Wednesday, July 8, 2015

குந்தியின் வருத்தம், ஜாலந்திராவின் பிடிவாதம்!

அதைக் கேட்டதுமே ஜாலந்திரா மனம் உடைந்து விட்டாள். பெருகும் துக்கத்தை அடக்கிய வண்ணம், உடைந்த குரலில், “அவர் அடுத்த வருடம் என்னுடைய சுயம்வரத்திற்கு வரப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். அவரை எதிர்பார்க்க வேண்டாம் என்று எனக்குச் செய்தி அனுப்பியுள்ளார்.” என்று கஷ்டப்பட்டுக் கூறியவள் அப்படியே ரேகாவின் கரங்களில் மயக்கமடைந்து விழுந்தாள். கிருஷ்ணனைத் தவிர மற்றவர்களுக்கு பீமனுக்கும், ஜாலந்திராவுக்கும் இடையே உள்ள உறவைக் குறித்துத் தெரிந்திருக்கவில்லை என்பதால் இதைக் கண்டதும் அனைவரும் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியத்தை அடைந்தனர். திரௌபதி மிகச் சிரமத்துடன் தன் உணர்வுகளை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். அடக்கிய உணர்வுகளோடு அவள் கிருஷ்ணனைப் பார்த்து, “கிருஷ்ணா, எப்படியேனும், இளையவரைத் திரும்ப அழைத்து வா! அவர் வந்தே ஆக வேண்டும்.” என்றாள்.

அப்போது அர்ஜுனன் அவளைப் பார்த்து, “பாஞ்சாலி, கவலைப்படாதே! அண்ணா யுதிஷ்டிரரும், சகாதேவனும் அவனைத் தேடித்தான் சென்றிருக்கின்றனர். எப்படியும் கண்டு பிடித்து அழைத்து வருவார்கள்.” என்றான். அதற்குள்ளாகக் குந்தி கவலையுடன், “அவன் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டான் அல்லவா?” என்று வினவினாள். “அத்தை, அத்தை, அன்பான அத்தை! கவலைப்படாதீர்கள்! பீமன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். வாழ்க்கையில் அவன் மிக்க ஆர்வம் உள்ளவன். நன்றாக வாழ வேண்டும் என்னும் ருசியுள்ளவன். அப்படிப்பட்டவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்யவே மாட்டான்.” என்றான் கிருஷ்ணன்.

ஜாலந்திரா மெல்லக் கண் விழித்தாள்.ரேகாவை அவள் இறுக அணைத்துக் கொண்டிருந்தாள். தன் முந்தானையினால் அவளுக்கு விசிறிக் கொண்டிருந்தாள் ரேகா. “கிருஷ்ணா, தயவு செய்து ஏதானும் செய்! உடனே செய்! அர்ஜுனா! உன் அண்ணனும், சகாதேவனும் திரும்பி விட்டார்களா எனப் பார்! பீமனைக் கண்டு பிடித்தார்களா என்றும் விசாரித்துக் கொள்!” என்றாள் குந்தி!

“ஆனால் நான் உங்கள் அனைவரையும் ஒன்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் பீமன் கோபத்தினால் நகரை விட்டுச் சென்று விட்டான் என்பது அனைவருக்கும் தெரிந்தால் உடனே அனைவரும் வருந்துவார்கள். மேலும் பல கலவரங்கள் ஏற்படும். ஹஸ்தினாபுரம் முழுதும் அல்லோலகல்லோலப்படும். நம் நண்பர்கள் அனைவருக்கும் மன வருத்தம் ஏற்படுவதோடு நம் எதிரிகளுக்கு நகைப்புக்கு இடமாகிவிடும்.”

“ஆனால், கோவிந்தா, அவர் முழுமனதோடு சென்று விட்டார். இதை நாம் எப்படி மற்றவர்களிடமிருந்து மறைக்க முடியும்?” என்று கேட்டாள் திரௌபதி.

“எப்படி என்று பார்! நான் சொல்கிறேன் உனக்கு! திரௌபதி, நான் உடனே கிளம்பிச் சென்று அவனைத் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வருகிறேன். நீ அனைவரிடமும் நாங்கள் வேட்டைக்குச் சென்றிருப்பதாகச் சொல்லிவிடு!” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா, நீ அவனை அழைத்து வரும் வரை நான் உணவு உட்கொள்ள மாட்டேன். இது நிச்சயம்!” என்றாள் குந்தி. கிருஷ்ணன் அவள் முறையீட்டைக் கேட்டுச் சிரித்தான். அவளைப் பார்த்து, “அத்தை! நீங்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் அப்படியே இருங்கள். அது பற்றிப் பிரச்னை ஏதுமில்லை. நீங்கள் எப்போதுமே விரதங்கள் இருந்து உடலை வருத்திக் கொள்ளும் மனுஷி! ஆனால் இப்போது ஏன் சாப்பிடவில்லை என்பதற்கான காரணத்தை மட்டும் வெளியே சொல்ல வேண்டாம்.” என்றான் கிருஷ்ணன்.

அதற்குள் ஜாலந்திரா, “ஹூம், கோவிந்தா, உன்னால் முடியாது. அவர் திரும்பப் போவதே இல்லை. எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் அவரை அழைத்து வர இயலாது!” என்று தழுதழுக்கும் குரலில் கூறினாள்.  “ஆஹா, நான் கட்டாயம் அவனை அழைத்துவருவேன். ஆனால் உனக்காக இல்லை, ஜாலந்திரா! அத்தை குந்திக்காக! அதை நினைவில் வை!” என்று சிரித்த வண்ணம் சொன்ன கிருஷ்ணன் அங்கே இருந்த இறுக்கமான சூழ்நிலையை இதன் மூலம் தளர்த்த முயன்றான்.  “அவர் திரும்பவே மாட்டார்!” என்று விரக்தியுடன் தலையை ஆட்டிய வண்ணம் மீண்டும் சொன்னாள் ஜாலந்திரா.

நகுலன் இடைமறித்து, “ பீமன் துரியோதனனுடன் போடவிருந்த சண்டைகளுக்கு எல்லாம் இப்போது இதனால் அர்த்தமின்றிப் போய்விட்டது. அவனை எவ்வாறு இனி எதிர்கொள்வது அதுதான் பீமனின் வருத்தம்?” என்றான். வெறுப்புடனும், கோபத்துடனும், “நம் பெரிய அண்ணா நமக்கெல்லாம் பேரிடரைக் கொண்டு வந்து விட்டார்.” என்றான் அர்ஜுனன். “நம் பெரியப்பாவோ துரியோதனன் பக்கம் தான் இருப்பார். நமக்கு எதுவும் செய்யப் போவதில்லை. ஆகவே இனி துரியோதனனுக்குத் தான் ஆட்சி. நாம் அனைவரும் கை கட்டி வாய் பொத்தி, துரியோதனனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் முன் அடிமைகளாக நிற்க வேண்டும். அது தான் நடக்கப் போகிறது.” என்றான் அர்ஜுனன்.

“அதையும் பார்க்கலாம்!” என்றான் கிருஷ்ணன் அமைதியாக. “பீமன் ஒருக்காலும் துரியோதனனுக்குச் சேவை செய்து கொண்டு இருக்க மாட்டான். அவன் அப்படிப்பட்டவன் அல்ல. நீங்கள் அனைவரும் இந்த விஷயத்தைச் சற்றே மறந்தால்………….” என்று நிறுத்தினான் கிருஷ்ணன்.

“எப்படி மறப்பது?” என்று குந்தி கேட்க, “என்னால் அவரை மறக்கவே இயலாது!” என்று திட்டவட்டமாக ஜாலந்திரா அறிவிக்க, அவளைப் பார்த்துக் கிருஷ்ணன், “ஜாலந்திரா, முட்டாள் மாதிரிப் பேசாதே! இதோ பார்! குந்தி அத்தைக்கு முன்னால் நீ உன்னையே ஒரு முட்டாள் பெண்ணாகக் காட்டிக் கொண்டிருக்கிறாய் என்பதைப் புரிந்து கொள்!” என்றான் கிருஷ்ணன். “ஹூம், அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். நான் ஒரு முட்டாளாகவே இருக்கிறேன். யாருக்கு அதில் அக்கறை உள்ளது? அவர் மட்டும் வரவில்லை எனில்!” என்று ஜாலந்திரா நிறுத்தினாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

காதல் படுத்தும் பாடு.