Thursday, July 16, 2015

வெறுப்பும் கசப்பும், நகைப்பும்!

சூரியன் அஸ்தமிக்கும் சமயம் பீமன் ரதத்தை நிறுத்தினான். தன் ரதசாரதியைப் பார்த்து அங்கேயே இரவு தங்குவதற்குக் கூடாரம் ஒன்று அமைக்கும்படி ஆணையிட்டான். குதிரைகளை அவிழ்த்துவிட்டு நீர்காட்டித் தீனி போடும்படியும் சொல்லிவிட்டு, கோபுவை அருகில் ஏதேனும் கிராமம் இருந்தால் பால் கிடைத்தால் வாங்கிவரும்படி சொன்னான். கிராமவாசிகளுக்கு பிரபலமான அரசன் வ்ருகோதரன், குரு வம்சச் சக்கரவர்த்தி பாண்டுவின் இளைய மகன் ஆன பீமன் தங்கள் கிராம எல்லையில் முகாம் இட்டிருப்பதை அறிந்தவுடன் அவனைப் பார்க்க வேண்டிக் கூட்டமாகக் கூடினார்கள். அவன் வரவை ஒட்டி ஓர் அரச விருந்துக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்கள். விருந்தை ஏற்கும்படி பீமனை வேண்டிய மக்கள் அங்கிருந்த குதிரைகளுக்குத் தீனி காட்டுவதிலும், ரதத்தை சுத்தம் செய்வதிலும் உதவி செய்தனர்.

விருந்தை முடித்துக் கொண்ட பீமன் அங்கிருந்த நதிக்கரையில் தன் கூடாரத்தை அமைத்துக் கொண்டு இரவு அங்கே தங்கி உறங்க ஆயத்தங்கள் செய்து அப்படியே தூங்கியும் போனான். அவனைச் சுற்றி கோபுவும் மற்ற வீரர்கள், ரதசாரதி ஆகியோர் அரண் போல வட்டவடிவில் சுற்றிப் படுத்தனர். மறுநாள் விடிந்து சூர்யோதயம் ஆன சிறிது நாழிகையில் கிருஷ்ணன், சஹாதேவனுடனும், சாத்யகியுடனும் அங்கே வந்து சேர்ந்தான். அவர்களுக்கு பீமன் அங்கே தங்கி இருக்கும் செய்தி தெரிய முகாமுக்கு வந்து சேர்ந்தனர். பீமன் அப்போது நதிக்கரையில் குளித்துக்  காலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, சூரியனுக்கும் அர்க்யம் விட்டு வரக் கிளம்பிச் சென்றிருந்தான். இதைக் கேள்விப் பட்ட கிருஷ்ணனும் அவன் குழுவினரும் நதிக்கரையிலேயே தாங்கள் வந்த ரதங்களையும் குதிரைகளையும் விட்டு விட்டு பீமனைத் தேடிச் சென்றனர்.

கோபு அங்கே சின்னச் சின்ன கூழாங்கற்களையும், நத்தைகளின் ஓடுகளையும் வைத்துக் கொண்டு தரையில் ஒரு பெரிய விசித்திரமான அமைப்பைப் பெரியதாக வரைந்து கொண்டிருந்தான். இதற்காக ஆங்காங்கே நடப்பதும் கூழாங்கல்லை வைப்பதும், எடுப்பதும், ஓடுகளை வைப்பதுமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அவனிடம், “பீமன் எங்கே?” என்று கிருஷ்ணன் கேட்டதை முதலில் அவன் கவனித்ததாய்க் காட்டிக் கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் கூழாங்கற்களை மாற்றி அமைப்பதிலேயே குறியாக இருந்தான். மீண்டும் விடாமல் கிருஷ்ணன் அவனிடம் கேட்கவே உள்ளுக்குள்ளாகக் கோபத்தை அடக்கிக் கொண்டு கோபம் கண்களில் தெரிய தன் கைகளால் நதிப்பக்கம் சுட்டிக்காட்டினான். அவன் காட்டிய திசையில் இடுப்பளவு ஆழத்தில் நின்ற வண்ணம் பீமன் தன் அனுஷ்டானங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

“கோபு! நீ இங்கே என்ன செய்கிறாய்? இந்தக் கூழாங்கற்களை வைத்து இது என்ன வீடா கட்டுகிறாய்?” என்று கிருஷ்ணன் கேட்டான்.

“வாசுதேவா! எங்கள் ஏன் பின் தொடர்ந்து வந்தீர்கள்?” அவனுக்குள் இருந்த கோபம் இதில் வெளித் தெரிந்தது. இந்த விருந்தாளிகள் வேண்டாத விருந்தாளிகள் என்பதை அவன் தன் இந்தக் கேள்வியின் மூலம் காட்டிக் கொண்டான். தன் கோபத்தை மறைக்கவும் இல்லை.  கிருஷ்ணன் ஆனால் கருணையுடனும், தயவுடனும் சிரித்தான். “ஆஹா, கோபு, கோபு! இதோ பார்! கோபம் கொள்ளாதே! தயவு செய்! இந்தக் கூழாங்கற்களை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? இப்போது என்ன செய்கிறாய்?”

தான் இன்னமும் முடிக்காமலே வைத்திருந்த அமைப்பைப் பார்த்த கோபு கொஞ்சம் உள்ளூர கர்வத்துடன், “ நாங்கள் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்கத் திட்டம் தீட்டுகிறோம்.” என்றான். பீமன் செய்ய நினைத்தது எல்லாம் தன்னுடன் சேர்ந்தே அவன் செய்ததாகவும், அவன் திட்டம் போட்டதும் தானும் இணைந்து திட்டம் போட்டதாகவும் கோபுவின் நினைப்பு இருந்தது. அதைக் கண்ட கிருஷ்ணன் சிரித்தான். “கோபு, உன் வேலையை நீ தொடர்ந்து செய்! யார் கண்டார்கள்? ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் இது உதவலாம்.” என்றான் கிருஷ்ணன். அதற்குள்ளாக கிராமத்து மக்கள் உணவு தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தனர். அவர்கள் பீமனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் மட்டுமே பால், பழங்கள் போன்றவைகள் எடுத்து வந்திருக்க, அங்கே இன்னமும்  மூன்று ரதங்கள் கூடுதலாக நிற்பதைக் கண்டு வியந்தனர். புதிதாக வந்தவர்கள் யார் எனப் பார்த்தால் வாசுதேவ கிருஷ்ணன்! அவனுடன் சாத்யகி மற்றும் பீமனின் குட்டி சகோதரன் சகாதேவன். சில நாட்கள் முன்னரே காம்பில்யத்திலிருந்து சென்ற திருமண ஊர்வலத்தில் இவர்களை எல்லாம் கண்டு முக்கியமாய்க் கிருஷ்ணனைக் கண்டு அவனிடம் ஆசிகளை வாங்கி இருந்த மக்கள் மீண்டும் அவனைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்தனர். கிருஷ்ணனின் சாகசங்கள் பற்றிய கதைகளையும், அவன் நடத்திய அதிசய அற்புதங்களையும் பற்றிக் கேட்டிருந்த அவர்கள் இப்போதும் அவன் காலடியில் விழுந்து வணங்கி ஆசிகளை வேண்டினார்கள்.

கிருஷ்ணன் தன் கூட வந்திருந்த ஆட்களைத் தங்களுக்கும் அங்கே முகாம் அமைக்கும்படியும் கூடாரங்களை ஏற்படுத்தும்படியும் ஆணையிட்டு விட்டு அனைவரும் நதிக்குச் சென்றனர். தாங்களும் குளித்துக் காலை அனுஷ்டானங்களை முடிக்கலாம் என்றே சென்றனர். நதியில் இறங்கியதும் சற்றுத் தொலைவில் பீமனைக் கண்ட கிருஷ்ணன் அவனை அழைத்தான். “பீமா, பீமா! நாங்கள் வந்துவிட்டோம்!” என்றும் அறிவித்தான். ஆனால் பீமனோ முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறுபக்கம் பார்த்தான். கிருஷ்ணனும் அவனுடைய சகாக்களும் நதியில் குளித்து சூரியனுக்கு அர்க்யம் கொடுத்துத் தங்கள் அனுஷ்டானங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள். பீமன் தண்ணீரிலிருந்து வெளியேறியதும் மூவரும் அவனை வரவேற்று மூத்தவன் என்பதால் அவன் கால்களில் விழுந்து வணங்க முயன்றனர். பீமன் அவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்னும்படி நடந்து கொண்டு விருட்டெனத் தன் கால்களை நகர்த்திக் கொண்டதோடு அல்லாமல் அவர்களைக் கோபம் பொங்கவும் பார்த்தான். மிகக் கடுமையான அந்தப் பார்வையை கிருஷ்ணன் ஒருவனே எதிர்கொண்டான்.

“பீமா, என் சகோதரா!” என்று கிருஷ்ணன் ஆரம்பித்தான்.

 “இதோ பார்! கிருஷ்ணா! என்னைத் தொந்திரவு செய்யாதே! என்னைத் திரும்ப அழைத்துச் செல்வதற்குத் தான் நீ வந்திருக்கிறாய் என்பதை நான் நன்கறிவேன். நீ என்ன மந்திர, தந்திர வேலைகள் செய்தாலும் நான் திரும்பி வரப்போவதில்லை! அது நிச்சயம்!” என்று பீமன்  உறுதியுடன் கூறினான்.

“ஆஹா! யார் சொன்னார்கள்! நான் உன்னைத் திரும்ப ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்துச் செல்லப்போவதாய்? அப்படி ஒரு திட்டமே இல்லை!” என்றான் கிருஷ்ணன் சாவதானமாக. மேலும் தொடர்ந்து, “நீ எங்கெல்லாம் செல்லப் போகிறாயோ அங்கெல்லாம் வரப்போகிறோம்.” என்றான். பீமன் கோபத்தில் கொதித்தான், “சூழ்ச்சிக்காரா, வஞ்சகா, ஏமாற்றுக்காரா! கிருஷ்ணா! நீ ஓர் ஏமாற்றுக்காரன். இதோ பார், சஹாதேவா! நீ, நீயும் இன்னொரு ஏமாற்றுக்காரன் தான். நீங்கள் அனைவருமே ஏமாற்றிப் பிழைப்பவர்கள். போங்கள் இங்கிருந்து! ஹூம், விரைவில் செல்லுங்கள்!”

“கொஞ்சம் நான் சொல்வதைத் தான் கேள் பீமா! சகோதரா! பொறுமை!” என்றான் கிருஷ்ணன். அவனைக் கொன்று விடுவான் போலப் பார்த்தான் பீமன். “நீ என்ன வேண்டுமானாலும் சொல்! ஆனால் அதைக் கேட்க நான் தயாராக இல்லை. நான் கேட்கப்போவதில்லை. இங்கிருக்கும் மூவரில் மட்டுமல்ல, இந்தப் பரந்த உலகிலேயே உன்னைப் போல் ஏமாற்றுக்காரனை நான் பார்த்தது இல்லை.” இடைவிடாமல் பேசியதாலோ என்னமோ கொஞ்சம் நிறுத்திப் பெரியதொரு மூச்சை விட்ட பீமன் மேலும் தொடர்ந்தான்! “போ இங்கிருந்து! திரும்பி ஹஸ்தினாபுரம் செல்! நீ இங்கேயே இருந்தால் என் திட்டங்களை எல்லாம் பாழடித்துவிடுவாய்! உன்னால் என் திட்டங்கள் வீணாவதை நான் விரும்பவில்லை!” பீமன் அவ்வளவோடு திரும்பிக் கொண்டு தன் முகாமை நோக்கி நடந்தவன், தன் கூடாரத்துக்குச் சென்றான். அவனோடு கிருஷ்ணன், சகாதேவன், சாத்யகி ஆகியோர் சேர்ந்து கொண்டனர்.

தவிப்போடு கிருஷ்ணன், “சகோதரா! நீ இல்லாமல் நான் ஹஸ்தினாபுரம் திரும்புவது எப்படி?  என்னால் எப்படிச் செல்ல முடியும்?” என்றான். அவன் குரலில் நிராசை மிகுந்தது. கோபத்துடன் திரும்பிய பீமன் அவனைப் பார்த்துப் பெருங்குரலில் கத்தினான். “என்ன? உன் தந்திரவேலையை ஆரம்பிக்கிறாயா? நீ என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் இம்முறை உன்னை நம்புவதில்லை என்று நான் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டேன்.”

எதற்கும் அசராத கிருஷ்ணனோ, “ஏன் போகமாட்டேன் என்று சொல்லட்டுமா? நான் வெறும் கையுடன் நீ இல்லாமல் திரும்பினேன் எனில் உன் அன்னை குந்தி தேவி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டு விடுவாள்.”

சீறினான் பீமன். மனம் கசந்துவிட்டது தெரியும் வகையில் நகைத்த வண்ணம், “அவள் எப்போதோ இறந்திருக்க வேண்டும். அதுவும் இதோ இவனைப்போன்ற பிள்ளைகளைப் பெற்றதற்கு, ஏமாற்றுக்காரர்களைப் பிள்ளைகளாப் பெற்றதற்கு எப்போதோ இறந்திருக்க வேண்டும். இப்போது இறந்தால் ஒன்றும் நஷ்டமில்லை!” என்ற வண்ணம் சகாதேவனைச் சுட்டிக் காட்டினான். அவனுடன் சேர்ந்து மற்ற சகோதரர்களையும் சேர்த்தே அவன் சொல்லுவதைப் புரிந்து கொண்டனர் அனைவரும். “இதோ இங்கே இருக்கிறானே, இந்த சகாதேவன், மென்மையாகப் பேசக் கூடியவன்; உண்மையாகவும் பேசுபவனாம்! ஆனால் நான் அவன் என்ன சொன்னாலும் அதை இப்போது நம்பப் போவதில்லை. இப்போது அவன் வாய் மூடி மௌனியாக இருக்கிறானே! இதன் மூலம் தன்னை கெட்டிக்காரனாய்க் காட்டிக் கொள்கிறான் போலும்! நடிப்பு! அனைத்தும் நடிப்பு! இவன் என்ன சொன்னான் என்னிடம் தெரியுமா? இவனுக்கு வருங்காலம் தெரியும் என்றல்லவோ அனைவரும் சொல்கின்றனர்! நான் பட்டத்து இளவரசனாக அரசனுக்கு அடுத்த பதவியில் இருப்பேன் என்றான்! எவ்வளவு பெரிய நகைச்சுவை! ஹாஹாஹாஹா! பொய் சொல்லி இருக்கிறான்! ஏமாற்றுக்காரன்! சூழ்ச்சிக்காரன்!” மனக்கசப்போடு மீண்டும் பெரிதாக நகைத்தான் பீமன்,


1 comment:

ஸ்ரீராம். said...

பீமனை சமாதானப்படுத்துவது சிரமம் போல!