Friday, February 6, 2015

ஜாலந்திராவின் திட்டம்!

ஆனால், திரௌபதி கிருஷ்ண வாசுதேவனை அவள் சந்திக்க உதவுவாள் தான்.  இதை ரகசியமாகச் செய்ய அவளால் இயலுமா?  அதுவும் அவளுடைய 5 கணவர்களுக்கும் தெரியாமல் முடித்துத் தருவாளா?  அவள் மாமியார் குந்தியிடமும் சொல்லாமல் இருக்க வேண்டுமே! ம்ஹும், இது நிச்சயம் திரௌபதியால் இயலாது. இது வெளியே தெரிந்தால் பானுமதிக்குத் தான் பிரச்னை. யோசிக்க யோசிக்க அவள் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது ஜாலந்திராவுக்கு.  என்ன செய்யலாம்? ம்ம்ம்ம்….. இப்படிச் செய்தால் என்ன? எல்லா சாதாரண மக்களும் கிருஷ்ண வாசுதேவனின் ஆசிகளை வேண்டிச் செல்வது போல் நாமும் சாதாரணமாகப் போனால் என்ன? ஆனால் அப்படிப்போனால் கிருஷ்ணனிடம் தனிமையில் பேச முடியுமா?  அது சாத்தியமாகுமா?

அவள் மண்டையே வெடித்துவிடும் போல் இருந்தது.  என்ன செய்யலாம்! ஆஹா, அம்பிகே, பார்வதி தேவி.  ஈசனின் மறுபாதியே! எனக்கு உதவ வர மாட்டாயா? ஈசர்களுக்கெல்லாம் ஈசனான அந்த சாட்சாத் மஹேசன் மனைவியான உன்னால் முடியாததும் ஒன்று உண்டா? என் உதவிக்கு வருவாய்! விடிவெள்ளி மெல்ல மெல்லத் தெரியலாயிற்று.  அம்பிகையை வேண்டிக் கொண்டே ஜாலந்திரா தன்னையும் அறியாமல் உறங்க ஆரம்பித்தாள். அவள் தூக்கத்தில் அரசன் வ்ருகோதரன் வந்தான்.  ஆம், பீமனைத் தன் கனவில் அவள் கண்டாள்.  அவன் அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டிருக்கிறான். அவளைத் தூக்கிக் கொண்டு எங்கோ தொலைதூரம் செல்கிறான்.  அங்கே துரியோதனனும் இல்லை;  ஹஸ்தினாபுரமும் இல்லை;  இந்த இடைஞ்சல்கள் எதுவும் இல்லை.

அதைக் கண்ட அவள் மனம் மகிழ்ச்சியில் கும்மாளமிட அவள் அவன் காதுகளில் மெல்லக் கிசுகிசுக்கிறாள்.  “ நீர் என்னைச் சந்திக்க வேண்டியே படகை நீரில் கவிழ்த்தீர் அல்லவா? படகைக் கவிழ்த்துவிட்டு என்னைத் தூக்கிக் கொண்டு தௌம்ய ரிஷியின் ஆசிரமத்துக்குச் செல்ல எண்ணினீர் அல்லவா?” அவன் காதுகளை மெல்லத் தன் இதழ்களால் கடிக்க விரும்பினாள் ஜாலந்திரா. அப்போது பார்த்து அவளைத் “தொப்” என்று கீழே போட்டுவிட்டான் வ்ருகோதரன். உடனே மறைந்தும் விட்டான்.  அவள் காதுகளில் விழுந்தது எல்லாம் அவள் சிரிப்பின் எதிரொலிகளே.

தூக்கத்திலிருந்து எழுந்தவள் எங்கோ வெறித்துப் பார்த்தாள். இன்னமும் அவள் உடல் கனவின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. ஆனாலும் அப்போது ஏற்பட்ட ஓர் எண்ணத்தின் மூலம் அவள் தன் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு விட்டாள். கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும்; அதுவும் ரகசியமாக என எண்ணி இருந்த அவள் எதிரே தெரிந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்தன. ஆஹா, வ்ருகோதரன் இருக்கிறானே!  கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க அவன் உதவுவான்.  அதுவும் ரகசியமாகவே சந்திக்கலாம் அவன் உதவியுடன்.

ஆனால்….ஆனா.  ஆஹா, அவள் மறந்தே போனாளே!  நடுங்கினாள் ஜாலந்திரா.  வ்ருகோதரனை மட்டும் அவள் எப்படிச் சந்திக்க முடியும்?  அது முடியுமா அவளால்? ஒருவருக்கும் தெரியாமல் அவனைச் சந்தித்துப் பேசுவது என்பது அவளால் இயன்ற ஒன்றா? ம்ஹூம், சாத்தியமே இல்லை.  அவனோ தன் சகோதரர்களுடனும், அவன் மனைவி திரௌபதியுடனும்,தாய் குந்தியுடனும் அல்லவோ தங்குவான்!  அங்கே செல்வது அவளுக்கு எளிதாகவா இருக்கும்?

“தாயே, பார்வதி தேவி, அவனைச் சந்திக்க நானாகவே சென்றேனானால் அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? வெட்கமற்ற பெண் என நினைப்பானே! பொறுப்பற்றவள் என எண்ணுவானே! அதோடு மட்டுமில்லை.  தனிமையில் அவனைச் சந்தித்துக் கெஞ்சுவேன் எனவும் எதிர்பார்ப்பானே! என் கௌரவம் என்னாவது?  ஆனாலும், இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் வேலை ஆகாது.  எப்படியேனும் வ்ருகோதரனைச் சந்தித்தே ஆகவேண்டும். எப்படி?

அவளுக்கு ஒரே புதிராக இருந்தது. பின்னர் ஒரு யோசனை தோன்றவே, “ஆம், அதுதான் சரி! வ்ருகோதரனை இப்படித் தான் சந்திக்க வேண்டும்.” என்று தன் தலையை ஆட்டிக் கொண்டே தனக்குள் முணுமுணுத்தாள். வ்ருகோதரனை மீண்டும் சந்திப்போம் என்னும் எண்ணமே அவள் உடலில் கிளர்ச்சியை உண்டாக்கியது.  அவள் மனமும் கிளர்ந்தெழுந்தது. தன் படுக்கையிலிருந்து எழுந்து ஒரு சின்ன அபிநயம் பிடித்து ஆடினாள். தன் மகிழ்ச்சியை இவ்விதம் வெளிப்படுத்தினாள். அப்போது பானுமதி எழுந்து கண்களைத் திறந்த வண்ணம்,”ஜாலா, என்ன விஷயம்? உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டாள்.

“ஒன்றும் இல்லை, பானு. நான் நடனம் ஆடுகிறேன்.” என்றாள் ஜாலந்திரா.

“இவ்வளவு அதிகாலை இருட்டிலா?”

“ஆம், என் சகோதரியே, நான் எப்போதுமே அதிகாலை இருட்டில் தான் நடனம் ஆடுவேன். இப்போது நீ தூங்கப் போ.  என்னைக் குறித்துக் கவலை கொள்ளாதே.” என்று சிரித்த வண்ணம் சொன்னாள் ஜாலந்திரா. “நீ ஒரு பைத்தியம்.” என்ற வண்ணம் திரும்பிப் படுத்துக் கொண்ட பானுமதி மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். ஜாலந்திரா அப்படியே தன் படுக்கையில் படுத்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தாள். பொழுது விடிந்தும் தன் இதழ்க்கடைச் சிரிப்பு மாறாமல் தூங்கிய வண்ணம் இருந்தாள் ஜாலந்திரா.

1 comment:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்...... காதல் படுத்தும் பாடு. இந்தக் காதல் பற்றி நான் முதன்முறை படிக்கிறேன்.