Tuesday, July 7, 2015

பீமன் அனுப்பிய செய்தி!

சபை முடிந்து அனைவரும் வெளியேறுகையில் அர்ஜுனன் மட்டும் பழைய நண்பர்களைப் பார்த்துத் தலை அசைத்த வண்ணமும், ஒரு சிலரிடம் பேசிக் கொண்டும் இருக்கும்போது நகுலன் அங்கே வந்து அவனைத் தனியாக ஒரு பக்கம் இழுத்துச் சென்றான். “சகோதரரே, பீமனைக் காணவில்லை!” என்று வியப்பும் ஆச்சரியமும் தொனிக்கக் கூறினான். “என்ன, காணவில்லையா? இப்போது கூட இங்கே தான் இருந்தான்! நம் அருகே தானே அமர்ந்திருந்தான்!” என்றான் அர்ஜுனனும் ஆச்சரியத்துடனே.  அதற்கு நகுலன் ஆச்சரியமும், ஆர்வமும் மாறாத குரலில் பதிலளித்தான். “இல்லை அண்ணாரே! தாத்தா அவர்கள் பேச்சை முடித்துக் கொண்டு அனைவரும் கிளம்பும்போது பீமன் மட்டும் அனைவரையும் தள்ளிக் கொண்டு முந்தி அடித்த வண்ணம் பக்கவாட்டு வாயில் வழியாக வெளியே சென்றதைப் பார்த்தேன்.” என்றான்.

“ஓ, அவன் அரண்மனையில் நம் இருப்பிடத்துக்குச் சென்றிருக்கலாம்.” என்றான் அர்ஜுனன். “இல்லை என்றே தோன்றுகிறது, சகோதரரே! நம் பெரிய அண்ணா பேசும்போதெல்லாம் அவர் முகத்தில் ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதிலும் திருதராஷ்டிரன் சொல்வதைக் கேட்பதாகப் பெரிய அண்ணா சொன்னபோது அவரால் கோபத்தை அடக்க முடியவில்லை.”

“அடக் கடவுளே! அப்படியா சொல்கிறாய்? அப்படி எனில் அவன் வேறு ஏதோ குறும்பான வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது தீங்கு ஏதேனும் விளைவிக்க முயல வேண்டும். எப்படியாயினும் அவனைக் கண்டு பிடித்தாக வேண்டும், வா!” என்ற அர்ஜுனன் நகுலனையும் அழைத்துக் கொண்டு பீமனைத் தேடிக் கொண்டு கிளம்பினான்.

இங்கே கிருஷ்ணனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மாளிகையில் தன்னிடத்திற்குத் திரும்பிய கிருஷ்ணன் அங்கே ஜாலந்திராவைக் கண்டு வியந்தான். அவள் நிலைமையும் மோசமாக இருந்தது. அவள் முகம் சிவந்து குழப்பத்தில் இருப்பதைக் காட்டியதோடு அவள் உடலே நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் அகல விரிந்து ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஒருங்கே காட்டின! கிருஷ்ணனைப் பார்த்ததும், உதடுகள் நடுங்க,” வாசுதேவா! அவர் சென்றுவிட்டார்!” என்றாள். அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தது தெரிந்தது.

“யார்? யார் எங்கே சென்றுவிட்டார்கள்?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“அரசன் வ்ருகோதரன் தான்! வேறு யாராயிருக்க முடியும்?”

“ஓ, அவன் சிங்காதன அறையில் சபை கூடியபோது எங்களுடன் தான் அமர்ந்திருந்தான். அவனை அங்கே நான் பார்த்தேன். எங்களுடன் தானே இருந்தான்!” என்றான் கிருஷ்ணன். கோபம் கொண்ட ஜாலந்திரா தன் கால்களால் தரையை உதைத்தாள். “நான் அவர் சென்றுவிட்டார் எனக் கூறுகிறேனே!” எனப் பொறுமையில்லாமல் கூவினாள். அப்போது ரேகா அங்கே வந்து அவளைப் பாதுகாப்பது போல் நின்று கொண்டாள்.

“சரி, சரி, எங்கே போயிருக்கிறான்?”

“எனக்கு எப்படித் தெரியும்?” என்றாள் ஜாலந்திரா. பின்னர் ஏமாற்றத்திலும் கோபத்திலும் தன்னிரு கரங்களையும் விரித்த வண்ணம், “எங்கேயோ சென்று விட்டார். இனி அவர் திரும்பப் போவதே இல்லை!” என விரக்தியாகக் கூறினாள். சொல்லும்போதே அவள் குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள். பொங்கி வரும் விம்மல்களைக் கட்டுப்படுத்திய வண்ணம்,”எனக்கு இந்தச் செய்தியை ரேகா தான் கொடுத்தாள். கோபு மூலம் அவர் எனக்குச் செய்தியை அனுப்பி இருக்கிறார். கோபு ரேகாவிடம் தெரிவிக்க, ரேகா என்னிடம் தெரிவித்தாள்.” என்று விளக்கினாள்.

“என்ன செய்து அது?”

“உன் சுயம்வரத்தில் என்னை எதிர்பார்க்காதே!” இது தான் அந்தச் செய்தி! வாசுதேவா, ரேகாவை வேண்டுமானால் கேட்டுக் கொள். செய்தி உண்மையா பொய்யா என! நீ தான் என்னை நம்பவில்லையே!” என்றவளுக்குக் கால்கள் துவண்டன. அவளால் நிற்க முடியவில்லை. அப்படியே கீழே உட்கார்ந்தாள். தன் நெற்றியில் இரு கரங்களையும் வைத்துக் கொண்டு பரிதாபமாகப் புலம்ப ஆரம்பித்தாள். “அவர் போய்விட்டார்! ஒரேயடியாகப் போய் விட்டார்.இனி திரும்பி வரப் போவதில்லை! என் கதி? கங்கையில் என்னை மூழ்கடித்துக் கொள்வது தான் ஒரே வழி!”

கிருஷ்ணன் ரேகாவைப் பார்க்க ஜாலந்திரா சொன்ன செய்தியைத் தன் தலை அசைப்பின் மூலம் ரேகாவும் உறுதி செய்தாள்.  கிருஷ்ணன் மேற்கொண்டு வாயைத் திறக்கும் முன்னர் அங்கே குந்தி ஓடோடி வந்தாள். அவளும் செய்வதறியாமல் புலம்பிக் கொண்டு தான் வந்தாள். அவளைத் தொடர்ந்து அர்ஜுனன், நகுலன், திரௌபதி ஆகியோரும் குழப்பமும், கவலையும் கலந்த முகத்துடன் வந்தார்கள். கிருஷ்ணனைப் பார்த்ததுமே அவள், “கிருஷ்ணா, கிருஷ்ணா, என்ன நடந்தது தெரியுமா? பீமன் போய்விட்டான்! ஒரேயடியாகப் போய்விட்டான். ஓ, மஹாதேவா, இது என்ன சோதனை!” என்று புலம்பியவள் தானும் நிற்க முடியாமல் அப்படியே சரிந்தவண்ணம் ஜாலந்திரா அருகே அமர்ந்தாள்.

கிருஷ்ணன் மென்மையான குரலில், “அவன் எங்கே, ஏன் சென்றிருக்கிறான் என்பதை உங்களில் எவராலும் சொல்ல முடியுமா?” என்று கேட்டான். “அது அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும் அப்பனே!” என்றாள் குந்தி. “கோபு மாலா மூலம் எனக்குச் செய்தியை அனுப்பி இருந்தான்……” என்று ஆரம்பித்தாள் குந்தி.

“என்ன செய்தி?” கிருஷ்ணன் கேட்டான்.

“அம்மாவிடம் சொல்! இனிமேல் அவளுக்கு நான்கு பிள்ளைகள் தான்! அவர்களோடு அவள் திருப்தியாகவும் நிம்மதியாகவும் இருக்கச் சொல்!” இது தான் அவன் எனக்கு அனுப்பிய செய்தி!” என்றாள் குந்தி. சொல்லும்போதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின. இயல்பாகவே தன்னம்பிக்கையும், தைரியமும் மிகுந்த திரௌபதி கூட இப்போது கொஞ்சம் கலங்கித் தான் காணப்பட்டாள். “கிருஷ்ண வாசுதேவா! எனக்கும் ஒரு செய்தி வந்திருக்கிறது!” என்றாள்.

“என்ன அது?”
“திரௌபதி, இனிமேல் உனக்கு நான்கு கணவர்கள் தான். நீ இவர்களைத் திருப்தி செய்தால் போதுமானது. என்பதே அது!” என்றாள் திரௌபதி.

“அவன் இப்படி ஏதேனும் செய்து வைப்பான் என நான் எதிர்பார்த்தேன்.” என்ற வண்ணம் நகுலன் சம்பாஷணையில் குறுக்கிட்டான். “அவன் முகம் கோபத்திலும், க்ரோதத்திலும் கொந்தளித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அதிலும் நம் மூத்தவர் அனைத்தையும் பெரியப்பா திருதராஷ்டிரரின் விருப்பத்திற்கு விடும்போது அவர் முகம் அளவிடமுடியாக் கோபத்தில் காணப்பட்டது.” என்றான். “கடவுளே, கடவுளே!” என்ற வண்ணம் அழ ஆரம்பித்தாள் ஜாலந்திரா. குந்தி தன் கைகளால் அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறும் பாவனையில் தட்டிக் கொடுத்தாள். திரௌபதி இதற்குள்ளாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு விட்டாள். அவளும் ஜாலந்திராவின் அருகே தரையில் அமர்ந்தாள். ஜாலந்திராவின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். பின்னர் அவளைப் பார்த்து, “உனக்கும் செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா?” என்று கேட்டாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

ஜாலந்திரா மேட்டர் திரௌபதிக்கும் தெரியுமா!

:)))))