Saturday, February 21, 2015

பலியாவின் கதை!

அனைவரும் செல்லும் வரை காத்திருந்த பீமன் ஊர்வலத்திலிருந்து தன்னுடன் விலகி வந்திருந்த நகுலனைப் பார்த்து, தங்களுடன் வந்திருந்த உதவியாட்களுக்கான தங்குமிடம் சரிவரக் கிடைத்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்லி அவனை அனுப்பினான். பின்னர் அவன் தன் முன்னாள் ஆசான் ஆன பலியாவிடம் வந்தான்.  பலியா மிகவும் முதுமை எய்தி இருந்தான்.  கூனிக் குறுகிப் போய்த் தன் பேரன் துணையோடு நின்று கொண்டிருந்தான்.  அவனால் தனியாக எங்கும் செல்ல இயலாது என்பதோடு பார்வையும் சரியாக இல்லை.  கிட்டே வருபவர்களை மட்டுமே அடையாளம் காண முடிந்தது அவனால். காது கேட்கும் திறன் கொஞ்சம் இருந்ததால் குரலை வைத்து ஓரளவு புரிந்து கொள்வான். அவனருகே வந்த பீமன் எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அவனை அப்படியே தன் பலமான கைகளால் தூக்கிக் கொண்டான்.  உரத்த குரலில், “பலியா, உன்னுடைய சிறிய எஜமான் வந்திருக்கிறேன்.” என்றான். பலியாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  ஒரு தாயின் அன்போடு அவன் பீமனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

அவன் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.  பிறந்து சில வாரங்களே ஆகி இருந்த குழந்தையான அவனைக் குந்தி தன் பொறுப்பில் ஒப்படைத்ததும், அப்போதே பீமனின் வலுவான உதைகள் பட்டும், அழுகை கர்ஜனையைப் போல் இருந்ததையும் நினைத்துப் பார்த்து மகிழ்ந்தான். பற்களை இழந்த பொக்கை வாயுடன் அவன் சிரிப்பதைப் பார்க்க பீமனுக்கு வேடிக்கையாக இருந்தது.  இப்போதும் அவன் அதே சிறுவன் என்னும் நினைப்பிலேயே பலியா இருக்கிறானோ என்று சந்தேகப்படும் விதத்தில் அவன் முதுகை ஒரு குழந்தையைத் தட்டிக் கொடுப்பது போல் தட்டிக் கொடுத்தான் பலியா.  “சின்ன எஜமான், ஊர்வலம் ஆரம்பித்து விட்டது போலிருக்கிறதே?  நீங்கள் ஏன் ஊர்வலத்துடன் செல்லவில்லை?” என்றும் வினவினான்.

“என் மூத்த சகோதரனும், மற்றவர்களும் செல்கின்றனர்.  அது போதும். நான் உன்னை இப்போது உன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்.” என்றான் பீமன். ஒரு சில மல்லர்கள் ஊர்வலத்துடன் செல்லாமல் பின் தங்கி விட்டனர். அவர்கள் அனைவரும் பீமன் தங்களை மறக்காமல் நினைவு வைத்திருப்பது கண்டு மகிழ்ச்சியுடன் அவனையும், பலியாவையும் சூழ்ந்து கொண்டனர். பீமனை ஒரு கதாநாயகனாகவே அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.  அந்த நினைப்பில் இப்போதும் மாற்றம் ஏதும் இல்லை.  பீமன் பலியாவைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டான். அவனைத் தள்ளுவண்டியில் ஏற்றி உட்கார வைத்தான்.  வெளியே செல்ல ஆசைப்படும் பலியாவை அவன் மகன்களும், பேரனும் இவ்விதமே வண்டியில் அமர வைத்துத் தள்ளிக் கொண்டு சென்றனர்.

“நீங்கள் ஏன் என்னைத் தூக்கி உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள் இளவரசே!  அதுதான் என் பேரன் இருக்கிறானே!” என்றான் பலியா.  பீமன் கடகடவெனாச் சிரித்தான்.  “ஆஹா, பலியா, நான் இப்போது உன்னைப் பழிக்குப் பழி வாங்கப் போகிறேன்.  எனக்கு இரண்டு வயதாக இருக்கையில் நடக்க ஆசைப்பட்டபோதெல்லாம் நீ என்னை நடக்கவே விட்டதில்லை.  தூக்கிச் சுமந்து சென்றாயல்லவா?  அதற்குத் தான் இப்போது பழி வாங்குகிறேன்.” என்ற வண்ணம் மீண்டும் சிரித்தான் பீமன். சுற்றி இருந்த அனைவரும் சிரித்தனர். பீமன் வண்டியைத் தள்ளிக் கொண்டு போக மற்றவர்களும் உடன் நடந்தனர். பீமன் எப்போதுமே இப்படித் தான் பலியாவை வேடிக்கையாக வம்புக்கு இழுப்பான்.  விஷமங்கள் செய்வான்.  அதை எல்லாம் நினைத்து ரசித்தபடியும், தன்னை குரு வம்சத்து இளவரசன் வண்டியில் வைத்துத் தள்ளுவதை நினைத்தும் மகிழ்ந்தபடியும் பலியா சென்றான்.  அவனுக்கிருந்த அளவு கடந்த ஆசையால் பீமனின் கரங்களைத் தடவிக் கொடுத்தபடியே அந்தப் பயணத்தை மிகவும் ரசித்தான் பலியா.

வழியெங்கும் மக்கள் பலியா தள்ளு வண்டியில் அமர்ந்திருப்பதையும் பீமன் அதைத் தள்ளிக் கொண்டு செல்வதையும் பார்த்து ரசித்தனர்.  உற்சாகத்தில் கரங்களைத் தட்டினார்கள். கையை ஆட்டி விடைகொடுத்தனர்.  ஒரு சிலர் கூடவே வந்தனர். இப்படி வழியெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓட பீமன் அவனை அவனுடைய மல்யுத்தத் திடலுக்குக் கொண்டு சேர்த்தான்.  அது ஒரு காலத்தில் அகாடக்கா என அழைக்கப்பட்டது. அந்தத் திடலுக்கு அருகேயே இருந்த குடியிருப்பில் மல்லர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் குடியிருந்தனர்.  மல்யுத்த வீரர் குடியிருப்பு என்றே சொல்லலாம் அதை. பலியா ஒரு காலத்தில் பஹுபலி என அவன் வீரத்துக்காக அழைக்கப்பட்டிருந்தான்.

ஒரு காலத்தில் குந்திபோஜனிடம் வேலை செய்த இவர்கள் தங்களை பிராமணர்கள் என்றே அழைத்துக் கொண்டனர்.  இங்கே குரு வம்சத்து இளவரசர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி அளிப்பதற்காக அழைத்து வரப்பட்டார்கள்.  "ஜ்யேஸ்டி மல்" என இவர்கள் குலம் அழைக்கப்பட்டது. பலியா தான் இந்தக் குலத்தின் தலைவனாக அறியப்பட்டான். பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் மல்யுத்தப் பயிற்சி அளித்து வந்தார்கள்  இவர்கள்.  அவ்வப்போது மல்யுத்தப் போட்டிகள் நடத்தித் தங்கள் திறமையை வெளிக்காட்டி வந்தார்கள்.  இவர்கள் குடும்பப் பெண்கள் அரண்மனைவாசிகளுக்குச் சேவைகள் செய்து வந்தனர். குந்திபோஜனுக்கு ஸ்வீகாரம் அளிக்கப்பட்ட குந்தி தேவி பாண்டுவை மணந்து கொண்டு ஹஸ்தினாபுரம் வந்தபோது அவளுக்குச் சீராக அளிக்கப்பட்ட பரிவாரங்களுடன் பலியாவும் அவன் குடும்பத்தினர் சிலரும் ஹஸ்தினாபுரம் வந்தனர்.

அன்றிலிருந்து இவர்கள் தங்கள் விசுவாசத்தையும், உழைப்பையும் குரு வம்சத்தினருக்குக் காட்டி வந்தார்கள். இவர்களின் அதீத விசுவாசத்தையும், உழைப்பையும் கண்ட குரு வம்சத்து அரச குலத்தோர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவர்கள் உறவின் முறையினரை  மேலும் மேலும் ஹஸ்தினாபுரத்துக்கு  வரவழைக்கும்படிச் செய்தார்கள். இவ்வாறே பலியாவின் உறவினரில் பலரும் ஹஸ்தினாபுரத்திலேயே குடியேற நேர்ந்தது.  பாண்டு தன் மனைவியரான குந்தியுடனும், மாத்ரியுடனும் இமயமலைப் பக்கம் சென்றபோது பலியாவும் அவர்களுடன் சென்றான். பீமன் பிறந்த சமயம் பலியாவுக்கும் ஒரு மகன் பிறந்திருந்தான்.  அவன் மனைவி பீமனின் வளர்ப்புத் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

பிறக்கும்போதே அதீத பலத்துடனும், பூரண ஆரோக்கியத்துடனும் பிறந்த இந்தக் குழந்தையின் மேல் பலியாவுக்கும் பாசம் மிகுந்திருந்தது.  தன் சின்ன எஜமானாக இவனை ஸ்வீகரித்துக் கொண்டான். இயல்பாகவே அனைவரிடமும் பாசம் கொண்ட பீமன் பலியாவையும், அவன் குடும்பத்தையும் மிகவும் நேசித்தான். பாண்டு இறந்து மாத்ரி அவனுடன் உடன்கட்டை ஏறியதும் குந்தி தன் குழந்தைகளுடனும், மாத்ரியின் மகன்களுடனும் ஹஸ்தினாபுரம் திரும்ப வேண்டி இருந்தது.  அப்போது பலியாவும் அவர்களுடன் திரும்பினான். அன்றிலிருந்து இன்று வரை பலியா ஜ்யேஸ்டி மல்லர்களின் தலைவனாக இருந்து வருகிறான். ஹஸ்தினாபுரத்து அரச குலத்தோருக்கும், மற்றும் படைத்தலைவர்களுக்கும் விசுவாசமிக்க ஊழியர்களாகப் பணி புரிந்து வருகின்றனர்.

2 comments:

msuzhi said...

கேள்விப்பட்டதில்லை.
மிக சுவாரசியமான விவரம்.

இறை பணியோ பொதுப்பணியோ தங்களை அர்ப்பணித்துக் கொள்ள எப்படியெல்லாம் காரணம் தேடிக்கொள்கிறார்கள் மக்கள்! கிரேக்க புராணங்கள் மற்றும் பின்னாளின் கிறித்தவ இஸ்லாமிய மத கடவுள் மற்றும் குறிப்பிட்ட 'தூதர்'களின் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்புகளை நினைவூட்டுகிறது.

ஸ்ரீராம். said...

இதுவரை படிக்காத, நான் அறியாத பகுதிகளில் இதுவும் ஒன்று!