Friday, August 15, 2014

திருதராஷ்டிரனுக்கு ஏற்பட்ட கவலை!

நாம் இப்போது திரௌபதியின் சுயம்வரத்தின் போது உயிர்த்தெழுந்த பாண்டவர்கள் குறித்தும், ஐவரையும் திரௌபதி திருமணம் செய்து கொண்ட செய்தியைக் கேட்டபோதும் துரியோதனனுக்குள்ளே எழுந்த எண்ணங்கள் குறித்து ஒரு பார்வை பார்க்கப் போகிறோம்.  ஊருக்குப் போய்விட்டதால் பத்துப் பதினைந்து நாட்களாக பதிவுகள் போடமுடியவில்லை.  கைக்காயம் காரணமாக எழுதுவதிலும் தாமதம். ஆகவே கொஞ்சம் மெதுவாகப் பதிவுகள் வரும்.  பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.  இவை அனைத்தும் திரு முன்ஷிஜி அவர்கள் கற்பனையே!  இப்படி நடந்திருக்கலாம் என்னும் அவர் அனுமானமே என்பதை நினைவில் இருத்திக்கொண்டு படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.  நன்றி.

துரோணரிடம் ஷிகண்டின் வந்து சேர்ந்த சிலநாட்களுக்குப் பின்னர் துரியோதனன் தன் சகோதரர்கள், தன் மாமன் ஷகுனி மற்றும் நண்பர்களோடு ஹஸ்தினாபுரம் வந்தடைந்தான்.  தன்னை யாரோ நன்கு அடித்து,  நசுக்கிக் கொல்ல முயன்றதைப் போல் அவன் உணர்ந்தான். அவமானம் தாங்க முடியாமல் தவித்தான். பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர் என்பதோடல்லாமல், வலிமை மிக்க பாஞ்சால நாட்டின் அரசனுக்கு ஐவரும் மருமகன்களாகவும் ஆகிவிட்டனர்.  அவன்  மிகச் சிரமப்பட்டு அமைத்த திட்டங்கள் அனைத்தும் வியர்த்தமாகிவிட்டன.  அவன் வாழ்நாள் முழுதுக்குமாக நாசமாகிவிட்டான். இனி அவனால் எழுந்திருக்க இயலுமா? மிக மோசமாக அவன் அவமானப் படுத்தப் பட்டிருக்கிறான். இந்த ஆரிய வர்த்தம் முழுதும் அவனைப் பார்த்துச் சிரிக்கும் வண்ணமாக அவமானப் படுத்தப்பட்டிருக்கிறான்.  அவன் எதிர்காலத்திற்கென நிர்ணயித்திருந்த அந்த அற்புதமான ஏற்பாட்டை விதி தன் கரங்களால் நசுக்கி நாசமாக்கிவிட்டது.  விதியா?  இல்லை, இல்லை! கிருஷ்ண வாசுதேவன், மஹா பாவி, போக்கிரி, தன் போக்கிரித்தனத்தைக் காட்டி அவன் எதிர்காலத்தையே பொசுக்கிவிட்டான்.

அந்த ஐவரும் ஹஸ்தினாபுரத்துக்கு வந்துவிட்டால்?? பின் அவனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் இங்கே இடமின்றிப் போய்விடுமே!  அனைவர் மனதிலும் சுயம்வரத்தில் நடந்தவையே இருக்கின்றன.  அனைவரும் அதையே திரும்பத் திரும்பப் பேசுகின்றனர்.  மக்கள் அனைவரும் ஐந்து சகோதரர்களும் இறக்கவில்லை என்பதைக் கொண்டாடுவதோடு அவர்களுக்குப் பலமான ராஜ்யத்தின் இளவரசி மனைவியாக அமைந்தது குறித்தும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.  அனைவரும் பாண்டவர்கள் திரௌபதியை அழைத்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் வருவதற்குக் காத்திருக்கின்றனர்.  வந்ததுமே அவர்களுக்குப் பிரமாதமான ஒரு வரவேற்பை அளிக்கக் காத்திருக்கின்றனர்.  இதைத் தடுப்பது என்பது கடினம்.  ஆனால்…… ஆனால்…… ஒரே ஒரு வழி இருக்கிறது.  அவர்கள் ஹஸ்தினாபுரம் அடையும் முன்னரே அனைவரையும் ஒருசேரத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும்.  இங்கே வரவே விடக் கூடாது.  ஆம் அது ஒன்றே வழி.

மறுநாள் காலை, துரியோதனன் தன் அருமை நண்பன் கர்ணனுடனும், தன் மாமன் ஷகுனியுடனும் தன் தந்தை திருதராஷ்டிரனைச் சென்று சந்தித்தான்.  விதுரன் மூலமாக காம்பில்யத்தில் நடந்தவற்றை அனைத்தையும் திருதராஷ்டிரனும் அறிந்திருந்தான்.  விதுரனின் வற்புறுத்தலுக்காக பாண்டவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படவேண்டும் என அரை மனதாக ஒத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.  இதைக் கேட்ட துரியோதனன் ஆத்திரம் தாங்காமல் கத்தினான்; கதறினான்; தன் பற்களைக் கடித்துக் கொண்டான்.  விதுரனிடம் விட்டுக்கொடுத்து அவனுக்காக வளைந்து கொடுத்த தன் தந்தையை மிகவும் மோசமாகக் கடிந்து கொண்டான். விதுரச் சித்தப்பா எப்போதும் நமக்கு எதிரிதான். துரியோதனன் இதை மட்டும் சொல்லாமல் மேலும் சொன்னான்:  காம்பியத்திற்குத் திறமை வாய்ந்த சகல நுணுக்கங்களையும் அறிந்த தூதுவர்களை உடனடியாக அனுப்பிப் பாண்டவர்களுக்கும், துருபதனுக்கும் இடையில் எப்படியாவது மன வேறுபாடுகளை உருவாக்க வேண்டும் என்றான்.  மனவேறுபாடுகளை உருவாக்கி துருபதனின் காவலில் இருந்து அவர்களைத் தனிமைப்படுத்திப் பின் கொன்றுவிட வேண்டும் என்றும் கூறினான்.  ஆனால் திருதராஷ்டிரனோ விதுரனுக்கு ஏற்கெனவே பாண்டவர்களை நல்ல முறையில் வரவேற்று உபசரிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தான்.  அதை எப்படி மீற முடியும்?  க்ஷத்திரியன் வாக்குக் கொடுத்தால் மீறுவது என்பது சரியல்லவே!  ஆனால் இங்கேயோ சொந்தப் பிள்ளை கதறுகிறான். அதையும் பார்க்க முடியவில்லை அவனுக்கு.  கோபத்திலும், மனக்கசப்பிலும் மூழ்கிப் போயிருந்த  பிடிவாத குணம் படைத்த தன் அருமை மகனுக்கு அடங்கிப் போவதைத் தவிர இப்போது வேறு வழி அவனுக்குத் தெரியவில்லை.  மகனின் கடுமையான எதிர்ப்பைக் கண்டு அஞ்சினான்.  அவனுக்குப் பணிவதைத் தவிர வேறு வழி இப்போது இல்லை.

ஆனால் துரியோதனனின் திட்டத்திற்கு அவனுக்கு நெருங்கியவர்களிடமிருந்தே எதிர்ப்பு வந்தது.  ஆம், கர்ணன் அவ்வளவு நேரம் பேசாமல் தகப்பனும், மகனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். இப்போது அவனை ஆலோசனை கேட்கவும், துரியோதனன் திட்டத்திற்குத் தன் முழு எதிர்ப்பைக் காட்டினான்.  இது நடைமுறைக்கு ஒவ்வாதது என்றான் கர்ணன்.  ஐவரும் திரௌபதியை மணந்து கொண்டிருக்கையில் அவர்களைப் பிரிப்பது எங்கனம்? அவர்களிடையேயும், துருபதனுக்கும் இடையேயும் மனவேறுபாடுகளை ஏற்படுத்துவது அசாத்தியம் என்றான்.  எந்த மருமகனையும் மீறி துருபதன் எதுவும் செய்யமாட்டான் என்பதோடு ஐவரையும் அவன் கைவிடவும் மாட்டான் என்பதையும் எடுத்துக் காட்டினான்.  மேலும் வாசுதேவக் கிருஷ்ணன் அங்கே தான் இருக்கின்றான்.  அவர்களுக்கு நண்பனாகவும் உள்ளான்.  இந்நிலையில் ஒரே வழிதான் இருக்கிறது.

குரு வம்சத்தினரின் படைகளை ஒன்று திரட்டிக் காம்பில்யத்தின் மேல் எதிர்பாராவிதமாகத் தாக்குதல் நடத்த வேண்டும்.  புயல்காற்றைப் போல் தாக்கி எதிர்பாராத் தோல்வியை துருபதனுக்குக் கொடுக்க வேண்டும்.  ஐந்து சகோதரர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இது ஒரு பாடமாக அமைவதோடு இல்லாமல் அவர்களும் தோல்வியைத் தழுவுவார்கள்.  சரியான முறையில் படைதிரட்டி அவர்களை வழிநடத்திச் சென்றால் துரியோதனாதியருக்கு  வெற்றி மட்டும் அல்ல அவர்களும் தவிர்க்க முடியாததொரு வன்மையான சக்தியாக இருப்பார்கள்.  சுயம்வரத்தின் போது மறைந்திருந்த சில அரசர்கள் கூட அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.  பலராமனும், கிருஷ்ணனும் அவர்களோடு சேர்ந்து குரு வம்சத்தினரின் படையை எதிர்க்கலாம்.  ஆனால் அவர்கள் வைத்திருக்கும் சைன்னியம் மிகச் சிறியது. ஒதுக்கித் தள்ள வேண்டிய ஒன்று.  இதைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் விதுரர் அங்கே வந்தார்.  அரச மாளிகையில்  ராஜ சபையில் பீஷ்மரும், துரோணரும் பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரவேற்பைக் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதாயும், இங்கிருக்கும் அனைவரும் அந்த ஆலோசனையில் கலந்து கொள்ள அங்கே அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரை மனதாக துரியோதனன் தன் தகப்பனையும் அழைத்துக்கொண்டு ராஜ சபைக்குச் சென்றான்.  சில மூத்த மந்திரிகள், கிருபாசாரியார் மற்றும் துரோணருடன் பீஷ்மர் இந்த விஷயத்தைக் குறித்துக் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்.  பீஷ்மர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த துரியோதனன் வயிறு எரிந்தது.  இவ்வளவு சந்தோஷத்தைத் தாத்தா பீஷ்மர் முகத்தில் அவன் ஒருபோதும் கண்டதே இல்லை.  சிரித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தவர் இவர்கள் வருவதைப் பார்த்ததும், அங்கிருந்த சிம்மாதனத்தில் அமர அழைத்துச் செல்லப்பட்ட திருதராஷ்டிரனைக் கனிவோடு பார்த்தார்.   திருதராஷ்டிரனைப் பார்த்து பீஷ்மர், “திருதராஷ்டிரா, இன்று ஒரு சுபதினம்.  பாண்டவர்கள் ஐவரும் உயிருடன் இருக்கின்றனர்.  துருபதனின் மகள் திரௌபதியை ஐவரும் மணந்திருக்கின்றனர்.  பாண்டவர்களின் மரணத்திற்கு நாம் தான் பொறுப்பு என்று நம் மேல் சுமத்தப்பட்டிருந்த களங்கம் இன்றுடன் அகன்றுவிட்டது. ஹஸ்தினாபுரத்து மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷத்துடன் இதைக் கொண்டாடுகின்றனர் எனக் கேள்விப் பட்டேன். ஐவரும் திரும்பி வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.  இன்று   சந்தியாகாலத்தில்  விளக்குகள் ஏற்றப்பட்டு அனைவரும் கொண்டாடுகின்றனர்.  மற்றச் சடங்குகளும், வழிபாடுகளும் நாளையிலிருந்து தொடங்கப் படுகிறது.  அனைத்துக் கோவில்களிலும் பாண்டவர்களுக்கு ஆசிகளையும், இறைவனின் கருணையையும் பெறுவதற்காகச் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. “

தன் குருட்டுக் கண்களை பீஷ்மர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கித் திருப்பினான் திருதராஷ்டிரன்.  அவனால் உடனடியாகப் பேச முடியவில்லை.  அங்கிருக்கும் அனைவரும் அமைதி காத்தனர்.  பின்னர் தன்னைச் சற்றுச் சமாளித்துக் கொண்ட திருதராஷ்டிரன், பீஷ்மரைப் பார்த்து, “என் மகன்கள்? அவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது?  அவர்கள் கதி என்ன?” என்று கேட்டான்.





2 comments:

ஸ்ரீராம். said...

//பீஷ்மர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த துரியோதனன் வயிறு எரிந்தது.//

:))))))

ஸ்ரீராம். said...

திருதராஷ்டிரனின் கவலை பாவமாக இருக்கிறது.