Wednesday, August 20, 2014

திரௌபதியின் கலக்கம்!

பௌஷ மாதத்தின் முடிவு நாட்கள்.  இன்னும் குளிர்காலம் மீதம் இருந்தது. குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது.  பாஞ்சால நாட்டின் காம்பில்யத்தில் குளிர் அதிகமாகவே தெரிந்தது.  அதன் ஓர் அரண்மனையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட தன் படுக்கை அறையில் பாஞ்சால மன்னன் துருபதனின் அழகு மகள் திரௌபதி நன்றாக அலங்கரிக்கப்பட்டுத் தன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.  தன் அழகிய மோவாய்க்கட்டையைக் கைளால் தாங்கிக் கொண்டிருந்தாள்.  அவள் அந்த அறையில் தன் கணவன் குரு வம்சத்து இளவரசன் ஆன யுதிஷ்டிரனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.  கருத்த நிறத்தால் கிருஷ்ணா என அழைக்கப்பட்ட திரௌபதி நல்ல உயரமாகவும் பெண்மையின் எழில் பரிபூரணமாக அமையப் பெற்றும் விசாலமான பேசும் விழிகளோடும்,  அழகான வடிவமைப்புடன் கூடிய மோவாய் அவள் மன உறுதியைக் காட்டும் விதமாகவும் இருந்தாள்.


தன்னுடைய முதல் இரவில் ஒரு இளவரசி தன் கணவனை முதல் முதலாகச் சந்திக்கையில் எப்படி அலங்கரிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.  அவள் உச்சந்தலையில் பின்னல்களிடையே பதிக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வைர நகையின் ஒளி கண்ணைக் கூசியது.  கழுத்திலும், காதுகளிலும் தங்கமும், கற்களும் சேர்ந்து செய்யப்பட்ட நகைகளை அணிந்திருந்தாள்.  அந்த அறையில் ஏற்றப்பட்டிருந்த பல்வேறு தீபங்களின் ஒளியில் அவற்றின் பிரகாசம் பலமடங்கு அதிகரித்துக் காணப்பட்டது.   அவளுடைய திறந்த தோள்களின் மேல் முழுதும் தங்க இழைகளால் நெய்யப்பட்டதொரு சால்வையை அவள் போர்த்தி இருந்தாள்.  ஓர் ஓரத்தில் நெருப்பு மூட்டப்பட்டு சந்தனக் கட்டைகள் எரிந்து சுகந்தமான மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன.  மான் தோலால் செய்யப்பட்ட பகடை  விளையாட்டுச் சாதனம் அவள் எதிரே இருந்தது.  அவள் அருகே  நான்கு விதமான காய்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், செம்பு ஆகியவற்றால் செய்தவை  ஒவ்வொன்றிலும் நான்கு காய்கள் காணப்பட்டன.  இன்னொரு பக்கம் பகடை விளையாடப் பயன்படுத்தும் பாய்ச்சிக்காய்கள் (தாயக்கட்டைகள் போன்றவை) தந்தத்தால் செய்யப்பட்டவை இருந்தன.  முதல் இரவன்று கணவனை முதல் முதல் சந்திக்கையில் மங்களகரமாகப்பகடை விளையாடி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பது அவர்கள் வழக்கமாக இருந்தது.


தன் கண்களை வாசல் நிலையிலேயே வைத்துக் கொண்டு கணவனுக்குக் காத்திருந்த திரௌபதி தன்னை ஐவருக்கும் மனைவியாக ஆக்கிய அந்தப் பொல்லாத விசித்திரமான, வித்தியாசமான விதியை நினைத்துக் கொண்டு பழைய சம்பவங்களை மீண்டும் நினைவு கூர்ந்தாள்.  பல நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் முன்னர் அவள் தந்தை துரோணரால் சிறிதும் வெட்கமில்லாமல் ஒரு சிறைக்கைதியாகப் பிடிபட்டு அவர் வாழ்க்கையே அதனால் சீர்குலைந்தது.  குரு வம்சத்து ஆசாரியரான துரோணர் ஒரு காலத்தில் தந்தையின் பால்ய நண்பர்.  தந்தையின் இந்தப் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். அப்போது தான் அவள் தந்தை இந்தத் தவற்றைச் சரிசெய்து தான் அடைந்த அவமானத்துக்குப் பழி தீர்த்துக்கொள்ள சபதம் எடுத்தார்.


முதலில் அவள் தந்தை அவளைக் கிருஷ்ணனுக்குத் தான் கொடுக்கவிருந்தார்.  துவாரகையின் பிரபல யாதவத் தலைவன் ஆன கிருஷ்ண வாசுதேவன் ஆரிய வர்த்தத்தின் கதாநாயகனாகவும், மக்களிடையே பெரிதும் பிரபலம் அடைந்தவனாகவும் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தியவனாகவும் பேசப்பட்டான்.  ஆனால் அவனோ காம்பில்யம் வந்து தந்தையைச் சந்தித்துப் பேசியும் மிகவும் மரியாதையுடன் தனக்களிக்கப்பட்ட திரௌபதியை மறுத்துவிட்டான். ஆனால் எப்போதும் தந்தைக்கு உதவியாக அவர் பக்கமே நிற்பதாக வாக்களித்தான்.  ஆரிய வர்த்தத்து அரசர்களுக்குள்ளே மிகவும் பிரபலமாக இருந்த சுயம்வர முறைத் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யும்படி அவன் தான் அவள் தந்தையிடம் கூறினான்.  உண்மையில் கிருஷ்ணன் ஓர் பேரதிசயத்தையே நிகழ்த்திக் காட்டினான்.  ஆரிய வர்த்தம் மட்டுமின்றி மற்ற வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பேரரசர்களின் மத்தியில் அவள் தந்தையின் அரச பதவிக்கும், அவருக்கும் மிகவும் மதிப்புக் கூடி உயர்ந்ததொரு நிலையை அவள் தந்தை அடைந்தார்.


வல்லமை மிக்க மகதச் சக்கரவர்த்தியான ஜராசந்தன் கூட அவளைத் தக்க பேரங்களின் மூலமோ அல்லது வலுக்கட்டாயமாய்த் தூக்கிச் சென்றோ அவன் மகன் வயிற்றுப் பேரன் மேகசந்திக்கு மணமுடிக்க எண்ணிக் காம்பில்யம் வந்திருந்தான்.  ஆனால் அவன் தன் நோக்கத்தில் தோற்றுப் போனான்.  தோற்க வைத்தவன் கிருஷ்ண வாசுதேவன்.  ஜராசந்தன் அவனால் முடிந்தவரை பெருந்தன்மையாக இருப்பதாய்க் காட்டிவிட்டு சுயம்வரத்திலிருந்தே வெளியேறிவிட்டான்.  மோசமான பொல்லாத யுவராஜாவான ஹஸ்தினாபுரத்து துரியோதனன் அவளைப் போட்டியில் வெல்ல நினைத்துக் கடைசியில் தோற்றுப் போனான்.  அனைவரின் வியப்புக்கும் ஆச்சரியத்திற்கும் நடுவே இந்த ஐந்து சகோதரர்கள் எங்கிருந்தோ தோன்றினார்கள்.  பாண்டுவின் புத்திரர்களான இவர்கள் வாரணாவதத்தில் உயிருடன் எரிந்து சாம்பல் ஆனதாகச் சொல்லிக் கொண்டிருந்தனர் அனைவரும்.  இதைச் செய்தவன் துரியோதனன் தான் என்பதும் அனைவரும் காதோடு பேசிக் கொண்ட ஓர் ரகசியம்.  அவர்கள் இந்த சுயம்வரத்தில் உயிர்த்தெழுந்து விட்டனர்.  அவர்களில் மூன்றாவதான அர்ஜுனன், மிகச் சிறந்த வில்லாளி, ஆர்யவர்த்தத்தின் தேர்ந்த வீரன் அவளைப் போட்டியில் வென்று விட்டான்.   அதன் பின்னர் குந்தியின் சில வார்த்தைகள் விளைவித்த விளைவாக அவள் ஐவரையும் மணக்க நேரிட்டது.  அவளைப் போன்ற சிறந்ததொரு சாம்ராஜ்யத்தின் ஒரே இளவரசியின் தகுதிக்கு மாறாக அவள் ஐவரை மணந்தது விசித்திரமான விதியின் விளையாட்டில்லாமல் வேறென்ன!  அது ஒரு மோசமான பொல்லாத கொடுங்கனவு போன்ற சம்பவம்.


அனைவராலும் “சுவாமி” என்றும், “ஆசாரியரே” என்றும், “குருவே” என்றும் அழைக்கப்படும் வேத வியாசர் அனைவரின் ஆர்வத்தையும் அதிகரிக்கும் வண்ணம் அப்போது காம்பில்யத்துக்கு விஜயம் செய்தார்.  அவர் வந்தது அவள் சுயம்வரத்தின் மறுநாள்.  அவர் மூலமே ஆர்யவர்த்தத்தில் இப்படி ஒரு பழைமையான வழக்கம் இருந்து வந்திருக்கிறது என்பது தெரிந்தது.  சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரே பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனின் சகோதரர்களையும் சேர்த்து மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதே அது.  ஆனால் அவர் இதை அவளையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். அனைவரையும் மணந்து கொள்ளலாம் அல்லது அர்ஜுனனை மட்டுமே மணக்கலாம்.  இது அவள் விருப்பம் என்றார்.  அவர் வார்த்தைகளினால் ஊக்கம் பெற்று  அவள் ஐவரையும் மணக்கலாம் என முடிவு செய்தாள்.  கிருஷ்ண வாசுதேவன், அவள் அன்புடன் கோவிந்தா என அழைப்பாள்; அவன் தன் வாழ்க்கையை தர்மத்தின் வழி செல்வதற்கென அர்ப்பணித்திருக்கிறான்.  அவன் அவளைத் தன் சொந்த சகோதரியாக ஏற்றிருக்கிறான்.  அந்தக் கிருஷ்ண வாசுதேவன் அவளையும் இந்த நீண்ட நெடும் பயணத்தில் தன் பக்கம் நின்று தனக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டான்.  தான் இவர்கள் ஐவரையும் மணப்பதன் மூலம் அவனுடைய அறப் போராட்டத்துக்குத் தான் உதவி செய்ய முடியும் என்னும் எண்ணமும் அவளுள் இருந்தது.


திருமணத்திற்குப் பிந்தைய பதினைந்து நாட்கள் நடந்த சடங்குகளின் போதெல்லாம் அவ்வப்போது தனக்கு ஏற்பட்ட ஐந்து கணவர்களை நினைத்து நினைத்து அவள் மனம் ஒடுங்கிக் குன்றிப் போகும்.  அந்த நினைவு இல்லாத போதெல்லாம் அவள் மகிழ்வுடனேயே காணப்பட்டாள். அதிலும் அவள் மாமியாராக வாய்த்த குந்தி மிகவும் புரிதல் உள்ளவளாக, கருணையுள்ளவளாக, பொறுமையுடனும் அக்கறையுடனும் அவளைப் பார்த்துக்கொள்பவளாக இவ்வளவு நாட்களாக அவள் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த ஒரு தாயாக இருந்தாள்.  பல விதங்களிலும் அவளைத் தேற்றினாள்.  அவளுடைய ஐந்து மகன்களுமே மிகவும் நல்லவர்கள் என்றும் புரிதல் உள்ளவர்கள் என்றும் இத்தகையதொரு அசாதாரணக் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டது குறித்து அவள் வருந்தும்படி நேரிடாது என்றும் தெரிவித்தாள்.  ஆனாலும் திரௌபதிக்குத் தான் ஐவரையும் சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.  அந்த நினைப்பே அவளுக்கு நடுக்கத்தைத் தந்தது.


அனைவரிலும் மூத்தவனான யுதிஷ்டிரன் மிகவும் இளமையாகவும், அழகான தோற்றத்துடனும் அதே சமயம் தன் கௌரவம், மதிப்பு ஆகியன தெரியும்படியாகவும் இருந்தான்.  அனைவரையும் பார்த்தால் நட்புடன் சிரித்தான்.  அவன் மிகவும் புத்திசாலி என்பதும், புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவன் என்பதும் அவன் சிரிக்கும் கண்கள் எடுத்துக் காட்டியது.  அவன் எதிரே பேசும்போது நம்மால் எந்த விஷயத்தையும் மறைக்க முடியாது என்றும், அவனிடம் வெளிப்படையாகவே பேசியாக வேண்டும் என்பதும் புரிந்தது.  அவனும் அப்படியே வெளிப்படையாகத் திறந்த மனதோடு பேசினான். ஆனாலும் அவளுக்கு இப்போது இங்கிருந்து ஓடிப் போகவேண்டும்போல் இருந்தது.

2 comments:

ஸ்ரீராம். said...

திரௌபதி ஏற்கெனவே குண்டு என்று சொல்லி இருக்கிறார்கள். கருப்பு வேறயா? :))))


கிட்டத்தட்ட முன்கதைச் சுருக்கம் போல இருக்கிறது இந்தப் பதிவு.

sambasivam6geetha said...

திரௌபதியின் நினைவுகளாக இவை முதல் அத்தியாயத்தில் வருகின்றன. ஆனால் மூன்று பாகங்களையும் முன்னுரையாகத் தனியாகக் கொடுத்துள்ளார். :)))) நான் தான் அதைத் திரும்பப் போடவில்லை. :))))