Monday, July 28, 2014

பாஞ்சாலி ஏன் ஐவரை மணந்தாள்?

உலகமே இருட்டில் மூழ்கியது.  அதன் காரணத்தை அறிந்த பிரம்மா நளாயினியைத் தம்மால் சமாதானம் செய்ய இயலாது என்று உணர்ந்து கொண்டு, அத்ரி முனிவரின் ஆசிரமத்தை அடைகிறார்.  அத்ரி முனிவரின் மனைவியான சதி அநசூயாவிடம் நளாயினியின் கோபத்தையும் மாண்டவ்ய ரிஷியின் சாபத்துக்குப் பதில் சாபம் கொடுத்ததையும், அதனால் சூரியன் உதிக்க முடியவில்லை என்பதையும் கூறுகிறார்.  இதற்கு ஒரு வழி காணவேண்டும் என்றும் வேண்டுகிறார்.  அநசூயா நளாயினியின் வாழ்க்கையைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்கிறாள்.  இன்று வரை இல்வாழ்க்கை சுகமே அவள் அனுபவித்தறியவில்லை என்பதையும், இதெல்லாம் மௌத்கல்ய ரிஷி  தன் மனைவிக்கு வைக்கும் பரிக்ஷை என்பதையும் புரிந்து கொள்கிறாள்.

சூரியோதயத்துக்கு வழி வகுக்குமாறு பிரம்ம தேவன் கூறியதை ஏற்றுக் கொண்ட அநசூயா நளாயினியில் இல்லத்தை அடைகிறாள்.  நளாயினியிடம் சமாதானமாகப் பேசி சூரியோதயத்துக்கு வழி செய்யுமாறு கூறுகிறாள்.  ஆனால் நளாயினியோ மறுக்கிறாள்.  சூரியோதயம் ஆனால் தன் கணவன் இறந்துவிடுவார் என்று கூறி சூரியோதயத்துக்கு மறுக்கிறாள்.  அப்போது அநசூயை சூரியோதயம் ஆனதும் உன் கணவர் இறந்தாலும் இந்தத் தொழுநோய் நீங்கி சுந்தர புருஷனாக மீண்டு வருவார் என்றும் அவருடன் நீ சுகமான ஆனந்தமான இல்வாழ்க்கை நடத்தலாம் என்றும் கூறுகிறாள்.  அநசூயா பதிவிரதை என்பதைத் தெரிந்து கொண்டிருந்த நளாயினி அநசூயாவின் சொல்லுக் கட்டுப்படுகிறாள்.

சாபம் விலகவேண்டி நளாயினி கூற சாபம் விலகி சூரியனும் உதிக்கிறான்.  மௌத்கல்யரும் இறக்கிறார்.  ஆனால் அருகேயே இருந்த அநசூயா அவர் ஒரு சுந்தரபுருஷனாக எந்தவிதமான வியாதியும் இல்லாதவராக வர வேண்டும் என்று கூற அவ்விதமே அவர் தொழு நோய் நீங்கி சுந்தர புருஷனாக வருகிறார்.  நளாயினியும் அவரோடு ஆனந்தமாக இல்வாழ்க்கையைத் துய்க்கிறாள்.  காலம் செல்கிறது.  மௌத்கல்ய ரிஷிக்குத் தான் தவத்துக்குப் போக வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்பது புரிந்தது.  ஆகவே நளாயினியிடம், "இல்வாழ்க்கைச் சுகத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம்.  இப்போது நாம் இருவரும் அற வழியிலான இல்வாழ்க்கையை வாழ்வோம்." என்று கூறுகிறார்.

நளாயினிக்கோ மனதில் ஆசை போகவில்லை.  திருப்தியும் ஏற்படவில்லை.  ஆகவே மறுக்கிறாள். மீண்டும், மீண்டும் சொல்லிப் பார்த்த ரிஷி, அவள் பிடிவாதமாக மறுப்பதைக் கண்டு தன் தவநிலைக்குச் சென்று விடுகிறார்.  தன்னை லக்ஷியம் செய்யாத கணவனைக் கண்டு கோபம் அடைந்த நளாயினி என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தாள். பின்னர் ஈசனை நினைத்துத் தவம் செய்து அடுத்த பிறவியிலாவது நல்ல கணவனைப் பெறலாம் என நினைத்துத் தவம் செய்கிறாள்.  அவள் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவள் முன் தோன்றுகிறார்.  நளாயினி தான் எதிர்பார்க்கும் குணங்களை எல்லாம் அடுத்த பிறவியில் தனக்குக் கணவனாக இருக்கப் போகிறவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு திரும்பத் திரும்ப ஐந்து முறை அப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று கேட்கிறாள்.

ஈசனும் அவளிடம், "ஒரே மனிதனிடம் இப்படி எல்லாக் குணங்களும் நிறைந்திருப்பது அரிது.  ஆகையால் உனக்கு ஐந்து கணவர்கள் அடுத்த பிறவியில் வாய்ப்பார்கள்.  நீயும் இப்போது இந்த வரத்தை ஐந்து முறை கேட்டுவிட்டாய்.  ஆகையால் அடுத்த பிறவியில் உன் ஐந்து கணவர்களோடு கூடி வாழ்வாய்!" என வரமளித்து விடுகிறார்.  மனம் நொந்து போன நளாயினி பின்னர் தான் எப்படிப் பத்தினியாவோம் எனக் கேட்க  ஒருவனுடய அம்சமே ஐந்து கூறுகளாகப் பிரிந்து ஐந்து ஆண்களாகப்பிறப்பார்கள் என்றும் ஆகவே நபர்கள் ஐவராக இருந்தாலும் அவள் மணக்கப் போவது ஒருவனைத் தான் என்றும் கூறுவதோடு. ஒவ்வொருத்தரோடும் ஒவ்வொரு வருஷம் இல்வாழ்க்கை நடத்திய பின்னர் அவள் மீண்டும் கன்னித் தன்மை பெறுவாள் எனவும், அதன் பிறகு மற்றொருவருடன் அவள் இல்வாழ்க்கை தொடரும் என்றும் கூறுகிறார்.

ஐவரையும் பாஞ்சாலி சமமாக அன்பு செலுத்தியதாகச் சொல்லப்பட்டாலும் தனனை வென்ற அர்ஜுனனிடமே அவள் மனம் மிகுந்த பக்ஷத்துடன் இருந்தது.  அதனாலேயே பாண்டவர்கள் ஐவருடன்  இறுதி யாத்திரை செல்லும் வழியில்  பாஞ்சாலியால்  இந்தப்பாபத்தின் சுமையைத் தாங்க முடியாமல் பயணம் தடைப்பட்டு முதல் முதல் அவளே சுருண்டு விழுந்துவிடுகிறாள்.

எது எப்படியானாலும் சில விஷயங்களுக்குக் காரண, காரியங்கள் கற்பித்தல் என்பது விளக்கம் சொல்ல முடியாத ஒன்று. ஏன் இப்படி நடக்கிறது என்றெல்லாம் ஆராய முற்பட்டோமானால் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் கேள்விகள் கேள்விகளாகவே இருக்கும்.  இதுவும் அபப்டிப் பட்ட ஒரு கேள்வி தான்.

No comments: