Wednesday, October 8, 2014

கண்ணன் காப்பாற்றுகிறான்!

 “அவர்கள் இப்போது எங்கிருக்கின்றனர்?” கிருஷ்ணன் கேட்டான்.


“மயக்கத்தில் இருந்த ஜாலந்தராவை பீமன் எங்கள் தாய் குந்தியின் குடிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவளைத் தாயின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறான்.  சுஷர்மா கடும் கோபத்தில் அனைவரையும் வசைபாடிக் கொண்டு எங்கள் குடிலுக்கு வந்தவன், துணிகளை மாற்றிக் கொண்டு பீமனின் படுக்கையில் படுத்தான்.  அவனுக்கு நன்கு புரிந்து விட்டது. இது பீமனின் விளையாட்டு என்று.  வேண்டுமென்றே படகுகளில் துளைகள் போட்டு அவனுடைய நதி வழிப் பயணத்தைத் தடுத்துத் தரை வழிக்கு மாற்றி விட்டான் என்பதை சுஷர்மா புரிந்து கொண்டு விட்டான்.”


“பீமன் என்ன நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவன் மூளை முழுவதும் காசி இளவரசி ஜாலந்தராவே நிறைந்திருக்கிறாள்.  அவள் நம்மோடு தரைவழிப் பயணத்தில் ஹஸ்தினாபுரம் வர வேண்டும் என பீமன் எதிர்பார்க்கிறான்.  அவர்கள் இருவரும் காம்பில்யத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு விட்டனர்.”


“ஆஹா, இது தான் என் அண்ணன் பீமன்!  நாங்கள் திரௌபதியை மணந்து இன்னமும் ஒரு மாசம் கூட ஆகவில்லை.”


கிருஷ்ணன் புன்னகையுடன், “ உனக்குத் தான் உன் தமையனைத் தெரியும்.  ஒருவேளை அவன்  திரௌபதி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் சேர்ந்து இருக்கலாம் என முடிவு கட்டியதற்காக அவளைத் தண்டிக்கிறானோ?”


“அது எப்படி இருந்தாலும் சரி கிருஷ்ணா!  திரௌபதி எடுத்தது சரியான முடிவு என்பதில் எங்களில் யாருக்கும் சந்தேகம் இல்லை.  நியாயமான முடிவு!”


“பீமனுக்கு உன்னுடைய முடிவு பிடித்திருக்காது.  அவன் உன்னுடன் ஒத்துப் போக மாட்டான். நீ பார்க்கும் கோணமும், அவன் பார்க்கும் கோணமும் வேறுபட்டிருக்கும்.  உன்னை மாதிரி இந்த விஷயத்தை அவன் எதிர்கொள்ள மாட்டான்.” கிருஷ்ணன் புன்னகையுடன் கூறினான்.


“கோவிந்தா!  நீ சொன்ன மாதிரி சுஷர்மா  துரியோதனன் குறித்த காலத்துக்குள் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை எனில் துரியோதனன் அவனை என்ன செய்வான் எனச் சொல்ல முடியாது.  மேலும் அவன் தன்னுடைய மைத்துனன் ஆன சுஷர்மாவிடம் நாங்கள் அங்கே வரும்போது அந்த நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என ஆலோசிக்கவும் விரும்பலாம்.  அதையும் நாங்கள் அங்கே சென்றடைவதற்குள்ளாக அவன் ஆலோசிக்க விரும்பலாம்.”


“ஏன் ஒருவேளை என்கிறாய்?  நிச்சயமாக அவன் திட்டம் அது தான் என நான் அறிவேன்.  இல்லை எனில் உடனே ஹஸ்தினாபுரம் வரவேண்டும் என்று துரியோதனன் சுஷர்மாவுக்குச் செய்தி அனுப்பி இருக்கமாட்டான்.  பீமன் செய்திருப்பது மிக துரதிர்ஷ்டவசமான ஒன்று.  துரியோதனனை மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டுவது போல் நடந்து கொள்வதால் அவனை வெல்ல முடியாது.”


“கோவிந்தா, இப்போது என்ன செய்வது?  அரச குடும்பத்தினரின் படகு தயார் ஆவதற்குக் குறைந்தது பதினைந்து நாட்களாவது தேவைப்படும்.  நாமோ இன்னமும் மூன்று நாட்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். “


“பீமன் சரியான வழியில் திரும்புவதற்கு நாம் தான் அவனுக்கு உதவவேண்டும்.”


“கோவிந்தா, அவனை எப்படிச் சரியான வழியில் திருப்புவது?  அவன் இப்போது தானே பின்னிக்கொண்டதொரு வலையில் மிக மோசமாகச் சிக்கி இருக்கிறான்.  சுஷர்மா எங்கள் குடிலுக்கு வரும்போது அவன் அடைந்திருந்த கோபத்தை நீ பார்க்கவில்லை கிருஷ்ணா!  அவனுக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை.  இந்த வேலையை பீமன் தான் செய்திருக்கிறான் என்பதும், அவன் போட்ட துளைகளால் தான் படகு மூழ்க ஆரம்பித்தது என்பதையும் சுஷர்மா நன்கு புரிந்து கொண்டிருக்கிறான்.”


“அவன் மனோநிலை புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. ஒருவேளை….ஒருவேளை ஜாலந்தரா பீமனை மணந்து கொண்டாளானால்?? அது பானுமதிக்கும் ஓர் தவிர்க்க முடியாத சங்கடமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.  “


“கோவிந்தா, கோவிந்தா!  என்ன செய்வது?”


“இந்தக் குறும்புத்தனமான விளையாட்டின் விளைவுகளைச் சரி செய்ய வேண்டும்.”


“எப்படி, கிருஷ்ணா, எப்படி? எவ்வாறு?  இந்த ஆசிரமத்தில் படகுகள் இருப்பதாகத் தெரியவில்லையே?  சுஷர்மாவும், இளவரசி ஜாலந்தராவும் அவர்களின் பரிவாரங்களும் செல்லத் தக்க பெரிய படகல்லவோ வேண்டும்!”


“கவலைப் படாதே நகுலா!  நாம் வந்த வழியில் ஏகசக்கரத்தில் ஒரு அரச குடும்பப் படகு நங்கூரமிட்டிருந்ததை நான் கண்டேன்.  “இதைச் சொன்ன வண்ணம் சாத்யகியைப் பார்த்துத் திரும்பிய கோவிந்தன், “சாத்யகி, உடனே இளவரசன் மணிமானைச் சென்று பார்ப்பாயாக!  உனக்கும் நகுலனுக்கும் துணையாக சிகுரி நாகனை அனுப்பி வைக்கும்படி அவனிடம் கேள்!  இங்கு இருப்பதிலேயே சிறந்த படகை எடுத்துச் செல்! நீ வெகு விரைவில் ஏகசக்ரத்தை அடைவாய் என எண்ணுகிறேன்.  அங்கே அரசனைப் போய்ப் பார்! அவனிடம் பீமனுக்கு அரசகுடும்பப் படகு தேவை என்று தெரிவி!  இந்தப் படகில் சுஷர்மாவையும், அவன் சகோதரியையும் உடனடியாக ஹஸ்தினாபுரம் அனுப்பியாக வேண்டும் என்று நிலைமையைச் சொல்!  ஏகசக்ரத்தின் அரசனை பீமன் ராக்ஷசர்களின் படை எடுப்பு, அவர்களின் தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றி இருக்கிறான்.  ஆகவே அவன் பீமனுக்குக் கடமைப் பட்டிருக்கிறான்.  தன் மக்களையும் தன் நாட்டையும் காத்த பீமனின் வேண்டுகோளை அவன் புறக்கணிக்க மாட்டான். சந்தோஷமாக அவன் தன் படகைக் கொடுப்பான்.  அதை எடுத்துக் கொண்டு நீ நாளை மாலைக்குள்ளாக இங்கே வந்து சேர்ந்துவிடு.  நாளை நள்ளிரவில் ஹஸ்தினாபுரப் பயணத்தை அவர்கள் தொடங்கினால் சரியாக இருக்கும். “ என்றான் கண்ணன்.


“கோவிந்தா, பீமன் ஏதேனும் சொன்னால்?”


“அதை என்னிடம் விடு நகுலா!  நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றான் கிருஷ்ணன்.


கிருஷ்ணன் தன் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டி நதிக்கரைக்குச் செல்ல ஆயத்தமானான்.  செல்லும் வழியில் பீமனின் குடிலை எட்டிப் பார்த்தான்.  சுஷர்மா நதிக்குச் செல்ல ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்க பீமனோ இன்பக்கனா கண்ட மகிழ்வில் இதழ்களில் புன்னகையோடு தூங்கிக் கொண்டிருந்தான்.  கிருஷ்ணன் சுஷர்மாவிடம், “சுஷர்மா, உன் படகுகளில் தண்ணீர் புகுந்தது எனக்கு மிக வருத்தமாய் உள்ளது.” என அனுதாபத்துடன் தெரிவித்தான்.

3 comments:

ஸ்ரீராம். said...

பவம் பீமன்! :))))

ஸ்ரீராம். said...

திருத்தி எழுதி, கையோட இதே பின்னூட்டத்தைச் சேர்த்தேன். அதை விட்டு விட்டு, தவறாக இருப்பதை வெளியிட்டு விட்டீர்களே.... நியாயமா? :)))) இதை நிறுத்தி வைத்து, சரியான பின்னூட்டத்தை வெளியிட்டிருக்கக் கூடாதோ....

sambasivam6geetha said...

ஹிஹிஹி, இப்போத் தான் என்ன தப்புன்னே பார்க்கிறேன். மெயிலில் இரண்டு வந்திருந்தது. பேசிண்டே ஒண்ணை டெலீட் பண்ணிட்டு, இன்னொண்ணை வெளியிட்டேன். சரியாக் கவனிக்கலை. அதனால் என்ன Bhavam னு எடுத்துக்கறேன். இல்லைனா Balam னு எடுத்துக்கறேன். :))))))

சாரி! நான் தான் சொன்னேனே இரண்டு வந்திருக்காக்கும்னு நினைச்சுட்டேன்னு.