Wednesday, December 4, 2013

வியாசர் வந்து விட்டார்!

அந்த நாளும் வந்தது.  ராக்ஷசவர்த்தத்தின் முக்கியமான ராக்ஷசர்கள் மற்றும் சில பெண் ராக்ஷசிகள், குழந்தைகள் அனைவரும் நிகும்பனுடைய தலைமையில் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு எல்லைப் பகுதியை நோக்கிச் சென்றனர்.  அவர்களுடன் பீமனும் சென்றான்.  அன்றிரவு எல்லைப் பகுதியில் தங்கிய அவர்கள் மறுநாள் அதிகாலையிலேயே 25 ராக்ஷசர்கள்   பீமனின் தலைமையில் அந்தக் கரடு முரடான, முட்கள் அடர்ந்து, பாறைகளாய்க் காணப்பட்ட எல்லையைக் கடந்து மறுபக்கம் சென்றனர். அந்தப் பக்கம் சென்று தங்களைக் காண வரும் வியாசரை எதிர்கொண்டு வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதே பீமனின் நோக்கம்.  அது தான் முறையானது என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

 எல்லைப் பகுதியின் மறுபக்கம் சென்றவர்களை சிகுரி நாகன் வரவேற்றான்.  அதோடு காலை அநுஷ்டானங்கள் முடிந்ததும் வியாசர் அவர்களைக் காண்பார் என்றும் தெரிவித்தான்.  உண்மையில் அந்த யாகங்கள், யக்ஞங்களைக் காண வேண்டி பீமன் ஆவலுடன் காத்திருந்தான்.  எல்லைப் பகுதி கிராமம் ஆன நாகர்களின் லஹூரியாவுக்கு சிகுரி நாகன் அவர்களை அழைத்துச் சென்றான். நாகர்களின் வாழ்விலும் சரி, ராக்ஷசர்களின் வாழ்விலும் சரி இத்தனை ராக்ஷசர்கள் ஒரு சேர நாகர்களின் நகரத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது இது தான் முதல் முறையாகும்.  அதுவும் இந்தப் பகல் நேரத்தில், பகல் வெளிச்சத்தில் இவ்வளவு ராக்ஷசர்கள் எவ்வித அச்சமும் இன்றி நாகர்களின் கிராமத்தை நோக்கிப் பயணித்தனர்.

இவ்வளவு ராக்ஷசர்களை எதிர்பார்க்காத நாகர் குடிமக்கள் முதலில் கொஞ்சம் பயப்படவே செய்தனர்.  ஆனால் ராக்ஷசர்கள் தங்களுக்கு எவ்வித அச்சத்தையும் தோற்றுவிக்காமல், தங்களில் எவரையும் தொந்திரவும் செய்யாமல் அவர்கள் பாட்டுப் போய்க் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தாலும், பின்னர் அதன் காரணம்  என்ன என அறியும் ஆவல் மீதூர்ந்தது.  ராக்ஷசர்களின் வித்தியாசமான உடை அலங்காரம், தலை அலங்காரம் எல்லாமும் நாகர்களின் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது.  அவர்கள் கும்பல் கும்பலாக இவர்களைப் பின் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தனர்.   அவ்வப்போது அவர்களைப் பார்த்து பீமன் கேலி செய்யும் விதத்தில் விளையாட்டாகப் பயமுறுத்தி உறுமிப் பின்னர் அவர்களோடு சேர்ந்து ஒரு குழந்தை போல் சிரித்து அவர்களை உற்சாகப் படுத்திக் கொண்டு சென்றான். அவர்கள் வியாசர் இருக்குமிடத்தை அடைந்ததும், அங்கே வியாசர்,ஜைமினி முதலானோர் அனைத்து அநுஷ்டானங்களையும் முடிக்கும் விதமாகக் கடைசி மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.  அவர்கள் முடித்து விட்டதை அறிந்ததுமே பீமன் அவர் கால்களில் விழுந்து அவர் காலடி மண்ணைத் திருநீறு போல் தன் நெற்றியில் அணிந்து கொண்டான். வியாசரோ மிகவும் அன்புடன் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

மற்ற ராக்ஷசர்களுக்கோ தங்கள் மன்னனின் பாட்டனாருக்கு எவ்விதம் மரியாதை செய்ய வேண்டும் என்று புரியவில்லை.  பீமன் கீழே விழுந்து வணங்கியதைக் கண்ட  அவர்கள் தாங்களும் அவ்விதமே செய்ய நினைத்துத் தங்கள் ஆடை, அணிகளோடு சிரமப்பட்டுக் கீழே விழுந்து அவரை வணங்க அது சுற்றியுள்ள நாகர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.  ஆனாலும் வியாசர் தங்கள் ஒவ்வொருவரையும் தலையைத் தொட்டு ஆசீர்வதித்ததையும், ராக்ஷசர்களின் மொழியில் கொச்சையாகப்பேசி நலம் விசாரித்ததையும் கண்டு அவர்களுக்கு மனம் மகிழ்ந்தது.  பின்னர் வழக்கமான சடங்கு ஆரம்பித்தது . ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய பானையில் பால் அளிக்கப்பட்டது.  அது பசுவின் பாலாகவும் இருக்கலாம்.  ஆட்டுப் பாலாகவும் இருக்கலாம்.  ஏனெனில் அங்கே பசுக்கள் அபூர்வமாகவே காணப்பட்டன.  ராக்ஷசர்கள் அது வரை பாலையே குடித்து அறியாதவர்கள் ஆதலால், அந்தப்பாலையும், பாத்திரத்தையும் சந்தேகமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  இதை விட அந்த ஆடுகளை நம்மிடம் கொடுத்திருந்தால் அவற்றின் தோலை அவை உயிரோடு இருக்கும்போதே நம் கைகளாலேயே உரித்து அதன் மாமிசத்தை உண்ணலாமே என்ற எண்ணம் அவர்களிடையே எழுந்தது.

அப்போது ஒவ்வொருவரும் அந்தப் பானையோடு பாலை வியாசரிடம் எடுத்துச் செல்ல, அருகிலிருந்த ஜைமினி வைத்திருந்த ஒரு மூட்டையிலிருந்து ஒரு இலையை எடுத்து அனைவரின் பாலிலும் வியாசர் போட்டுக் கொண்டிருந்தார்.  பின்னர் அனைவரையும் ஆசீர்வதித்து அனுப்பினார். ராக்ஷசர்களுக்கு அந்தப்பாலைக் குடிக்கலாமா வேண்டாமா என்பதில் மிகுந்த சந்தேகம் இருந்தாலும் தங்கள் மன்னனும் அப்படியே செய்வதைக் கண்டு அவர்களும் வேறு வழியில்லாமல் அதையே பின்பற்றினர்.  வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.  ஒவ்வொருவராகத் தங்கள் வணக்கத்தை வியாசரிடம் வரிசையாகத் தெரிவித்து வருகையில் அங்கே திடீரென ஒரு சந்தோஷக் கூச்சல்.


மிகவும் வியாதியஸ்தர்களாக இருந்தவர்களிடமிருந்தும், ஊனமுற்றவர்களிடமிருந்ந்தும் அந்தக் கூச்சல் எழுந்தது.  தங்கள் துன்பம் தீர்ந்துவிட்டதாகக் கூறி சந்தோஷக் கூச்சலிட்டனர்.  ராக்ஷசர்களுக்கு இப்போதும் என்ன செய்வதெனத் தெரியவில்லை.  ஆனாலும் அவர்களுக்கு இது ஏதோ மந்திர, தந்திரவித்தை நடக்கிறதோ என்ற எண்ணமும் இருந்தது.  அந்த சந்தேகத்துடனேயே அவர்கள் மற்றவர்களைப் பின்பற்றி அப்படியே தாங்களும் நடந்து கொண்டனர்.  வியாசர் அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களில் சிலருக்குத் தங்கள் உபாதை திடீரெனக் குறைந்ததை உணர முடிந்தது.  அப்படி உணர்ந்தவர்கள் அங்கிருக்கும் அனைவரும் அதிசயிக்கும் வகையில் தங்கள் பிரபலமான  போர் நடனத்தை ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

இந்தச் சடங்குகள் எல்லாம் முடிந்ததும், வியாசர், ஜைமினி, மற்றும் அவர்களின் மாணாக்கர்கள் அனைவருமே நார்களாலும், இலைக்கொடிகளாலும் கட்டப்பட்ட கூண்டுகளில் ஏறி அமர்ந்தனர். ஒவ்வொரு கூண்டும் நான்கு முனைகளிலும் கம்புகளோடு சேர்த்துக் கட்டப்பட்டு நான்கு ராக்ஷசர்களால் சுமந்து வரப்பட்டது.  அந்தப் பாறையான பகுதிகளில், நடக்கக் கூடக் கஷ்டப்படும் இடங்களில் எல்லாம் வெகு எளிதாக அந்த ராக்ஷசர்கள் அவர்களைச் சுமந்து கொண்டு கவனமாக நடந்தனர்.  வியாசருக்குத் தான் இப்படி மேலே ஆகாயத்துக்கும், கீழே பூமிக்கும் இடையில் கூண்டில் அடைபட்டுக் கொண்டு பிரயாணம் செய்வது முதல் அநுபவம்.  அதிலும் சில இடங்களில் பாறைகளை ஒரே தாண்டாகத் தாண்டினார்கள் அந்த ராக்ஷசர்கள்.  ராக்ஷசர்கள் அனைவருக்கும் ஒரு எண்ணம், பாறைகளைத் தாண்டுகையில் வியாசர் பயந்து நடுங்கிப்போய்விடுவார்;  இந்த நீண்ட தாடியுள்ள பாட்டனாருக்கு பயமாய் இருந்தால் என்ன செய்வது எனக் கவலைப்பட்டனர்.  ஆனால் வியாசரோ அதை எல்லாம் கவனிக்கவே இல்லை.  அந்த ராக்ஷசர்களுக்கு உற்சாகம் ஊட்டும் சொற்களை அவர்கள் மொழியில் சொல்லிக் கொண்டு வந்தார். “நல்லது அப்பனே, நன்றாகத் தாண்டுகிறாயே, கவனமாகச் செல்கிறாயே!” என்றெல்லாம் பாராட்டிக் கொண்டும் வந்தார்.

பாறைகள் மேல் ஏறி, இறங்கித் தாண்டி, சரிவில் இறங்கிப் பின்னர் அங்கிருந்த நீண்ட நீர்க்கரை ஓரமாகச் சென்றனர்.  சற்று நேரத்தில் குடியிருப்புகளை நெருங்கிவிட்டனர்.  கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்க யுதிஷ்டிரன், அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் ஆகிய நால்வரும் தங்கள் அன்னை குந்தியோடு ஓடோடி வந்தனர்.  அனைவருமே வியாசரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.  தன் கூண்டிலிருந்து வெளியே வந்த வியாசர் தன் அருமைப் பேரன்களை பாசத்தோடு கட்டி அணைத்துக் கொண்டு உச்சி மோந்து ஆசீர்வதித்தார்.  குந்தியையும் தலையைத் தொட்டு ஆசிகள் வழங்கினார்.


 ஹிடும்பியும், மற்ற ராக்ஷசர்களும் உள்ளூர எழுந்த கோபத்துடன் சற்றுத் தள்ளியே நின்றவண்ணம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  வியாசர் அவர்களைப் பார்த்துவிட்டார்.  உடனே தன் கைகளால் அவர்களை அழைத்த வண்ணம் குந்தியைப் பார்த்து, “குந்தி, மருமகள் எங்கே இருக்கிறாள்?  யார் அவள்?  ஓ, இவள் தானா?  இது தான் பீமனின் மகனும் என்  பேரனுமா?  “ என்று கேட்டார்.  பின்னர் தாமே அவர்கள் அருகே நெருங்கினார்.  ஹிடும்பி தன் தோள்களில் தன் அருமை மகன் கடோத்கஜனைச் சுமந்த வண்ணம், தன் கணவனும், அவன் சகோதரர்களும் இந்த வித்தியாசமான கிழவரை வரவேற்ற முறையை ஆச்சரியம் ததும்பும் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள்.  இப்படி ஒரு வரவேற்பை அவள் இன்று வரை கண்டதில்லை.

இப்படி எல்லாம் கீழே விழுந்து வணங்கி வரவேற்பதை சாமானியமாக மனிதர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாகரிகப் போக்கு என்பதை அவளால் ஏற்க முடியவில்லை.  அவள் இன்று வரை தங்கள் உயிருக்குப் போராடும் விருந்தாளியைத் தான் பார்த்திருக்கிறாள்.  அவர்களைக் கொல்லத் தயாராக இருக்கும் ராக்ஷசர்களிடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளப்போராடும் அப்பாவி மக்களையே பார்த்திருக்கிறாள்.  அப்போது பீமன் அவள் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான். “பாட்டனாரின் கால்களில் விழுந்து வணங்கு!”  அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.  என்றாலும் தன் முழங்கால்களை மடித்துக் கொண்டு கீழே விழுந்து வணங்க யத்தனித்தவள் அப்படியே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்தாள்.  பீமன் கத்தினான்; கர்ஜித்தான்.  ஆனால் வியாசர் எதுவுமே நடவாதது போல் கீழே குனிந்து ஹிடும்பியின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்துப் பின்னர் அவள் கைகளில் இருந்த கடோத்கஜனை மிகவும் அன்போடும் பிரியத்தோடும் தூக்கிக் கொண்டார்.

குழந்தையா அது?  ஆறு மாசத்துக்கு ஒரு ராக்ஷசன் போலவே இருந்தான் கடோத்கஜன்.  வியாசரைப் போலவே கருநிறம், மயிரே இல்லாத தலை, வட்டமான அதே சமயம் பிரகாசமான பெரிய விழிகள், கொழுத்த கைகள், கால்கள், அந்தக் கால்களால் வியாசரை உதைத்த வண்ணம் தன் பலத்தைக் காட்டிய வண்ணம் விளையாடினான் கடோத்கஜன்.  குழந்தையைத் தன் தோள்களில் தூக்கிக் கொண்ட வியாசர் அவனை அப்படியே சுற்றி விளையாட்டுக் காட்டினார். மேலே தூக்கிக் காட்டிச் சிரித்தார்.  முதலில் கொஞ்சம் யோசித்த வண்ணம் அவர் முகத்தையே பார்த்த கடோத்கஜன் பின்னர் சிரிக்க ஆரம்பித்தான்.


 பின்னர் சற்று நேரம் அவர் முகத்தையே உற்றுப் பார்த்த வண்ணம் இருந்தவன் நீண்ட அந்த வெள்ளைத் தாடியைத் தன் கரங்களால் பிடித்து இழுத்ததோடு அல்லாமல் தாடியில் பாதியைத் தன் வாயில் இட்டுச் சுவைத்தான்.  சுற்றி இருந்த அனைவரும் இதைப் பார்த்து ஆனந்தித்தனர்.  பின்னர் வியாசர், ஹிடும்பியைப் பார்த்து, “ஹிடும்பி, இவ்வுலகிலேயே நீ தான் மிகவும் பாக்கியசாலி.  அதிர்ஷ்டம் செய்தவள். பரத குல வம்சத்துக்கு ஒரு நல்ல வாரிசை நீ கொடுத்துவிட்டாய்.  “ என்று சொல்லிக் கொண்டே தன் கைகளால்  பேரனின் மயிரே இல்லாத அந்த வழுக்கைத் தலையை அன்போடு தடவிக் கொடுத்தார்.  குழந்தை அந்தத் தடவலிலும், அவரின் தாடியைப் பிடித்து இழுப்பதிலும் மகிழ்ச்சி அடைந்து சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான்.
சுற்றி இருந்த அனைவரும்   இந்தக் காட்சியைக் கண்டு  மெய்ம்மறந்து நின்றனர்.  தன்னுடைய கொள்ளுப் பாட்டனரோடு இவ்வளவு விளையாடி ஆனந்திக்கும் கடோத்கஜன் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டினான்.


 சகோதரர்கள் ஐவருக்கும் வியாசரின் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வித மாறுதலும் ஏற்படக் கூடாது என்பதிலும் அவரின் சடங்குகளுக்குக் குந்தகம் விளையக் கூடாது என்பதிலும் கவனம் அதிகமாக இருந்தது.  ஆகவே அவர்கள் நிறையப் பழங்கள், கொட்டைகள், வேர்கள், இலைகள், பூக்கள், காய்கள், தேன் சேகரம் செய்து வைத்தல், தானியங்கள் சேகரித்தல் ஆகியன முன்னேற்பாடுகளாகச் செய்து வைத்திருந்தனர்.  ராக்ஷசவர்த்தத்தில் ராக்ஷசர்களுக்குப் பால், தயிர், நெய் போன்றவை பழக்கமே இல்லை என்பதால் அதை ஈடுகட்டும் விதமாகப் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  அதோடு அல்லாமல் ஆரியர்களின் வாழ்க்கையில் பால், தயிர், நெய் போன்றவை முக்கியத்துவம் பெற்றவை.  வியாசரும் கூட அவை தான் பலம் என்று சொல்வார். ஆனால் ராக்ஷசர்கள் அவற்றைப் பயன்படுத்தியதே இல்லை.  ஆகவே வ்ருகோதரனனின் குடியிருப்புக்குச் செல்லும் முன்னர் வியாசருக்குத் தன் சடங்குகளை இந்த தானியங்கள், பழங்கள், கொட்டைகள், இலைகள், பூக்களின் மூலமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டி இருந்தது

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

// ராக்ஷசர்கள் அது வரை பாலையே குடித்து அறியாதவர்கள் ஆதலால், அந்தப்பாலையும், பாத்திரத்தையும் சந்தேகமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.//

ஆஹா, பால் அருந்தாத பலவான்கள். ஆச்சர்யம்.

>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

வேத வியாசரின் வருகை மகிழ்வளிக்கிறது.

அவருக்கு என் நமஸ்காரங்கள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆனால் வியாசர் எதுவுமே நடவாதது போல் கீழே குனிந்து ஹிடும்பியின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்துப் பின்னர் அவள் கைகளில் இருந்த கடோத்கஜனை மிகவும் அன்போடும் பிரியத்தோடும் தூக்கிக் கொண்டார்.

குழந்தையா அது? ஆறு மாசத்துக்கு ஒரு ராக்ஷசன் போலவே இருந்தான் கடோத்கஜன். //

சூப்பர் - பீமசேனனுக்கும், ஹிடும்பிக்கும் பிறந்தவனாச்சே !

இப்படித்தானே இருந்தாக வேண்டும் . ;)))))

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வியாசர், ஹிடும்பியைப் பார்த்து, “ஹிடும்பி, இவ்வுலகிலேயே நீ தான் மிகவும் பாக்கியசாலி. அதிர்ஷ்டம் செய்தவள். பரத குல வம்சத்துக்கு ஒரு நல்ல வாரிசை நீ கொடுத்துவிட்டாய்.//

அதிர்ஷ்டசாலி, பாக்யசாலி வியாசரே சர்டிஃஃபிகேட் கொடுத்தாச்சு. சந்தோஷம்.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

வியாசர் தந்திரமாக ராட்சசர்களை வளைக்கிறார்.

இராஜராஜேஸ்வரி said...

தன்னுடைய கொள்ளுப் பாட்டனரோடு இவ்வளவு விளையாடி ஆனந்திக்கும் கடோத்கஜன் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டினான்.

ஆனந்தம் ததும்பும் காட்சிகள்..!