Sunday, October 12, 2014

கண்ணனின் கொட்டமும், பீமனின் திண்டாட்டமும்!

அன்றைய தினம் பீமன் எழுந்திருக்கச் சற்று நேரம் ஆனது.  தாமதமாகவே எழுந்தான் பீமன்.  அவனுக்குள் சந்தோஷ ஊற்றுப் பெருக்கெடுத்தது. அவனுடைய தீவிர முயற்சியால் ஜாலந்தராவைத் தரை வழிப் பயணம் செல்ல வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டான் பீமன்.  அதில் அவன் சந்தோஷம் அடைந்தான். நதிக்கரைக்குச் சென்று குளித்து நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டான்.  பின்னர் தன் தாய் தங்கி இருக்கும் குடிலுக்குச் சென்று தாயை நமஸ்கரித்தான்.  பின்னர் அவள் அருகே அமர்ந்திருந்த ஜாலந்தராவை ஒரு கள்ளப்பார்வை பார்த்தான்.  ஜாலந்தராவும் அதே ரகசியத்தைக் கடைப்பிடித்துத் தன் பார்வையைத் திருட்டுத்தனமாக பீமன் மேல் காட்டினாள்.


அப்போது குந்தி பேச ஆரம்பித்தாள்.  “காசி அரச குடும்பத்துப் படகுகள் நீரில் மூழ்க ஆரம்பித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.  மூழ்க இருந்த படகுகளில் இருந்து இவர்களை  நீ எவ்வளவு சாமர்த்தியமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் காப்பாற்றினாய் என இளவரசி எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.”


“தாயே, நீங்களே நன்கறிவீர்கள் அல்லவா?  இத்தகைய சங்கடங்களில் மாட்டிக் கொள்பவர்களைத் தப்புவித்து மீட்டுக் கொண்டு வருவதற்கே நான் என் வாழ்நாளைச் செலவு செய்து வருகிறேன்.””மீண்டும் ஒரு வெற்றிச் சிரிப்போடு ஜாலந்தரா பக்கம் கள்ளப்பார்வை பார்த்தான் பீமன்.  அப்போது மீண்டும் குந்தி பெருமையுடன், “அப்படி எனில் உன்னைப் பாராட்டுவதை எங்களிடம் விட்டு விடு பீமா!” என்றாள்.  “ஆஹா, தாயே, என்னைப் பாராட்டுவதா?  என்னைப் பாராட்டுவதை மனமின்றி அல்லவோ செய்கிறீர்கள் நீங்கள் அனைவரும். முழு மனதோடு பாராட்டுபவர் யார்? நல்லதிற்கே காலம் இல்லை, அம்மா! ஆனால் எனக்கு இளவரசனும் இளவரசியும் காப்பாற்றப்பட்டது மிக மகிழ்ச்சியை அளிக்கிறது.  நான் மட்டும் தக்க சமயத்தில் அங்கே செல்லவில்லை எனில் நதியின் ஆழத்தில் இருவரும் மூழ்கி இருப்பார்கள்.” தன் குறும்பை நினைத்து உள்ளூரச் சிரித்த வண்ணம் கூறினான் பீமன்.


குந்தி புன்னகை புரிய, ஜாலந்தரா தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.  “அதோடு இல்லை பீமா!  நீ நகுலனையும், சாத்யகியோடு ஏகசக்கரத்துக்கு அனுப்பி அங்குள்ள அரசகுலப் படகைக் கொண்டு வரச் செய்து இவர்களை இன்றே அனுப்ப ஏற்பாடு செய்ததும் பாராட்டுக்கு உரியதே!” என்றாள் குந்தி.  பீமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.  “என்ன!  என்ன!  நான் நகுலனை அனுப்பினேனா?  அதிலும் ஏக சக்கரத்துக்கு?  அரசகுலப்படகை வாங்கி வந்து இன்றே இவர்களை அனுப்ப ஏற்பாடு செய்தேனா? “பீமனின் ஆச்சரியம் அவன் குரலின் ஏற்ற, இறக்கத்திலிருந்து புரிந்தது.  குந்தி தன் ஆள்காட்டி விரலை பீமன் முன் நீட்டி பயமுறுத்துவது போல் விளையாட்டாக ஆட்டிய வண்ணம், “ஓஹோ, பீமா!  இதிலும் நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே!  உனக்குத் தெரியாமலா நகுலன் சென்றான்!”  என்றாள்.  மேலும், “ஏகசக்கரத்து அரசன் உன்னுடைய தோழன்.  வேறு எவர் நகுலனை அங்கே அனுப்ப முடியும்?  எனக்குத் தெரியும் அப்பா!  நீ எவ்வாறு அனைவரின் சௌகரிய, அசௌகரியங்களைக் கவனித்துக் கொள்கிறாய் என்பதை நான் நன்கறிவேனே!” என்று குந்தி மீண்டும் பாராட்டுக் குரலில் கூறினாள்.


“அது சரி அம்மா!  இவை அனைத்தையும் உங்களுக்குச் சொன்னவர் யார்?” பீமனுடைய பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை.  தான் ஏதேனும் கனவு காண்கிறோமா என அவன் எண்ணினான்.  “ஓஹோ, அது உனக்குத் தெரியாதா?  வேறு யார்?  கோவிந்தன் தான் சொன்னான்.  இங்கே வந்திருந்தான்.  அவன் தான் அனைத்தையும் என்னிடம் சொன்னான்.  நீ அவர்களை எப்படிக் காப்பாற்றினாய் என்பதையும் சொன்னான்.  அதோடு இன்றே அவர்கள் திரும்ப நீ செய்திருக்கும் ஏற்பாடுகளையும் கூறினான். அதிலும் இன்றிரவே இவர்கள் திரும்ப நீ ஏற்பாடு செய்திருக்கிறாய்.  ஆஹா, என் மகன் பீமனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.  பீமா, பீமா, நீ மிகவும் நல்ல பையன்.” குந்தியின் குரலில் கர்வம் மிகுந்திருந்தது.


பீமனுக்குத் தான் செய்ததாகக் கூறும் நல்ல காரியத்தை மறுக்கவும் மனமில்லை.  அதே சமயம் அவனால் நகுலன் அனுப்பப்பட்டான் என்பதை நம்புவதும் கடினமாக இருந்தது.  திரும்பத் திரும்ப அவன், “நான் நகுலனை ஏகசக்கரத்துக்கு அனுப்பினேனா?  நான் நகுலனை அனுப்பினேனா?” எனக் கேட்டுக் கொண்டான். “ஆம், பீமா, ஆம், நீ தான் அனுப்பி உள்ளாய்.  நீ நகுலனை அனுப்பியது குறித்து மிகவும் பெருமையுடன் கூறினான் கோவிந்தன்.  பீமன் எவ்வளவு கவனமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறான் என எடுத்துச் சொன்னான்.  உன்னைக் குறித்து அவனுக்கு மிகவும் பெருமை.  அதோடு நீ ஏகசக்கரத்தையும், அதன் மக்களையும் ராக்ஷசர்களிடமிருந்து காப்பாற்றி இருக்கிறாய்.  ஆகவே அதற்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஏகசக்ர மன்னனுக்கும் இது சரியானதொரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.”


“ஆமாம், ஆமாம்,” அவசரமாக ஆமோதித்தான் பீமன்.  கண்ணன் ஏதோ குறும்பு வேலை செய்திருக்கிறான் இதில் என்பது வரை அவன் புரிந்து கொண்டான்.  வேகமாக தன் தாயின் குடிலில் இருந்து வெளியேறியவன் கண்ணனின் குடிலை நோக்கிச் சென்றான்.  ஆஹா!  அங்கே கண்ணன் தனியாக இருக்கவில்லை!  கூடவே யுதிஷ்டிரனும், அர்ஜுனனும் இருந்தனர்.

1 comment:

ஸ்ரீராம். said...

கண்ணன் - கள்ளனுக்குக் கள்ளன்.