Thursday, February 19, 2015

ஹஸ்தினாபுரத்தில் மணமக்கள்!

தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் பீமன்.  இன்னும் வேறு யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று கவனித்தான்.  அப்போது அங்கிருந்த மல்லர்கள், பயில்வான்கள் அவர்களுடன் வந்திருந்த பலியா என்றழைக்கப்பட்ட அவன் வேலையாள்(மல்யுத்தத்தின் போது உதவி செய்பவன்) ஆகியோரைப் பார்த்தான். தன் உதவியாள் இப்போது வயது முதிர்ந்து முதுமையில் இருப்பதையும் கண்டான். பீமனின் விளையாட்டுத் தோழன் ஆன தன்னுடைய பேரன் உதவியுடன் அவன் தன்னைப் பார்க்க வந்திருப்பதையும் அறிந்து கொண்டான் பீமன். அவனைக் கண்டு கொண்ட மகிழ்ச்சியைத் தன் கைகளை உயர்த்தி அவனை நோக்கி ஆட்டிய வண்ணம் தெரிவித்துக் கொண்டான் பீமன்.  முதலில் அவனைத் தெரிந்து கொள்ளாத பலியா தன் மகன்கள் சொற்களைக் கேட்டதும், பீமன் தன்னை அடையாளம் கண்டு கொண்டதை அறிந்து மகிழ்ந்தான்.  அவன் வளர்ச்சியில் தனக்கிருந்த பெரும்பங்கை நினைத்து  மகிழ்ந்தான். தான் வளர்த்த சிறுவன் இப்போது பலம் பொருந்திய இளைஞனாக வந்திருப்பதை என்ணி ஆனந்தித்தான்.

அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது.  அதைக் கண்ட அங்கிருந்த மல்யுத்த வீரர்கள் அனைவர் கண்களும் கண்ணீரில் மிதக்க, அனைவரும் ஒருசேர்த் தங்கள் தொடைகளில் பாராட்டுக்கும், வரவேற்புக்கும் அறிகுறியாகத் தட்டி ஒலி எழுப்பினர்.  அதை எல்லாம் கண்ட துரியோதனன் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.  ஆனாலும் அப்போதைய சூழ்நிலையில் அவனால் இதைக் காட்டிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் இது தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்பதையும் வேண்டுமென்றே இது இழைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டான். அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் பீமனின் கழுத்தை நெரித்துக் கொல்லவே தோன்றியது.  ஆனால் இங்கே இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் கூட்டத்தின் நடுவே இதை நிறைவேற்றுவது எவ்வாறு?

ஆனால் பீமனோ சும்மா இருக்கவில்லை. தன் முன்னாள் வேலையாளையும், அவன் மகன், பேரன் ஆகியோரையும் வரவேற்று வாழ்த்துச் சொன்ன அதே சமயம் மீண்டும் துரியோதனனை நோக்கித் திரும்பினான்.  துரியோதனன் தன்னை வரவேற்கும் வரை காத்திருக்காமல் அவனைத் தன்னிரு கரங்களாலும் அணைத்துக் கொண்டு அவன் முதுகில் ஓங்கித் தட்டினான்.  அப்படித் தட்டியவன் துரியோதனனுக்கு உடல் வலி ஏற்பட்டு அதன் வேதனை அவன் முகத்தில் தெரியும்வரை அவனை விடவில்லை. பின்னர் பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரித்த வண்ணம், “ ஆஹா, நாங்கள் வந்துவிட்டோம், என் அருமை சகோதரா! விதி எங்களை இங்கே இழுத்து வந்து நம்மை மீண்டும் ஒன்று சேர்த்து விட்டது.” என்றான். அதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இதற்குள்ளாக அர்ஜுனன் முன்னே வந்து துரியோதனன் காலில் விழுந்து வணங்கி அவன் வரவேற்பையும், அணைப்பையும் பெற்றுக் கொண்டான்.

இங்கே ஆண்கள் அனைவரும் இப்படி ஒருவரை ஒருவர் முழு மனதோடும், மனமில்லாமல் வேறு வழியின்றியும் வரவேற்று முகமன் கூறிக் கொண்டிருக்கையில் திரௌபதியை துரியோதனன் மனைவி பானுமதி முழு மனதோடும், ஆர்வத்தோடும், மனப்பூர்வமாகவும் வரவேற்றாள். திரௌபதியும் அதை ஏற்றுக் கொண்டாள்.  பானுமதி தான் அவளுடன் மிகவும் சிநேகமாக இருக்க விரும்புவதாகச் சொன்னாள்.  அவள் முகம் களைப்பாகவும் கவலை நிறைந்தும் காணப்பட்டாலும் முழு மனதோடு இதைச் சொல்வதை திரௌபதி புரிந்து கொண்டாள். திரௌபதியின் இசைவைக் கண்ட பானுமதியின் முகம் மலர்ந்து பிரகாசித்தது.

இந்த சம்பிரதாய வரவேற்பு முடிவடைந்ததும், மணமக்களின் நகர்வலம் ஆரம்பம் ஆயிற்று. வாத்தியங்கள் வாசிப்பவர்கள் தங்கள் தங்கள் வாத்தியங்களை முழக்கிக் கொண்டு முன்னே சென்றனர்.  பின்னர் குழுக்களாகப் பிரிந்து ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் வந்தனர்.  இந்த இசைக்கலைஞர்கள் சென்றதும், வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்கள் தங்கள் தலைகளில் தாமிரப் பானைகளை வைத்துக் கொண்டு அவற்றில் முளைப்பாரி வைத்து, திருமணம் சம்பந்தமான பாடல்களைப் பாடிக் கொண்டு வந்தனர்.  இவர்களுக்குப் பின்னால் பொறுக்கி எடுத்த பிராமணர்கள் சிலரால் வேத கோஷம் முழங்கப்பட்டது.  அனைவரும் யுதிஷ்டிரன், பலராமன், கிருஷ்ணன், துரியோதனன் ஆகியோர் தலைமை தாங்கச் சென்றனர். அரச குடும்பத்துப் பெண்கள் மங்கள இசைப்பாடல்களைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் வர அவர்களை பானுமதியும் திரௌபதியும் வழி நடத்தினார்கள்.  வில்லாளிகள், காவல் வீரர்கள், மல்லர்கள் ஆகியோர் அவரவர் திறமையைக் காட்டிய வண்ணம் பின் தொடர்ந்து வர பீமனின் வேலையாள் பலியாவை அவன் பேரன் ஒரு தள்ளு வண்டியில் அமர்த்தித் தள்ளிக் கொண்டு வந்தான்.

ஊர்வலம் ஆரம்பம் ஆனதும் பீமன் யுதிஷ்டிரனிடம் சென்று அவனுக்கும், நகுலனுக்கும் இந்த ஊர்வலத்திலிருந்து விலக்கு அளிக்கக் கோரினான்.  ஏனெனில் அவர்கள் துரியோதனனின் இன்னொரு சகோதரன் விகர்ணனோடு சேர்ந்து ஊர்வலத்தில் வந்த கால்நடைகள், பசுக்கள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றைத் தக்க இடத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர்.  யுதிஷ்டிரன் அனுமதி கொடுத்ததும், தான் இவை எல்லாவற்றையும் உள்ளூர ரசிப்பதைக் கிருஷ்ணனுக்குத் தன் கண் ஜாடையின் மூலம் தெரிவித்த பீமன் அங்கிருந்து அகன்றான். சஹாதேவன் தங்கள் தாய் குந்தியை அழைத்துக் கொண்டு இவர்களுக்கு முன்னரே சென்று விட்டான். மங்கலகரமாக மணமக்கள் நகருக்குள் நுழைகையில் ஒரு விதவையான தான் அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தனியான ஒரு பல்லக்கை வரவழைக்கச் சொன்ன குந்தி சஹாதேவன் துணையோடு அரண்மனைக்குச் சென்று விட்டாள்.

ஊர்வலம் நகர் முழுவதும் சுற்றிக் கொண்டு அரண்மனையை வந்தடைந்தது.  அங்கே காத்திருந்த ராணி சத்யவதி, தாத்தா பீஷ்மர், திருதராஷ்டிரன், மற்றும் காந்தாரி ஆகியோரைக் கண்டதும் யுதிஷ்டிரனும் மற்றோரும் அவர்களை வணங்கினார்கள். புது மணமக்கள் ஹஸ்தினாபுரத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் தருணம் துவங்கி விட்டது.


1 comment:

ஸ்ரீராம். said...

சம்பிரதாயக் காட்சிகள்.