Tuesday, April 29, 2014

கண்ணன் இரட்டை வேடம் போடுகிறானா?

அதுமட்டும் இல்லை.  ஒற்றர்கள் அறிந்து வந்து சொன்ன செய்தியால் கூட துருபதன் மனம் கொதித்தான்.  ஹஸ்தினாபுரத்துக்கு உத்தவன் சென்றிருந்தானாம்.  அவன் கேட்ட விலையை ஹஸ்தினாபுரத்துக்காரர்கள் கொடுத்திருக்கின்றனர்.  அவன் கேட்டது புஷ்கரத்துக்கு விடுதலை.  அதற்கு ஹஸ்தினாபுரத்துக்காரர்கள் சம்மதம் கொடுத்திருக்கின்றனர்.  புஷ்கரத்தை மீண்டும் செகிதானாவிடமே ஒப்படைக்க பீஷ்மர் சம்மதித்திருக்கிறார்.  அதற்கு அவர்கள் படைகளின் நிகரற்ற  தலைவன் அந்த துரோணனும் சம்மதம் கொடுத்திருக்கிறான்.  இது எதற்கு?  இந்த மாபெரும் விலையைக் கொடுத்து அவர்கள் என்ன சாதித்திருக்கின்றனர்?  துருபதனுக்கு இதன் மூலம் அவமானம் ஏற்படுத்தலாம் என நினைக்கின்றனரா?  இவர்கள் இந்த விலையைக் கொடுத்ததோடு துரியோதனனையும் சுயம்வரத்திற்கு அனுப்பி வைத்திருப்பதைக் கண்டால், நான் இதில் எல்லாம் மயங்கி என் பெண்ணை அந்தக் கொலைகாரனுக்குக் கொடுத்துவிடுவேன் என எதிர்பார்க்கின்றனரா? அது ஒருக்காலும் நடவாது.  ஆரிய வர்த்தத்தின் சிறந்த மன்னர்கள் முன்னால் எனக்கு அவமானம் தேடித் தரப் பார்க்கின்றனரா?  அல்லது, அந்தக் கொலைகார யுவராஜா துரியோதனன் என் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று திருமணம் முடிக்க நினைக்கிறானா?  அதற்குக் கிருஷ்ண வாசுதேவனின் உதவியைக் கேட்டிருக்கிறார்களோ?  இப்போதெல்லாம் தான் சுயம்வரத்தின்போது மணப்பெண்ணைத் தூக்கிச் செல்லும் வழக்கம் இருக்கிறதே!

பார்க்க அத்தனை மதிப்பு வாய்ந்தவனாகவும், நேர்மையாளனாகவும், சரியான பாதையில் செல்பவனாகவும் காட்சி தரும் அந்தக் கிருஷ்ண வாசுதேவன் உண்மையில் இவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனா?  நய வஞ்சகனா? நம்பவே முடியவில்லையே!  யாருமே நம்ப மாட்டார்கள்.  அதிலும் எதற்காக!  இந்த துரியோதனனுக்கு ஆதரவு காட்டுவதற்காகவா?  ம்ஹூம், இல்லை, இல்லை, இருக்காது.  இதை நம்பவே முடியவில்லை.  நம்பவும் கூடாது.  அவன் வாக்களித்தபடி தன்னுடைய அனைத்து யாதவர் தலைவர்களையும் அழைத்து வந்திருக்கிறான்.  சுயம்வரத்திற்காகவும், அதன் போட்டிக்காகவும் மனம் ஒருமித்து ஏற்பாடுகளில் ஆழ்ந்திருக்கும் குரு சாந்தீபனியும் சரி, அவரின் பிரதம சீடரான ஷ்வேதகேதுவும் சரி கிருஷ்ணனிடம் மாறாத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருக்கின்றனர்.  அவ்வளவு ஏன்!  இதுநாள் வரையிலும் நானும் தான் ஒரு மகனிடம் வைக்கும் பாசத்தையும், அன்பையும் அவனிடம் வைத்திருந்தேன்; அல்லது இன்னமும் வைத்திருப்பேனோ?

புஷ்கரத்தைத் திரும்ப வாங்க என்ன பேரம் நடைபெற்றது?  யாதவர்கள் குரு வம்சத்தினருக்காக எந்தப் பாவகரமான செயலைச் செய்வதாகச் சொல்லிப் புஷ்கரத்தைத் திரும்ப பெற்றிருக்கின்றனர்?  வேறு ஏதோ விஷயம் இதில் இருக்க வேண்டும்.  ஆம், கிருஷ்ணன் வேறு ஏதோ உள்ளார்ந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறான்.  ஏனெனில் தன் அத்தையிடமும், அத்தையின் ஐந்து குமாரர்களிடமும் மாறாத பாசமும், அன்பும் கொண்ட கிருஷ்ணன், அவர்களைக் கொன்று ஒழித்த இந்தக் கொலைகார துரியோதனனுக்கு ஆதரவாய்ப் பேசுவதற்கு என முயல்வானா?  அவன் பாசமும் விசுவாசமும் அனைவரும் அறிந்த ஒன்று.  குந்தியைக் கொன்றதன் மூலம் தாயைக் கொன்ற அபகீர்த்திக்கு அல்லவோ அந்த துரியோதனன் ஆளாகிவிட்டான்.  ஆம், ஆம், கடைசியில் அவன் ஏமாந்து தான்போகப் போகிறான்.  அது தான் நடக்கும். அந்த துரியோதனன் இந்த அபச்சாரத்தைச் செய்துவிட்டு அதை ஒப்புக் கொண்டு அடங்கி நடப்பானா?  மாட்டான்.  அது அவன் இயல்புக்கே விரோதம்.  ஆகவே அவன் துரியோதனனுக்கு ஆதரவு கொடுக்க மாட்டான்.  ஆரியவர்த்தத்தின் அனைத்து அரசர்களும் தர்மத்தின் பாதையில் நடக்கின்றனர் எனச் சொல்ல முடியாது.  ஆனால் எவராலும் தூக்கிப் பிடிக்க முடியாத அந்த தர்மத்தின் பாதையைத் தூக்கிப் பிடிக்காவிட்டாலும் கிருஷ்ணன் தவறான பாதையில் செல்ல மாட்டான்.  திசைமாறிச் செல்ல மாட்டான்.  மாறி மாறி வந்து கொண்டிருந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிய துருபதன் சிறிது நேரம் ஊஞ்சலை ஆட்டவே மறந்துவிட்டான்.

அப்போது அங்கே அவன் மந்திரியும், வெகுகாலமாக அவனிடம் மந்திரி பதவியில் இருப்பவனும் ஆன உத்போதனன் வந்தான்.  அவன் சுயம்வரம் நடைபெறப்போகும் அரங்கம் முழுமையாகத் தயார் ஆகிவிட்டதாகவும், மன்னன் துருபதனோ அல்லது இளவரசன் த்ருஷ்டத்யும்னனோ வந்து அதைப் பார்வையிட்டு போட்டிக்கான குறியை எங்கே வைப்பது எனச் சொல்லிவிட்டால் அதையும் முடித்துவிடலாம் என்று பணிவுடன் கூறினான்.  இதனால் மன்னன் மனம் மகிழ்வதற்கு பதிலாய் அவனுக்கு வருத்தமே மேலிட த்ருஷ்டத்யும்னனை அழைத்துச் சென்று செய்யும்படி கூறி விட்டான். அப்போது ஒரு சேவகன் அங்கே வந்து மகத நாட்டுச் சக்கரவர்த்தியின் மகனான சஹாதேவன் துருபதனைப் பார்க்க வேண்டி வந்திருப்பதாய்க் கூறினான்.  எதற்கென துருபதன் விசாரிக்கையில் மகதத்தின் சார்பில் தன் மரியாதைகளையும், பரிசுகளையும், வணக்கத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதாய்ச் சொன்னான்.  இதுவும் துருபதனை எளிதில்  எரிச்சலில் ஆழ்த்தியது.  அவன் கோபம் உச்சத்துக்கே சென்றுவிட்டது.  இப்படி சற்றும் எதிர்பாராமல், அசந்தர்ப்பமாக வந்திருக்கும் யுவராஜா சஹாதேவனை என்ன செய்வது எனத் திகைத்தான்.  ஆனாலும் அவனைப் பார்க்க மறுப்பது சரியல்ல. அருகே கிடந்த கிரீடத்தை எடுத்துத் தலையில் சூட்டிக் கொண்டு, வாளை இடுப்பில் செருகிக் கொண்டு அவனைப் பார்க்கக் கிளம்பினான் துருபதன்.

தான் சந்திக்கும் அரசாங்க அறைக்கு வந்த துருபதனுக்குள் சட்டென்று ஓர் எண்ணம் பளிச்சிட்டது.  கிருஷ்ணன் அப்படி இரட்டை வேஷம் போட்டு ஏமாற்ற நினைத்தான் எனில், ஜராசந்தன் இங்கே சுயம்வரத்திற்கு எப்படி வந்திருப்பான்? கிருஷ்ணனின் உள்ளார்ந்த எண்ணம் தெரிந்தது எனில் ஜராசந்தன் சுயம்வரப் போட்டியிலேயே கலந்து கொள்ள மாட்டானே!  அவனும் ஒரு தேர்ந்த வில்லாளிதான். ம்ம்ம்ம்ம்?? யோசனைகளில் மூழ்கிய துருபதனை ஒரு குரல் தட்டி எழுப்பியது.


“மாட்சிமை பொருந்திய மன்னரே! என் தந்தையும் மகதச் சக்கரவர்த்தியுமான ஜராசந்தர் ஒரு அவசரமான செய்தியை என் மூலம் உங்களுக்கு அனுப்பி உள்ளார்.” என்றான் மகத நாட்டுப் பட்டத்து இளவரசன் ஆன சஹாதேவன். அவனை சகல மரியாதைகளுடனும் வரவேற்றான் துருபதன்.  “சக்கரவர்த்தி என்ன சொல்லி அனுப்பினார்?” என்று கேட்டான்.  சஹாதேவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனைப் பாதித்தது.  அவன் ஏதோ முடிவுடன் வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  சஹாதேவன் அவனைப் பார்த்து, “ மாட்சிமை பொருந்திய மகத மன்னர், என் தந்தை ஜராசந்தர்,  பாஞ்சால அரசனாகிய நீர் அனுப்பிய அழைப்பைப் பார்த்துவிட்டே இங்கே சுயம்வரத்திற்கு வந்திருக்கிறார்.  ஆகவே அவர் எதிர்பார்ப்பது என்னவெனில்  துருபதன் மகளான திரெளபதி, மகதத்தின் சக்கரவர்த்திக்குப் பேரனும், என் ஒரே மகனுமான மேகசந்தியை அவளுக்கான மணமகனாய்த் தேர்தெடுத்தாக வேண்டும்.  இதன் மூலம் மகதத்திற்கும், பாஞ்சால நாட்டுக்கும் ஆன அரசியல் உறவு பலப்படும். இதுவே என் தந்தை எதிர்பார்ப்பது. “ என்று கூறிய சஹாதேவன் குரலில் இருந்த அதிகாரத் தொனி, அவன் கேட்டது நடந்தே ஆகவேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தது.  தன் கீழுள்ள சிற்றரசர்களோடு உடன்படிக்கை செய்யும்போது நடந்து கொள்ளும் அதிகாரத்தன்மையோடு சஹாதேவன் இப்போதும் நடந்து கொண்டான்.




   

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சஹாதேவன் சொன்னால் நடந்தே தீருமே...

ஸ்ரீராம். said...

துருபதனைக் குழப்பத்திலும், கோபத்திலும் ஆழ்த்த அடுக்கடுக்காய்ச் சம்பவங்கள்!

sambasivam6geetha said...

டிடி, ஒரே பெயர் என்பதால் குழம்பிட்டீங்க போல! :))) பாண்டவ சஹாதேவன் இல்லை இங்கே வந்திருப்பவன். இவன் மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தனின் மகன். :))))

sambasivam6geetha said...

ஶ்ரீராம், முன்னால் மூணு பதிவு போல் படிக்கலை. படிங்க தேர்வு உண்டு. :)

ஸ்ரீராம். said...

எந்த மூன்று பதிவுகள்...? வரிசையாகப் படித்திருக்கிறேனே... 'தர்மத்தைத் தாங்கும் தூண்' ஒன்று விட்டுப் போயிருக்கிறது. அதுவும் ரொம்பப் பழசு...