Sunday, June 28, 2015

யுதிஷ்டிரன் விருப்பம்!

“என்னுடைய அனைத்து வலுவையும் திரட்டிக் கொண்டு உங்கள் அனைவரையும் நல்ல முறையில் பாதுகாப்பேன். உண்மையாகவும், நேர்மையாகவும் நல்லாட்சி புரிவேன்; என்னுடைய அரச தர்மம் எதுவோ அதை விடாமல் கடைப்பிடிப்பேன். அனைவரையும் என் பிரஜைகளின் சந்தோஷத்துக்காகவும்,பாதுகாப்புக்காகவும் நண்பர்களாக்கிக் கொள்வேன். சாஸ்திர, சம்பிரதாயங்களில் உள்ளபடி நடந்து கொண்டு மனிதனுக்கு நியமிக்கப்பட்ட குல தர்மத்தையும் விடாமல் கடைப்பிடிப்பேன்; இங்கே உள்ள அனைத்து பிராமணர்களையும் பாதுகாப்பேன்; அவர்கள் தங்கள் கல்வித் தொழிலைக் குறைவறச் செய்யத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பேன்; க்ஷத்திரியர்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டிய வசதிகளைச் செய்து தருவேன்; ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வேண்டிய பாதுகாப்பை அளிப்பேன்; வைசியர்கள் தங்கள் வியாபாரத் திறமையால் பணம் ஈட்டி அனைவருக்கும் தேவையான சமயம் உதவுவதற்கு நானும் துணையாக நிற்பேன். சூத்திரர்கள் விசுவாசத்துடன் தங்கள் தொழிலைச் செய்து வர உதவி புரிவேன். என்னுடைய ஆட்சியில் பெண்கள் பயமின்றித் தன்னந்தனியாக வெளியே சென்று வரலாம்; பசுக்கள், மிருகங்கள் ஆகியனவற்றிற்கும் போதிய பாதுகாப்புக் கொடுப்பேன். இறைவனுக்கு என ஏற்படுத்தப்பட்டிருக்கும் கோயில்களையும் நல்ல முறையில் பராமரிப்பேன்.”

யுதிஷ்டிரன் சற்று நிறுத்திவிட்டு அவையோரைப் பார்த்தான். கூட்டம் கைத்தட்டி கோஷித்தது. பின்னர் அமைதியை நிலைநாட்டி விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தான் யுதிஷ்டிரன். இம்முறை திருதராஷ்டிரனை நேருக்கு நேர் பார்த்த வண்ணம் பேச்சை ஆரம்பித்தான்.

“அரசே, நான் உங்களுக்கு உறுதியாய்க் கூறுகிறேன்: நான் துரியோதனனுக்கும், அவனுடைய மற்ற சகோதரர்களுக்கும் அன்பானவனாய் நடந்து கொள்வேன். என் சொந்த சகோதரர்களை விட மேலாக அவர்கள் நலனில் கண்ணும், கருத்துமாக இருப்பேன். அவர்கள் சுகமும், சந்தோஷமும் எனக்கு முக்கியமானது என்றே நினைப்பேன். நான் அரசனாக நியமிக்கப்படுவதன் மூலம் நீங்களும், தாத்தா அவர்களும் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாபெரும் நீதி ஒன்றை நிலைநாட்டி இருக்கிறீர்கள்.  எங்களுக்கு நியாயமான ஒன்றைப் பெற்றுத் தந்ததன் மூலம் நீதியை விட மேன்மையான ஒரு காரியத்தைச் செய்து காட்டியுள்ளீர்கள்.”

மீண்டும் கரகோஷம் எழ, அமைதி நிலவக் காத்திருந்த யுதிஷ்டிரன் மேலும் தொடர்ந்தான்:” என் அரசே, உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். தாங்கள் என் தந்தையை விட எனக்கு உயர்ந்தவர். உங்களை என் தந்தையை விட மேலானவராகவே நான் கருதி வருகிறேன்.  எங்கள் ஐவருக்கும், உங்கள் குமாரர்கள் நூற்றுவருக்கும் இடையே உள்ள உறவை எப்படி பலப்படுத்துவது என்பதை நான் உங்களிடமே விட்டு விடுகிறேன். இதை எப்படிக் கையாளுவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!”

யுதிஷ்டிரன் மீண்டும் நிறுத்தக் கூட்டம் அமைதியிலும் ஆச்சரியத்திலும் உறைந்து இருந்தது. எங்கும் நிசப்தம்! அனைவரும் யுதிஷ்டிரன் மேலே பேசக் காத்திருந்தனர்.

“அரசே, எங்கள் ஐவருக்கும் உங்கள் குமாரர் நூற்றுவருக்கும் இடையே இந்த அரச பதவி குறித்த சர்ச்சையும், அதிகாரப் பங்கீடும் எவ்விதம் தீர்க்கப்பட வேண்டும், எப்படித் தீர்ந்தால் நல்லது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை நான் என் மனப்பூர்வமாக உங்களிடமே விட்டு விடுகிறேன். நீங்களே பார்த்து  ஒரு நல்ல முடிவெடுங்கள். நாங்கள் ஐவரும் அதற்குக் கட்டுப்படுகிறோம். ராஜ்ஜியம் பிரிக்கப்பட வேண்டுமா என்பதையும் நீங்களே முடிவெடுங்கள். அப்படிப் பிரித்தால் எந்தப் பகுதியை துரியோதனாதியர் ஆள்வது என்பதும், நாங்கள் ஆள வேண்டிய பகுதி எது என்பதையும் வரையறுத்துச் சொல்லுங்கள். “

கூட்டத்திலிர்ந்தோர் திகைத்தனர். மலை ஏறுபவன் ஒரு செங்குத்துப் பாறையின் நுனியில் நிற்பது போல ஒரு நிலைமையில் யுதிஷ்டிரன் இருப்பதாக அவர்கள் உணர்ந்தனர். அந்த செங்குத்துப் பாறை நுனியிலிருந்து யுதிஷ்டிரன் அப்பால் செல்வானா? அல்லது கீழே விழுவானா? எந்நேரமானாலும் கீழே விழுந்துவிடுவானோ? கூட்டத்திலிருந்தோர் அனைவரும் கலவரத்துடன் மேலே நடக்கப்போவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். உண்மையிலேயே துரியோதனாதியருக்கு இது  ஆச்சரியத்தையே கொடுத்தது என்பது அவர்கள் முகபாவங்களில் இருந்து புரிந்தது. ஆனாலும் துரியோதனன் மனதில் இதில் ஏதோ சூது இருக்குமோ என்னும் எண்ணமும் தோன்றாமல் இல்லை. யுதிஷ்டிரன் மேலே பேச ஆரம்பித்து விட்டான்:

“என் மனப்பூர்வமாக நான் உறுதி மொழி கூறுகிறேன்; துரியோதனன் எனக்குப் பின்னால் எனக்குக் கீழே ஓர் யுவராஜாவாக மட்டும் இருக்க மாட்டான்; எனக்குச் சமமாக அவனும் ஓர் மன்னனாகவே இருப்பான். என்னுடன் சரியாசனத்திலேயே அவனும் அமர்வான். அரசே, மீண்டும் சொல்கிறேன்! தாங்கள் என் தந்தையை விட மேலானவர். நீங்கள் அனைவரின் தகுதியையும், திறனையும் உங்களால் தீர்மானிக்க முடியும். யாருக்கு என்ன கொடுப்பது என்பதையும் நீங்கள் நன்கறிவீர்கள். தந்தையே, நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி! நாங்கள் சகோதரர்கள் ஐவரும் அதற்குக் கட்டுப்படுகிறோம். இதில் மாற்றம் இல்லை. தயங்காமல் கட்டுப்படுவோம்.”

எங்கும் அமைதி! ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அனைவருக்கும். பெரும் முழக்கத்துடன் கேட்ட இடியோசை சட்டென நின்று போனது போல் அங்கே அமைதி நிலவியது. பீஷ்மரின் முகம் கடுகடுவென மாறியது. அவருக்கு இது பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அங்கு கூடி இருந்த அரசர்கள் அனைவரும் ஒருவரை பார்த்துக் கொண்டனர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. பீமன் முகம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் கண்களில் தெரிந்த ஒளி பயங்கரமாக இருந்தது. தன் கைகளைப் பிசைந்து கொண்டான். அப்படியும் அவை கோபத்தில் நடுங்கின. மற்ற சகோதர்கள் மூவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அனைத்தையும் ஒரு பார்வையில் பார்த்த யுதிஷ்டிரன் மேலே பேச ஆரம்பித்தான். அவன் குரலில் இனம் காணா அமைதி தெரிந்தது.

“நான் அரசனாக முடிசூட்டப்பின்னரும் கூட உங்கள் விருப்பங்கள், ஆசைகள் அனைத்தும் நீங்கள் எனக்கிட்ட கட்டளைகளாகவே கருதி அவற்றை விருப்புடன் நிறைவேற்றுவேன். இதை என் தந்தை சொர்க்கவாசியாக ஆகிவிட்ட மன்னர் பாண்டுவின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். அவற்றை எல்லாம் நான் உண்மையாகவும் சந்தோஷமாகவும் செய்து முடிப்பேன்.”

யுதிஷ்டிரன் பேச்சை முடித்தான். வியாசரின் எதிரே நின்று அவர் கால்களில் விழுந்தான். துரியோதனனும், அவன் சகோதரர்களும் மகிழ்ச்சியில் கூக்குரல் இட்டனர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த உறுதி மொழிகளில் உள்ள ஆபத்தை அவர்கள் உணர்ந்திருந்தாலும் தற்போதைய மகிழ்ச்சியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. வியாசர் எழுந்து நின்று கொண்டு தன் கைகளை உயர்த்தி அனைவரையும் ஆசீர்வதித்தார். பின் கீழ் வரும் துதிகளைச் சொன்னார்.
“அனைத்துக் கடவுளரும் நம்மைப் பாதுகாக்கட்டும்!
நாம் அனைவரும் இந்த அருமையான வாழ்க்கையை ஒன்றாக சந்தோஷமாக வாழ்வோம்!
அனைவரும் ஒன்றாய்க் கூடித் தொழில் செய்து உயர்வோம்!
நம் கல்வி நமக்கு உயர்ந்த ஸ்தானத்தை அளிக்கட்டும்!
எவரையும் நாம் அவமதிக்காமல், வெறுக்காமல் இருக்க முயல்வோம்!’
எங்கும் அமைதி நிலவட்டும்.
சாந்தி! சாந்தி! சாந்தி!
முரசங்கள் ஆர்ப்பரித்தன. சங்கங்கள் முழங்கின. அனைவரும் கூப்பிய கரங்களோடு எழுந்து நின்றனர். பிராமணர்கள் அனைவரும் மந்திர கோஷங்களை எழுப்பி அனைவரையும் ஆசீர்வதிக்கும் மந்திரங்களைச் சொன்னார்கள். ஆசனங்களிலும், சிம்மாசனங்களிலும் வீற்றிருந்தவர்கள் மெல்ல மெல்ல வெளியேறினார்கள். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பீமன் கோபு பின் தொடர பக்கத்து வாசல் வழியே மிகவும் விரைவாக வெளியேறினான். அவன் தலைமயிர் எல்லாம் பறந்து ஒழுங்கில்லாமல் கிடந்ததோடு கோபத்துடன் இருக்கும் முள்ளம்பன்றியின் முட்களைப் போலவும் காட்சி அளித்தது. கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பீமன் தன் கை முஷ்டிகளைச் சேர்த்து ஒன்றை ஒன்றால் பிசைந்த வண்ணம் நடந்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

அட ராமா....! அட தர்மா!