Friday, August 15, 2014

பிதாமகரின் ஆலோசனை!

“திருதராஷ்டிரா, உன்னுடைய மகன்களுக்கும், பாண்டுவின் மகன்களுக்கும் இடையில் நாங்கள் இல்லை, இல்லை,, நாம் எப்படி வேறுபாடுகளைக்காட்ட முடியும்?  நம்மைப் பொறுத்தவரை இருவருக்கும் சமமான உரிமைகளே உள்ளன.” தன் அதிகாரக் குரலில் திட்டவட்டமாகச் சொன்னார் பீஷ்மர்.  அதற்கு மேல் வாய் திறக்க வழியின்றி திருதராஷ்டிரன் மௌனமானான்.  பீஷ்மரைப் பார்க்கும்போதெல்லாம் தன்னுள் எழும் பக்திபூர்வமான அச்சத்தை எப்படியானும் துடைத்தெறிய வேண்டும் என நினைத்தான் துரியோதனன்.  ஆகவே தன்னைச் சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.  எனினும் தயக்கம் அவனுக்குப் போகவில்லை.  “தாத்தா அவர்களே, பாண்டவர்கள் ஐவரும் நாடு கடத்தப்பட்டவர்கள் இல்லையா?” என வினவினான்.  “ஆம்,  அன்றைய சூழ்நிலையில் பல தர்மசங்கடங்களையும் தவிர்க்க வேண்டியே அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.  ஹஸ்தினாபுரத்தின் நன்மைக்காகவே அவர்கள் நாட்டை விட்டு வெளியே சென்றனர்.  எல்லாம் வல்ல மஹாதேவன் கிருபையில் அவர்கள் உயிருடன் இருப்பதோடல்லாமல் இந்த பூவுலகில் உள்ள அரசர்களுக்குள்ளேயே மிக உயர்ந்த இடத்தையும் கொடுத்து அவர்களை கௌரவப் படுத்தி இருக்கிறான்.” பீஷ்மர் பெருமையுடன் கூறினார்.

“அவர்கள் இப்போது இங்கே வந்து விட்டார்களானால் நாங்கள் அனைவரும் எங்கே செல்வது?”  தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைக்காமல் மீண்டும் கேட்டான் துரியோதனன்.  சற்று நேரம் எதுவுமே பேசாமல் தன் உறுதியான கண்களால் துரியோதனனை அளவெடுப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் பீஷ்ம பிதாமகர்.  பின்னர் மீண்டும் தன் உறுதி வாய்ந்த குரலில், “நீ இப்போது எங்கே இருக்கிறாயோ, அங்கேயே இருப்பாய்! ஹஸ்தினாபுரத்தில்!” என்றார்.  “ஆ, தாத்தா அவர்களே, இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை நாங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?  அது எப்படி சாத்தியம்?  ஒன்று அவர்கள் மட்டும் இங்கே இருக்க வேண்டும் இல்லை எனில் நாங்கள் இருக்க வேண்டும்.”  மிகவும் மூர்க்கத்தனமாக உளறினான் துரியோதனன்.  “அப்படி எல்லாம் பேசாதே என் மகனே!” திருதராஷ்டிரன் நடுவில் புகுந்து பீஷ்மருக்கும், துரியோதனனுக்கும் இடையில் ஏற்படும் சினம் மிகுந்த கடுமையான சூழ்நிலையை மாற்ற விரும்பினான்.  தன்னுடைய வெண்மையான தாடியை நீவி விட்டுக் கொண்டிருந்த பீஷ்மர் கோபத்தை அடக்கிய வண்ணம் சற்று நேரம் மௌனமாகவே இருந்தார். பின்னர் பேச ஆரம்பித்த போது குரலில் அமைதி குடி கொண்டிருந்தது.

“துரியோதனா! நீ ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனம் சாதாரணமான ஒன்றல்ல.  தர்மத்தின் இருப்பிடம்.  தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களே அமர்ந்து ஆட்சி புரிந்த சிம்மாதனம்.  நேர்மை ஒன்றுக்கே இங்கே மதிப்பும், மரியாதையும். நேர்மையாகவும், நீதியைக் கடைப்பிடிப்பவர்களுமே இதற்கு உரிமை கொண்டாட முடியும்.  இது வரையிலும் குரு வம்சத்தினர் அப்படித் தான் இருந்து வருகின்றனர்.  ஆகவே பாண்டவர்கள் ஐவருக்கும் உரிய இடத்தை நாம் அளிக்கப் போவதை எவராலும், எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.” தீர்மானமாகச் சொன்னார் பீஷ்மர்.  “பாட்டா!” பலவீனமான குரலில் பேச ஆரம்பித்தான் திருதராஷ்டிரன்.  “பாண்டவர்களுக்கும், துரியோதனன் மற்றும் அவன் சகோதரர்கள்  இடையில் எவ்விதப் பிரச்னைகளும் இல்லாமல் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏதும் நடந்துவிட்டால் அது தற்கொலைக்குச் சமமானது. “

“நாம் முயன்றால் முடியாததில்லை.  நல்லதொரு வழியைத் தேடினோமானால் நல்வழியே கிட்டும்.” பீஷ்மர் பதில் கூறினார். திருதராஷ்டிரனைச் சமாதானம் செய்யும் வகையில் அன்போடும், கனிவோடும் அவன் தோள் மேல் தன் கையை வைத்து அவனுக்கு ஆறுதல் கூறும் பாணியில் பேசினார் பீஷ்மர்.”நான் ஆசாரியர்களுடன் இதைக் குறித்துக் கலந்து ஆலோசித்திருக்கிறேன்.  உன் மகன்களுக்கும், பாண்டுவின் மகன்களுக்கும் இடையில் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் சமமான பங்கீடு செய்யப்படும்.  பாண்டவர்களின் உரிமையை நாம் மறுக்க முடியாது.” என்றார் பீஷ்மர்.  “ஆசாரியர் எப்படி ஆலோசனை கூறியுள்ளார்?” திருதராஷ்டிரன் கேட்டான்.  அவன் உள் மனம் தன் மகன் பக்கமே இருந்தது.  ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் பீஷ்மரின் நேர்மைக்கும்,  நீதிக்கும், தன் மகனின் மேல் உள்ள அளவு கடந்த பாசத்துக்கும் இடையில் திண்டாடினான் திருதராஷ்டிரன்.  பீஷ்மரிடம் அவனுக்கு உள்ளூற பயமும் உண்டு. அதற்குள்ளாக, " நான் மாட்சிமை பொருந்திய பாட்டனாரின் யோசனைகளை ஆதரிக்கிறேன்;  அவற்றோடு ஒத்துப் போகிறேன் மன்னா!”  என ஆசாரியர் துரோணர் கூறினார்.

“ஆனால் துருபதனின் மகள்  குரு வம்சத்தினரின் மருமகளாக இங்கே ஹஸ்தினாபுரம் வந்தால் என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லையே? துருபதன் உங்களுக்கு ஜன்ம வைரியாய் இருக்கிறானே ஆசாரியரே!   இதில் ஏதும் சூது இருந்து பின்னர் அதன் மூலம் கிளர்ச்சிகள் ஏற்பட்டால்? இதைத் தான் துரியோதனன் சுயம்வரம் செல்லவேண்டும் என்றபோது நீங்கள் கூறி இருந்தீர்கள்!” திருதராஷ்டிரன் கேட்டான்.

“மாட்சிமை பொருந்திய மன்னா! அதன் பின்னர் பல விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன.  துரியோதனன் என்னுடைய கஷ்டங்களைத் தீர்த்து வைத்துவிட்டான்.  என் மகன் அஸ்வத்தாமாவை ஒரு உறுதி மொழி எடுக்கச் செய்துள்ளான் துரியோதனன்.  ஒரு குரு வம்சத்து இளவரசனை திரௌபதி தன் மணாளனாகத் தேர்ந்தெடுத்து ஹஸ்தினாபுரம் வர நேரிட்டால், தன் உயிரைக் கொடுத்தாவது நான் இங்கிருந்து செல்லாமல் அஸ்வத்தாமா பாதுகாப்பான்.  இது தான் அவன் துருபதனுக்கு அளித்திருக்கும் உறுதிமொழி. அப்படித்தானே துரியோதனா?” துரோணர் கேட்டார்.

தனக்கெனப் போடப்பட்ட திட்டம் தனக்கெதிராகப் போனதில் அவமானமடைந்த துரியோதனன் தன் உதடுகளை ரத்தம் வரும்வரை கடித்தவண்ணம் தலையை மட்டும் ஆட்டினான்.  “ஆஹா, துரியோதனன் இதை ஆமோதித்து விட்டான்.  இது உண்மைதான் எனக் கூறிவிட்டான்.  துரியோதனனின் வற்புறுத்தலின் மேல் அஸ்வத்தாமா இந்த உறுதிமொழியை அளித்திருக்கிறான்.  என்றாலும் என் ஒரே மகனின் உயிருக்குப் பாதகம் விளைவிக்கும் ஒரு செயலை என்னால் செய்ய முடியாது.  ஆகவே நான் அவன் உறுதிமொழியைக் காப்பாற்றப் போகிறேன்.  இப்போது பேசுகையில் பிதாமகர் ஒரு யோசனையைக் கூறினார்.  இப்போதுள்ள பிரச்னையைத் தீர்க்கும் விதமான அந்த யோசனைக்கு என் முழு ஆதரவு உண்டு.”

கர்ணனால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திருதராஷ்டிரன் பக்கம் திரும்பிச் சீறிய குரலில், “மாட்சிமை பொருந்திய மன்னா!  உங்கள் உப்பைத் தின்று வளர்ந்து முன்னுக்கு வந்தவர்கள் இன்று உங்களுக்கே துரோகம் செய்கின்றனர். “பற்களைக் கடித்த வண்ணம் சீறினான் கர்ணன். அவனை இறுமாப்புடன் பார்த்தார் துரோணர். “ராதேயா! கர்ணா! உன்னுடைய ஆலோசனைகள் ஏற்கப்பட்டிருந்தால் அது தான் குரு வம்சத்தீனரின் முடிவாக இருந்திருக்கும்.  அனைவரும் அழிந்து போயிருப்பார்கள்.” எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சிந்தனை நிறைந்த முகத்தோடு பீஷ்மர் தன் தாடியை நீவி விட்டுக் கொண்டிருந்தார்.

திருதராஷ்டிரன் விதுரர் பக்கம் திரும்பி, “நீ என்ன சொல்கிறாய் விதுரா?” என்று கேட்டான்.

1 comment:

ஸ்ரீராம். said...

என்ன ஒரு விவாதம்? நீதி தவறா விதுரரின் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.