்த சுக வாழ்க்கையை விட்டு அவர்கள் வெளிவரத் தயாராக இல்லை.   எவ்வாறு  இதிலிருந்து மீள்வது? கிருஷ்ணனுக்குத் தன் திட்டங்கள் அனைத்தும் நாசம் ஆவதாகவும், யாதவர்களின் குலத்துக்கே ஒரு மோசமான கிரஹணம் பீடித்திருப்பதாகவும் தோன்றியது.   யோசித்த கிருஷ்ணன் முதலில் பெரியவர்களிடம் இதைக் குறித்துப் பேசினான்.  உக்ரசேனருக்கு வயதாகிவிட்டதால் முன்னைப் போல் அவரால் இயங்க முடியவில்லை.  வசுதேவர், கண்ணனின் தந்தை, அவர் எப்போதும் போல் சாந்தமாகவே இருந்தார்.   அக்ரூரரும் தன்னுடைய துறவித் தன்மையிலிருந்து மாறவே இல்லை.  கிருஷ்ணன் இவர்களிடம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும் ஆபத்துக்களைக் குறித்து விரிவாகப் பேசினான்.   செகிதனாவை புஷ்கரத்திலிருந்து துரியோதனன் விரட்டி விட்டான்.  துருபதன் மகள் திரெளபதிக்கு  ஜராசந்தனின் பேரன் மேகசந்தியுடன் திருமணம் நடக்கச் செய்யும் மறைமுக ஏற்பாடுகள்,  அதன் மூலம் துரோணரை அடியோடு நீக்க நடக்கும் ஏற்பாடுகள் என அனைத்தையும் குறித்துக் கிருஷ்ணன் எடுத்துச் சொன்னான்.

இப்போது மத்ராவிலோ யாதவர்கள் என எவரும் இல்லை;  அதோடு துரியோதனன் புஷ்கரத்தைத் திரும்பக் கொடுக்க மறுக்கிறான்.  இது தொடர்ந்தால் சாருதேஷ்னா அக்ரவனத்தில் தனித்து விடப்படுவான். ஷால்வனை நம் வீரத்தாலும், அதிகாரத்தாலும் இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்தோம்.  அவனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவன் போர் தொடுக்க ஆயத்தம் ஆகிவிடுவான்.  எல்லைப் பிராந்தியங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வர வேண்டும்.  பாதுகாக்கப்படவேண்டும்.  தன்னம்பிக்கையும், மன உறுதியும் மட்டும் இங்கே போதாது.  தக்க நபர்களால் எல்லைகள் காக்கப்பட வேண்டும். இதை எல்லாம் கேட்டுக் கொண்டார் உக்ரசேனர்.   உக்ரசேனர் உடலிலோ, மனதிலோ வலுவே இல்லை.  வழக்கம் போல எல்லையற்ற பிரியத்துடனே கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டுக் கொண்டார்.  பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அவர் வழக்கம்போல் தானாகத் தனியே எந்த முடிவும் எடுக்க முடியாதவராகப் பேசாமல் இருந்தார்.  ராஜசபையைக் கூட்டி தக்கச் சான்றோர்களிடம் விவாதித்து முடிவெடுக்க விரும்பினார்.  வசுதேவருக்கும், அக்ரூரருக்கும் கிருஷ்ணனிடம் அபரிமிதமான நம்பிக்கை இருந்தது.  என்றாலும் முழு ஆரியவர்த்தத்தைக் கட்டுப்படுத்தும்படியான இந்த நடவடிக்கைக்கு அவர்கள் சம்மதப்படவில்லை. அதை விரும்பவும் இல்லை.  மிகவும் அபாயமான ஒரு நடவடிக்கையாக நினைத்தார்கள்.  தங்கள் வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாக ஆகிவிடும் என்று அஞ்சினார்கள்.  ஏற்கெனவே பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தாயிற்று.  இப்போது தான் சுகம் என்பதையே காண்கின்றனர். எல்லாக் கஷ்டங்களையும் நல்லவிதமாக எதிர்கொண்டு விட்டார்கள். இப்போது போரோ, ஆயுதங்களோ எடுக்காமல் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது.  பட்டதெல்லாம் போதும்;  எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு அமைதியாக வாழலாம் என்பதே அவர்கள் கருத்து.



8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கருத்து சரி தான்...

தொடர வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

// தங்கள் வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாக ஆகிவிடும் என்று அஞ்சினார்கள். ஏற்கெனவே பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தாயிற்று. இப்போது தான் சுகம் என்பதையே காண்கின்றனர். எல்லாக் கஷ்டங்களையும் நல்லவிதமாக எதிர்கொண்டு விட்டார்கள். இப்போது போரோ, ஆயுதங்களோ எடுக்காமல் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது. பட்டதெல்லாம் போதும்; எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு அமைதியாக வாழலாம் என்பதே அவர்கள் கருத்து.//

கருத்து நல்லாத்தான் இருக்கு. ஆனால் முடியுமா?

ஸ்ரீராம். said...

துவாரகைக்கு வந்த சோதனை!

இராய செல்லப்பா said...

வெற்றி என்பது ஒரு மனநிலை. அதை யாதவர்கள் கைக்கொள்ள மறந்தார்கள். வெளியிலிருந்து என்னதான் ஆதரவு கொடுத்தாலும், தான் முன்னுக்குவரவேண்டும் என்ற எண்ணம் ஒருவனிடம் இல்லாவிடில், அவனை எப்படி முன்னேற்றுவது? இதுவே கண்ணனின் முன்பிருந்த சவால்.

sambasivam6geetha said...

நன்றி டிடி.

sambasivam6geetha said...

வைகோ சார், கண்ணனால் முடியாதா?

sambasivam6geetha said...

ஶ்ரீராம்,சோதனைகளைக் கடந்தே சாதனை!

sambasivam6geetha said...

வாங்க செல்லப்பா யக்ஞசாமி அவர்களே, முதல்வரவு?? நன்றி. கருத்துக்கும் நன்றி. கண்ணன் சவாலில் ஜெயிப்பான்.